Censurable indication! | Aswamedha-Parva-Section-87 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 72)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்...
யுதிஷ்டிரன், "ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக" என்று கேட்டான்.(6)