Prabhas Patan - Chandramas and Rohini! | Shalya-Parva-Section-35 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : பலராமனின் புனிதப்பயணத்தைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பிரபாஸத்தின் பெயர்க்காரணத்தைச் சொன்ன வைசம்பாயனர்; தக்ஷன் தன் மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; ரோகிணியுடன் மட்டும் அதிக அன்புடன் இருந்த சந்திரன்; சந்திரனைச் சபித்த தக்ஷன்; தக்ஷனிடம் பரிகாரம் கேட்ட தேவர்கள்; பிரபாஸத்தை அடைந்து பிணிதீர்ந்த சந்திரன்; உதபானத்தில் மறைந்த சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருப்பதைச் சொல்லும் குறிப்பு...
ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, "(குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் நடந்த) அந்தப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்பு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்ட தலைவன் ராமன் {பலராமன்}, விருஷ்ணிகள் பலருடன் (துவாரகையிலிருந்து) புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் கேசவனிடம், "நான் திருதராஷ்டிரன் மகனுக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ என் ஆதரவைத் தரமாட்டேன், மாறாக நான் விரும்பும் இடங்களுக்குச் செல்லப்போகிறேன்" என்று சொன்னான்.(2) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, எதிரிகளைத் தடுப்பவனான ராமன் {பலராமன்} அங்கிருந்து சென்று விட்டான். ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, அவனது வருகை குறித்த அனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்.(8) ராமன் {பலராமன்} அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தான், அந்தப் போரை எவ்வாறு கண்டான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் கருத்தின்படி நீர் உரைப்பதில் நல்ல திறம் பெற்றவராக இருக்கிறீர்" என்றான் {ஜனமேஜயன்}.(4)