Mahodara and Usanga Munis! | Shalya-Parva-Section-39 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, புனித நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)
பலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ! மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(7)
![]() |
| பலராமன் |

