Showing posts with label சர்யாதி. Show all posts
Showing posts with label சர்யாதி. Show all posts

Sunday, March 16, 2014

சியவனரால் அசைவிழந்த இந்திரன் - வனபர்வம் பகுதி 124

Chyavana paralysed Indra | Vana Parva - Section 124 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர், தனது மாமனான சர்யாதியிடம் சொல்லி ஒரு வேள்விக்கு ஏற்பாடு செய்து, சோமச்சாற்றின் பங்கை அசுவினிகளுக்குப் படைக்க முயற்சிப்பது; இந்திரன் அதற்குத் தடை சொல்வது; அதை மீறி கொடுக்க முயன்ற சியவனர் மேல் வஜ்ரத்தை இந்திரன் ஓங்க, சியவனர் இந்திரனை அசைவற்றவனாக்கியது; சியவனரால் உண்டாக்கப்பட்ட பிசாசு இந்திரனிடம் செல்வது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சியவனர் இளமையைப் பெற்றார் என்ற செய்தி சர்யாதியை அடைந்தது. மிகவும் திருப்தி கொண்ட அவன் {சர்யாதி}, தனது படைகளுடன், பிருகு மைந்தனின் {சியவனரின்} ஆசிரமத்திற்கு வந்தான். அங்கே சியவனரும், சுகன்யாவும் தேவர்களிடம் எழுந்த இரு பிள்ளைகள் போல இருப்பதைக் கண்டான். அவனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் அடைந்த மகிழ்ச்சி பெரியதாக இருந்தது. அவன் மொத்த பூமியையும் வென்றுவிட்டதாகக் கருதினான். அந்தத் தவசியால் {சியவனரால்} அந்தப் பூமியின் ஆட்சியாளனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் மரியாதையாக வரவேற்கப்பட்டனர். பிறகு அந்த மன்னன் {சர்யாதி}, அந்தத் தவசியின் {சியவனரின்} அருகில் அமர்ந்து, மகிழ்ச்சிகரமாக விவாதித்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு, அந்தப் பிருகுவின் மைந்தர் {சியவனர்} அந்த மன்னனிடம் {சர்யாதியிடம்} இன்சொல்பேசி, "ஓ! மன்னா, நான் உனக்கு ஒரு வேள்வியைச் செய்வேன். ஆகையால் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வாயாக" என்றார். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதன்பேரில், பூமியின் பாதுகாவலனான சர்யாதி, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று, சியவனரின் கோரிக்கையைப் பாராட்டினான். பிறகு வேள்வி செய்யக்கூடிய ஒரு நன்னாளில் சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு வேள்விக் கோவிலை ஏற்படுத்தி அதில் விரும்பத்தக்க அனைத்து பொருட்களையும் வைத்தான். அங்கே பிருகுவின் மகனான சியவனர், மன்னனின் {சர்யாதியின்} புரோகிதராகப் பணியை ஏற்றார். அந்த இடத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளை இனி சொல்கிறேன் கேள்.


சியவனர், தேவ மருத்துவர்களான அசுவினிகளுக்குப் படைப்பதற்காகச் சோமச்சாற்றில் ஒரு பகுதியை எடுத்து வைத்தார். அந்தத் தவசி அதைத் தெய்வீக அசுவினிகளுக்குப் படைப்பதற்கு எத்தனித்த போது, இந்திரன், "அசுவினிகளான இவர்கள் இருவருக்கும் சோமச்சாற்றின் பகுதியை அடைவதற்கு உரிமையில்லை என்பது எனது கருத்து. இவர்கள் சொர்க்கத்தில் தேவர்களுக்கு மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களது தொழிலே, இவர்களுக்கு (சோமச்சாற்றைப் பெறுவதில்) உரிமையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது" என்று தனது தடையைச் சொன்னான்.

அதற்குச் சியவனர் {இந்திரனிடம்}, "வலிமைமிக்க ஆன்மாக் கொண்ட இவர்கள் இருவரும் பெரும் தொழிலைச் செய்பவர்களே! இவர்கள் அசாதாரண அழகும் அருளும் கொண்டவர்கள். ஓ! இந்திரா, இவர்கள் என்னை நித்திய இளமை கொண்டவனாக, தேவர்களுக்கு இணையானவனாக மாற்றியிருக்கிறார்கள். வடித்த சோமச்சாற்றைப் பெறும் தகுதியை நீயும் பிற தேவர்களும் ஏன் பெற வேண்டும்? இவர்கள் {அசுவினிகள்} ஏன் பெறக்கூடாது? ஓ! தேவர்களின் தலைவா, ஓ எதிரிகளின் நகரங்களை அழிப்பவனே {இந்திரா}, அசுவினிகளும் தேவர்கள் என்ற மதிப்புடையவர்கள் என்பதை நீ அறிவாயாக" என்றார். இதற்கு இந்திரன் {சியவனரிடம்}, "இவர்கள் இருவரும் குணப்படுத்தும் {சிகிச்சை} கலை பயில்கிறார்கள். ஆகையால் அவர்கள் சேவகர்களைத் தவிர வேறல்ல. நினைத்த வண்ணம் தங்கள் உருவங்களை அடைந்து, இவர்கள் மனிதர்களின் உலகில் உலவிவருகிறார்கள். இவர்கள் எப்படி உரிமையுடன் சோமச்சாற்றைக் கோரலாம்?" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவர்கள் தலைவனால் மறுபடியும் மறுபடியும் பேசப்பட்ட போது, பிருகுவின் மகன் {சியவனர்} இந்திரனைக் கருதிப் பாராமல் {லட்சியம் செய்யாமல்}, காணிக்கை {சோமச்சாற்றை} படைக்கும் நோக்குடன் எடுத்தார். அந்தச் சோமச்சாற்றின் அற்புதமான பகுதியை அந்த இரு அசுவினிகளுக்கும் அவர் படைக்கப்போகும் நேரத்தில், அசுரன் பலனை அழித்தவன் {இந்திரன்}, இச்செயலைக் கண்டு அவரிடம் {சியவனரிடம்}, "அந்தத் தேவர்களுக்குப் படைக்கும் நோக்கோடு நீர் சோமத்தை எடுத்தீரென்றால், நிலைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களிலும் மேன்மையான, கொடூர வடிவிலான எனது வஜ்ராயுதத்தை நான் உம்மீது ஏவுவேன்" என்றான் {இந்திரன்}.

இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி, சோமச்சாற்றின் பகுதியை அசுவினிகளுக்குப் படைப்பதற்காக எடுத்தார். அப்போது சச்சியின் தலைவன் {இந்திரன்} கொடூர வடிவம் கொண்ட வஜ்ரத்தை அவர் மீது வீச எத்தனித்தான். அவன் அதை ஏவ முற்பட்ட போது, அவனது கரங்கள் பிருகுவின் மைந்தனால் {சியவனரால்} அசைவற்றனவாக மாற்றப்பட்டன. சியவனர் புனித பாடல்களை {மந்திரங்களை} உரைத்து நெருப்பில் படையலிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் அந்தத் தேவனை {இந்திரனை} அழிக்க முற்பட்டார், பிறகு அந்தத் தவசியின் தவச்சக்தியின் விளைவாக தீய ஆவி கொண்ட பெரிய பிசாசானவன் உண்டானான். பெரும் பலமும், பெருத்த உருவமும் கொண்ட அவனது பெயர் மதன் ஆகும். 

அவனது {பிசாசான மதனின்} உடல் தேவர்களாலும் அசுரர்களாலும் அளவிடமுடியாதபடி இருந்தது. அவனது வாய்ப் பயங்கரமாகப் பெருத்த அளவிலும் கூரிய பற்களுடனும் இருந்தது. அவனது ஒரு தாடை பூமியில் இருந்தபோது, மறு தாடை சொர்க்கம் வரை நீண்டது. அவனுக்கு நான்கு கோரைப் பற்கள் {தெற்றுப் பற்கள்} இருந்தன. அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனை தூரமும், மற்றப் பற்கள் பத்து யோஜனை தூரமும் இருந்தன. அவை ஒவ்வொன்றின் முனையும் கூரிய ஈட்டி போலவும் ஒரு மாளிகையின் கோபுரம் போலவும் இருந்தன. அவனது இரு கரங்களும் இரு மலைகள் போலப் பத்தாயிரம் யோஜனை தூரம் இருந்தன. அவனது இரு கண்களும் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. அவனது முகம் பிரளயத்தின் பெருந்தீ போல இருந்தது. அவன் தனது வாயை, மின்னலைப் போல இருந்த ஓய்வறியா நாவால் நக்கிக் கொண்டிருந்தான். அவனது வாய்த் திறந்திருந்தது. அவனது பார்வை பயங்கரமாக இருந்தது. அவன் இந்த மொத்த உலகத்தையுமே விழுங்கிவிடுவான் போல இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பிசாசானவன் {மதன்} நூறு வேள்விகள் செய்த தேவனிடம் {இந்திரனிடம்} விரைந்தான். அவனது நோக்கம் அந்தத் தேவனை {இந்திரனை} விழுங்குவதாக இருந்தது. அந்த அசுரன் கர்ஜித்த பயங்கர ஒலி உலகத்தையே நிரப்பியது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, March 14, 2014

சுகன்யாவை மணந்த சியவனர் - வனபர்வம் பகுதி 122

Chyavana married sukanya | Vana Parva - Section 122 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சியவனர் கடுந்தவம் இருப்பது; சியவனரைச்சுற்றி எறும்புப்புற்று வளர்வது; சர்யாதி தனது பணியாட்களுடனும்  நாலாயிரம் பெண்களுடனும், தனது ஒரே மகளுடனும் அங்கே வருவது; சுகன்யாவைக் கண்டு சியவனர் மயங்குவது; எறும்புப்புற்றில் தெரிந்த சியவனரின் கண்களைச் சுகன்யா முள்ளால் துளைப்பது; சியவனர் கோபம் கொள்வது; சர்யாதி சியவனரைச் சாந்தப்படுத்துவது; சுகன்யா சியவனர் திருமணம்...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் முனிவரான பிருகுவுக்குச் சியவனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்திருந்தார். மிகப்பிரகாசமானவராக அவர் {சியவனர்} அந்தத் தடாகத்தின் அருகே தவமிருக்கத் தொடங்கினார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}! ஓ மனிதர்களின் பாதுகாவலா! பெரும் சக்தி கொண்ட அவர் {சியவனர்} வீர நிலை என்ற ஆசனத்தில் {வீராசனம்} நீண்ட காலத்திற்கு அசைவற்று அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொடிகள் சூழ்ந்த அவரை {சியவனரைச்} சுற்றி எறும்புப்புற்று {கரையான்புற்று} உண்டாயிற்று. அதன் பிறகு நீண்ட காலம் கழித்து, திரளான எறும்புக் கூட்டம் அவரை மொய்த்தது. முழுதும் எறும்புகளால் மூடப்பட்ட அந்த மதிநுட்பமுடைய தவசி {சியவனர்} கிட்டத்தற்ற மண்குவியல் போலவே காணப்பட்டார். அப்படி எறும்புப்புற்றால் மூடப்பட்ட அவர் தொடர்ந்து தவம்பயின்று வந்தார்.


அதன் பிறகு, நீண்ட காலம் கடந்து, சர்யாதி என்ற பெயர் படைத்த பூமியின் ஆட்சியாளன், அந்த இனிமையான அற்புதமான தடாகத்துக்கு கேளிக்கைக்காக வந்தான். ஓ பாரதக் குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அவனோடு சேர்ந்து அவனால் {மன்னன் சர்யாதியால்} மணம்புரியப்பட்ட நாலாயிரம் பெண்களும் அங்கே வந்தனர். மேலும், அழகான புருவம் கொண்ட அவனது {மன்னன் சர்யாதியின்} மகளான சுகன்யா என்ற பெயர் கொண்டவளும் அவனோடு வந்திருந்தாள். தேவர்கள் அணியும் ஆபரணங்கள் பூண்டிருந்த அவள் {சுகன்யா}, தனது பணிப்பெண்கள் சூழ நடந்து, பிருகுவின் மகன் {சியவனர்} அமர்ந்திருந்த அந்த எறும்புப் புற்றை அணுகினாள். பணிப்பெண்கள் சூழ இருந்த அவள் {சுகன்யா}, அழகான இயற்கைக் காட்சிகளையும், உயர்ந்த மரங்கள் நிரம்பிய வனத்தையும் கண்டு உல்லாசமாக இருக்க ஆரம்பித்தாள். இளமையின் துவக்கத்தில் இருந்த அவள் {சுகன்யா} அழகாகவும், எளிதில் காதல் கொள்ளத்தக்க வகையிலும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்டவளாகவும் இருந்தாள். பூத்துக்குலுங்கும் காட்டு மரங்களின் கிளைக்குச்சிகளை அவள் உடைத்துக் கொண்டிருந்தாள்.

புத்திக்கூர்மை கொண்ட பிருகுவின் மகன் {சியவனர்}, பணிப்பெண்களற்று, ஒற்றையாடையுடனும், ஆபரணங்கள் பூணப்பட்டும் இருந்த அவளை {சுகன்யாவை} நடமாடும் மின்னலெனக் கண்டார். அவளை {சுகன்யாவை} அக்கானகத்தில் தனிமையில் கண்ட மிகப் பிரகாசமுள்ள அந்தத் தவசி {சியவனர்}, ஆசையால் ஈர்க்கப்பட்டார். தவச் சக்தி கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {சியவனர்}, மெல்லிய குரலில் அந்த மங்களகரமானவளை {சுகன்யாவை} அழைத்தார். ஆனால் அவளுக்கு அவரது குரல் கேட்கவில்லை. பிறகு, அந்த எறும்புப் புற்றில் தெரியும் அந்தப் பிருகு மகனின் {சியவனரின்} கண்களைக் கண்ட சுகன்யா ஆர்வமிகுதியால் தனது உணர்வை இழந்து, "இது என்ன?" என்று கேட்டவாறு, ஒரு முள்ளை எடுத்து அந்தக் {முனிவர் சியவனரின்} கண்களைத் துளைத்தாள். அவளால் கண்கள் துளைக்கப்பட்ட அவர் மிகுந்த வலியை உணர்ந்து கோபமடைந்தார். (கோபத்தால்) அவர் சர்யாதியின் படையில் இருந்தவர்களின் இயற்கை அழைப்புகளைத் {மலம் மற்றும் சிறுநீர் கழிதலைத்} தடை செய்தார்.

இப்படி இயற்கையின் அழைப்புகள் தடைசெய்யப்பட்ட அந்த மனிதர்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். இந்நிலைகளைக் கண்ட மன்னன் {சர்யாதி} "முதியவரும், எப்போதும் தவத்திலிருப்பவரும், கோபம் கொண்டவருமான பிருகுவின் சிறப்புமிகுந்த மகனுக்கு {சியவனருக்கு} யார் தீங்கிழைத்தது.? அறிந்தவர்கள் விரைவாக எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். அதற்குப் படைவீரர்கள், "அம்முனிவருக்கு யாரும் தீங்கிழைத்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நீர் சொல்வது போல இருந்தால், இவ்விஷயத்தை நீர்தான் விசாரித்து அறியவேண்டும்" என்றனர். அதன் பேரில் அந்தப் பூமியின் ஆட்சியாளன், (சந்தர்ப்பத்திற்கேற்ப) அச்சுறுத்தல், சமரசம் என்ற இரண்டையும் பயன்படுத்தித் தனது நண்பர்களிடம் (அச்சூழ்நிலை பற்றி) விசாரித்தான். ஆனால் அவர்களும் எதையும் அறியவில்லை.

இயற்கை அழைப்புகள் தடைசெய்யப்பட்டதால் துயரப்பட்ட படையினரைக் கண்டும், தனது தந்தையின் துயரத்தைக் கண்டும், சுகன்யா தனது தந்தையிடம், "நான் கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு எறும்புப்புற்றில் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டேன். அதை மின்மினிப் பூச்சி என்றெண்ணி அதை நெருங்கித் (முள்ளால்) துளைத்தேன்" என்றாள்.  இதைக் கேட்ட சர்யாதி உடனே அந்த எறும்புப்புற்றுக்கு வந்து வயதிலும், தவத்திலும் முதிர்ந்த பிருகுவின் மகனைக் {சியவனரைக்} கண்டான். பிறகு அந்தப் பூமியின் அதிபதி கூப்பிய கரங்களோடு (அத்தவசியைக்) கண்டு, "சிறுபிள்ளைத்தனமாக அறியாமையில் எனது மகள் {சுகன்யா} செய்த இந்தச் செயலை மன்னிப்பதே உமக்குத் தகும்" என்றான். பிருகுவின் மகனான சியவனர், "என்னை அவமதித்த இவள், கர்வம் நிறைந்து எனது கண்களைத் துளைத்தாள். ஓ மன்னா {சர்யாதி}, அழகுடன் கூடிய இவள் {சுகன்யா}, அறியாமையிலும், சபலத்தாலும் தனது உணர்வுகளை இழந்தாள். உனது மகள் எனது மணமகளாக வேண்டும். அந்த ஒரு நிபந்தனையால் மட்டுமே உன்னை மன்னிப்பேன் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்" என்றார் {சியவனர்}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தத் தவசியின் {சியவனரின்} வார்த்தைகளைக் கேட்ட சர்யாதி, சற்றும் நேரமும் பொறுக்காமல், தனது மகளை அந்த உயர் ஆன்ம சியவனருக்கு அளித்தான். அந்த மங்கையின் கரத்தைப் பெற்ற அந்தப் புனிதமானவர் {முனிவர் சியவனர்} மன்னனிடம் {சர்யாதியிடம்} திருப்தி கொண்டார். அந்த முனிவரின் அருளை வென்ற அந்த மன்னன் {சர்யாதி} தனது படைகளுடன் நகரத்துக்குத் திரும்பினான். களங்கமற்ற சுகன்யாவும் அந்தத் தவசியை {சியவனரை} கணவராக அடைந்து, அவரது தவப்பயிற்சியின்போதும், விதிகளைக் கடைப்பிடிக்கும்போதும் அவரை நன்றாகப் பராமரித்தாள். அந்த அழகிய முகம் கொண்டவள் {சுகன்யா}, கபடமற்றவளாக இருந்து விருந்தினர்களுக்கும், புனித நெருப்புக்கும் பணிவிடை செய்து சியவனரை வழிபட்டு வந்தாள்."


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்