Thursday, January 03, 2013

பர்வத் திரட்டு! | ஆதிபர்வம் - பகுதி 2 அ

Sangraha Parva! | Adi Parva - Section 2a | Mahabharata In Tamil

(பர்வசங்கிரகப் பர்வம்)

பதிவின் சுருக்கம் : சமந்த பஞ்சகம் குறித்து முனிவர்கள் வினவுவது; சமந்த பஞ்சகம் உருவான வரலாற்றைச் சௌதி சொல்வது; பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்றது; க்ஷத்திரியர்களின் இரத்தத்தால் உருவான ஏரி; அக்ஷௌஹிணி என்பதற்கு விளக்கம்; எவர் எவர் தலைமையில் போர் எத்தனை நாட்கள் நடந்ததென்ற விளக்கம்; மஹாபாரதத்தின் உட்கட்டமைப்பு எப்படி உப பர்வங்களாகப் பிரிந்திருக்கின்றன என்பதற்கான விளக்கம்; உப பர்வங்களின் பெயர்களும் அதில் வரும் செய்திகளும்; முதல் பர்வமான ஆதிபர்வத்தின் சுருக்கம்...

க்ஷத்திரியர்களை அழிக்கும்
பரசுராமன்
முனிவர்கள் 'ஓ! சூதன் மகனே {சௌதியே}, நீர் குறிப்பிட்ட இடமான சமந்த பஞ்சகம் {குருக்ஷேத்திரம்} என்ற இடத்தைப் பற்றிய வரலாற்றை நாங்கள் முழுமையாகக் கேட்க விரும்புகிறோம்” என்று கேட்டனர்.(1)

சௌதி சொன்னார், "ஓ! பிராமணர்களே, நான் சொல்லப்போகும் புனிதமான விளக்கங்களைக் கேட்பீராக. ஓ மனிதர்களில் சிறந்தோரே, சமந்த-பஞ்சகம் என்று அழைக்கப்படும் இடத்தைக் குறித்துக் கேட்க நீங்கள் தகுந்தோரே.(2) திரேத மற்றும் துவாபர யுகங்களுக்கு இடையில், ஆயுதங்கள் தரித்தோர் அனைவருக்கும் மத்தியில் பெரியவரான (ஜமதக்னியின் மகன்) ராமர் {பரசுராமர்}, குற்றங்களின் கொண்ட பொறுமையின்மையால் தூண்டப்பட்டு, க்ஷத்திரியர்களின் உன்னதக் குலத்தை மீண்டும் மீண்டும் தாக்கினார் {அழித்தார்}.(3) அந்தக் கடும் எரிநட்சத்திரம் {பரசுராமர்}, தம் வீரத்தால் க்ஷத்திரியர்களின் மொத்த இனத்தையுமே அழித்தபோது, அந்தச் சமந்த-பஞ்சகத்தில் குருதியாலான ஐந்து தடாகங்களை அமைத்தார்.(4) கோபத்தில் மயங்கிய அறிவுடன் கூடிய அவர், அத்தடாகங்களுடைய குருதிநீரின் மத்தியில் நின்று கொண்டு தமது மூதாதையரின் ஆவிகளுக்கு {பித்ருக்களுக்கு} இரத்த காணிக்கையளித்தார் என நமக்குச் சொல்லப்படுகிறது.(5) அதன் பேரில் அப்போது, அவரது மூதாதையரில் ரிசீகரை முதலாகக் கொண்டோர் அவரிடம் வந்து, "ஓ ராமா, ஓ அருளப்பட்ட ராமா, ஓ பிருகுவின் வாரிசே, ஓ வலிமைமிக்கோனே, உன் வீரத்தைக் கொண்டு உன் மூதாதையருக்கு நீ காட்டிய மதிப்பால் நாங்கள் நிறைவடைந்திருக்கிறோம். உன் மீது அருள் பொழியட்டும். ஓ சிறப்புமிக்கவனே, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக" என்றனர்.(6,7)



ராமர் {பரசுராமர்}, "ஓ ஐயன்மீர், நீங்கள் என்னிடம் சாதகமான மனநிலையைக் கொண்டிருப்பீர்களென்றால், கோபத்தில் க்ஷத்திரியர்களை அழித்ததன் மூலம் பிறந்த என் பாவங்களில் இருந்து நான் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், நான் அமைத்த தடாகங்கள் இவ்வுலகில் புண்ணியத்தலங்களாகப் புகழ்பெற வேண்டும் என்றும் நான் வரம் கேட்கிறேன்" என்றார்.(8,9) பித்ருக்கள், "அப்படியே ஆகட்டும். ஆனால் நீ தணிவடைவாயாக" என்றனர். ராமரும் அதன்படியே தணிவையடைந்தார்.(10) குருதிநீரைக் கொண்ட அந்தத் தடாகாங்களுக்கு அருகே கிடக்கும் பகுதியானது அந்தக் காலத்தில் இருந்து புனிதமான சமந்த-பஞ்சகம் என்று கொண்டாடப்படுகிறது.(11) ஒவ்வொரு நாடும், அதைப் புகழ்பெறச் செய்த ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க சூழலின் பெயரால் வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும் என்று ஞானியர் தீர்மானித்திருக்கின்றனர்.(12) துவாபர மற்றும் கலி யுகங்களின் இடைவெளியில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கு இடையிலான மோதல் அங்கே அந்தச் சமந்த-பஞ்சகத்தில் நடந்தது.(13) எந்த வகையான முரட்டுத்தன்மையுமற்ற அந்தப் புனிதமான பகுதியில் போரிடும் ஆவலுடன் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் படைவீரர்கள் அங்கே திரண்டனர். ஓ பிராமணர்களே, அங்கே வந்த நிலையிலேயே அவர்கள் அனைவரும் அவ்விடத்தில் கொல்லப்பட்டனர்.(14) ஓ பிராமணர்களே, அந்தப் பகுதியின் பெயரும், புனிதமானதாக, இனிமைநிறைந்ததாக உங்களுக்கு விவரிக்கப்படும் அந்த நாடும் இவ்வாறே விளக்கப்படுகின்றன.(15) மூவுலகங்கள் முழுவதிலும் கொண்டாடப்படும் அந்தப் பகுதி சம்பந்தமாக முழுமையாக நான் {இப்போது} குறிப்பிட்டிருக்கிறேன்" {என்றார் சௌதி}.(16)

முனிவர்கள் {சௌதியிடம்}, "ஓ சூதன் மகனே {சௌதியே}, நீர் பயன்படுத்திய அக்ஷௌஹிணி என்ற சொல்லில் {பதத்தில்} உள்ளடங்கிய அனைத்தையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.(17) நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என்பதால், ஓர் அக்ஷௌஹிணியானது எத்தனை குதிரைகள் {குதிரைவீரர்கள்}, காலாட்படை வீரர்கள், தேர்கள் {தேர்வீரர்கள்}, யானைகள் {யானைமேல் அமர்ந்து போரிடும் வீரர்கள்} ஆகியவற்றைக் கொண்டது என்பதை எங்களுக்கு முழுமையாகவே சொல்வீராக" என்று கேட்டனர்.(18)

சௌதி சொன்னார், "ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரைகள் ஒரு பட்டியை அமைக்கின்றன;(19) மூன்று பட்டிகள் ஒரு சேனா-முகத்தை அமைக்கின்றன; மூன்று சேனா-முகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படுகிறது;(20) மூன்று குல்மங்கள், ஒரு கணமென அழைக்கப்படுகிறது; மூன்று கணங்கள், ஒரு வாஹினியாகும்; ஒன்றான மூன்று வாஹினிகள் ஒரு பிருதனை என்று அழைக்கப்படுகிறது(21); மூன்று பிருதனைகள் ஒரு சமுவை அமைக்கின்றன; மூன்று சமுக்கள், ஓர் அனீகினியாகும்; பத்து மடங்காகப் பெருகும் ஓர் அனீகினியானது, அவற்றை அறிந்தோரால் ஓர் அக்ஷௌஹிணி என்ற நடைமாற்றப்படுகிறது {ஓர் அக்ஷௌஹிணி என்று அழைக்கப்படுகிறது}.(22) பிராமணர்களில் சிறந்தோரே, ஓர் அக்ஷௌஹிணியில் உள்ள தேர்களின் எண்ணிக்கையானது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது {21,870} என்று எண்கணிப்பியலாளர்களால் கணிக்கப்படுகிறது. யானைகளின் அளவும் அதே எண்ணிக்கையிலேயே {21,870} உறுதிப்படுத்தப்பட வேண்டும்.(23,24) ஓ தூயோரே, காலாட்படை வீரர்களின் எண்ணிக்கையானது, நூற்றொன்பது ஆயிரத்து, முன்னூற்று ஐம்பது {ஒரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து முன்னூற்றைம்பது, 109,350} என்பதையும், குதிரைகளின் எண்ணிக்கையானது, அறுபத்தைந்தாயிரத்து, அறுநூற்று பத்து {65,610} என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.(25,26) , ஓ பிராமணர்களே, ஓர் அக்ஷௌஹிணியின் எண்ணிக்கையானது என்னால் முழுமையாக விளக்கப்படுவதைப் போலவே, எண்களின் கொள்கைகளை {விதிகளை} அறிந்தோராலும் சொல்லப்படுகிறது.(27) ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இந்தக் கணக்கீட்டின்படியே, கௌரவ மற்றும் பாண்டவப்படையின் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் தொகுக்கப்பட்டிருந்தன.(28) அற்புதம் நிறைந்த செயல்களைச் செய்யும் காலமானது, அந்த இடத்தில் அவர்களைத் திரட்டி, கௌரவர்களையே காரணமாக்கி, அவர்கள் அனைவரையும் அழித்தது.(29) ஆயுதங்களின் தேர்வை அறிந்தவரான பீஷ்மர், பத்து நாட்களுக்குப் போரிட்டார். கௌரவ வாஹினிகளைத் துரோணர் ஐந்து நாட்களுக்குப் பாதுகாத்தார்.(30) பகைவரின் படைகளைத் துணையற்றவையாகச் செய்யும் கர்ணன், இரண்டு நாட்களுக்குப் போரிட்டான்; சல்லியன் அரை நாள் போரிட்டான். அதன்பிறகு துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த, கதாயுத மோதல் அரை நாள் நீடித்தது. அந்த நாளின் முடிவில் அஸ்வத்தாமனும், கிருபரும், ஆபத்து குறித்த எந்த எச்சரிக்கையுமில்லாமல் இரவில் தூங்கிக் கொண்டிருந்த யுதிஷ்டிரனின் படையை அழித்தனர்.(31-33)

ஓ சௌனகரே, உமது வேள்வியில் மீண்டும் சொல்லத் தொடங்கப்படுவதும், பாரதம் என்று அழைக்கப்படுவதுமான இந்தச் சிறந்த விளக்கமானது, முன்பொரு சமயம், ஜனமேஜயனின் வேள்வியில், நுண்ணறிவு கொண்ட வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீண்டும் உரைக்கப்பட்டதாகும். இது பல்வேறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது; தொடக்கத்தில், பௌசியம், பௌலோமம் மற்றும் ஆஸ்தீக பர்வகளில், வீரமும், புகழும் மிக்கவர்களான மன்னர்கள் முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றனர்.(34,35) இது, விளக்கம், மொழிநடை, பொருள் ஆகியவற்றை மாறுபட்டவையாகவும், அற்புதம் நிறைந்தவையாகும் கொண்டிருக்கும் ஒரு படைப்பாகும். பல்வேறு நடைமுறைகள் மற்றும் சடங்குகளின் விவரங்களை இது கொண்டிருக்கிறது. இறுதி விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்களால் வைராக்யம் என்றழைக்கப்படும் நிலையைப் போலவே இது {மஹாபாரதம்} ஞானியரால் ஏற்கப்படுகிறது.(36) அறியப்பட வேண்டிய பொருள்களில் தன்னை {சுயத்தைப்} போலவும், அன்புக்குரிய பொருள்களின் மத்தியில் உயிரைப் போலவும், பிரம்ம அறிவை அடையும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த வரலாறானது {மஹாபாரதமானது}, சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். பாதங்களின் மேலிருக்கும் உடலைப் போலவே, இந்த வரலாற்றின் சார்பில்லாத எந்தக் கதையும் தற்போது இவ்வுலகில் இல்லை. நல்ல பரம்பரையில் வந்த ஆசான்கள், முன்னுரிமையை விரும்பும் பணியாட்களால் பணிவிடை செய்யப்படுவதைப் போலவே, பாரதமும் புலவர்கள் அனைவராலும் பேணிக் காக்கப்படுகிறது.(37-39) உலகம் தொடர்பான பல்வேறு அறிவுக் கிளைகள் மற்றும் வேதத்தில் உள்ளடங்கியிருக்கும் சொற்களானவை, உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் மட்டும் வெளிக்காட்டுவதைப் போலவே, இந்த அற்புத வரலாறும் உயர்ந்த அறிவை {ஞானத்தை} மட்டுமே வெளிக்காட்டுகிறது.(40) ஓ தவசிகளே, பெரும் அறிவைக் கொண்டிருப்பதும், வேதங்களின் உட்பொருளால் அலங்கரிக்கப்பட்டதும், நுட்பமான பொருள்கள் மற்றும் காரணகாரியங்களின் {தர்க்கத்} தொடர்புகளைக் கொண்டதும் பாரதம் என்றழைக்கப்படுவதுமான இந்த வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் (பர்வங்கள்), மற்றும் பகுதிகளின் {அத்யாயங்களின்} திட்டவரையை {சுருக்கத்தைக்} கேட்பீராக.(41)

முதல் பர்வம் அனுக்கிரமணிகம் என்றழைக்கப்படுகிறது; இரண்டாவது சங்கிரகம்; அடுத்துப் பௌசியம், அதன்பிறகு பௌலோமம், ஆஸ்தீகம், அடுத்து ஆதிவம்சவதரணம்.(42) அடுத்து வருவது அற்புதமான உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்ட சம்பவம். ஜதுக்ருகதாஹம் (அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்தல்) என்பது அடுத்து வருவது. அடுத்து ஹிடிம்பவத பர்வம் (இடும்ப வதம்).(43) அதற்கடுத்து பகவத (பகாசுரன் வதம்), அடுத்துச் சைத்ரரதம். அடுத்து திரௌபதியைத் தனது க்ஷத்திரியத் திறமைகளால் அர்ஜுனன் வெல்லும் சுயம்வரம் (பாஞ்சாலி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பது).(44) அடுத்து வைவாஹிகம் (திருமணம்). அடுத்து வருவது விதுராகமனம் (விதுரனின் வருகை), ராஜ்யலாபம் (அரசைப் பெறுவது),(45) அர்ஜுன வனவாசம் (அர்ஜுனன் நாடு கடந்து செல்வது), அடுத்துச் சுபத்திராஹரணம் (சுபத்திரை கடத்தப்படுவது). இதற்கெல்லாம் அடுத்து ஹரணாஹரிகம்,(46) காண்டவ-தாஹம் (காண்டவ வன தகனம்), மய தர்சனம் (அசுர சிற்பி மயனை சந்தித்தல்). அதற்கடுத்து வருவது சபா பர்வமாகும், மந்திரம்,(47) ஜராசந்தவதம், திக்விஜயம் (தொடர் போர்). திக்விஜயத்திற்கு அடுத்து ராஜசூயம்,(48) அர்க்காபிஹரணம் (அர்க்கியம் திருட்டு), சிசுபாலவதம் (சிசுபாலன் கொல்லப்படுவது). இதற்கெல்லாம் அடுத்துத் தியூதம் (சூதாடுதல்), அனுதியூதம் (சூதாட்ட தொடர்ச்சி),(49) ஆரண்யகம், கிர்மீரவதம் (கிரிமீரன் வதம்). அர்ஜுனாபிகமனம் (அர்ஜுனனின் பயணங்கள்),(50) கைராதி ஆகியன வருகின்றன.

இறுதியாக அர்ஜுனனுக்கும் வேடன் உருவத்தில் இருந்த மஹாதேவனுக்கும் {சிவனுக்கும்} இடையில் நடந்த போர் {கைராதம்}. அதற்கடுத்து இந்திரலோகபிகமனம் (இந்திரலோகப் பயணம்);(51) அடுத்து, அறம் மற்றும் நற்பண்புகளின் புதையலும், மிகவும் சோகமானதுமான நளோபாக்யானம் (நளனின் கதை). அடுத்து தீர்த்தயாத்ரா அல்லது விவேகிகளான குரு இளவரசர்களின் புனிதப் பயணம்,(52) ஜடாசுரன் மரணம் {ஜடாசுரவதம்}, யக்ஷர்களுடன் போர் {யக்ஷயுத்தம்}. அதன் பிறகு, நிவாதகவசர்களுடனான போர் {நிவாதகவசயுத்தம்}, அஜகரம்,(53) மார்கண்டேய சமாஸ்யம் (மார்கண்டேயரைச் சந்தித்தல்). திரௌபதி சத்தியபாமா சந்திப்பு {திரௌபதி சத்யபாமா சம்வாதம்},(54) கோஷயாத்திரை, மிருக சுவப்னம் (மானின் கனவு). வருஹதாரண்யகம் {விரீஹித்ரௌணிகம்} மற்றும் ஐந்திரத்துரும்னம் {இந்திரத்யும்னோபாக்யானம்}.(55) திரௌபதிஹரணம் (திரௌபதி அபகரிப்பு), ஜயத்ரதா விமோக்ஷணம் (ஜயத்ரதன் விடுதலை). அடுத்து வருவது கற்புக்கரசி சாவித்திரியின் கதை {பதிவிரதாமாகாத்மியம்}.(56)

அதன்பிறகு ராமனின் கதை {ராமோபாக்யானம்}. அடுத்தப் பர்வம் குண்டலாஹரணம் (காதணி திருட்டு) என்று அழைக்கப்படும்.(57) அதற்கடுத்து "ஆரண்யம் {ஆரணேயம்}" அதற்கடுத்து "வைராடம் {விராடம்}". அதன்பிறகு பாண்டவர்களின் உறுதிமொழி நுழைவும், அவர்கள் அதை நிறைவேற்றுவதும் (பாண்டவர்கள் செய்திருந்த ஒப்பந்தப்படி ஒருவருட தலைமறைவு வாழ்க்கை {பாண்டவப் பிரவேசம்}).(58) பிறகு “கீசகர்களின்” அழிவு. அதன்பிறகு (விராடத்திலிருந்து) பசுக்களைக் கடத்த (கௌரவர்களால்) செய்யப்பட்ட முயற்சி. அதற்கடுத்து வருவது விராடனின் மகளுடன் அபிமன்யு திருமணம் என்றழைக்கப்படுகிறது.(59) அதன்பிறகு, நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தியோகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வம். அதன்பிறகு "சஞ்சய யானம்" (சஞ்சயனின் வருகை).(60) அதற்கடுத்து வருவது "பிரஜாகரம்" (திருதராட்டிரனின் தூக்கமின்மை). அடுத்து ஆன்ம தத்துவங்களின் புதிர்களைக் கொண்ட "சனத்சுஜாதீயம்".(61) அடுத்து "யானசந்தி", அதற்கடுத்து கிருஷ்ணனின் வருகை {பகவத்யானம்}. அதன்பிறகு “மாதலி”யின் கதை, அடுத்து "காலவர்".(62) அதன்பிறகு "சாவித்திரி" {சாவித்திரோபாக்கியானம்}, "வாமதேவர்" {வாமதேவோபாக்கியானம்}, "வைனியன்" ஆகியோரின் கதைகள். அதன்பிறகு "ஜமதக்கினீயம்" மற்றும் "ஷோடசராஜகம்" கதைகள்.(63) அதன்பிறகு கிருஷ்ணனின் அரசவை வருகை {கிருஷ்ணசபாப்பிரவேசம்}, அதன்பிறகு விதுலபுத்ரசாசனம். அதன்பிறகு படைகளைத் திரட்டலும், சேதனின் {ஸ்வேதனின்} கதை.(64) அதன்பின் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது உயர்பிறப்பாளன் கர்ணனின் சச்சரவு {வாக்குவாதம்}. அதன்பிறகு, இருதரப்பு படைகளின் அணிவகுப்பு.(65) அடுத்து ரதி மற்றும் அதிரதர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுவது. அடுத்து (பாண்டவர்களின்) கோபத்தைத் தூண்டும் உலூகனின் தூது.(66) அடுத்து வருவது நீங்கள் அவசியம் அறிய வேண்டிய அம்பையின் கதை. அடுத்து பீஷ்மர் படைத்தலைவராக நியமிக்கபட்ட உணர்ச்சிமயமான கதை.(67) அதற்கடுத்துத் தனிப்பட்ட தன்மையுடன் கூடிய ஜம்பூ என்று பகுதி {ஜம்பூத்வீபம்} பூமியில் உண்டான கதை {ஜம்பூத்வீபநிர்மாணம்}; அடுத்து தீவுகளின் அமைப்பைக் குறித்த பூமி {பூமிபர்வம்}.(68) அதன்பிறகு "பகவத் கீதை" வருகிறது; பிறகு பீஷ்மரின் மரணம் {பீஷ்மவதம்}. துரோணர் படைத்தலைமையில் நிறுவப்படுவது {துரோணாபிஷேகம்}. பிறகு “சம்சப்தகர்களின்” அழிவு {சம்சப்தகவதம்},(69) பிறகு அபிமன்யுவின் மரணம் {அபிமன்யுவதம்}; பிறகு அர்ஜுனன் (ஜெயத்ரதனைக் கொல்வதாக) உறுதி மொழி ஏற்பது. அதன் பிறகு ஜெயத்ரதன் மரணம் {ஜயத்ரதவதம்}, பிறகு கடோத்கசனின் மரணம் {கடோத்கசவதம்}.(70) அதன்பிறகு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய கதையானது, யாரும் எதிர்பாராத துரோணரின் திடீர் மரணமாகும் {துரோணவதம்}. அதற்கடுத்து வருவது, நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை வெளிப்படுத்துவது {நாராயணாஸ்திரமோக்ஷம்}.(71) அதன்பிறகு கர்ணன் மற்றும் சல்லியன் {ஆகியோரின் மறைவு} என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பிறகு துரியோதனன் தடாகத்திற்குள் மூழ்குவது, பிறகு (பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த) கதாயுத மோதல்.(72) அதன்பிறகு, சரஸ்வதம் மற்றும் புண்ணியத் தலங்களின் வர்ணனை, பிறகு குலவரலாறு {குறித்த வர்ணனை}. அதன்பிறகு (கௌரவர்களின் கௌரவத்திற்கு) இழிவுநிறைந்த சம்பவங்களை விளக்கும் சௌப்திகம் {சௌப்திக பர்வம்}.(73) அடுத்து பயங்கர நிகழ்வுகளைக் கொண்ட “ஐஷீகம் {ஐஷீகபர்வம்}.

அடுத்து, "ஜலப்பிரதானிகம்" முன்னோர்களுக்கு (இறந்தவர்களுக்கான) நீர்க்காணிக்கை {ஆகுதி, அஞ்சலி}, பிறகு, பெண்களின் அழுகை {ஸ்திரீவிலாபம்}.(74) அதன் பிறகு கொல்லப்பட்டவர்களான கௌரவர்களுக்குச் செய்யப்பட்ட இறுதி சடங்குகளை விளக்கும் "சிராத்தம்” என்றழைக்கப்பட்டதை {பர்வத்தை} அறிய வேண்டும். அதன்பிறகு (யுதிஷ்டிரனை ஏமாற்றுவதற்காக) ஒரு பிராமணன் வடிவத்தை ஏற்று வந்த ராட்சசன் சார்வாகனின் அழிவு {சார்வாகநிக்கிரகம்}.(75) பிறகு ஞானியான யுதிஷ்டிரனின் பட்டமேற்பு {அபிஷேகம்}. அடுத்து "கிரகவிபாகம்" என்றழைக்கப்படுகிறது.(76) அடுத்து வருவது "சாந்தி", அதற்கடுத்து "ராஜதர்மனுசாசனம்", அதன்பிறகு "ஆபதர்மம்", பிறகு "மோக்ஷதர்மம்".(77) அடுத்து பின்தொடர்ந்த வருவன "சுகப்பிரசனாபிகமனம்", "பிரம்ம-பிரசனனுசாசனம்", துர்வாசரின் தோற்றம் (அவரின் பிறப்பு), மயனுடன் விவாதம் ஆகியனவாகும்.(78) அதன் பிறகு வருவது "ஆனுசாசனிகம்" என்று அறியப்பட வேண்டும். பிறகு பீஷமர் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்கரோஹணம்}.(79) அதன்பிறகு, பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் குதிரை-வேள்வி {ஆசுவமேதிகம்}. அதன்பிறகு, ஆன்ம தத்துவ வார்த்தைகளைக் கொண்ட "அனுகீதை" என்று அறியப்பட வேண்டும்.(80) அதன்பின் தொடர்வன "ஆசிரமவாசம்", (இறந்து போன தங்கள் மக்களின் ஆவியைக் காணும்) "புத்ரதர்சனம்", மற்றும் நாரதர் வருகை {நாரதாகமனம்}.(81) அடுத்து பயங்கரமான கொடிய நிகழ்வுகளைக் கொண்ட "மௌசலம்" என்றழைக்கப்படுகிறது. அடுத்து வருவது "மஹாபிரஸ்தாணிகம்" மற்றும் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்காரோஹணம்}.(82) அதன்பிறகு வருவது "கிலவம்சம்" என்றழைக்கப்படும் புராணமாகும் {ஹரிவம்சம்}. இறுதியில் “விஷ்ணு பர்வம்”, விஷ்ணுவின் கேளிக்கைகள், குழந்தையாக அவன் செய்த அருஞ்செயல்கள், “கம்சனின்” அழிவு ஆகியன இருக்கின்றன.(83) இறுதியிலும் இறுதியாக (எதிர்காலத்தைக் குறித்த வருவனவுரைத்தல் (தீர்க்கதரிசனங்கள்) அடங்கிய) அற்புதங்கள் நிறைந்த "பவிஷ்யபர்வம்" இருக்கிறது” {என்றார் சௌதி}. உயர் ஆன்மா கொண்ட வியாசரால் இயற்றப்பட்ட இந்த நூறு பர்வங்களில் மேற்கண்டவை சுருக்கம் மட்டுமே;(84) அவற்றைப் பதினெட்டாகப் பிரித்த சூதன் மகன் {சௌதி}, அதனைத் தொடர்ந்து நைமிசக் காட்டில் பின்வருமாறு உரைத்தார்[1].(85)

[1] இங்கே சொல்லப்பட்டுள்ள உபபர்வங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கின்றன.

ஆதிபர்வத்தில் பௌசியம், பௌலோமம், ஆஸ்தீகம், அதிவப்ணாவதரணம்,(86) சம்பவம், அரக்கு மாளிகை எரியூட்டல் {ஜதுக்ருகதாஹம்}, ஹிடிம்பன் {இடும்பன்} வதம் {ஹிடிம்பவதம்}, அசுரர்கள் பகன் {பகவதம்} மற்றும் சித்ரரதன் வதம் {சைத்ரரதம்}, திரௌபதி சுயம்வரம்,(87) அதைத்தொடர்ந்து அவள் {திரௌபதி} திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர் {வைவாஹிகம்|, விதுரனின் வருகை {விதுராகமனம்}, {ராஜ்யலாபம்},(88) அர்ஜுனன் நாடுகடந்து செல்தல் {அர்ஜுனவனவாசம்}, சுபத்திரை அபகரிப்பு {சுபத்ராஹரணம்}, பரிசு மற்றும் சீர்வரிசை {ஹரணாஹரணம்}, காண்டவ வனம் எரிந்துபோதல் {காண்டவதாஹம்},(89) அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு {மயதர்சனம்}. பௌசிய பர்வத்தில் உதங்கரின் மேன்மை சொல்லப்படுகிறது.(90) பௌலமத்தில் பிருகு மைந்தர்களின் மேன்மை சொல்லப்படுகிறது. ஆஸ்தீக பர்வத்தில் கருடன் மற்றும் நாகங்களின் பிறப்பு,(91) ஆழி கடைதல் {பாற்கடல் கடைதல்}, தெய்வீகக் குதிரை உச்சைசிரவசின் பிறப்பு, ஜனமேஜயனின் நாகவேள்வியில் விவரிக்கப்படும் பரதனின் பரம்பரை ஆகியன. சம்பவ பர்வத்தில் பல மன்னர்கள், வீரர்கள் மற்றும் கிருஷ்ண துவைபாயனரின் (வியாசரின்) பிறப்பு, தேவர்களின் பாதி அவதாரங்கள்,(92-94) தானவர்கள், மற்றும் பெரும் ஆற்றலைக் கொண்ட யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பறவைகள்,(95) மற்றும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு; அடுத்து மன்னன் பரதனின் வரலாறு, அவனது பெயரால் உண்டான பரம்பரை, கண்வரின் ஆசிரமத்தில் சகுந்தலைக்கு மகனாக {பரதன்} பிறப்பு ஆகியவை வருகின்றன.(96,97)

மேலும் இந்தப் பர்வத்தில் பாகீரதி நதியின் பெருமை, சந்தனுவின் இல்லத்தில் வசுக்களின் பிறப்பும், அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வது ஆகியன சொல்லப்படுகின்றன.(98) மேலும் இந்தப் பர்வத்தில் மற்ற வசுக்களின் சக்திப் பகுதிகளைத் தன்னுள் அடக்கிப் பிறக்கும் பீஷ்மரின் பிறப்பு, அரசைத் துறத்தல் மற்றும் அவர் பிரம்மச்சரியம் கொள்வது,(99) ஏற்ற நோன்புகளில் அவருக்கு இருந்த உறுதி, சித்திராங்கதனைப் பாதுகாப்பது, அவனது {சித்திராங்கதனது} மறைவிற்குப் பிறகு விசித்திரவீரியனைப் பாதுகாப்பது, அவனை {விசித்திரவீரியனை} அரியணையில் அமர்த்துவது, தர்மதேவன் ஆணிமாண்டவ்யரின் சாபம் பெற்றதால் மனிதனாக {விதுரனாகப்} பிறப்பது.(100-101) வியாசர் மூலம் திருதராட்டிரன் மற்றும் பாண்டுவின் பிறப்பு, பாண்டவர்களின் பிறப்பு,(102) துரியோதனின் திட்டத்தால் பாண்டவர்கள் வாரணாவதம் செல்வது, பாண்டவர்கள் குறித்துத் திருதராஷ்டிரன் மகன்கள் செய்த தீய ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.(103) பாண்டவர்களின் நலன்விரும்பியான விதுரன், மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனை எச்சரிப்பது,(104) சுரங்கம் தோண்டுவது, அரக்கு மாளிகையில் வைத்து, வேடுவப்பெண்ணையும், அவளது ஐந்து பிள்ளைகளையும் புரோச்சனனையும் எரிப்பது, அரக்கு மாளிகை எரிவது, ஹிடிம்பையைச் {இடும்பியைச்} சந்தித்தல்,(105,106) ஹிடிம்பனை {இடும்பனை} வதம் செய்வது. கடோத்கசனின் பிறப்பு,(107) பாண்டவர்கள் வியாசரைச் சந்திப்பது, அவரின் {வியாசரின்} ஆலோசனைகளை ஏற்றுப் பிராமணத் தோற்றத்தில் ஏகச்சக்கர நகரத்தில் தலைமறைவாக வசிப்பது, அசுரன் பகன் வதம், அதைக் கண்டு மலைத்த மக்கள்;(108,109) திரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னனின் அமானுஷ்ய பிறப்பு, வியாசரின் அறிவுரைப்படியும், ஒரு பிராமணரின் மூலம் கேள்விப்பட்டு, திரௌபதியின் கரங்களை வெல்வதற்காகவும் சுயம்வரத்தில் பங்கேற்பதற்காகப் பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்லத் தீர்மானிப்பது; பாகீரதி நதிக்கரையில் அங்காரபர்ணன் என்ற கந்தர்வனிடம் அர்ஜுனனின் வெற்றி, தங்கள் எதிராளியிடம் நட்பு கொள்வது,(110-112) கந்தர்வன் தபதி, வசிஷ்டர் மற்றும் அவுர்வாவின் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

பாஞ்சாலம் நோக்கிச் செல்லும் பாண்டவர்களின் பயணம்,(113) அனைத்து மன்னர்கள் முன்னிலையிலும் கொடுத்த குறியை அடித்து, திரௌபதியை அர்ஜுனன் வென்றெடுப்பது;(114) அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போரில் சல்லியன், கர்ணன் ஆகியோர் அர்ஜுனனிடம் தோற்பது, மகுடம் தரித்த தலைகளைக் கொண்ட பிறர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்ட பீமனிடமும் அர்ஜுனனிடமும் தோற்பது;(115) இந்த ஒப்பற்ற அருஞ்செயல்களைக் கண்ட பலராமனும், கிருஷ்ணனும் அந்த வீரர்களை {பாண்டவர்களை} அடையாளம் காண்பது.(116) பாண்டவர்கள் தங்கியிருந்த ஒரு குயவனின் இல்லத்தை அச்சகோதரர்கள் வந்தடைவது; திரௌபதி ஐவருக்கு மணமுடிக்கப்படப் போகிறாள் என்பதை அறிந்து துருபதன் மனம் தளர்வது;(117) அதன் விளைவாகச் சொல்லப்படும் ஐந்து இந்திரர்களைப் பற்றிய அற்புதமான கதை, இயல்புக்கு மிக்க வகையில் தெய்வீக ஆணையால் நடந்த திரௌபதியின் திருமணம்,(118) திருதராஷ்டிரனின் மைந்தர்கள் பாண்டவர்களிடம் விதுரனைத் தூதனாக அனுப்புவது; விதுரனின் வருகையும், அவன் கிருஷ்ணனைப் பார்ப்பதும்,(119) காண்டவப்பிரஸ்தத்தில் அமைந்த பாண்டவர்களின் வசிப்பிடம், பாதி நாட்டின் மேல் அவர்கள் செலுத்திய ஆட்சி; நாரதரின் அறிவுரைப்படி, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} உறவு கொள்ளும் முறைகளைப் பாண்டவர்கள் நிர்ணயித்துக் கொள்வது.(120) இதற்காகச் சுந்தன் உபசுந்தன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பிராமணரின் பசுக்களைக் காக்க ஆயுதமெடுக்கச் செல்கையில், யுதிஷ்டிரனும் திரௌபதியும் இணைந்து அமர்ந்திருப்பதைக் கண்டதால், அர்ஜுனன் தான் நோற்ற நோன்பின்படி தானே நாடு கடந்து வனவாசம் செல்வது. அர்ஜுனன் நாகத்தின் மகளான உலூபியை வழியில் சந்திப்பது;(121-123) அர்ஜுனன் பல்வேறு புண்ணியத் தலங்களுக்குச் செல்வது, பப்ருவாகனனின் பிறப்பு; ஒரு பிராமணரின் சாபத்தால் முதலைகளாக மாறி ஐந்து தேவமங்கையருக்கு அர்ஜுனன் விடுதலை அளிப்பது, பிரபாசம் என்ற புண்ணியத் தலத்தில் மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் சந்திப்பது;(124,125) சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில், நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றில் சாரதியின் விருப்பப்படி செல்லக்கூடிய அற்புதத் தேரொன்றில் அர்ஜுனன் அவளைக் கடத்திச் செல்வது;(126) சீருடன் இந்திரப்பிரஸ்தம் புறப்படுதல்; சுபத்திரையின் கருவறையில் பெரும் ஆற்றலைக் கொண்ட அபிமன்யு கருத்தரித்தல்;(127) யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} குழந்தைகள் பிறப்பு; யமுனையின் கரைக்கு உல்லாசப் பயணம் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும், சக்கரத்தையும், கொண்டாடப்படும் வில்லான காண்டீவத்தையும் அடைதல்; காண்டவ வனம் எரித்தல்; அர்ஜுனனால் மயன் காப்பாற்றப்படுதல் மற்றும் பாம்பு தப்பித்தல்;(128,129) பறவையான சாரங்கியின் கருவறையில், முனிவர் மந்தபாலர், தன் மகனைப் பெறுதல் ஆகியன இருக்கின்றன. இந்தப் பர்வமானது இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களைக் கொண்டதாக வியாசரால் பிரிக்கப்பட்டுள்ளது. (130,131) இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களில் {227) எட்டாயிரத்தி எண்ணூற்றி எண்பத்திநான்கு {8884} பாடல்கள் (சுலோகங்கள்) உள்ளன[2].(132)

[2] கங்குலியின் இந்த மொழிபெயர்ப்பில் ஆதிபர்வத்தில் மட்டும் மொத்தம் 236 பகுதிகள் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “இருநூற்றிருபத்தேழு {227} அத்தியாயங்களும், அவற்றில் எண்ணாயிரத்து தொண்ணெண்பத்து நான்கு {8984} சுலோகங்களும் சொல்லப்பட்டன” என்றிருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்