Arjuna's curse expiated! | Aswamedha-Parva-Section-81 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 66)
பதிவின் சுருக்கம் : சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?" என்று கேட்டான்.(4)