Showing posts with label சோமதத்தன். Show all posts
Showing posts with label சோமதத்தன். Show all posts

Saturday, October 15, 2016

சோமதத்தனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 161

Satyaki slew Somadatta! | Drona-Parva-Section-161 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : சோமதத்தனை நோக்கிச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும், சோமதத்தனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; சோமதத்தனைக் கொன்ற சாத்யகி; துரோணரைத் தாக்கிய யுதிஷ்டிரன்; துரோணருடன் யுதிஷ்டிரன் போரிடுவதைத் தடுத்த கிருஷ்ணன்; பீமசேனனின் அருகில் நிலைகொண்ட யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தன் தன் பெரிய வில்லை அசைப்பதைக் கண்ட சாத்யகி, தன் சாரதியிடம், “சோமதத்தனை நோக்கி என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! சூதா, குருக்களில் இழிந்தவனும், பாஹ்லீகன் மகனுமான அந்த எதிரியை {சோமதத்தனைக்} கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து திரும்புவதில்லை என்று உனக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.(2) இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, சிந்து இனத்தில் பிறந்தவையும், சங்கு போன்ற வெண்ணிறம் கொண்டவையும், அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லவையும், வேகமானவையுமான அந்தக் குதிரைகளைப் போருக்குத் தூண்டினான்.(3) காற்று, அல்லது மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், பழங்காலத்தில் தானவர்களைக் கொல்வதற்காக இந்திரனைச் சுமந்து சென்ற பின்னவனின் {இந்திரனின்} குதிரைகளைப் போல அந்தப் போரில் யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன.(4)


அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, போரிடுவதற்காக வேகமாக முன்னேறி வருவதைக் கண்ட சோமதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமில்லாமல் அவனை நோக்கித் திரும்பினான்.(5) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளை இறைத்த அவன் {சோமதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலச் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான்.(6) அம்மோதலில் சாத்யகியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் குருக்களின் காளையை {சோமதத்தனை) கணைமாரிகளால் அச்சமில்லாமல் மறைத்தான்.(7) அப்போது சோமதத்தன், அறுபது {60} கணைகளால் அந்த மது குலத்து வீரனின் {சாத்யகியின்} மார்பைத் துளைத்தான். பதிலுக்குச் சாத்யகியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் சோமதத்தனைத் துளைத்தான்.(8) ஒருவரையொருவர் கணைகளால் துளைத்துக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(9)

{மேனி} எங்கும் இரத்தக் கறை படிந்திருந்தவர்களும், குரு மற்றும் விருஷ்ணி குலங்களைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், தங்கள் கண்பார்வைகளாலேயே கொன்றுவிடுபவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(10) வட்டமாகச் சுழன்ற தங்கள் தேர்களில் இருந்தவர்களும், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டவர்களுமான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களுக்கு ஒப்பானவர்களாகவே தெரிந்தனர்.(11) தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு, {மேனி} எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் இரண்டு முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தனர்.(12) தங்கச் சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட இரு நெடிய மரங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(13) அவர்களின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சுடர்மிக்கக் கணைகளால் பிரகாசமாகத் தெரிந்த உடல்களுடன் கூடிய அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்தப் போரில் எரியும் பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கோபக்கார யானைகளை போலத் தெரிந்தனர்.(14)

அப்போது அந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான சோமதத்தன், அர்த்தச்சந்திரக் கணையொன்றால், மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை அறுத்தான்.(15) மிகத்தேவையான ஒன்றான வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், பெரும் வேகத்துடன் கூடிய அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மீண்டும் அவனைப் பத்தால் துளைத்தான்.(16) பிறகு சாத்யகி, மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சோமதத்தனை வேகமாகத் துளைத்தான்.(17) மேலும் ஒரு பல்லத்தை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பாஹ்லீகன் மகனின் {சோமதத்தனின்} தங்கக் கொடிமரத்தை அறுத்தான்.(18) சோமதத்தன் தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்டாலும், அச்சமில்லாமல் இருபது கணைகளால் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைத்} துளைத்தான்.(19) சாத்வதனும் {சாத்யகியும்} சினத்தால் தூண்டப்பட்டு, அம்மோதலில் க்ஷுரப்ரம் ஒன்றால் சோமதத்தனின் வில்லை அறுத்தான்.(20) மேலும் அவன் {சாத்யகி}, விஷப்பற்களற்ற பாம்பொன்றைப் போல அப்போதிருந்த சோமதத்தனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான நூறு கணைகளாலும் துளைத்தான்.(21) பெரும்பலங்கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சோமதத்தன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (கணைமாரியால்) சாத்யகியை மறைக்கத் தொடங்கினான்.(22) சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகியும், சோமதத்தனைப் பல கணைகளால் துளைதான். பதிலுக்குச் சோமதத்தன், தன் கணை மாரியால் சாத்யகியைப் பீடித்தான்.(23)

அப்போது மோதலுக்கு வந்து சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், பத்து கணைகளால் பாஹ்லீகன் மகனை {சோமதத்தனைத்} துளைத்தான். எனினும், சோமதத்தன், கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அச்சமில்லாமல் பீமசேனனைத் தாக்கினான்.(24) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, இடியைப் போலக் கடினமானதும், தங்கக் கைப்பிடி கொண்டதும், பயங்கரமானதுமான புதிய பரிகம் ஒன்றை சோமதத்தனின் மார்பைக் குறிபார்த்து ஏவினான்.(25) எனினும் அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, தன்னை எதிர்த்து வேகமாக வரும் அந்தப் பயங்கரப் பரிகத்தைச் சிரித்துக் கொண்டே இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(26) இரும்பாலான உறுதிமிக்க அந்தப் பரிகமானது, இப்படி இரண்டாக வெட்டப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றின் பெரிய சிகரத்தைப் போலக் கீழே விழுந்தது.(27)

அப்போது சாத்யகி, ஓ! மன்னா, அம்மோதலில் ஒரு பல்லத்தால், சோமதத்தனின் வில்லை அறுத்து, மேலும் அவனது விரல்களுக்கு அரணாக இருந்த தோலுறைகளையும் ஐந்து கணைகளால் அறுத்தான்.(28) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் நான்கு கணைகளால் அந்தக் குரு போர்வீரனின் {சோமதத்தனின்} நான்கு சிறந்த குதிரைகளை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான். (29) மேலும் அந்தத் தேர்வீரர்களில் புலியானவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே மற்றொரு நேரான கணையால், சோமதத்தனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான்.(30) பிறகு அவன் {சாத்யகி}, நெருப்புபோன்ற பிரகாசம் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், எண்ணெயில் முக்கப்பட்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஒரு பயங்கரக் கணையைச் சோமதத்தன் மீது ஏவினான்.(31) சிநியின் பேரனால் {சாத்யகியால்} ஏவப்பட்ட அந்தச் சிறந்த கடுமையான கணை, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் மார்பின் மீது ஒரு பருந்தைப் போல வேகமாகப் பாய்ந்தது.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கச் சாத்வதனால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரன் சோமதத்தன்,  (தனது தேரில் இருந்து) கீழே விழுந்து இறந்தான்.(33) பெரும் தேர்வீரனான சோமதத்தன் அங்கே கொல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், தேர்களின் பெருங்கூட்டத்துடன் யுயுதானனை எதிர்த்து விரைந்தனர்.(34)

அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரபத்ரகர்கள் அனைவருடனும், பெரும் படையுடனும் கூடிய பாண்டவர்களும், துரோணரின் படையை எதிர்த்து விரைந்தனர்.(35) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் கணைகளால் பின்னவரின் {துரோணரின்} துருப்புகளைத் தாக்கவும், முறியடிக்கவும் தொடங்கினான்.(36) தமது துருப்புகளை இப்படிக் கலங்கடிக்கும் யுதிஷ்டிரனைக் கண்ட துரோணர், கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தார்.(37) பிறகு அந்த ஆசான் {துரோணர்} ஏழு கூரிய கணைகளால் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்.(38)

பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} ஆழத் துளைக்கப்பட்டவரான அந்த வலிமைமிக்க வில்லாளி (துரோணர்), ஒருக்கணம் தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, யுதிஷ்டிரனின் கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வெட்டினார்.(39) பெரு வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், வில்லறுபட்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, போதுமான அளவு உறுதியானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(40) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓராயிரம் கணைகளால், துரோணரின் குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றுடன் சேர்த்து அவரையும் {துரோணரையும்} துளைத்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன.(41) அந்தக் கணைகளின் தாக்குதல்களால் பெரும் வலியை உணர்ந்தவரும், பிராமணர்களில் காளையுமான அந்தத் துரோணர், கீழே தமது தேர்த்தட்டில் அமர்ந்தார்.(42) பிறகு தன் உணர்வுகள் மீண்டு, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரும்சினத்தில் நிறைந்த அந்த ஆசான் {துரோணர்}, வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(43) பிருதையின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, கையில் வில்லுடன் அம்மோதலில் அச்சமில்லாமல், தான் கொண்டிருந்த அதே போன்ற ஆயுதத்தால் அவ்வாயுதத்தைக் கலங்கடித்தான்.(44) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணரின் {துரோணரின்} பெரிய வில்லை இரண்டு துண்டுகளாகவும் வெட்டினான். அப்போது க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். (45) குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), பல கூரிய கணைகளால் அந்த வில்லையும் அறுத்தான்.

அப்போது குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}(46), ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதர்களில் சிறந்தவரே, துரோணருடன் போரிடுவதை நிறுத்தும்.(47) துரோணர் உம்மைக் கைப்பற்றவே எப்போதும் முயன்று வருகிறார். நீர் அவருடன் போரிடுவது பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.(48) துரோணரின் அழிவுக்காக எவன் படைக்கப்பட்டானோ, அவனே அவரைக் கொல்வான் என்பதில் ஐயமில்லை. ஆசானை {துரோணரை} விட்டுவிட்டு, மன்னன் சுயோதனன் {துரியோதனன்} எங்கிருக்கிறானோ, அங்கே செல்வீராக.(49) மன்னர்கள் மன்னர்களுடனேயே போரிட வேண்டும், மன்னர்களல்லாத இது போன்றோருடன் அவர்கள் போரிட விரும்பக்கூடாது. எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, சிறு படையின் உதவியுடன் நானும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மனிதர்களில் புலியான பீமனும் குருக்களுடன் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறோமோ, அங்கே யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை சூழ வருவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(50,51)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒருக்கணம் சிந்தித்து, அகல விரித்த வாய்களுடன் கூடிய யமனைப் போல உமது துருப்புகளைக் கொன்றபடி எதிரிகளைக் கொல்பவனான பீமன், எங்கே கடும்போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தானோ, அந்தப் போர்க்களப் பகுதிக்குச் சென்றான்.(52,53) கோடைகாலத்தின் முடிவில் முழங்கும் மேகங்களுக்கு ஒப்பாகத் தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடி சென்றவனும், பாண்டுவின் (மூத்த) மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமனின் பக்கத்தில் நிலைகொண்டு, எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டான்.(54) துரோணரும், அந்த இரவில் தன் எதிரிகளான பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.(55)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 161-ல் வரும் மொத்த சுலோகங்கள்-55


ஆங்கிலத்தில் | In English

Saturday, October 01, 2016

சாத்யகியின் ஆண்மை! - துரோண பர்வம் பகுதி – 155அ

The manliness of Satyaki! | Drona-Parva-Section-155a | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : சாத்யகியிடம் சோமதத்தனின் பேச்சு; சாத்யகியின் ஆண்மைநிறைந்த மறுமொழி; சோமதத்தனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மயங்கி விழுந்த சோமதத்தனைச் சுமந்து சென்ற அவனது தேரோட்டி; சாத்யகியைக் கொல்ல விரைந்த துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிராயத்தில் அமர்ந்திருந்த {பிராயோபவேசம் செய்த} தன் மகன் (பூரிஸ்ரவஸ்) சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு, சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! சாத்வதா {சாத்யகி}, உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய்?(2) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும், விவேகியுமான ஒருவன், போரில் இருந்து திரும்புபவனையோ {பின்வாங்குபவனையோ}, ஆதரவற்றவனையோ, தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ, இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா?(3) உண்மையில், ஓ! சாத்யகி, விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும், நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.(4) அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும், பார்த்தனால் {அர்ஜுனனால்} தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம்  பாவம் நிறைந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய்?(5)


ஓ! தீய நடத்தை கொண்டவனே, உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக. ஓ! இழிந்தவனே {சாத்யகி}, என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான், சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன்.(6) ஓ! சாத்வதா {சாத்யகி}, என்னிரு மகன்கள் மீதும், எனக்குப் பிடித்த எதன் மீதும், என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன், ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே {சாத்யகி}, இன்றிரவு கடப்பதற்குள், பிருதையின் {குந்தியின்} மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்} உன்னைக் காக்கவில்லையெனில், வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை, உன் மகன்கள், தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக” என்றான் {சோமதத்தன்}.(7,8) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கவனுமான சோமதத்தன், சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான்.(9)

அப்போது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிங்கம் போன்ற பற்களையும், பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(10) “ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, உம்மோடு போரிட்டாலும், பிறரோடு போரிட்டாலும், என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை.(11) ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும், உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன்.(12) நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன். எனவே, போர்மணம் கொண்ட வார்த்தைகள், அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது.(13) நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால், ஓ! மன்னா {சோமதத்தரே}, கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக, நானும் உம்மைத் தாக்குவேன்.(14) ஓ! மன்னா {சோமதத்தரே}, உமது மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். சலனும், விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் [1].(15) உமது மகன்களுடனும், சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன். ஓ! கௌரவரே {சோமதத்தரே}, பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால், போரில் உறுதியோடு இருப்பீராக.(16)

[1] வேறொரு பதிப்பில், "வீரனும், மகாரதனுமான உனது புத்திரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். பிராதாவினுடைய (பிரிவின்) துக்கத்தால் பீடிக்கப்பட்ட சலனும் கொல்லப்பட்டான்" என்று இருக்கிறது. விருஷசேனன் பற்றிய குறிப்பேதும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் “வீரர்களான சலனும் விருஷசேனனும் கொல்லப்பட்டனர்" என்று இருக்கிறது.

கொடை, புலனடக்கம், இதயத் தூய்மை, கருணை, பணிவு, நுண்ணறிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றையும், அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும், முரசை {முரசு} கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே. நீர் கர்ணனோடும், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்} சேர்ந்து அழிவையே அடைவீர்.(17, 18) கிருஷ்ணனின் பாதங்களின் மீதும், என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன்.(19) போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம்" என்றான் (சாத்யகி). கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் {சோமதத்தனும், சாத்யகியும்}, தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர்.(20)

அப்போது துரியோதனன், ஆயிரம் தேர்களுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான். சினத்தால் நிறைந்த சகுனியும், அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள், பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ (அதையே செய்தான் {சோமதத்தனைச் சூழ்ந்து}) நின்றான்.(21, 22) வயதால் இளமையுடையவனும், வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும், ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் {சகுனி} முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான். அவற்றுடனேயே அவன் {சகுனி}, வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான்.(23, 24) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் (கணை மேகங்களால்) சாத்யகியை மறைத்தான். நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(25) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது, பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது.

அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.(26, 27) பதிலுக்குச் சாத்யகி, ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை {சோமதத்தனைத்} துளைத்தான். வலிமைமிக்கவனும், உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் (சாத்யகியால்) ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன், மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(28) அவன் {சோமதத்தன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான்.(29) யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர், அந்த யது வீரனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார்.(30) ஆசான் {துரோணர்} முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர், யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை {சாத்யகியைக்} காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர்" {என்றான் சஞ்சயன்}.31
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155அ-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-31


ஆங்கிலத்தில் | In English

Sunday, September 11, 2016

தேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை! - துரோண பர்வம் பகுதி – 143

The hostility from the self choice of Devaki! | Drona-Parva-Section-143 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 59)

பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸிடம் சாத்யகி அடைந்த தோல்வியின் காரணத்தை விசாரித்த திருதராஷ்டிரன்; தேவகியின் சுயம்வரத்தில் சிநியால் அவமதிக்கப்பட்ட சோமதத்தன்; சிநியின் வழித்தோன்றலைத் தன் வழித்தோன்றல் அவமதிக்க மகாதேவனிடம் வரம் பெற்ற சோமதத்தன்; விருஷ்ணி வீரர்களின் புகழைச் சொன்ன சஞ்சயன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்?” என்று கேட்டான்.(1, 2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)

[1] வேறொரு பதிப்பில் இஃது ஆஜமீடன் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியைப் போலவே தேவமீடன் என்றே இருக்கிறது.

அந்த நேரத்தில்தான், ஓ! மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது முடியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, “பிழைப்பாயாக” என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)

சிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ! தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)

உண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.

தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன சொல்லப்படமுடியும்?(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள், செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26) 

பலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ! குருக்களின் மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன” {என்றான் சஞ்சயன்}.(29)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்