Saturday, May 21, 2016

அதர்மமாகக் கொல்லப்பட்ட வீர அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 047

Valiant Abhimanyu was slained unrighteously! | Drona-Parva-Section-047 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு கொண்டிருந்த சக்கரம் உடைக்கப்பட்டது; கதாயுதத்துடன் போராடிய அபிமன்யு; அஸ்வத்தாமனின் குதிரைகளையும், தேரோட்டிகளையும் கொன்ற அபிமன்யு; சகுனியின் மகன் காளிகேயனைக் கொன்ற அபிமன்யு; துச்சாசனன் மகனின் தேரை நொறுக்கி குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவுக்கும், துச்சாசனன் மகனுக்கும் இடையில் நடைபெற்ற கதாயுத்தம்; களைத்துப் போயிருந்த அபிமன்யுவைக் கொன்ற துச்சாசனன் மகன்; அநீதியை உணர்த்திய அசரீரி; படையைத் தூண்டிய யுதிஷ்டிரன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விஷ்ணுவின் தங்கைக்கு {சுபத்திரைக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனும், விஷ்ணுவின் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவனுமான {விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தைப் போன்று, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனுமான} அந்த அதிரதன் {பெரும் தேர் வீரன் அபிமன்யு}, போர்க்களத்தில் மிக அழகாகத் தெரிந்தான், மேலும் அவன் இரண்டாவது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} போலவே தெரிந்தான். மயிர் நுனிகள் காற்றில் ஆட, அந்த உயர்ந்த ஆயுதத்தைக் {தேர்ச்சக்கரத்தைக்} கையில் உயர்த்தியபடி இருந்த அவனது {அபிமன்யுவின்} உடல், தேவர்களே கூடப் பார்க்க முடியாததாக {பிரகாசமாக} இருந்தது. கையில் சக்கரத்துடன் கூடிய அவனைக் கண்ட மன்னர்கள், கவலையால் நிறைந்து அந்தச் சக்கரத்தை நூறு துண்டுகளாக வெட்டிப் போட்டனர் [1].


[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "காற்றினால் அலைக்கப்பட்ட நுனிமயிருள்ளதும், கையில் எடுக்கப்பட்ட சிறந்த சக்ராயுதத்தையுடையதும், தேவர்களாலேயும் பார்க்க முடியாததுமான அந்த அபிமன்யுவின் சரீரத்தை அரசர்கள் பார்த்து, "பல்குன குமாரன், கையிலிருந்து இந்தச் சக்கரத்தை எறிவானாகில், அம்மானான விஷ்ணுவினுடைய வரதானத்தினாலே விஷ்ணுசக்ரம் போலவே விழும்" என்று மிகவும் மனக்கலக்கமுற்றவர்களாகி அந்தச் சக்ராயுதத்தைப் பலவாறு துண்டாடினார்கள்" என்று இருக்கிறது.

பிறகு, பெரும் தேர்வீரனான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான். எதிரிகளால், தன் வில், தேர், வாள் ஆகியவற்றை இழந்து, அவர்களாலேயே தனது சக்கரத்தையும் இழந்தவனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு (கையில் கதாயுதத்துடன்) அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தான்.

சுடர்மிக்க வஜ்ரத்தைப் போன்று தெரிந்த அந்த உயர்த்தப்பட்ட கதாயுதத்தைக் கண்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், தன் தேரில் இருந்து வேகமாக இறங்கி, (அபிமன்யுவைத் தவிர்ப்பதற்காக) மூன்று (நீண்ட) எட்டுகளை {நடை அடிகளை} வைத்தான். அஸ்வத்தாமனின் குதிரைகளையும், பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் அந்தக் கதாயுதத்தால் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, ஒரு முள்ளம்பன்றியைப் போலக் காட்சியளித்தான். பிறகு அந்த வீரன் {அபிமன்யு}, சுபலனின் மகனான காளிகேயனை பூமியில் அழுத்தி {கொன்று}, அவனைப் பின்தொடர்ந்து வந்த எழுபத்தேழு காந்தார வீரர்களையும் கொன்றான். அடுத்ததாக அவன் {அபிமன்யு}, பிரம்ம வசாதீய குலத்தைச் சேர்ந்த பத்து தேர்வீரர்களையும், அதன் பிறகு பத்து பெரிய யானைகளையும் கொன்றான்.

அடுத்ததாகத் துச்சாசனன் மகனின் தேரை நோக்கிச் சென்ற அவன் {அபிமன்யு}, அவனது தேரை நொறுக்கி, குதிரைகளையும் பூமியில் நசுக்கினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் அந்த வெல்லப்பட முடியாத மகன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்யுவை நோக்கி "நில், நில்" என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும் உயர்த்தப்பட்ட கதாயுதங்களுடன், பழங்காலத்தின் முக்கண்ணனையும் (மகாதேவனையும்), (அசுரன்) அந்தகனையும் போல, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், தங்கள் கதாயுத நுனிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இந்திரனை மகிழ்விக்க எழுப்பட்ட இரண்டு கொடிமரங்கள் விழுவதைப் போலப் பூமியில் விழுந்தனர்.

குருக்களின் புகழை மேம்படுத்துபவனான அந்தத் துச்சாசனன் மகன்[2], முதலில் எழுந்து, எழும்பும் நிலையில் இருந்த அபிமன்யுவின் உச்சந்தலையில் தன் கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியின் பலத்தால் நிலை குலைந்ததாலும், இதுவரை அவன் அடைந்திருந்த களைப்பினாலும், பகைவரின் படையினரைக் கொல்லும் அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான். தடாகத்தில் உள்ள தாமரைத் தண்டுகளை யானையொன்று கலங்கடிப்பது போல, மொத்த படையையும் கலங்கடித்த ஒருவன் {அபிமன்யு}, இப்படியே, அந்தப் போரில் பலரால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டுக் களத்தில் கிடந்த அந்த வீர அபிமன்யு, வேடர்களால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலத் தெரிந்தான். பிறகு, உமது துருப்பினர் விழுந்த அந்த வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர்.

[2] இவன் தௌசாசனி என்றும், துர்மசேனன் என்றும், துர்ஜயன் என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். தௌசாசனி என்பது துச்சாசனனின் மகன் என்ற பொருள் கொண்ட பெயராகும்.

கோடை காலத்தில் முழுக் காட்டையும் எரித்துவிட்டுத் வெப்பம் தணிந்த நெருப்பைப் போலவோ, மலையின் முகடுகளை நொறுக்கிவிட்டுச் சீற்றம் தணிந்த புயலைப் போலவோ, பாரதப் படையை வெப்பத்தால் எரித்துவிட்டு, மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்திருக்கும் சூரியனைப் போலவோ, ராகுவால் விழுங்கப்பட்ட சோமனை {சந்திரனைப்} போலவோ, நீர் வற்றிப் போன பெருங்கடலைப் போலவோ அவன் {அபிமன்யு} தெரிந்தான். முழு நிலவின் காந்தியுடன் கூடிய முகத்தைக் கொண்டவனும், அண்டங்காக்கையின் இறகுகளைப் போன்ற கருப்புநிற இமை மயிர்களின் விளைவால் அழகிய கண்களைக் கொண்டவனுமான அபிமன்யு, வெறுந்தரையில் விழுந்து கிடப்பதைக் கண்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் முழங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவ வீரர்களின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்த அதே வேளையில், உமது துருப்பினர் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைந்தனர்.

ஆகாயத்தில் இருந்து விழுந்த நிலவைப் போலக் களத்தில் கிடக்கும் வீர அபிமன்யுவைக் கண்ட பல்வேறு உயிரினங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்தபடியே, “ஐயோ, இவன் {அபிமன்யு} தனி ஒருவனாகப் போரிடுகையில், துரோணராலும், கர்ணனாலும் தலைமை தாங்கப்பட்ட தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரால் கொல்லப்பட்டுக் களத்தில் கிடக்கிறானே. நாங்கள் காணும் இந்தச் செயல் அநீதியானதே {அறமன்று}” என்றன. அவ்வீரன் கொல்லப்பட்டதும், நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயம் நிலவுடன் இருப்பதைப் போலப் பூமியானது மிகப் பிரகாசமாக இருந்தது. உண்மையில், பூமியானது இரத்த அலைகளால் மறைக்கப்பட்டுத் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் விரவி கிடந்தது.

குண்டலங்களாலும், பெரும் மதிப்புமிக்கப் பல்வேறு தலைப்பாகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட வீரர்களின் அழகிய தலைகள், கொடிகள், சாமரங்கள், அழகிய விரிப்புகள், ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட பெரும் திறன்வாய்ந்த ஆயுதங்கள், தேர்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளின் பிரகாசமான ஆபரணங்கள், சட்டையுரிந்த பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான கூரிய வாள்கள், விற்கள், உடைந்த ஈட்டிகள், ரிஷ்டிகள், வேல்கள், கம்பனங்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் பரவிக் கிடந்த அவள் {பூமி} அழகிய வடிவத்தை ஏற்றாள்.

சுபத்திரையின் மகனால் வீழ்த்தப்பட்டு, உயிரையிழந்தோ, உயிரையிழக்கும் தருவாயிலோ தங்கள் சாரதிகளுடன் இரத்தத்தில் புரண்டு கிடந்த குதிரைகளின் விளைவாகப் பல இடங்களில் பூமி கடக்க முடியாததாக இருந்தது. கவசங்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்கள் தரித்தவையும், மலைகளைப் போன்றவையுமான யானைகள், இரும்பு அங்குசங்களாலும், கணைகளாலும் நொறுக்கப்பட்டுக் கிடக்க, குதிரைகள், தேரோட்டிகள், தேர்வீரர்கள் ஆகியோரை இழந்த சிறந்த தேர்கள், யானைகளால் நசுக்கப்பட்டுப் பரவிக் கிடக்க, பூமியானது கலக்கப்பட்ட தடாகங்களைப் போலத் தெரிய, பல்வேறு ஆயுதங்களைத் தரித்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் தரையில் இறந்து கிடக்க, அந்தப் போர்க்களமானது பயங்கரத் தோற்றத்தை ஏற்று, மருண்டோரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது. சூரியனைப் போன்றோ, நிலவைப் போன்றோ பிரகாசமான அபிமன்யு தரையில் கிடப்பதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைத்தன, அதே வேளையில் பாண்டவர்கள் துயரால் நிறைந்தனர்.

பாலகனே ஆன இளமை நிறைந்த அபிமன்யு வீழ்ந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படையணிகள் தப்பி ஓடின. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வீழ்ந்ததும் பிளந்து ஓடிய தன் படையைக் கண்ட யுதிஷ்டிரன், துணிவுமிக்கத் தன் வீரர்களிடம், “போரில் பின்வாங்காது உயிரை இழந்த வீர அபிமன்யு நிச்சயம் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். எனவே நில்லுங்கள், அஞ்சாதீர், நாம் நம் எதிரிகளை வீழ்த்துவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பெரும் சக்தியும், பெரும் காந்தியும் கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், துயரில் இருந்த தன் வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களது திகைப்பை அகற்ற முயன்றான். மன்னன் {யுதிஷ்டிரன் தொடர்ந்தான்}, “போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பகை இளவரசர்களை முதலில் கொன்று, அதன் பிறகே அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன் உயிரை விட்டான். கோசல மன்னனின் பத்தாயிரம் வீரர்களைக் கொன்றவனும், கிருஷ்ணனையோ, அர்ஜுனனையோ போன்றவனுமான அபிமன்யு நிச்சயம் இந்திரனின் உலகத்திற்குச் சென்றிருப்பான். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகளை ஆயிரக்கணக்கில் கொன்ற அவன் {அபிமன்யு}, தான் செய்ததில் மனம் நிறையவேயில்லை. எனவே, அவனைப் போலவே புண்ணியமிக்கச் செயல்களை நாம் செய்ய வேண்டுமேயன்றி, நிச்சயம் அவனுக்காக வருந்தக் கூடாது. நீதிமான்களின் பிரகாசமான உலகங்களுக்கும், புண்ணியச் செயல்களால் மனிதர்கள் அடையும் உலகங்களுக்குமே அவன் சென்றிருக்கிறான்” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்