Showing posts with label காந்தாரி. Show all posts
Showing posts with label காந்தாரி. Show all posts

Sunday, January 05, 2020

தேவ அம்சங்கள்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31

Portions of deities! | Asramavasika-Parva-Section-31 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 3)


பதிவின் சுருக்கம் : போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது...


வியாசர், "ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)

காந்தாரியின் வேண்டுதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 29

The prayer of Gandhari! | Asramavasika-Parva-Section-29 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 1)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}".(5)

Thursday, January 02, 2020

குந்தியைத் தடுத்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18

Dhritarashtra dissuades Kunti! | Asramavasika-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)

Monday, October 16, 2017

சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 24

I fear Shakuni! | Stri-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 09) [ஸ்திரீ பர்வம் - 15]


பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) "ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)

துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 23

Jackals dragged Drona's feet! | Stri-Parva-Section-23 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 08) [ஸ்திரீ பர்வம் - 14]


பதிவின் சுருக்கம் : சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)

காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 22

Creatures dragging Jayadratha's body to jungle! | Stri-Parva-Section-22 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 07) [ஸ்திரீ பர்வம் - 13]


பதிவின் சுருக்கம் : அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)

ஊனுண்ணும் உயிரினங்களால் உண்ணப்பட்ட கர்ணனின் உடல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 21

Carnivorous creatures fed the body of Karna! | Stri-Parva-Section-21 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 06) [ஸ்திரீ பர்வம் - 12]


பதிவின் சுருக்கம் : கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)

Sunday, October 15, 2017

பரிதாபமாக அழுத உத்தரை! - ஸ்திரீ பர்வம் பகுதி – 20

Uttara's piteous lament! | Stri-Parva-Section-20 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 05) [ஸ்திரீ பர்வம் - 11]


பதிவின் சுருக்கம் : உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, "எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)

மகன்களுக்காகப் புலம்பிய காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 19

Lamentation of Gandhari for her sons! | Stri-Parva-Section-19 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 04) [ஸ்திரீ பர்வம் - 10]


பதிவின் சுருக்கம் : தன் மகன்களான விகர்ணன், துர்முகன், சித்திரசேனன், விவிம்சதி, துஸ்ஸகன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, அவர்களது அவல நிலையையும், அவர்களது பெருமையையும் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, ஞானியரால் மெச்சப்பட்ட என் மகன் விகர்ணன், பீமனால் கொல்லப்பட்டுப் பயங்கரமாகச் சிதைந்த நிலையில் வெறுந்தரையில் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, உயிரை இழந்து (கொல்லப்பட்ட) யானைகளுக்கு மத்தியில் கிடக்கும் விகர்ணன், நீல மேகங்களால் சூழப்பட்ட கூதிர் கால வானத்தத்தில் இருக்கும் சந்திரனைப் போல இருக்கிறான்.(2) தோலுரை பூட்டப்பட்டதும், தொடர்ந்து வில்லேந்துவதால் வடு நிறைந்ததுமான அவனது {விகர்ணனின்} அகன்ற உள்ளங்கையை உண்ணும் விருப்பத்தால் கழுகுகளால் அது கடுமையாகத் துளைக்கப்பட்டிருக்கிறது.(3) ஓ! மாதவா, ஆதரவற்றவளான அவனது மனைவி, அழுகும் பிணத்தை உண்ண விரும்பும் அந்தக் கழுகுகளைச் சிரமத்துடன் விரட்டிக் கொண்டிருக்கிறாள்.(4) ஓ! மாதவா, ஓ! மனிதர்களில் காளையே, இளமை நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனும், அழகனும், ஆடம்பரத்திலேயே வளர்க்கப்பட்டவனும், அனைத்து வகை இன்பங்களுக்குத் தகுந்தவனுமான அந்த விகர்ணன், இப்போது புழுதிக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(5) துணிக்கோல் கணைகளாலும் {கர்ணிகளாலும்}, முள்பதித்த கணைகளாலும் {நாராசங்களாலும்}, நாளீங்களாலும் அவனது முக்கியப் பகுதிகள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறந்த பாரதக் குலத்தவனின் அழகு அவனைக் கைவிடவில்லை.(6)

துச்சாசனனைக் கண்ட காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 18

Gandhari beheld Duhshasana! | Stri-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 03) [ஸ்திரீ பர்வம் - 09]


பதிவின் சுருக்கம் : தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)

பானுமதியின் நிலை! - ஸ்திரீ பர்வம் பகுதி – 17

The state of Bhanumathi! | Stri-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 02) [ஸ்திரீ பர்வம் - 08]


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, "ஐயோ, ஓ! மகனே", "ஐயோ, ஓ! மகனே" என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 16

Gandhari's lamentation unto Krishna! | Stri-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 01) [ஸ்திரீ பர்வம் - 07]


பதிவின் சுருக்கம் : ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)

Saturday, October 14, 2017

யுதிஷ்டிரனின் கால்கட்டைவிரல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 15

The toe of Yudhishthira! | Stri-Parva-Section-15 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 15) [ஸ்திரீ பர்வம் - 06]


பதிவின் சுருக்கம் : காந்தாரியிடம் பேசிய பீமன், நியாயமற்ற முறையில் துரியோதனனைக் கொன்ற தன் குற்றத்தைக் குறைத்துச் சொன்னது; துச்சாசனனின் குருதியைக் குடித்த செயலைப் பீமனுக்குச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்த காந்தாரி; தன் தம்பியின் குருதியை உண்மையில் குடிக்கவில்லை என்றும், கர்ணன் மட்டுமே அஃதை அறிவான் என்றும் சொன்ன பீமன்; காந்தாரியிடம் பணிந்த யுதிஷ்டிரன்; காந்தாரியின் கண்கள் யுதிஷ்டிரனின் கால் கட்டைவிரல் நகத்தை எரித்தது; தங்கள் தாயைச் சந்தித்த பாண்டவர்கள்; திரௌபதியோடு சேர்ந்து அழுத குந்தி; திரௌபதிக்கு ஆறுதலளித்த காந்தாரி ...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், பயந்தவன் போலத் தெரிந்து, அவளை ஆறுதல் படுத்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) "அந்தச் செயல் நேர்மையானதோ, நேர்மையற்றதோ, அஃது அச்சத்தினாலும், என்னைக் காத்துக் கொள்ளும் நோக்குடனுமே செய்யப்பட்டது. எனவே, என்னை இப்போது மன்னிப்பதே உனக்குத் தகும்.(2) உன் வலிமைமிக்க மைந்தன் {துரியோதனன்}, நேர்மையான நல்ல போரில், எவராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். துரியோதனனே முன்பு நியாயமற்ற வகையில் யுதிஷ்டிரரை வென்றான்[1]. இதன் காரணமாகவே நான் நியாயமற்றதைச் செய்தேன். அவன் எப்போதும் எங்களிடம் வஞ்சகமாகவே நடந்து கொண்டான். இதன் காரணமாகவே நான் நியாயமற்ற செயலைச் செய்ய வேண்டியிருந்தது.(4) உன் மகனே, அவனது தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய ஒரே வீரன். அந்த வீர இளவரசன் {துரியோதனன்} என்னைக் கதாயுத்ததில் கொல்லாமல் இருக்கவும், மீண்டும் எங்களை அவன் நாட்டை இழக்கச்செய்யாமல் இருக்கவும் நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(5)

Friday, October 13, 2017

காந்தாரியின் கோபம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 14

The wrath of Gandhari! | Stri-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 14) [ஸ்திரீ பர்வம் - 05]


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)

அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 11

Three heroes met the Royal family on the way! | Stri-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 11) [ஸ்திரீ பர்வம் - 02]


பதிவின் சுருக்கம் : தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது...



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்" என்றனர்.(4)

களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 10

Royal ladies set out to the battlefield! | Stri-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 01]


பதிவின் சுருக்கம் : அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, "காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக" என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)

Monday, September 18, 2017

காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்! - சல்லிய பர்வம் பகுதி – 63

Krishna spoke to Gandhari! | Shalya-Parva-Section-63 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 32)


பதிவின் சுருக்கம் : காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன?(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன?(4) ஓ! பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)

Saturday, December 31, 2016

மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 04

Dhritarashtra felldown senseless! | Karna-Parva-Section-04 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)


[1] சுலோகங்கள் 1-ம், 2-ம் இரு வரி சுலோகங்களாக அல்லாமல் முவ்வரி சுலோகங்களாக இருக்கின்றன எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)

[2] "இது பார்வையற்ற ஒரு மனிதனைக் குறிக்கும் மதிப்புமிக்க அடைமொழியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக" என்றான்.(12,13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(15)
------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 4-ல் உள்ள சுலோகங்கள் :15

ஆங்கிலத்தில் | In English

Sunday, June 28, 2015

துரோணர், விதுரன், காந்தாரி பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 148

"The speech of Drona, Vidura and Gandhari! | Udyoga Parva - Section 148 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –77)

பதிவின் சுருக்கம் : குருக்களின் நாடு பாண்டுவுக்கு எப்படி உரிமையானது என்றும், அதன் காரணமாக யுதிஷ்டிரனுக்குத் தார்மீக அடிப்படையில் எப்படி உரிமையானது என்றும் துரோணர், விதுரன் மற்றும் காந்தாரி ஆகியோர் துரியோதனனுக்கு எடுத்துரைத்ததைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பீஷ்மர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பேசுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவரான துரோணர், (கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில், {யுதிஷ்டிரரான} உமக்கு நன்மையான வார்த்தைகளைத் துரியோதனனிடம் பேசினார். அவர் {துரோணர் துரியோதனனிடம்}, "ஓ! ஐயா {துரியோதனா}, பிரதீபரின் மகன் சந்தனு, தனது குலத்தின் நன்மைக்கு அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், பீஷ்மர் என்று அழைக்கப்படும் தேவவிரதன் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், உண்மைக்கு {சத்தியத்திற்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தவனும், அறம் சார்ந்தவனும், அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அனைத்துக் கடமைகளிலும் கவனத்துடன் இருந்தவனும், குருக்களின் மன்னனுமான அந்த அரசன் பாண்டுவும் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடனேயே இருந்தான்.


(தான் கொண்ட உரிமையின் படி) குரு குலத்தைத் தழைக்க வைத்த அவன் {பாண்டு}, பெரும் ஞானம் கொண்ட தனது அண்ணன் திருதராஷ்டிரனுக்கும், தனது தம்பி க்ஷத்ரிக்கும் (விதுரனுக்கும்) அரசாட்சியைக் கொடுத்தான். மங்காப் புகழ் கொண்ட அரியணையில் இந்தத் திருதராஷ்டிரனை அமர்த்திய, குருகுலத்தின் அந்த அரச மகன் {பாண்டு}, அதன்பிறகு, தன் இரு மனைவியருடன் காட்டுக்குச் சென்றான். மனிதர்களில் புலியான விதுரன், பெரும் பணிவுடன், திருதராஷ்டிரனுக்குக் கீழ் தன்னை அமர்த்திக்கொண்டு, பனைமரத்தின் இளங்கிளை ஒன்றால் சாமரம் வீசிக் கொண்டு, இவனிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிமையைப் போலக் காத்திருக்கத் தொடங்கினான் {பணிவிடை செய்யத் தொடங்கினான் இந்த விதுரன்}.

பிறகு, ஓ! ஐயா {துரியோதனா}, குடிமக்கள் அனைவரும் பாண்டுவிடம் எப்படிப் பணிந்து நடந்தார்களோ, அப்படியே மன்னன் திருதராஷ்டிரனிடமும், அன்றிலிருந்து பணிந்து நடந்து வருகிறார்கள். பகை நகரங்களை வெல்பவனான பாண்டு, திருதராஷ்டிரனிடமும், விதுரனிடமும் நாட்டைக் கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் சுற்றினான். எப்போதும் உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன், நிதி, தானம், (நாட்டின்) சேவகர்களை மேற்பார்வையிடுதல், அனைவருக்கும் உணவிடுதல் ஆகிய துறைகளின் {நிதி மற்றும் உள்துறை ஆகியவற்றின்} அதிகாரத்தை {திருதராஷ்டிரர் ஆட்சியில்} எடுத்துக் கொண்டான். அதே வேளையில், பகை நகரங்களை வெல்பவரான பெரும் சக்தி கொண்ட பீஷ்மரோ, மன்னர்களிடம் போர், அமைதி, தேவையானவற்றைச் செய்தல், அல்லது பரிசுகளை நிறுத்தி வைத்தல் போன்ற துறைகளை {வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை} மேற்பார்வையிட்டார். பெரும் பலம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் அரியணையில் இருக்கும்போது, உயர் ஆன்ம விதுரன் அவன் {திருதராஷ்டிரன்} அருகிலேயே  இருந்தான்.

திருதராஷ்டிரனின் குலத்தில் பிறந்த நீ, குடும்பத்துக்குள் பிளவைக் கொண்டு வர எப்படித் துணிந்தாய்? உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ! மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ! மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ! ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன?} என்ன பயன் ஏற்படும்? நீதி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கும்" என்றார் {துரோணர்}.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அளக்கமுடியாத சக்தி கொண்ட துரோணர் இதைச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, "ஓ! தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் குருக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ! பெரும் மன்னா {பீஷ்மரே}, குருக்கள் அழியா வண்ணம் செயல்படுவீராக.

ஓவியம் படைக்கும் ஓவியனைப் போல, ஓ! மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள்ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ! மன்னர்களில் புலியே {பீஷ்மரே}, எண்ணிப் பாரும். பாண்டவர்கள், குருக்கள், மற்றும் அளவற்ற சக்தி கொண்ட பிற மன்னர்கள் ஆகியோரின் பெரும் படுகொலைகள் நம்முன்னே இருக்கின்றன" என்றார் {விதுரர்}.

துயரால் நிரம்பி வழிந்த இதயத்துடன் இருந்த விதுரர் இதைச் சொல்லி நிறுத்தினார். இக்காரியம் குறித்துச் சிந்தித்த அவர் {விதுரர்}, மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினார்.

பிறகு, ஒரு முழு இனமே அழிவுக்குள்ளாகப்போவதை அறிந்து எச்சரிக்கை அடைந்த மன்னன் சுபலனின் மகள் {காந்தாரி}, மிகுந்த சீற்றத்துடன், கூடியிருந்த மன்னர்கள் முன்னிலையில், தீய இதயம் கொண்ட கொடூரனான துரியோதனனிடம், அறம் மற்றும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னாள். அவள் {காந்தாரி துரியோதனனிடம்}, "பாவம் நிறைந்த நீ, உன் ஆலோசகர்களின் ஆதரவோடு செய்த குற்றங்களை அறிக்கையிடப் போகும் (எனது) வார்த்தைகளை, இந்த அரசச் சபையில் இருக்கும் மன்னர்கள் அனைவரும் மற்றும் இந்தச் சபையின் பிற உறுப்பினர்களான மறுபிறப்பாள முனிவர்களும் {பிராமணர்களும்} கேட்கட்டும்.

குருக்களின் நாடு முறையான வகையில், அடுத்தடுத்து அனுபவிக்கப்படுகிறது {ஆளப்படுகிறது}. இதுவே எப்போதும் நமது குலத்தின் வழக்கமுமாகும். நீயோ, பாவம் நிறைந்த ஆன்மாவோடும், அதீதத் தீச்செயல்களைச் செய்து கொண்டும், குரு நாட்டை நீதியற்ற வகையில் அழிக்க முற்படுகிறாய். பெரும் முன்னறிதிறம் கொண்ட விதுரனைத் (தனது ஆலோசகராக) தன் கீழே கொண்டிருக்கும் திருதராஷ்டிரர் இந்த நாட்டை உடைமையாகக் கொண்டிருக்கிறார். இந்த இருவரையும் கடந்து, ஏன் அறியாமையால் அரசாட்சியின் மேல் இப்போது பேராசை கொள்கிறாய்?

பீஷ்மர் உயிரோடிருக்கையில், உயர் ஆன்ம மன்னன் {திருதராஷ்டிரன்}, க்ஷத்ரி {விதுரன்} ஆகிய இருவரும் கூட, அவருக்கு {பீஷ்மருக்கு} அடங்கியே நடக்க வேண்டும். உண்மையில், தான் ஏற்ற நீதியின் விளைவால், மனிதர்களில் முதன்மையானவரும், கங்கையின் பிள்ளையுமான உயர் ஆன்ம பீஷ்மர் ஆட்சியுரிமையை விரும்பவில்லை.. இதன்காரணமாக, இந்த வெல்லப்பட முடியாத நாடு பாண்டுவுக்கு உடைமையானது. எனவே, அவனது {பாண்டுவின்} பிள்ளைகளே இன்று {அதற்கு} தலைவர்களாவர் {எஜமானர்களாவர்}; வேறு எவனும் அல்ல. தங்கள் தந்தைவழி உரிமையால், இந்தப் பரந்த நாடு, பாண்டவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் என முறையான வரிசையில் உரிமையானதாகும்.

உயர்ந்த ஆன்மாக் கொண்டவரும், குருக்களின் அறிவுநிறைந்த தலைவரும், உண்மையை உறுதியுடன் கடைப்பிடிப்பவருமான தேவவிரதர் {பீஷ்மர்} என்ன சொல்கிறாரோ, அதன் படி இந்த மன்னனும் {திருதராஷ்டிரரும்}, விதுரனும், பெரும் நோன்புகள் கொண்ட பீஷ்மரின் கட்டளையின் பேரில், அதையே அறிக்கையிட்டபடி {பறைசாற்றியபடி}, நமது குலத்தின் வழக்கத்தை நோற்று, உரிய வகையில் நமது நாட்டை ஆளட்டும். இதுவே (இந்தக் குலத்தின்) நலன்விரும்பிகள் செயல்பட வேண்டிய முறையாகும். தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அறத்தை முதன்மையாகக் கொண்டு, மன்னன் திருதராஷ்டிரரால் வழிகாட்டப்பட்டு, சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} தூண்டப்பட்டு, குருக்களின் இந்த நாட்டைச் சட்ட முறைமைகளின்படி அடைந்து, நீதியுடன் நீண்ட வருடங்கள் ஆளட்டும்" என்றாள் {காந்தாரி}."


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்