Sunday, January 13, 2013

ஜனமேஜயன் துயரம் | ஆதிபர்வம் - பகுதி 3 இ

The sorrow of Janameja! | Adi Parva - Section 3c | Mahabharata In Tamil

(பௌசிய பர்வம்)

பதிவின் சுருக்கம் : உதங்கரிடம் இருந்து காதணிகளைத் திருடிய தக்ஷகன்; இந்திரன் உதவியுடன் மீண்டும் காதணிகளை அடைந்த உதங்கர்; ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்யத் தூண்டிய உதங்கர்...

இதைச் சொன்ன உதங்கன், காதுகுண்டலங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். சில நேரம் தோன்றுவதும், சில நேரம் மறைவதுமாகச் சாலையில் ஓர் அம்மணப் பிச்சைக்காரன் தன்னை நோக்கி வருவதை உதங்கன் கண்டான்.(128) குண்டலங்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி உதங்கன் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.(128) உதங்கன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்துக் கொண்டு, தேவர்களையும், ஆன்ம ஆசான்களையும் மரியாதையுடன் வணங்கி வெகுவிரைவாக அந்தக் கள்வனைப் பின்தொடர்ந்து சென்றான்.(129) மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, குண்டலங்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், பிச்சைக்காரத் தோற்றத்தை விட்டு தன் உண்மை வடிவை ஏற்ற தக்ஷகன், தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான்.(130)

அதற்குள் நுழைந்த தக்ஷகன், தன் வசிப்பிடமான பாம்புகளின் உலகிற்குச் சென்று சேர்ந்தான். உதங்கன், ராணி {மன்னன் பௌசியனின் மனைவி} சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்து, பாம்பைப் பின்தொடரவென,(131) அந்தப் பொந்தைத் தனது குச்சியை வைத்துப் பெரிதாக்கத் தொடங்கினான். ஆனால் பெரிய முன்னேற்றத்தை அவனால் {உதங்கனால்} காண முடியவில்லை. இந்திரன் அவனுக்கு {உதங்கனுக்கு} உதவ முன் வந்து தனது இடியை (வஜ்ரம்) அனுப்பினான். அந்த இடி, அந்தக் குச்சிக்குள் நுழைந்து, அந்தப் பொந்தைப் பெரிதாக்கியது.(132,133) உதங்கன் அந்த இடியைப் பின்தொடர்ந்து பொந்துக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்ததும், பாம்புகளின் உலகம் ஒரு முடிவே இல்லாதிருப்பதைக் கண்டான். நூற்றுக்கணக்கான அரண்மனைகள், பெரிய கோபுரங்களுடனும், பெரிய வாயிற்கதவுகளுடனும் கூடிய மாளிகைகள், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் உகந்த பல்வேறு அற்புதமான இடங்கள் எனப் பலவும் அங்கே இருந்தன.(134)

உதங்கன் பின்வரும் ஸ்லோகங்களைச் சொல்லிப் பாம்புகளைத் துதித்தான்:

"மன்னன் ஐராவதனின் ஆளுகைக்குட்பட்டவர்களும், போரில் வல்லவர்களுமான பாம்புகளே, காற்றினால் உந்தப்பட்ட மேகங்கள் வேகமாகச் சென்று, இடியுடன் கூடிய மழையைப் பொழிவது போல் போர்க்களங்களில் போர்க்கருவிகளைப் பொழிபவர்கள் நீங்கள்.(135) அழகானவர்களாகவும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கும் ஐராவதனின் பிள்ளைகளே, பல வண்ணங்களிலான காது குண்டலங்களை அணிந்த நீங்கள் ஆகாயத்துச் சூரியனைப் போல ஒளிவீசுகிறீர்கள்.(136) கங்கையின் வடக்குக் கரையில், பாம்புகளின் பல வசிப்பிடங்கள் இருக்கின்றன. அங்கேதான் நான் பாம்புகளாகிய உங்களைத் தொடர்ந்து துதித்து வருகிறேன்.(137) சூரியனின் கதிர்களில் எரிந்து கொண்டே நகர ஐராவதனைத் தவிர வேறு எவனால் முடியும்? (ஐராவதனின் சகோதரனான) திருதராஷ்டிரன் செல்லும்போது, அவனுக்குப் பணிசெய்ய இருபத்தெட்டாயிரத்து எட்டு {28008} பாம்புகள் பின்தொடர்ந்து செல்வர்.(138) அவனருகில் உலவுபவர்களே, அவனுக்குத் தொலைவில் இருப்பவர்களே, ஐராவதனை உங்கள் அண்ணனாகக் கொண்ட உங்கள் அனைவரையும் நான் துதிக்கிறேன்.(139)

முன்பு குருக்ஷேத்திரத்தையும், காண்டவ வனத்தையும் தனது வசிப்பிடமாக வைத்திருந்த ஓ தக்ஷகனே, குண்டலங்களை அடைய நான் உன்னையும் வணங்குகிறேன்.(140) தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருக்கும் தோழர்கள் ஆவீர்கள்.(141) மஹத்யும்னா என்ற புனிதமான இடத்தில் வசிக்கும் தக்ஷகனின் தம்பியும் பாம்புகளின் தலைவனுமான சிறப்பு மிக்கச் சுருதசேனா, உன்னையும் நான் வணங்குகிறேன்" என்று வணங்கினான் {உதங்கன்}.(142)

பிராமண முனிவனான உதங்கன் முக்கியமான பாம்புகளையெல்லாம் இப்படி வணங்கியும், குண்டலங்கள் தனக்குக் கிடைக்காததை எண்ணிய போது,(143) இரு பெண்கள் கருப்பும், வெள்ளையுமாக இருந்த நூலைக் கொண்டு ஒரு துணியை நெய்வது போலக் கண்டான். அதே போலப் பனிரெண்டு ஆரங்களைக் கொண்ட சக்கரத்தை ஆறு சிறுவர்கள் சுழற்றுவது போலவும் கண்டான். அதே போல, ஓர் அழகான குதிரையுடன் ஒரு மனிதனையும் கண்டான். அவர்களையெல்லாம் நிறைவு செய்யப் பின்வரும் இந்த மந்திரங்களைச் சொன்னான்:(144)

"இந்தச் சக்கரமானது தனது சுற்றளவில் இருபத்து நாலாகப் {24} பிரிக்கப்பட்டு முன்னூறு {300} ஆரங்களுடன் ஆறு {6} சிறுவர்களால் (காலங்களால்) சுற்றப்பட்டு, எப்போதும் செயலில் வைக்கப்பட்டு, சந்திரனின் மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.(145) அண்டத்தின் பிரதிபலிப்பான இந்த மங்கையர், தொடர்ந்து கருப்பு வெள்ளை நூல்களால் துணியைத் தடையில்லாமல் தொடர்ந்து நெய்து பல பயனுள்ள பொருட்களைக் கொண்ட உலகங்களுக்கும், அதில் வசித்துவரும் உயிர்களுக்கும் வாழும் வகையைச் செய்கின்றனர்.(146) இடியைப் பயன்படுத்துபவனே, அண்டத்தைக் காப்பவனே, விருத்திரனையும் நமுசியையும் கொன்றவனே {இந்திரனே}, கருப்பு உடையணிந்து உண்மையையும், பொய்ம்மையையும் இந்த அண்டத்தில் காட்டுபவனே,(147) பெருங்கடலின் ஆழங்களில் இருந்து கண்டெடுத்த அக்னியின் மாற்றுருவான குதிரையை உனது வாகனமாய்க் கொண்டவனே, தேவர்களின் தலைவனே, மூவுலகங்களின் தலைவனே, ஓ புரந்தரா {இந்திரா}! உன்னை வணங்குகிறேன்" என்றான் {உதங்கன்}.(148)

குதிரையுடன் இருந்த மனிதன் உதங்கனிடம், "உனது துதியால் என் மனம் நிறைந்தேன். நான் உனக்கு என்ன நல்லதைச் செய்யட்டும்?" என்றான்.(149) உதங்கன், "பாம்புகளை எனது ஆளுகைக்குள் கொண்டு வா" என்றான். அந்த மனிதன், "இந்தக் குதிரைக்குள் {ஆசனவாய்க்குள்} ஊதுவாயாக" என்றான்.(150) உதங்கன் அந்தக் குதிரைக்குள் ஊதினான். அப்படி ஊதப்பட்ட குதிரையின் உடலின் அங்கங்களிலெல்லாம் நெருப்புடன் கூடிய புகை தோன்றி அந்தப் பாம்புகளின் உலகத்தையே பொசுக்கியது.(151) அளவிலா ஆச்சரியத்தை அடைந்த தக்ஷகன், அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்க முடியாமல், தனது இருப்பிடத்தை விட்டு உதங்கனிடம் வந்து,(152) "ஐயா, உம்மை வேண்டுகிறேன். உமது குண்டலங்களை எடுத்துக் கொள்ளும்" என்றான் {தட்சகன்}. உதங்கன் அதை எடுத்துக் கொண்டான். குண்டலங்களை மீண்டும் அடைந்த உதங்கன்,(153) 'ஓ, இன்றுதானே ஆசானின் {வேதாவின்} மனைவி சொன்ன புனிதமான நாள். நான் வெகுதொலைவிலல்லவா இருக்கிறேன். எப்படி எனது மரியாதையை அவளுக்குச் செலுத்துவது' என்று நினைத்தான். உதங்கன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் குதிரையுடன் இருந்த மனிதன்,(154) "உதங்கா, இந்தக் குதிரையில் ஏறுவாயாக, இஃது உன் ஆசானின் {வேதாவின்} வசிப்பிடத்திற்கு நொடியில் அழைத்துச் செல்லும்" என்றான்.(155)

உதங்கனும் அதற்குச் சம்மதித்து, அந்தக் குதிரையின் மீதேறி குருவின் {வேதாவின்} இல்லத்திற்குச் சென்றான். அவனது {உதங்கனின்} ஆசானின் மனைவி {வேதாவின் மனைவி}, காலையிலேயே குளித்து முடித்துத் தனது கூந்தலை அலங்கரித்து, உதங்கன் வரவில்லையென்றால் அவனைச் சபிக்கக் காத்திருந்தாள்.(156) அதே வேளையில், உதங்கன் குருவின் {வேதாவின்} இருப்பிடத்திற்குள் நுழைந்து, தனது குருவின் மனைவிக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அப்போது அவள்,(157) "உதங்கா, நீ சரியான சமயத்தில், சரியான இடத்திற்கு வந்தாய், உன்னை வரவேற்கிறேன். மகனே, நீ ஓர் அப்பாவி, உன்னைச் சபிக்க மாட்டேன். நற்பேறு உன்னெதிரிலேயே இருக்கிறது. உன் விருப்பங்கள் யாவும் வெற்றியால் முடிசூடப்படட்டும்" என்றாள்.(158)

உதங்கன் ஆசானுக்காகக் காத்திருந்தான். அவனது ஆசானும் {வேதா}, "உனக்கு நல்வரவு. உன்னை நீண்ட நாளாகக் காணமுடியவில்லையே என்ன காரணம்?" என்றார்.(159) உதங்கன், "ஐயா, என்னுடைய அலுவலை நான் பார்க்கும்போது பாம்புகளின் அரசன் தக்ஷகனால் தடை வந்தது. அதனால் நான் பாம்புகளின் வசிப்பிடம் சென்றேன்.(160) அங்கே நான் இரு பெண்கள் கருப்பும் வெள்ளையுமான நூல்களால் ஒரு துணியை நெய்துகொண்டிருப்பதைக் கண்டேன். அதற்கு என்ன பொருள் என்று உங்களிடம் வேண்டிக் கேட்கிறேன்?(161) அதே போல, பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய ஒரு சக்கரத்தை ஆறு {6} சிறுவர்கள் சுழற்றிக் கொண்டிருந்தனர். அஃது எதைக் குறிக்கிறது? நான் கண்ட அந்த மனிதன் யார்? நான் பின்தொடர்ந்து வந்த அந்த இயல்புக்குமிக்க {அசாதாரண} குதிரை என்ன?(162) அதேபோல் சாலைவழியில் காளையின் மீதமர்ந்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் "உதங்கா, இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக, முன்பு உன் குருவும் இதை உண்டிருக்கிறார்" என்றான்.(163) எனவே அவனது வார்த்தைகளின்படி, நான் அந்தச் சாணத்தை உண்டேன். அவன் யார்? உம்மால் கல்விபெற்ற நான், இவை அனைத்தையும் உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன்" என்றான்.(164)

இவ்வாறு கேட்கப்பட்ட அவனது ஆசான் {வேதா}, "அந்த இரு மங்கையரும் ததாவும், விததாவும் ஆவர், கருப்பும் வெள்ளையுமான நூல்கள், இரவையும் பகலையும் குறிக்கின்றன. ஆறு {6} சிறுவர்களால் சுழற்றப்படும் பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய சக்கரம், ஆறு {6} காலங்களைக் கொண்ட வருடத்தைக் குறிக்கிறது.(165) குதிரையுடன் கூடிய அந்த மனிதன் மழை தேவனான பரஜன்யன் {இந்திரன்} ஆவான். அந்தக் குதிரை நெருப்பு தேவனான அக்னி ஆவான். சாலைவழியில் கண்ட அந்தக் காளை யானைகளுக்கு அரசனான ஐராவதமாகும்.(166) அதன்மீதிருந்த மனிதன் இந்திரனாவான். உன்னால் உண்ணப்பட்ட காளையின் சாணம் அமிர்தமாகும். அதனால்தான் நீ பாம்புகளின் வசிப்பிடத்திலிருந்து உயிருடன் திரும்பினாய்.(167) இந்திரன் எனது நண்பன். உன் மீதிருந்த கருணையால் உனக்கு உதவி செய்திருக்கிறான். அதனால் தான் குண்டலங்களுடன் நீ பாதுகாப்பாக இங்கு வந்தாய்.(168) ஓ மனதுக்கினியவனே, நான் உன்னை விடுவிக்கிறேன். நீ நற்பேறு பெறுவாய்" என்றார் {குரு வேதா}. தனது குருவிடம் இருந்து விடுபட்ட உதங்கன், தக்ஷகன் மீதிருந்த அதிகமான கோபத்தால் உந்தப்பட்டு ஹஸ்தினாபுரம் சென்றான்.(169)

அந்த நல்ல பிராமணன் {உதங்கன்}, விரைவாக ஹஸ்தினாபுரம் சென்றடைந்தான். சிறிது காலத்திற்கு முன் தக்ஷசீலத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய ஜனமேஜயனுக்காகக் காத்திருந்தான். வெற்றியடைந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்} அமைச்சர்களால் சூழப்பட்டிருப்பதை உதங்கன் கண்டான்.(170,171) தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் சரியான முறையில் அவனுக்குச் {ஜனமேஜயனுகுச்} சொன்னான். அந்த ஏகாதிபதியிடம் சரியான நேரத்தில், இனிமையாகப் பேசிய உதங்கன்,(172) "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}! உனது கவனத்துக்கு அவசரமாக வரவேண்டிய செய்திகளிருக்கும் போது, இப்படிச் சிறுபிள்ளையைப் போல் பொழுதைப் போக்குகிறாயே, எப்படி?" என்றான்.(173)

"சௌதி சொன்னார், "இவ்வாறு கேட்கப்பட்ட அந்த ஏகாதிபதி ஜனமேஜயன், அந்தப் பிராமணர்களில் சிறந்தவனை வணங்கி,(174) "என் குடிமக்களின் நலனை மனத்தில் வைத்தே, எனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் செய்ய வேண்டிய கடமை குறித்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்?" என்று கேட்டான்.(175)

பிராமணர்களில் முதன்மையானவனும், நற்செயல்களால் அடையாளங்காணப் படுபவனுமான உதங்கன், பெரும் இதயம் கொண்ட அந்த ஏகாதிபதியிடம் {ஜனமேஜயனிடம்}, "ஓ மன்னா! உனது கவனத்திற்கு வர வேண்டிய அந்தக் கடமை உன்னுடையதுதான். அதனால் தயைகூர்ந்து அதைச் செய்வாயாக.(176) ஓ மன்னர்களுக்கு மன்னா! உனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகனால் கொல்லப்பட்டான்.(177) உனது தந்தையின் மரணத்திற்காக அந்தப் பாம்பை நீ பழிவாங்க வேண்டும். விதிவசத்தால் நீ பழிக்கு பழி வாங்கும் நேரமும் வந்துவிட்டது.(178) காரணமில்லாமல் உனது தந்தை {பரீக்ஷித்} அந்தப் பாம்பால் கடிக்கப்பட்டு, இடிவிழுந்த மரமாக ஐம்பூதங்களாகக் குறைக்கப்பட்டான்.(179)

அந்தத் தீய தக்ஷகன், பாம்பு இனத்திலேயே இழிவானவன். அதிகாரத்தால் போதையுண்டு, தேவனைப் போன்றவனும் புனிதமான முனிவர்களைக் காக்கும் மன்னனுமான உனது தந்தையைத் தேவையில்லாமல் தீண்டினான்.(180) செயல்களால் தீயவனான அந்தத் தக்ஷகன், உனது தந்தையைக் காப்பாற்ற வந்த மருத்துவர்களின் தலைவன் கசியபரையும் காப்பாற்ற விடாமல் திரும்பப் போக வைத்தான்.(181) அந்தத் தீய பாதகனைத் தீயில் விழ வைக்கப் பாம்பு வேள்வி ஒன்றை நீ செய்ய வேண்டும். ஓ மன்னா! அதற்கான உத்தரவைக் கொடுப்பாயாக.(182) இப்படித்தான் நீ உனது தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க முடியும். இதனால், நீ எனக்கும் பெரிய உதவியைச் செய்தவனாவாய்.(183) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கொடிய பாதகன் {தட்சகன்}, எனது ஆசானுக்கான அலுவலை நான் செய்யும்போது, அந்த அலுவலுக்குத் தடையேற்படுத்தியிருக்கிறான்" என்றான் {உதங்கன்}.(184)

சௌதி தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதி, தக்ஷகன் மீது பெரு கோபம் கொண்டான். உதங்கனின் பேச்சு வேள்வித் தீயில் நெய்யூற்றியது போல் அந்த மன்னனின் {ஜனமேஜயன்} கோபத்தை அதிகரித்தது.(185) உதங்கனின் முன்னிலையில், துயரால் உந்தப்பட்டு, தனது அமைச்சர்களை அழைத்துத் தனது தந்தையின் {பரிக்ஷித்தின்} மோட்சப் பயணத்தைக் குறித்து விசாரித்தான்.(186) தனது தந்தை மரணித்ததின் சூழல்களை உதங்கனின் உதடுகளால் கேட்டபோது, துன்பத்தின் வலியால் அவன் {ஜனமேஜன்} துயருற்றான்" {என்றார் சௌதி}.(187) 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்