Sahasrapat addressing Ruru! | Adi Parva - Section 11 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்...
சௌதி தொடர்ந்தார், ``அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக" என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, "நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்கவே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக" என்றேன்.

