Ruru's vow for the destruction of the serpent-race! | Adi Parva - Section 9 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு...
சௌதி சொன்னார், "பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)

