Friday, April 22, 2016

“பார்த்தா! நீ உயிரோடிருக்கிறாயா?” என்ற கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 019

“Partha! Art thou alive?” asked Krishna | Drona-Parva-Section-019 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : களத்திற்குத் திரும்பிய சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கணைகளால் மறைத்த நாராயணர்கள்; கிருஷ்ணார்ஜுனர்கள் மாண்டார்கள் என்று கொண்டாடிய நாராயணர்கள்; அர்ஜுனனைக் காணாத கிருஷ்ணன் அவன் உயிரோடிருக்கிறானா என வினவியது; களத்தில் அர்ஜுனன் ஆடிய ருத்ரதாண்டவம்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “களத்திற்கு மீண்டும் திரும்பி வந்த சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், உயர் ஆன்ம வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் சம்சப்தகர்களை நோக்கித் தூண்டுவாயாக. இவர்கள் உயிரோடுள்ளவரை போரைக் கைவிடமாட்டார்கள். இதையே {என்றே} நான் நினைக்கிறேன். இன்று என் கரங்களின் பயங்கர வலிமையையும், எனது வில்லின் வலிமையையும் நீ சாட்சியாகக் காண்பாயாக. (யுக முடிவில்) உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போல, நான் இவர்கள் அனைவரையும் இன்று கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.


வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணன், இவ்வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்து, மங்கலகரமான பேச்சுகளால் அர்ஜுனனுக்கு மகிழ்வூட்டி, அவன் {அர்ஜுனன்} செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவனை இட்டுச் சென்றான். அந்தத் தேரானது, வெண்குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட போது, ஆகாயத்தில் செல்லும் தெய்வீகத் தேரைப் {விமானம்} போலவே மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அது {அந்தத் தேர்}, பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரில் சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல வட்டமான நகர்வுகளையும், முன்னோக்கியும், பின்னோக்கியும் எனப் பல்வேறு வகைகளிலான பிற நகர்வுகளையும் வெளிப்படுத்தியது.

பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட நாராயணர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கணை மழையால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மறைத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விரைவில் அவர்கள் குந்தியின் மகனையும் {அர்ஜுனனையும்}, கிருஷ்ணனையும் சேர்த்து அந்தப் போரில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் முழுமையாக மறைத்துவிட்டனர். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, தன் சக்தியை இரட்டிப்பாக்கி, (காண்டீவத்தின்) நாணை விரைவாகத் தேய்த்துப் போரில் காண்டீவத்தைப் (உறுதியாகப்) பற்றினான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, உறுதியான கோபக்குறியீடான சுருக்கங்களைத் தன் புருவத்தில் தோன்றச் செய்து {புருவங்களை நெறித்து}, தேவதத்தம் என்று அழைக்கப்படும் தன் மகத்தான சங்கை ஊதி, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொல்லவல்ல துவஷ்டிரா {துவஷ்டா} [1] என்று அழைக்கப்படும் ஆயுதத்தை ஏவினான். அதன் பேரில், ஆயிரக்கணக்கான தனித்தனி வடிவங்கள் (அர்ஜுனனாகவும், வாசுதேவனாகவும் {கிருஷ்ணனாகவும்} அங்கே தோன்றத் தொடங்கின. அர்ஜுனன் வடிவிலான அந்தப் பல்வேறு வடிவங்களால் குழம்பிய துருப்புகள், ஒவ்வொருவரையும் அர்ஜுனனாகவே கருதி தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “அவன் கோபத்துக்கு அடையாளமான புருவ நெறித்தலை முகத்தில் உண்டுபண்ணிக் கொண்டு தேவதத்தம் என்கிற பெரிய சங்கை ஊதி, சத்ரு கூட்டங்களைக் கொல்லக்கூடியதும், த்வஷ்டாவைத் தேவதையாகக் கொண்டதுமான அஸ்திர மந்திரத்தை மனத்தினால் ஜபித்தான்” என்று இருக்கிறது.

“இவன் அர்ஜுனன்!”, “இவன் கோவிந்தன்!”, “இவர்கள் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, யது குலத்தோனும் {கிருஷ்ணனும்} ஆவர்!” இப்படியே சொல்லிக் கொண்டு, தங்கள் புலன்களை இழந்த அவர்கள் {நாராயணர்கள்}, அந்தப் போரில் ஒருவரை ஒருவர் கொன்றனர். உண்மையில் அந்த வீரர்கள் (ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது) பூத்திருக்கும் கின்சுகங்களைப் {பலாச மரங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர் [2]. அவர்களால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளையும் எரித்த அந்த (வலிமைமிக்க ஆயுதம்) அவ்வீரர்களை யமலோகம் அனுப்பியது.

[2] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இன்னும் இருக்கிறது. அது பின்வருமாறு: “அந்த வீரர்கள் இரத்தப் பெருக்குப் பெருகுகின்றவர்களும், இரத்தத்தால் நன்கு நனைக்கப்பட்டவர்களுமாகி யுத்த பூமியில் செஞ்சந்தனக் குழம்பினால் பூசப்பட்டவர்கள் போல விளங்கினார்கள். பிறகு பீபத்சுவானவன் காண்டீவமென்கிற வில்லை வலிமையுடன் அசைவுறச் செய்து, சூரியன் கிரணங்களால் இருளை அடிப்பது போலக் கூர்மையான அம்புகளாலே அவர்களை அடித்தான். மாண்டவர்கள் போக மிகுந்திருக்கின்றன அந்தப் போர்வீரர்கள் மறுபடியும் தனஞ்சயனைச் சூழ்ந்து கொண்டு அம்பு மழைகளாலே அவனைக் குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோடும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தார்கள். அர்ஜுனன் அவர்களால் விடப்பட்ட ஆயிரக்கணக்கான அம்புகளையும், அவர்களுடைய அஸ்திரத்தையும் சாம்பலாகச் செய்து அந்த வீரர்களை யமலோகத்திற்கு அனுப்பினான்” என்று இருக்கிறது. இதில் பெரும்பகுதி கூறியது கூறலாக இருப்பதால் கங்குலி விட்டிருக்கலாம்.

பிறகு பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே தன் கணைகளால், லலித்தர்களையும், மாலவர்களையும், மாவேல்லகர்களையும், திரிகர்த்த வீரர்களையும் நசுக்கினான். விதியால் தூண்டப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அந்த வீரனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அவர்கள் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பல்வேறு விதங்களிலான கணை மழைகளைப் பொழிந்தனர். அந்தப் பயங்கரக் கணைகளின் மழைகளில் மூழ்கியதால் அர்ஜுனனையோ, அவனது தேரையோ, கேசவனையோ {கிருஷ்ணனையோ} அதற்கு மேலும் காண முடியவில்லை.

இலக்கைத் தாக்கும் தங்கள் கணைகளைக் கண்ட அவர்கள் {நாராயணர்கள்} மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இரு கிருஷ்ணர்களும் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதிய அவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், மிருதங்கங்களையும் அடித்துத் தங்கள் சங்குகளையும் ஊதி சிங்க முழக்கங்களிட்டனர்.

பிறகு கிருஷ்ணன், வியர்வையில் நனைந்து, மிகவும் பலவீனமடைந்து அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எங்கிருக்கிறாய்? உன்னை நான் காணவில்லை. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, நீ உயிரோடிருக்கிறாயா?” என்றான் {கிருஷ்ணன்}.

அவனது {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளால் பொழியப்பட்ட அந்தக் கணை மழையை, வாயவ்ய ஆயுதத்தின் {வாயவ்யாஸ்திரத்தின்} மூலம் மிக வேகமாக விலக்கினான். பிறகு (அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் அதி தேவதையான} சிறப்புமிக்க வாயு, ஏதோ அந்தச் சம்சப்தகர்கள் மரங்களின் உலர்ந்த இலைகளைப் போலக் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய அவர்களின் கூட்டங்களை அடித்துச் சென்றான். காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரங்களில் இருந்து பறந்து செல்லும் பறவை கூட்டங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.

இப்படி அவர்களைப் பீடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அவர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பெரும் வேகத்தோடு தாக்கினான். தன் பல்லங்களின் மூலம் அவன் {அர்ஜுனன்}, அவர்களது தலைகளையும், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்களது கரங்களையும் வெட்டினான். அவன் {அர்ஜுனன்} தன் கணைகளால் யானைத் துதிக்கைகளுக்கு ஒப்பான அவர்களது தொடைகளைத் தரையில் வீழ்த்தினான். சிலர் தங்கள் முதுகுகளிலும், கரங்களிலும், கண்களிலும் காயம்பட்டனர்.

இப்படியே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் பல்வேறு அங்கங்களையும், வானத்தில் இருக்கும் நீர் மாளிகைகளைப் {கந்தர்வ நகரங்களைப் [மேகங்களைப்]} போலத் தெரிபவையும், விதிப்படி தயாரித்து அலங்கரிக்கப்பட்டவையுமான {அவர்களின்} தேர்களையும் இழக்கச் செய்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அவர்களது சாரதிகளையும் {தேரோட்டிகளையும்}, குதிரைகளையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டினான். பல இடங்களில் கொடிமரங்கள் வெட்டப்பட்ட தேர்க்கூட்டங்கள் தலையற்ற பனைமரக் காடுகளைப் போலத் தெரிந்தன. சிறந்த ஆயுதங்கள், கொடிகள், அங்குசங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய யானைகள், சக்ரனின் {இந்திரனின்} இடியால் பிளக்கப்பட்ட காடுகள் நிறைந்த மலைகளைப் போல விழுந்தன. சாமரங்கள் போலத் தெரியும் வால்கள் கொண்டவையும், கவசங்களால் மறைக்கப்பட்டவையும், நரம்புகளும், கண்களும் வெளியே புடைத்தவையுமான குதிரைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டுத் தங்கள் சாரதிகளுடன் சேர்ந்து தரையில் உருண்டன.

அர்ஜுனனின் கணைகள் மூலம் கொல்லப்பட்டு, {இதுவரை} தங்கள் நகங்களாகவே இருந்த வாள்களை அதற்கு மேலும் பிடிக்க முடியாமல், தங்கள் கவசங்கள் கிழிபட்டு, எலும்புகளின் இணைப்புகள் உடைபட்டு, முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டிருந்த காலாட்படை வீரர்கள், போர்க்களத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்தனர். அந்த வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவால், அல்லது அவர்கள் கொல்லப்படும்போது, வீழ்த்தப்படும்போது, வீழும்போது, நிற்கும்போது, அல்லது அவர்கள் சுழற்றப்படும்போது அந்தப் போர்க்களம் பயங்கர வடிவத்தை ஏற்றது. (அர்ஜுனனின் கணைகள் உண்டாக்கிய) உதிர மழையின் மூலம் காற்றில் எழுந்த புழுதி தணிந்தது. நூற்றுக்கணக்கான தலையற்ற உடல்களால் விரவிக்கிடந்த பூமி கடக்க முடியாததானது.

அந்தப் போரில் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில் ஈடுபடும் ருத்திரனின் தேரைப் போலக் கடுமையாக ஒளிர்ந்தது. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்படும்போதும், அவ்வீரர்கள், தங்கள் குதிரைகள், தேர்கள், பெரும் துன்பத்தில் இருந்த தங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அவனை {அர்ஜுனனை} எதிர்ப்பதை நிறுத்தவில்லை; ஒருவர் பின் ஒருவராக உயிரை இழந்தாலும், அவர்கள் சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்கள் ஆனார்கள். உயிரிழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இறந்த உயிரினங்களின் ஆவிகளால் நிறைந்த யமலோகம் போலப் பயங்கரமானதாகத் தெரிந்தது.

அர்ஜுனன் (சம்சப்தகர்களுடன்) சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் படைகளின் தலைமையில் நின்றபடி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். தாக்குவதில் சிறந்தவர்களும், முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான பல வீரர்கள், யுதிஷ்டிரனைப் பிடிக்கும் விருப்பத்தால், செயலூக்கத்துடன் அவரைப் {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றனர். அதன் பிறகு நேர்ந்த போரானது, மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்