Showing posts with label நாராயணன். Show all posts
Showing posts with label நாராயணன். Show all posts

Tuesday, October 29, 2019

நாராயணன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 25

Narayana! | Aswamedha-Parva-Section-25 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...


பிராமணர், "இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)

Tuesday, December 11, 2018

பக்தி அறம் - ஏகாந்தம்! - சாந்திபர்வம் பகுதி – 349

Religion of devotion - Ekanta! | Shanti-Parva-Section-349 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 176)


பதிவின் சுருக்கம் : பக்தி அறத்தை முதலில் தொடங்கியவர்; தொடக்க காலத்தில் இருந்து வழிவழியாக வந்த அறத்தின் வரலாறு; பக்திஅறத்தை ஏன் அனைத்து மனிதர்களும் பின்பற்றுவதில்லை; இந்த ஏகாந்த அறத்தின் மூலம் பிரம்மத்தை அடையும் வகையை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சிறப்புமிக்கவனாக ஹரி, தன்னிடம் முழு ஆன்மாக்களோடு தங்களை அர்ப்பணிப்போரிடம் அருள் நிறைந்தவனாகிறான். விதிக்கு ஏற்புடைய வகையில் அவனுக்கு அளிக்கப்படும் வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஏற்கிறான்.(1) தங்கள் விறகை எரித்தவர்களும், தகுதி மற்றும் தகுதியின்மை {புண்ணியப் பாவங்கள்} ஆகிய இரண்டும் இல்லாதவர்களுமான மனிதர்கள் ஆசானிலிருந்து ஆசான் மூலமாக வழிவழியாக அடையும் ஞானத்தையும், இறுதியில் அவர்கள் அடையும் வெற்றியைக் குறித்தும் சொன்னீர்[1].(2) அத்தகைய மனிதர்கள், வேறு மூன்றின் மூலமாக நான்காவதான புருஷர்களில் முதன்மையான சாரத்தை, அல்லது வாசுதேவனையே எப்போதும் அடைகிறார்கள்[2]. எனினும், தங்கள் முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்கள் {ஏகாந்திகள்} உடனே உயர்ந்த கதியை {பரமபதத்தை} அடைகிறார்கள்[3].(3) பக்தி அறமே (ஞானத்தை விட) மேன்மையானதாகவும், நாராயணனின் விருப்பத்திற்குரியதாகவும் தெரிகிறது என்பதில் ஐயமில்லை. இவர்கள் (அநிருத்தன், பிரத்யும்னன் மற்றும் சங்கர்ஷணன் என்ற) அடுத்தடுத்த மூன்று நிலைகளைக் கடக்காமல் மாற்றமில்லாத ஹரியை உடனே அடைகிறார்கள்.(4) முறையான நோன்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படியான உபநிஷத்துகளுடன் கூடிய வேத கல்வி ஆகியவற்றால் பிராமணர்களாலும், யதிகளின் அறத்தைப் பின்பற்றுவோராலும் அடையப்படும் கதியானது,(5) முழு ஆன்மாக்களுடன் ஹரியிடம் அர்ப்பணிப்புக் கொள்ளும் மனிதர்களால் அடையப்படும் கதியைவிடக் குறைந்ததாக நான் நினைக்கிறேன். பக்தி அறத்தை முதலில் தொடங்கியது யார்? அஃதை அறிவித்தது தேவனா? முனிவரா?(6) முழு ஆன்மாக்களோடு அர்ப்பணிப்பில் ஈடுபடுபவர்களால் பயிலப்படும் நடைமுறைகள் என்னென்ன? அந்த நடைமுறைகள் எப்போது தொடங்கின? இவற்றில் எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. இவ்வையங்களை நீர் விலக்குவீராக. நீர் விளக்கப் போகும் பல்வேறு கூறுகளைக் கேட்க நான் பேராவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(7)

Monday, December 10, 2018

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 348

Hayagriva and Madhukaitabhas! | Shanti-Parva-Section-348 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 175)


பதிவின் சுருக்கம் : பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு...


ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, "தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)

Sunday, December 09, 2018

நாராயண மகிமை! - சாந்திபர்வம் பகுதி – 347

The glory of Narayana! | Shanti-Parva-Section-347 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 174)


பதிவின் சுருக்கம் : தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற நாரதர்; ஜனமேஜயனுக்கு நாராயணனின் மகிமையைச் சொன்ன வைசம்பாயனர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நரனும், நாராயணனும் சொன்ன இந்த வார்த்தைகளைக்கேட்ட முனிவர் நாரதர், பரம்பொருளிடம் அர்ப்பணிப்பில் {பக்தியில்} நிறைந்தார்.(1) நரநாராயணர்களின் ஆசிரமத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் வசித்து, மாற்றமில்லாதவனான ஹரியைக் கண்டு, நாராயாணனைக் குறித்த சிறந்த உரையாடல்களைக் கேட்ட பிறகு அந்தத் தெய்வீக முனிவர், இமயச் சாரலில் உள்ள தன் சொந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(2) எனினும், முதன்மையான தவசிகளான நரனும், நாராயணனும், கடுந்தவப் பயிற்சிகளில் ஈடுபட்டபடியே இனிமை நிறைந்த தங்கள் பதரி ஆசிரமத்தில் தொடர்ந்து வசித்தனர்.(3) நீ பாண்டவ குலத்தில் பிறந்தவனாவாய். நீ அளவிலா சக்தி கொண்டவனாவாய். ஓ! பாண்டவ குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, நாராயணனைக் குறித்த இந்த உரையைத் தொடக்கம் முதல் கேட்ட உனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் கழுவப்பட்டு, ஆன்ம புனிதம் அடைந்தவனாக நீ இருக்கிறாய்.(4)

பித்ரு வழிபாடு! - சாந்திபர்வம் பகுதி – 346

Pitri worship! | Shanti-Parva-Section-346 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 173)


பதிவின் சுருக்கம் : பித்ருக்களுக்குச் செய்யும் சடங்குகளின் சிறப்பை நாரதருக்குச் சொன்ன நரனும், நாராயணனும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒரு சமயத்தில் பரமேஷ்டியின் மகனான நாரதர், நர நாரயணரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தேவர்களை மதிக்கும் சடங்குகளையும், நோன்புகளையும் முறையாகச் செய்துவிட்டு, பித்ருக்களைக் கௌரவிக்கும் சடங்கைச் செய்வதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(1) இவ்வாறு அவர் ஆயத்தமாவதைக் கண்ட தர்மனின் மூத்த மகனான பலமிக்க நாராயணர், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் தொடர்புடைய இந்தச் சடங்குகள் மற்றும் நோன்புகளில் யாரை நீர் வழிபடுகிறீர்? ஓ! புத்திமான்கள் அனைவரிலும் முதன்மையானவரே, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் எனக்கு இது குறித்துச் சொல்வீராக. நீர் செய்வது என்ன? நீர் செய்யும் இந்தச் சடங்குகளால் என்ன கனிகளை {பலன்களை} நீர் விரும்புகிறீர்" என்று கேட்டார்.(2,3)

Saturday, December 08, 2018

பதரியில் வசிக்கும் நாரதர்! - சாந்திபர்வம் பகுதி – 345

Narada resides at Vadari! | Shanti-Parva-Section-345 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 172)


பதிவின் சுருக்கம் : பரமாத்மாவின் மகிமையைச் சொன்ன நரனும், நாராயணனும்; தவத்தில் ஈடுபட்ட நாரதர்...


நரனும், நாராயணனும் {நாரதரிடம்}, "(அநிருத்தனின் வடிவில்) பலமிக்க நாராயணனை நீர் கண்டதால் உயர்ந்த அருளைக் கொண்டவராகவும், உயர்ந்த புகழுக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். வேறு எவராலும், ஏன் ஆதி தாமரையில் பிறந்த பிரம்மனாலும் கூட அவனைக் காண முடிந்ததில்லை.(1) பலமிக்கவனும், புனிதம் நிறைந்தவனுமான அந்தப் புருஷர்களில் முதன்மையானவன், வெளிப்படாத மூலத்தையும், காணப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் ஓ! நாரதரே, நாங்கள் உமக்குச் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மையே.(2) அர்ப்பணிப்புடன் அவனைத் துதிப்பவனைவிட இந்த அண்டத்தில் வேறு எவனும் அவனுக்கு அன்புக்குரியவன் இல்லை. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதன் காரணமாகவே அவன் உம்மிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(3) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, தவங்கள் நோற்பதில் ஈடுபட்டுவரும் அந்தப் பரமாத்மாவின் ஆட்சிப்பகுதிக்கு எங்கள் இருவரைத் தவிர வேறு எவராலும் செல்ல முடியாது.(4) அந்த இடம் அவனால் அலங்கரிக்கப்பட்டிருப்பதன் விளைவால், அஃது {அவ்விடம் / வெண்தீவு / ஸ்வேதத்வீபம்} ஆயிரம் சூரியர்கள் ஒன்றுதிரண்டதற்கு ஒப்பான காந்தியைக் கொண்டிருக்கிறது.(5)

நாரதரும் நரநாராயணர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 344

Narada and NaraNarayana! | Shanti-Parva-Section-344 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 171)


பதிவின் சுருக்கம் : நாரதர் ஸ்வேதத்வீபத்தில் இருந்து திரும்பியது; அவர் மீண்டும் பதரியை அடைந்தது; நாரதருக்கும் நரநாராயணர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


சௌனகர், "ஓ! சௌதி, நீ சொன்ன இந்தக் கதை சிறப்பானதாகும். உண்மையில், இதைக் கேட்ட தவசிகள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கின்றனர்.(1) ஓ! சௌதி, பூமியில் உள்ள புனிதத் தலங்கள், மற்றும் புண்ணிய நீர்நிலைகள் அனைத்திற்கும் சென்று தூய்மைச் சடங்குகளைச் செய்வதால் கிட்டும் தகுதியைவிட {புண்ணியத்தைவிட} நாராயணனைக் குறித்துச் சொல்லும் ஒரு கதை அதிகக் கனிதரும் என்று சொல்லப்படுகிறது.(2) புனிதமானதும், ஒவ்வொரு பாவத்தையும் கழுவ வல்லதும், நாராயணனைக் குறித்ததுமான உனது இவ்வுரையைக் கேட்டு நிச்சயம் நாங்கள் அனைவரும் புனிதமடைந்தோம்.(3) அனைத்து உலகங்களாலும் துதிக்கப்படுபவனும், சிறப்புமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேவன் {நாராயணன்}, பிரம்மனோடு கூடிய தேவர்களாலும், முனிவர்கள் அனைவராலும் கூடக் காணப்பட இயலாதவனாவான்.(4) இருப்பினும், ஓ! சூதரின் மகனே, ஹரி என்றழைக்கப்படும் நாராயணனை நாரதரால், காண முடிந்தது. தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான அந்தத் தலைவனின் அருளாலேயே அவரால் காண முடிந்தது.(5) எனினும், அண்டத்தின் உயர்ந்த தலைவனான அவன் அநிருத்த வடிவத்தில் இருந்த காட்சியைப் பெற்ற பிறகும் கூடத் தெய்வீக முனிவரான நாரதர் தேவர்களில் முதன்மையானவர்களான நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் காண (இமயச் சாரலில் உள்ள பதரி ஆசிரமத்தை நோக்கி) ஏன் மீண்டும் விரைந்து வந்தார்? ஓ! சௌதி, நாரதரின் அந்த நடத்தைக்கான காரணத்தை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(6)

Thursday, December 06, 2018

ருத்திர நாராயணப் போர்! - சாந்திபர்வம் பகுதி – 343

Battle between Rudra and Narayana! | Shanti-Parva-Section-343 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 170)


பதிவின் சுருக்கம் : அக்னி மற்றும் சோமனின் இயல்பொற்றுமை; ருத்திரனுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த போர்...


அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "பழங்காலத்தில், அக்னியும், சோமனும் எவ்வாறு தங்கள் சொந்த இயல்பில் சீரான தன்மையை அடைந்தனர்? இந்த ஐயம் என் மனத்தில் எழுகிறது. ஓ! மதுசூதனா, இதை விலக்குவாயாக" என்றான்.(1)

Thursday, November 29, 2018

நோய் நீக்கும் புராணம்! - சாந்திபர்வம் பகுதி – 340

A narrative which dispells sickness! | Shanti-Parva-Section-340 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 167)


பதிவின் சுருக்கம் : நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயாணன்; நாரதருக்கும், நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; தன் இயல்பையும், தனது அவதாரங்களையும் நாரதருக்கு எடுத்துச் சொன்ன நாராயணன்; பிரம்மன் காணாத நாராயணனின் வடிவத்தைக் கண்ட நாரதர்; நாராயணீயத்தின் மகிமையை உரைத்த பீஷ்மர்; படிப்பதாலும், கேட்பதாலும், நோய் நீங்கும் பலனைத் தரும் புராணம்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பிறர் அறியாத பெயர்களால் பாடப்பட்டவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான தெய்வீக நாராயணன், தவசி நாரதருக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(1) அவனது வடிவம் சந்திரனை விடத் தூய்மையானதாகவும், சில தன்மைகளில் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. அவன் சுடர்மிக்க நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். அந்தப் பலமிக்கத் தலைவன் விஷ்டி என்ற வடிவத்தில் இருந்தான்.(2) சில தன்மைகளில் கிளியின் இறகுகளுக்கு ஒப்பானவனாகவும், சில தன்மைகளில் தூய படிகத் திரளுக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் மை மலைக்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் தூய்மையான தங்கத் திரளுக்கு ஒப்பாகவும் அவன் இருந்தான்.(3) அவனது நிறம் முதலில் அமையும் பவளத்திற்கு ஒப்பானதாகவும், வெண்மையாகவும் இருந்தது. சில தன்மைகளில் அந்த நிறம் தங்கவண்ணமாகவும், சில தன்மைகளில் வைடூரியத்திற்கு ஒப்பாகவும் இருந்தது.(4) சில தன்மைகளில் நீலவைடூரிய வண்ணத்திற்கு ஒப்பாகவும், சில தன்மைகளில் இந்திரநீலக்கல்லுக்கு ஒப்பாகவும் இருந்தது. சில தன்மைகளில் மயில்கழுத்தின் வண்ணத்திற்கும், சிலவற்றில் முத்து மாலைக்கும் ஒப்பானதாக இருந்தது.(5)

Tuesday, November 27, 2018

நாராயணத் துதி! - சாந்திபர்வம் பகுதி – 339

Adorations to Narayana! | Shanti-Parva-Section-339 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 166)


பதிவின் சுருக்கம் : நாராயணனைக் காணச் சென்ற நாரதர்; நாரதர் சொன்ன நாராயணத் துதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வெண்தீவு {ஸ்வேதத்வீபம்} என்றழைக்கப்படும் பரந்த ஆட்சிப்பகுதியை அடைந்த சிறப்புமிக்க முனிவர் {நாரதர்}, (நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னது போன்ற) சந்திர காந்தியைக் கொண்ட அதே வெண்மனிதர்களைக் கண்டனர்.(1) நாராயணனைக் காண விரும்பிய அவர், மிகக் கடினமான நோன்புகளை நோற்றபடியே, புனிதமான மந்திரங்களை அமைதியாக உரைப்பதில் அமைதியாகவும், கவனமாகவும் ஈடுபட்டு அங்கே வசிக்கத் தொடங்கினார்.(2) குவிந்த மனத்தைக் கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர், கரங்களை உயர்த்தி, யோகத்தில் நின்றபடி, குணங்கள் கொண்ட மற்றும் குணங்கள் அனைத்தும் அற்ற ஆன்மாவான {சகுண மற்றும் நிர்க்குண பரமாத்மாவான} அண்டத்தின் தலைவனிடம் பின்வரும் பாடலைப் பாடினார்.(3)

Sunday, November 25, 2018

உலகின் முதல் சாத்திரம்! - சாந்திபர்வம் பகுதி – 336

The first treatise! | Shanti-Parva-Section-336 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 163)


பதிவின் சுருக்கம் : ஸ்வேதத்வீபத்திற்குச் சென்ற நாரதர்; பாஞ்சராத்ர சாத்திரத்தின் வரலாறு; உலகின் முதல் நீதி சாத்திரத்தைத் தொகுத்த சப்தரிஷிகள்; நீதி சாத்திரத்தை அடைந்த மன்னன் உபரிசரன்; நாராயணன் சொன்ன வார்த்தைகள்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முதன்மையான நாராயணனால் இந்த வார்த்தைகளால் சொல்லப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான நாரதர், உலக நன்மைக்காக நாராயணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)

Saturday, November 24, 2018

நரநாராயணர்! - சாந்திபர்வம் பகுதி – 335

Nara and Narayana! | Shanti-Parva-Section-335 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 162)


பதிவின் சுருக்கம் : நாரத முனி, நாராயண முனி ஆகியோருக்கிடையிலான உரையாடல்; நரனும் நாராயணனும் செய்த தினசரி சடங்குகள்; நரநாராயணர்களால் துதிக்கப்பட்ட தேவன் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மனிதன், இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ}, பிரம்மச்சாரியாகவோ, காட்டுத்துறவியாகவோ {வானப்பிரஸ்தனாகவோ}, சந்நியாசியாகவோ இருந்து வெற்றியடைய விரும்பினால், அவன் எந்தத் தேவனைத் துதிக்க {ஆராதிக்க} வேண்டும்?(1) எங்கிருந்து அவன் சொர்க்கத்தையும், உயர்ந்த நன்மையையும் (விடுதலையையும் {முக்தியையும்}) நிச்சயமாக அடையலாம். எந்த விதிமுறைகளின்படி அவன் தேவர்கள் மற்றும் பித்ருக்களைக் கௌரவிக்கும் ஹோமத்தைச் செய்ய வேண்டும்?(2) ஒருவன் விடுதலை {முக்தியை} அடையும்போது எந்தக் கதியை அடைகிறான்? விடுதலையின் சாரம் என்ன? சொர்க்கத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து வீழாதிருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?(3) தேவர்களின் தேவன் யார்? பித்ருக்களின் பித்ரு யார்? தேவர்களின் தேவருக்கும், பித்ருக்களின் பித்ருவுக்கும் மேலானவர் யார்? ஓ! பாட்டா இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(4)

Sunday, December 18, 2016

சிவனும்! நாராயணனும்!! - துரோண பர்வம் பகுதி – 202

Siva and Narayana! | Drona-Parva-Section-202 | Mahabharata In Tamil

(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 09)

பதிவின் சுருக்கம் : துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனன், அஸ்வத்தாமனிடம் கடுமொழியில் பேசியது; ஆக்னேயாஸ்திரத்தை அழைத்த அஸ்வத்தாமன்; இயற்கையில் தோன்றிய கடும் சகுனங்கள்; பாண்டவப் படைக்கு நேர்ந்த பேரழிவு; பிரம்மாஸ்திரத்தை அழைத்து அஸ்வத்தாமனின் ஆயுதத்தைக் கலங்கடித்த அர்ஜுனன்; இயற்கையின் இயல்பு நிலை திரும்புவது; ஆக்னேயாஸ்திரத்தால் எந்தப் பாதிப்பையும் அடையாமல் வெளிவந்த அர்ஜுனனும், கேசவனும்; மனத்தளர்வுற்ற அஸ்வத்தாமன் களத்தைவிட்டு ஓடுவது; வழியில் வியாசரைச் சந்தித்து, வெல்லப்பட முடியாத ஆக்னேயாஸ்திரத்தின் தோல்வியைக் குறித்து வினவுவது; நாராயணனின் வரலாற்றை அஸ்வத்தாமனுக்குச் சொன்ன வியாசர்; மகாதேவனைத் துதித்த நாராயணன்; நாராயணனில் இருந்து உண்டாக்கப்பட்ட நரன்; அர்ஜுனனும், கிருஷ்ணனும் நரநாராயணர்களே என்பதைச் சொன்ன வியாசர்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அந்தப் படை பிளக்கப்பட்டதைக் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துச் சென்றான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}!, பிறகு அந்தப் படையானது கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் முயற்சியின் பேரில் அணிதிரட்டப்பட்டு, அந்தப் போர்க்களத்தில் நின்றது.(2) சோமகர்களாலும், மத்ஸ்யர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்} மட்டுமே, கௌரவர்கள் மீது தன் கணைகளை ஏவி அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தான்[1].(3)


[1] இங்கே பம்பாய் பதிப்பைப் பின்பற்றியிருப்பதாகக் கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "பீபத்சு ஒருவனே சோமகர்களைச் சேர்ந்த மண்டலாதிபர்களோடும், மச்ச நாடர்களோடும் இன்னும் மற்றவர்களோடும் சேர்ந்து கௌரவர்களைக் குறித்து (யுத்தத்திற்குத்) திரும்பினான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அர்ஜுனன் போரிடத் திரும்பினான் என்றே இருக்கிறது.

பெரும் வில்லாளியும், தன் கொடியில் சிங்கவால் குறியைக் கொண்டவனுமான அஸ்வத்தாமனை வேகமாக அணுகிய அர்ஜுனன் அவனிடம்,(4) "உம்மிடம் உள்ள உமது வலிமையையும், சக்தியையும், அறிவையும், ஆண்மையையும், தார்தராஷ்டிரர்கள் மீது நீர் கொண்ட பாசத்தையும், எங்களிடம் நீர் கொண்ட வெறுப்பையும், உமது உயர்ந்த திறனையும் இப்போது என்னிடம் காட்டுவீராக. துரோணரைக் கொன்ற பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னனே} கூட இன்று உமது செருக்கைத் தணிப்பான்.(5,6) யுக நெருப்புக்கு ஒப்பானவனும், தன் எதிரிகளுக்கு யமனைப் போன்றவனுமான அந்தப் பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்}, கோவிந்தனோடு {கிருஷ்ணனோடும்} கூடிய என்னோடும் இப்போது மோத வாரும். போரில் உமது செருக்கை நீர் வெளிப்படுத்தினீர், ஆனால் அந்த உமது செருக்கை நான் தணிப்பேன்" என்றான் {அர்ஜுனன்}.(7)

திருதராஷ்டிரன், "ஓ! சஞ்சயா, ஆசானின் {துரோணரின்} மகன் {அஸ்வத்தாமன்} வலிமைகொண்டவனும், மரியாதைக்குத் தகுந்தவனுமாவான். அவன் {அஸ்வத்தாமன்} தனஞ்சயனிடம் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான், உயர் ஆன்ம தனஞ்சயனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு அவனிடம் அன்பையே கொண்டிருக்கிறான்.(8) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வாறு துரோணர் மகனிடம் இதற்கும் முன்பு பேசியதில்லை. அப்படியிருக்கையில், அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் நண்பனிடம் ஏன் இத்தகு கடும் வார்த்தைகளால் பேசினான்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இளைஞனான சேதியின் இளவரசன், பூரு குலத்தின் பிருஹத்க்ஷத்திரன் {விருத்தக்ஷத்திரன்}, ஆயுத அறிவியலை நன்கு அறிந்தவனான மாலவர்களின் தலைவன் சுதர்சனன் ஆகியோரின் வீழ்ச்சி, திருஷ்டத்யும்னன், சாத்யகி மற்றும் பீமன் ஆகியோர் அடைந்த தோல்வி ஆகியவற்றால் பெரும் வலியை உணர்ந்தும், யுதிஷ்டிரனின் வார்த்தைகளால் முக்கிய அங்கம் {இதயம்} பிளக்கப்பட்டும், தன் முந்தைய துயரங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தும், இவ்வாறான தன் துயரின் விளைவாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுந்த கோபத்தை அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} தன்னுள் உணர்ந்தான்.(11,12) இதன் காரணமாகவே அவன் {அர்ஜுனன்}, அனைத்து மரியாதைக்கும் தகுந்த ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, தகுதியற்ற, அநாகரீகமான, கசப்பான, கடும் மொழியில் ஓர் அற்பனைப் போலப் பேசினான்.(13)

கோபத்திலிருந்த பார்த்தனால், குரூரமான கடுமொழியில் பேசப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, குறிப்பாகக் கிருஷ்ணனிடமும் மிகுந்த கோபம் கொண்டான். தன் தேரிலேயே உறுதியான தீர்மானத்துடன் நின்ற வீர அஸ்வத்தாமன், நீரைத் தொட்டு {ஆசமனீயம் செய்து},(14,15) தேவர்களாலும் தடுக்கப்பட்ட முடியாத ஆக்னேய ஆயுதத்தை அழைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனும் சினத்தால் நிறைந்தவனுமான அந்த ஆசான் மகன் {துரோணர் மகன் அஸ்வத்தாமன்}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும் {அபிமந்திரணம் செய்யப்பட்டதும்}, புகையற்ற நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு, கண்ணுக்குப் புலப்படுபவர்களும், புலப்படாதவர்களுமான தன் எதிரிகள் அனைவரையும் குறிபார்த்து, அஃதை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(17) அப்போது ஆகாயத்தில் இருந்த அதனில் இருந்து அடர்த்தியான கணைமாரி வெளிப்பட்டது. நெருப்புத் தழல்களைக் கொண்ட அந்தக் கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டன.(18)

ஆகாயத்தில் இருந்து விண்கற்கள் கீற்றுகளாக விழுந்தன. திடீரெனப் (பாண்டவப்) படையை அடர்த்தியான இருள் மறைத்தது. திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளால் சூழப்பட்டன.(19) ஒன்றாகத் திரண்ட ராட்சசர்களும், பிசாசங்களும் கடுமையாகக் கூச்சலிட்டன. மங்கலமற்ற காற்று வீசத்தொடங்கியது. அதற்கு மேலும் சூரியன் எந்த வெப்பத்தையும் அளிக்கவில்லை.(20) அனைத்துப் பக்கங்களிலும் அண்டங்காக்கைகள் கரைந்தன. குருதியைப் பொழிந்தபடியே ஆகாயத்தில் மேகங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. பறவைகள், விலங்குகள், பசுக்கள் ஆகியவையும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், ஆன்மாக்களை முழுமையாகக் கட்டுக்குள் வைத்தவர்களுமான முனிவர்களும் அமைதியை இழந்தனர்.(22) {பஞ்ச}பூதங்களே கூடக் குழப்பமடைந்தவை போலத் தென்பட்டன. சூரியனும் திரும்பியவன் போலத் தென்பட்டான். வெப்பத்தால் எரிந்த அண்டமே பிணியுற்றிருப்பதைப் போலத் தென்பட்டது.(23) அச்சமடைந்த யானைகளும், நிலத்தின் பிற உயிரினங்களும், அவ்வாயுதத்தின் சக்தியால் எரிக்கப்பட்டு, அந்தப் பயங்கர சக்தியை எதிர்க்கும் பாதுகாப்பை அடைய விரும்பி, நெடிய பெருமூச்சுவிட்டுக் கொண்டே ஓடின.(24) தண்ணீரும் வெப்பமடைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பூதத்தில் {நீர் என்ற பூதத்தில்} வசிக்கும் உயிரினங்கள் அமைதியை இழந்து எரிவதாகத் தெரிந்தன.(25) முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும், ஆகாயத்திலும், பூமியிலும் இருந்து, கூரியவையும், கடுமையானவையுமான கணைகளின் மாரிகள் கருடன் அல்லது காற்றின் மூர்க்கத்துடன் வெளிப்பட்டுப் பாய்ந்தன.(26)

இடியின் மூர்க்கத்தைக் கொண்ட அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பகைவீரர்கள் அனைவரும் காட்டுத்தீயில் எரிந்த மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.(27) அவ்வாயுதத்தால் எரிக்கப்பட்ட பெரும் யானைகள், மேகங்களைப் போன்ற உரத்த முழக்கங்களோடும் பூமியில் எங்கும் விழுந்து கொண்டிருந்தன.(28) அந்நெருப்பால் எரிந்த இன்னுப் பிற பெரும் யானைகள், காட்டுத்தீயின் மத்தியில் அகப்பட்டவை போல, அச்சத்தால் பிளிறிக் கொண்டே அங்கேயும் இங்கேயும் ஓடின.(29) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தின் சக்தியால் எரிந்த குதிரைகளும், தேர்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டுத்தீயில் எரிந்த மரங்களின் தலைகளைப் போலத் தெரிந்தன. உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல, அந்தத் தெய்வீகத் தலைவன் அக்னியே அந்தப் போரில் (பாண்டவப்) படையை எரிப்பதைப் போலத் தெரிந்தது.(31)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் பாண்டவப் படை இப்படி எரிவதைக் கண்ட உமது வீரர்கள்,(32) மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். உண்மையில் வெற்றியை விரும்பிய உமது படையின் போராளிகள், மகிழ்ச்சியால் நிறைந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை எக்காளங்களை முழக்கினர். அந்தக் கடும்போரின் போது உலகையே இருள் மூடியதும், பாண்டுவின் மகனான சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} கூடிய மொத்த பாண்டவப் படையையே காண முடியவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சந்தர்ப்பத்தில் கோபத்தால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உண்டாக்கிய அந்த ஆயுதத்தைப் போல இதற்கு முன்பு நாம் கேட்டதோ, பார்த்ததோ இல்லை. அப்போது அர்ஜுனன், ஓ! மன்னா, தாமரையில் பிறந்தவனால் {பிரம்மனால்} ஏற்கனவே விதிக்கப்பட்டது போலவே, பிற ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடிக்கவல்ல பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். ஒரு கணத்திற்குள்ளாக அந்த இருள் விலகியது.(33-37)

குளிர்ந்த தென்றல் வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவடைந்து பிரகாசமாகின. (பாண்டவத் துருப்புகளின்) ஒரு முழு அக்ஷௌஹிணியும் தரையில் கிடக்கும் அற்புதக் காட்சியை நாங்கள் அப்போது கண்டோம்.(38) அஸ்வத்தாமனின் ஆயுத சக்தியால் எரித்துக் கொல்லப்பட்டவர்களின் வடிவங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, வலிமைமிக்க வில்லாளிகளான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன் ஆகிய அவ்விரு வீரர்களும், இருளில் இருந்து விடுபட்டு ஆகாயத்தில் இருக்கும் சூரியனையும், சந்திரனையும் போல ஒன்றாகக் காணப்பட்டனர். உண்மையில் காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் கேசவன் ஆகிய இருவரும் காயம்படாதவர்களாக இருந்தனர்.(39,40) கொடிகள், கொடிமரம், குதிரைகள் மற்றும் அனுஷ்கரங்களுடன் கூடியதும், உமது வீரர்களுக்கு அச்சத்தைத் தருவதுமான அந்தத் தேர் எந்தப் பழுதும் இல்லாமல் அந்த இருளில் இருந்து விடுபட்டுக் களத்தில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(41)

மகிழ்ச்சியில் நிறைந்த பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில், விரைவில் சங்கு மற்றும் பேரிகைகளின் முழக்கங்களுடன் கலந்து பல்வேறு விதங்களிலான ஒலிகள் அங்கே எழுந்தன.(42) இரு படைகளுமே கேசவனும், அர்ஜுனனும் அழிந்துவிட்டதாகவே நினைத்திருந்தனர். எனவே, (அவ்வாயுதத்தின் சக்தியில் இருந்தும் அந்த இருளில் இருந்து விடுபட்ட) கேசவனையும், அர்ஜுனனையும் கண்டு, அவர்கள் வேகமாக மீண்டும் தோன்றியதைக் கண்டு, பாண்டவர்கள் மகிழ்ச்சியாலும், கௌரவர்கள் ஆச்சரியத்தாலும் நிறைந்தனர்.(43) காயம்படாதவர்களாக முழு மகிழ்ச்சியுடன் இருந்த அவ்விரு வீரர்களும் தங்கள் சிறந்த சங்குகளை முழக்கினர். உண்மையில், மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்களைக் கண்ட உமது படைவீரர்கள் மிகுந்த மனச்சோர்வையடைந்தனர்.(44)

துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த உயர் ஆன்மாக்கள் (கேசவனும், அர்ஜுனனும்) இருவரும் (தன் ஆயுத சக்தியில் இருந்து) விடுபட்டத்தைக் கண்டு மிகவும் உற்சாகத்தை இழந்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன நடந்தது என்பதை அவன் ஒரு கணம் சிந்தித்தான்.(45) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்தித்த பிறகு அவன் {அஸ்வத்தாமன்} துயரத்தாலும், கவலையாலும் நிறைந்தவனானான். நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவன் மிகவும் உற்சாகத்தை இழந்தவனானான்.(46) தன் வில்லைக் கீழே வைத்துவிட்டுத் தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! ச்சீ ச்சீ!, யாவையும் மெய்க்குப் புறம்பானவையே” என்று சொல்லி, போரில் இருந்து ஓடினான். சரஸ்வதியின் வசிப்பிடமானவரும், வேதங்ளைத் தொகுத்தவரும், அந்தச் சாத்திரங்களின் வசிப்பிடமானவரும், பாவத்தின் களங்கமற்றவரும், மழை நிறைந்த மேகத்தன் வண்ணத்தைக் கொண்டவருமான வியாசரை அவன் {அஸ்வத்தாமன்} வழியில் சந்தித்தான்.(48)

குரு குலத்தைத் தழைக்க வைத்தவரான அவர் {வியாசர்}, தன் வழியில் நிற்பதைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துயரால் தடைபட்ட குரலுடன், மிகவும் உற்சாகமற்ற ஒருவனைப் போல அவரை {வியாசரை} வணங்கி, அவரிடம்,(49) “ஓ! ஐயா {வியாசரிடம்}, ஓ! ஐயா {வியாசரே}, இதுவும் ஒரு மாயையோ! (அவ்வாயுதத்தின்) உறுதியின்மையோ! இஃது என்னவென்று நானறியேன். உண்மையில், என் ஆயுதம் ஏன் கனியற்றதானது? (அவ்வாயுதத்தை அழைக்கும் முறையில்) என்ன அத்துமீறல் நடந்துவிட்டது?(50) அல்லது, இவர்கள் இன்னும் வாழ்வதால் இஃது ஏதும் இயல்பற்றதன்மையா? அல்லது (இரு கிருஷ்ணர்களாலும் அடையப்பட்ட) இயற்கையின் மீதான வெற்றியா? காலம் தவிர்க்கப்பட முடியாதது என்பது தெரிகிறது.(51) அசுரர்களாலோ, கந்தர்வர்களாலோ, பிசாசங்களாலோ, ராட்சசர்களாலோ, உரகர்கள், யக்ஷர்கள், பறவைகள் அல்லது மனிதர்களோ,(52) என்னால் ஏவப்படும் இவ்வாயுதத்தைக் கலங்கடிக்க முடியாது. இருப்பினும், இவ்வாயுதம் வெறும் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளையே கொன்று தணிவடையச் செய்யப்பட்டிருக்கிறது.(53) என்னால் ஏவப்பட்ட இந்த மிகவும் கடுமையான ஆயுதம் அனைத்து உயிரினங்களையும் கொல்லவல்லதாகும். அப்படியிருக்கையில், மனிதர்களின் குணங்களையே கொண்டிருக்கும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் இதனால் கொல்ல முடியாத காரணம் என்ன?(54) ஓ! புனிதமானவரே {வியாசரே}, என்னால் கேட்கப்படுவதற்கு எனக்கு உண்மையாகப் பதிலுரைப்பீராக. ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, இவை யாவையும் நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(55)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “ஆச்சரியத்தால் என்னிடம் நீ விசாரிக்கும் இந்தக் காரியம் உயர்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். அனைத்தையும் நான் சொல்வேன், கவனமாகக் கேட்பாயாக.(56) நாராயணன் என்று எவன் அழைக்கப்படுகிறானோ, அவன் பழமையானவர்களை விட மிகப் பழமையானவன் ஆவான். ஏதோ சில காரியங்களைச் சாதிப்பதற்காக அந்த அண்டப் படைப்பாளன் {நாராயணன்}, தர்மனின் மகனாகத் தன் பிறப்பை அடைந்தான்.(57) இமய மலைகளில் அவன் {நாராயணன்} கடுமையான தவத்துறவுகளைச் செய்தான். வலிமையும், சக்தியும் கொண்டு, (காந்தியின்) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான அவன் தன் கரங்களை உயர்த்தியபடி அங்கே நின்று கொண்டிருந்தான்.(58) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அறுபத்தாறாயிரம் {66,000} ஆண்டுகள் காற்றை மட்டுமே உண்டு உடல் மெலிந்தான்.(59) மீண்டும் அதைப் போல இரண்டு மடங்கு {1,32,000} காலம் மற்றொரு வகையிலான கடும் தவத்தைச் செய்த அவன், பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட வெளியைத் தன் சக்தியால் நிறைத்தான்.(60)

ஓ! ஐயா {அஸ்வத்தாமா}, அந்தத் தவங்களால், பிரம்மனைப் போல {பிரம்மஸ்வரூபி} [2] ஆன அவன் {நாராயணன்}, அப்போது, அண்டத்தின் தலைவனும், தோற்றுவாயானவனும், பாதுகாவலனும், தேவர்கள் அனைவரின் தலைவனும், உயர்ந்த தெய்வமும், பார்க்கப்பட மிகக் கடினமானவனும், நுண்ணியதைவிட நுண்ணியமானவனும், பெரியதை விடப் பெரியவனும்,(61,62) ருத்ரன் என்று அழைக்கப்படுபவனும், மேன்மையானவர்களின் தலைவனும், ஹரன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனும், தன் தலையில் சடாமுடி தரித்தவனும், ஒவ்வொரு வடிவத்திலும் உயிரை உட்புகுத்துபவனும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தின் முதற்காரணனும்,(63) தடுக்கப்பட முடியாதவனும், அச்சந்தரும் தன்மை கொண்டவனும், கடும் கோபமும் பெரும் ஆன்மாவும் கொண்டவனும், அனைத்தையும் அழிப்பவனும், பெரிய இதயம் கொண்டவனும், தெய்வீக வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், அளவிலா சக்தி படைத்தவனும்,(64) பினாகை, வஜ்ரம், சுடர்மிக்கத் திரிசூலம், போர்க்கோடரி, கதாயுதம், ஒரு பெரிய வாள் ஆகியவறைத் தரித்தவனும், அழகிய புருவங்களைக் கொண்டவனும், சடைதரித்த கூந்தல் கொண்டவனும், கனமான குறுங்கதாயுதம் {பரிகம்} தரிப்பவனும், நிலவைத் தன் நெற்றியில் கொண்டவனும், புலித்தோல் உடுத்தியவனும், தண்டாயுதம் தரித்தவனும்,(65) அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், புனித நூலாக {யக்ஞோபவீதமாக} பாம்புகளைக் கொண்டவனும், அண்டத்தின் பல்வேறு உயிரினங்களாலும், எண்ணற்ற பூதகணங்களாலும் சூழப்பட்டவனும், ஒருவனே ஆனவனும், தவத்துறவிகளின் வசிப்பிடமானவனும், வயதால் முதிர்ந்த மதிப்புக்குரிய மனிதர்களால் உயர்வாகப் புகழப்படுபவனும்,(66) நீர், சொர்க்கம், வானம், பூமி, சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு ஆகியவை ஆனவனுமான அண்டத்தின் கால அளவே ஆனவனை {சிவனைக்} கண்டான்.

[2] “ஒருவன் உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்து, உலகத்தோடு தொடர்புடைய அனைத்திலும் மேன்மையாக எழும் நிலையே அது {பிரம்மம் ஆகுதல்} என்று இதற்குப் பொருள் கொள்கிறார் நீலகண்டர்” என்ற இங்கே விளக்குகிறார் கங்குலி.

தீய நடத்தை கொண்ட மனிதர்களால், பிராமணர்களை வெறுப்பவர்கள் அனைவரையும் கொல்பவனும், முக்தியை அளிப்பவனுமான [3] அந்தப் பிறவியற்றவனின் {சிவனின்} காட்சியைப் பெறவே முடியாது.(67) அறநடத்தை கொண்டவர்களும், பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களும், துயர் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டவர்களுமான பிராமணர்களால் மட்டுமே அவனைத் {சிவனைத்} தங்கள் மனக்கண்ணால் காண முடியும். மங்காதவனும், அறத்தின் வடிவமும், புகழத்தக்கவனும், அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனுமான அவனது {சிவனது} காட்சியைத் தன் தவத்துறவுகளின் விளைவால் நாராயணன் அடைந்தான். அனைத்து வகைப் பிரகாசங்களின் அந்த உயர்ந்த வசிப்பிடமானவனும், அக்ஷங்களைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்தவனுமான அந்தத் தேவனைக் கண்ட வாசுதேவன் {நாராயணன்}, நிறைவடைந்த ஆன்மாவுடன், மகிழ்ச்சியால் நிறைந்து, அதை வார்த்தைகள், இதயம், அறிவு மற்றும் உடல் ஆகியவற்றால் வெளிப்படுத்த முயன்றான். பிறகு அந்தத் தெய்வீகத் தலைவனை {சிவனை}, அண்டத்தின் முதல் காரணனை, வரங்களை அளிப்பவனை, அழகான அங்கங்கள் கொண்ட பார்வதியுடன் விளையாடும் பலமிக்கவனை, பூத கணங்களின் பெருங்கூட்டத்தில் சூழப்பட்ட அந்த உயர்ந்த ஆன்மாவை,(68-70), பிறப்பற்றவனை, உயர்ந்த தலைவனை, வெளிப்படாத வடிவத்தை, அனைத்துக் காரணங்களின் சாரத்தை, மங்காத சக்தி கொண்டவனை {சிவனை} நாராயணன் வழிபட்டான்.

[3] “அம்ருதஸ்ய யோனிம் Amritasya yonim என்று இருக்கிறது. இதற்கு, அழிவின்மையின் மூலம் அல்லது அழிவின்மையின் காரணன் என்றும், அஃதாவது, அழிவின்மையில் உதித்தவன் என்றும் பொருளைக் கொள்ளலாம். எனவே, நீலகண்டரால் விளக்கப்பட்டுள்ளபடி, இந்த வரி ’விடுதலையடைந்து {முக்தி}, பரமாத்மாவைப் போல அழிவற்றவர்கள் ஆவோருக்கு விடிவுக்காலத்தின் தொடக்கமாக இருக்கும் நிலை’ என்பதையே சொல்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அசுரன் அந்தகனை அழித்தவனான ருத்ரனை {சிவனை} வணங்கிய தாமரைக் கண்ணன் நாராயணன், அர்ப்பணிப்பால் தன் இதயத்தை நிறைத்து, அந்த முக்கண்ணனை (இவ்வார்த்தைகளால்) துதிக்கத் தொடங்கினான்:(71) “ஓ! புகழத்தக்கவனே, ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உமது முதல் படைப்பான பூமிக்குள் நுழைந்து அதைக் காத்தவர்களும், லோகபாலர்களுமான அனைத்தையும் படைப்பவர்கள் (பிரஜாபதிகள்) அனைவரும் உன்னில் இருந்தே எழுந்தனர்.(72) தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள் மற்றும் பிற உயிரினங்களோடு கூடிய மொத்த அண்டமும் உன்னில் இருந்தே எழுந்தன என்பதை அறிவோம்.(73) இந்திரன், யமன், வருணன், குபேரன், பித்ருக்கள், தாஷ்டிரி, சோமன் ஆகியோரை நிறைவுகொள்ளச் செய்யப்படும் அனைத்தும் உண்மையில் உனக்கே காணிக்கையளிக்கப்படுகின்றன. வடிவம் மற்றும் ஒளி, ஒலி மற்றும் வானம், காற்று மற்றும் தீண்டல், சுவை மற்றும் நீர், நறுமணம் மற்றும் பூமி[4],(74) காலம், பிரம்மன், வேதங்கள், பிராமணர்கள், இந்த அசையும் மற்றும் அசையாத பொருட்கள் யாவும், உன்னில் இருந்தே எழுந்தன. பல்வேறு நீர் கொள்ளிடங்களில் இருந்து எழும் ஆவிகளே {நீராவிகளே} மழைத்துளிகளாகி பூமியில் விழுந்து ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றன. பிரளயத்தின் போது ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிக்கப்பட்ட அந்தத் தனிப்பட்ட துளிகளே மீண்டும் இணைந்து, இந்தப் பூமியில் பெரும் நீர்ப்பரப்பாகின்றன[5].(75) இவ்வாறே அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் நோக்கும் கல்விமான், உன் ஒருமையைப் புரிந்து கொள்கிறான். இரண்டு பறவைகள் (ஈஸ்வரன் மற்றும் ஜீவன்), நான்கு அஸ்வதங்கள் {அரச மரங்கள்}, வார்த்தைகளாலான அவற்றின் கிளைகள் (வேதங்களும், அதன் கிளைகளும்)[6], ஏழு பாதுகாவலர்கள் (ஐம்பூதங்கள், இதயம் மற்றும் அறிவு)[6](76) ஆகியவையும், இந்நகரத்தைத் தாங்கும் வேறு பத்தும் (இந்த உடலில் உள்ள பத்து புலன்களும்) உன்னால் படைக்கப்பட்டவையே எனினும், அவற்றில் இருந்து தனித்தும், அவற்றின் சார்பும் இல்லாதவன் நீயே[7]. எவரும் எந்த ஆதிக்கமும் செலுத்த முடியாத கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியையும், ஏழு உலகங்களும், இந்த அண்டமும் ஆனவன் நீயே.(77) அர்ப்பணிப்புள்ள உமது புகழ்பாடியான என்னிடம் நீ அருள்கூர்வாயாக. என் இதயத்தில் தீய எண்ணங்களை உண்டாக்கி என்னைக் காயப்படுத்தாமல் இருப்பாயாக. ஆன்மாக்களின் ஆன்மாவான நீ அறியப்பட இயலாதவனாக இருக்கிறாய். அண்ட விதையாக உன்னை எவன் அறிவானோ அவன் பிரம்மத்தை அடைகிறான்.(78) ஓ! தேவர்களாலேயே புரிந்து கொள்ளப்பட முடியாதவனே, உன்னை வழிபடவிரும்பி உண்மையான உன் இயல்பை உறுதிசெய்யும் முயலும் நான் {நாராயணனாகிய நான்} உன்னைத் துதிக்கிறேன். என்னால் துதிக்கப்படும் நீ, அடைவதற்கரிதானவையும், நான் விரும்புபவையுமான வரங்களை எனக்கு அளிப்பாயாக. உன் மாயையில் உன்னை மறைத்துக் கொள்ளாதே {கபடம் செய்யாதே}” என்று வேண்டினான் {நாராயணன்}.(79)

[4] “ஐந்து புலன்களால் உணரப்படும் ஐந்து {புலன்நுகர்} தன்மைகள், அவைகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இயற்கையான ஐம்பூதங்களிலேயே வெளிப்படுகின்றன என்பது பொருள்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[5] வேறொரு பதிப்பில், “ஸமுத்திர ஜலத்தினின்று நீர்த்திவலைகள் எவ்வாறு வெளிப்பட்டு வேற்றுமையடைந்து, பிரளயகாலத்தில் எவ்வாறு மறுபடியும் அந்த ஸமுத்திரஜலத்தோடேயே ஒன்று சேர்கின்றனவோ அவ்வாறு கற்றறிந்தவர்கள் உம்மிடத்தினின்றே பிரபஞ்சத்தினுடைய உத்பத்தியையும் லயத்தையும் அறிகிறார்கள்” என்றிருக்கிறது.

[6] வேறொரு பதிப்பில், “கீழாகப் பரவிச் செல்லுகின்ற கிளைகளோடு கூடிய ஸம்ஸாரரூபமான அரசமரமானது” என்றிருக்கிறது.

[7] வேறொரு பதிப்பில், “வஸை, மாம்ஸம், ருதிரம், மேதஸ், மஜ்ஜை, அஸ்தி, சுக்லம்” என்று இவை விளக்கப்படுகின்றன.

வியாசர் {அஸ்வத்தாமனிடம்} தொடர்ந்தார், “அறியமுடியாத ஆன்மா கொண்டவனும், நீலத் தொண்டை கொண்ட தேவனும், பினாகைதாரியும், முனிவர்களால் எப்போதும் புகழப்படுபவனுமான அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்}, வரங்கள் அனைத்திற்கும் தகுந்தவனான வாசுதேவனுக்கு {நாராயணனுக்கு} வரங்களை அளித்தான்.(80) அந்தப் பெரும் தேவன் {சிவன் நாராயணனிடம்}, “ஓ! நாராயணா, என்னருளால், மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கு மத்தியில் நீ அளவிலா வலிமையும், ஆன்மாவும் கொண்டவனாக இருப்பாய். தேவர்களாளோ, அசுரர்களாலோ, பெரும் உரகர்களாலோ, பிசாசங்களாலோ, கந்தர்வர்களாலோ, மனிதர்களாலோ, ராட்சசர்களாலோ, பறவைகளாலோ, நாகர்களாலோ, அண்டத்தில் உள்ள எந்த உயிரினத்தாலோ உன் ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாது. தேவர்களில் எவராலும் கூட உன்னைப் போரில் வெல்ல முடியாது.(81,83) என்னருளால், ஆயுதத்தாலோ, இடியாலோ, நெருப்பாலோ, காற்றாலோ, ஈரமான அல்லது உலர்ந்த எந்தப் பொருளாலோ, அசையும், அல்லது அசையாத எந்தப் பொருளாலோ எவராலும் உனக்கு எந்த வலியையும் உண்டாக்க முடியாது. எப்போதாவது என்னோடு நீ போரிட்டாலும், என்னிலும் மேன்மையானவனாகவே நீ இருப்பாய்” என்றான் {சிவன்}.(84,85) இவ்வாறே பழங்காலத்தில் சௌரியால் {நாராயணனால்} இவ்வரங்கள் அடையப்பட்டன. அந்தத் தேவனே {நாராயணனே}, தனது மாயையால் அண்டத்தை மயக்கி, இப்போது பூமியில் (வாசுதேவனாக) நடந்து கொண்டிருக்கிறான்.(86)

நாராயணனின் தவத்தால் நரன் என்ற பெயர் கொண்டவனும், நாராயணனுக்கே இணையானவனுமான ஒரு பெரு முனிவன் பிறந்தான். அர்ஜுனன், அந்த நரனே அன்றி வேறொருவனும் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக.(87) பழமையான தேவர்களிலும் பழமையானவர்கள் என்று சொல்லப்படும் அந்த முனிவர்கள் இருவரும் {நாராயணனும்- நரனும்}, உலகக் காரியங்களுக்கு உதவி செய்வதற்காக யுகம்தோறும் பிறக்கின்றனர்.(88) ஓ! பெரும் இதயம் கொண்டவனே {அஸ்வத்தாமா}, நீயும் கூட உன் அறச்செயல்கள் அனைத்தின் விளைவாலும், உயர்ந்த தவத்துறவுகளின் விளைவாலும், பெரும் சக்தியும், கோபமும் கொண்ட ருத்ரனின் ஒரு பாகமாகவே பிறந்திருக்கிறாய்.(89) (முந்தைய வாழ்வில்) நீ பெரும் ஞானம் கொண்டவனாகவும், தேவனுக்கு இணையானவனாகவும் இருந்தாய். இந்த அண்டம் மகாதேவனை மட்டுமே கொண்டது என்று கருதிய நீ, அந்தத் தேவனை நிறைவு செய்யும் விருப்பத்தால் பல்வேறு நோன்புகளை மேற்கொண்டு உன்னை இளைத்துக் கொண்டாய் {மெலிதாக்கிக் கொண்டாய்}.(90) பெரும் காந்தியுடன் சுடர்விட்ட ஒரு மேன்மையான மனிதனின் வடிவத்தை ஏற்ற நீ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமனே}, மந்திரங்களாலும், ஹோமங்களாலும், காணிக்கைகளாலும் அந்தப் பெரும் தேவனை வழிபட்டாய்.(91) முந்தைய வாழ்வில் உன்னால் இப்படி வழிபடப்பட்ட அந்தப் பெரும் தேவன் {ருத்ரனாகிய சிவன்}, ஓ! கற்றவனே, உன்னில் மனநிறைவு கொண்டு, உன் இதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் எண்ணற்ற வரங்களை உனக்கு அளித்தான்.(92)

கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனைப் போலவே உன் பிறப்பு, செயல்கள் மற்றும் தவத்துறவுகள் ஆகியவையும் மேன்மையானவையே. அவர்களைப் போலவே, ஒவ்வொரு யுகத்திலும் நீயும் உன் வழிபாட்டில் அந்தப் பெருந்தேவனை {சிவனை} அவனது லிங்க வடிவில் துதிக்கிறாய்.(93) ருத்ரனில் இருந்து உதித்த இந்தக் கேசவனே {கிருஷ்ணனே}, அர்ப்பணிப்புள்ள ருத்ர வழிபாட்டாளனாவான். அவனது {சிவனது} லிங்க சின்னத்தையே அண்டத்தின் தோற்றமாகக் கருதும் கேசவன் {கிருஷ்ணன்}, எப்போதும் தலைவன் சிவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறான்.(94) அண்டத்துடன் கூடிய பிரம்மத்தின் அடையாளத்தைக் காணக்கூடியதும், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், அருகில் நடப்பவை, தொலைவில் நடப்பவை ஆகிய அனைத்தையும் தன் கண் முன்பாகக் காண்பதைப் போலவே அவனைக் காணச் செய்யும் அந்த அறிவு கேவசனில் {கிருஷ்ணனில்} எப்போதுமே நிலைத்திருக்கும். அண்டத்தில் உயர்ந்த மகாதேவனையே {சிவனையே} அடைந்ததால் தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும் கேசவனைத் {கிருஷ்ணனைத்} துதிக்கின்றனர். அழிவற்றவனான கிருஷ்ணன் வேள்விகளுடன் வணங்கப்பட வேண்டியவனாவான்.(95,96) தலைவன் கேசவன் {கிருஷ்ணன்} எப்போதும் சிவனை உயிரினங்கள் அனைத்தின் தோற்றமாகக் கொண்டு லிங்கச் சின்னத்திலேயே வழிபடுகிறான். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவனும் {சிவனும்}, கேசவனை {கிருஷ்ணனை} உயர்வாக மதிக்கிறான்” என்றார் {வியாசர்}.(97)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ருத்திரனை வணங்கி, உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவனாகக் கேசவனைக் {கிருஷ்ணனைக்} கருதினான்.(98) தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, மகிழ்ச்சியால் நிறைந்ததும், அவனது உடலில் அந்த அடையாளங்கள் தோன்றின {மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது}. அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வணங்கிய அஸ்வத்தாமன், (குரு) படையின் மீது தன் கண்களைச் செலுத்தி, (இரவு ஓய்வுக்காக) அவற்றைத் திரும்ப அழைக்கச் செய்தான்.(99) உண்மையில், துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகமற்ற குருக்கள் களத்தில் இருந்து ஓய்ந்த பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் தங்கள் படைகளைத் திரும்ப அழைத்தனர்.(100) வேதங்களை நன்கறிந்த பிராமணரான அந்தத் துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து நாட்கள் போரிட்டு பேரழிவை ஏற்படுத்திவிட்டுப் பிரம்மலோகத்தை அடைந்தார்” {என்றான் சஞ்சயன்}.(101)
--------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 202-ல் உள்ள சுலோகங்கள் : 101

ஆங்கிலத்தில் | In English

Sunday, December 20, 2015

"கிருஷ்ணன் மனிதனா?" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 066

'Is Krishna a human?" Bhishma! | Bhishma-Parva-Section-066 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு; வந்தது யார் என்று பிரம்மனிடம் தேவர்கள் கேள்வி; கிருஷ்ணனின் பெருமைகளைச் சொல்லும் பிரம்மன்; கிருஷ்ணனின் பெருமைகளைத் துரியோதனனுக்குச் சொல்லும் பீஷ்மர்...

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அப்போது, உலகங்களின் தலைவனான அந்த ஒப்பற்ற தேவன் {நாராயணன்} மென்மையான மற்றும் ஆழமான குரலில், "யோகத்தின் மூலம், ஓ! ஐயா {பிரம்மனே}, உன்னால் விரும்பப்படும் அனைத்தும் என்னால் அறியப்பட்டது. நீ விரும்பியது போலவே நடக்கும்" என்று சொல்லி அங்கேயே மறைந்து போனான்.

பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், "ஓ! தலைவா {பிரம்மரே}, ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, "தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.


நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, "அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக" என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின் துணையுடன் பூமியில் வாழ்வான். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.

அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ, உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன், உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.

தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.

எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.

அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்} தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்" என்றான் {பிரம்மன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.

ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட, முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.

இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, "வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே" என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.

எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.

மூன்று உலகங்களையும் தாங்குபவன் அவனே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைமைத் தேவன் அவனே, பெரும் உரிமையாளன் அவனே, போராளி அவனே, வெற்றி அவனே, வெல்பவனும் அவனே, மேலும் இயற்கை அனைத்தின் தலைவனும் அவனே. ஓ! மன்னா {துரியோதனா}, நற்குணம் {சத்வ குணம்} நிறைந்தவனும், மேலும், இருள் {தமோ} மற்றும் பேராசையின் {ராஜச} குணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டவனும் அவனே.

கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அங்கே அறம் {தர்மம்} இருக்கும்; அறம் எங்கிருக்குமோ அங்கே வெற்றியிருக்கும். அவனது {கிருஷ்ணனுடைய} யோக மகிமையாலும், அவனது ஆன்ம யோகத்தாலுமே, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் ஆதரிக்கப்படுகின்றனர். எனவே, வெற்றி என்பது, நிச்சயம் அவர்களுடையதே. நீதியுடன் கூடிய அறிவையும், போரில் பலத்தையும் பாண்டவர்களுக்கு எப்போதும் அளிப்பவன் அவனே {கிருஷ்ணனே}; மேலும், ஆபத்துகளில் இருந்து எப்போதும் அவர்களைப் பாதுகாப்பவனும் அவனே {கிருஷ்ணனே}.

அனைத்துயிர்களில் ஊடுருவியிருப்பவனும், அருளுடன் எப்போதும் இருப்பவனுமான அவனே நித்திய தேவனாவான். நீ எவனைக் குறித்துக் கேட்டாயோ, அவன், வாசுதேவன் {கிருஷ்ணன்} என்ற பெயரால் அறியப்படுகிறான். தங்களுக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், தங்கள் தனிப்பட்ட கடமைகளை ஆற்றி, ஒடுங்கிய இதயங்களுடனும் பணிவுடனும் அவனையே சேவித்து வழிபடுகிறார்கள். துவாபர யுக முடிவின் நெருக்கத்திலும், கலி யுகத் தொடக்கத்திலும் அர்ப்பணிப்புள்ள பக்தர்களால் சங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்த்துப் பாடப்படுபவன் அவனே. யுகத்துக்குப் பின் யுகத்தையும், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகங்களையும், கடலால் சூழப்பட்ட நகரங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் படைத்தவன் வாசுதேவனே {கிருஷ்ணனே}" {என்றார் பீஷ்மர்}.

இந்தப் பகுதி விஸ்வோபாக்யானம் என்று அழைக்கப்படுகிறது.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்