Sunday, June 26, 2016

சுருதாயுதனின் வரம்! - துரோண பர்வம் பகுதி – 091

The boon of Srutayudha! | Drona-Parva-Section-091 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : எதிரிகளின் படையை நடுங்கச் செய்த அர்ஜுனன்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியது; கிருதவர்மனுடன் மோதி வாய்ப்பிருந்தும் அவனைக் கொல்லாமல் விட்டது; மன்னன் சுருதாயுதனின் வரலாறு; சுருதாயுதன் பெற்றிருந்த வரம்; சுருதாயுதன் கொல்லப்பட்டது; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்; சுதக்ஷிணன் கொல்லப்பட்டது...


வருண தேவன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவனும், பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} துரோணரால் பின்தொடரப்பட்டான். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எண்ணற்ற ஒளிக்கதிர்களை இறைக்கும் சூரியனுக்கு ஒப்பாகத் தன் கூரிய கணைகளை இறைத்து, உடலை எரிக்கும் நோய்களைப் போல அந்தப் படையைச் சிதறடித்தான். குதிரைகள் துளைக்கப்பட்டன, தேர்கள் உடைக்கப்பட்டு, தேரோட்டிகள் சிதைக்கப்பட்டு, யானைகள் வீழ்த்தப்பட்டன. குடைகள் வெட்டித் தள்ளப்பட்டன, வாகனங்கள் தங்கள் சக்கரங்களை இழந்தன. கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட போராளிகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். ஒருவரோடொருவர் மோதும்படியாக அந்த வீரர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் தன் நேரான கணைகளால் பகைவரின் படையைத் தொடர்ச்சியாக நடுங்கச் செய்தான். உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டுத் தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிவப்பு குதிரைகளைக் கொண்டவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.


அப்போது ஆசான் துரோணர், உயிர்நிலைகளையே அடையவல்ல இருபத்தைந்து நேரான கணைகளால் வலிமைமிக்க வில்லாளியான தன் சீடன் அர்ஜுனனைத் தாக்கினார். அதன்பேரில் ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான பீபத்சு {அர்ஜுனன்}, தன்னை நோக்கி ஏவப்பட்ட எதிர்க்கணைகளைக் கலங்கடிக்கவல்ல கணைகளை ஏவியபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்ட அர்ஜுனன் பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துத் துரோணரால் தன் மீது விரைவாக ஏவப்பட்ட கணைகளை {பல்லங்களைத்} தன் நேரான கணைகளால் {பல்லங்களால்} கலங்கடித்தான் [1]. அர்ஜுனன் இளமை கொண்டவனாக, மிக மூர்க்கமாகப் போராடுபவனாக இருந்தாலும், ஒரு கணையாலும் துரோணரைத் துளைக்க முடியாததால் நாங்கள் கண்ட துரோணரின் திறம் மிக அற்புதமானதாக இருந்தது. மேகங்களின் திரள்கள் மழைத்தாரைகளைப் பொழிவதைப் போலத் துரோண மேகமானது, பார்த்த மலையின் மீது மழையைப் பொழிந்தது. பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பிரம்மாயுதத்தை அழைத்து, அந்தக் கணை மழையை வரவேற்று, அந்தக் கணைகளைத் தன் கணைகளால் அறுத்தான்.

[1] வேறொரு பதிப்பில், இவ்வரி, "வேகமாகத் தொடுக்கின்ற அந்த அர்ஜுனனுடைய பல்லங்களை, மனத்தினால் எண்ண முடியாத பராக்கிரமத்தையுடைய துரோணாசாரியர் பிரம்மாஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு கணுக்கள் பதிந்த பல்லங்களாலே திருப்பியடித்தார்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பரந்த மனம் கொண்ட அர்ஜுனன், பிரம்ம ஆயுதத்தை வெளியிட்டு, நெருக்கமான கணுக்கள் கொண்ட பல்லங்களைக் கொண்டு, தன் மீது துரோணரால் மிக விரைவாக ஏவப்பட்ட பல்லங்களை விரட்டினான்" என்று இருக்கிறது. இதில் மன்மதநாததத்தரின் பதிப்பும், கங்குலியின் பதிப்பும் ஒத்துப் போகின்றன.

பிறகு துரோணர், வெண் குதிரைகளைக் கொண்ட பார்த்தனை இருபத்தைந்து கணைகளால் பீடித்தார். மேலும் அவர் {துரோணர்}, எழுபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} அவனது கரங்களிலும் மார்பிலும் தாக்கினார். பெரும் நுண்ணறிவு கொண்ட பார்த்தன், தொடர்ச்சியாகக் கூரிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த ஆசானை {துரோணரை} அந்தப் போரில் சிரித்துக் கொண்டே தடுத்தான். துரோணரால் இப்படித் தாக்கப்பட்ட போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்த இருவரும், பெருகும் யுக நெருப்புக்கு ஒப்பான அந்த வெல்லப்படமுடியாத வீரரை {துரோணரைத்} தவிர்த்தனர். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கூரிய கணைகளைத் தவிர்த்தவனும், மலர்மாலைகளை அணிந்தவனும், குந்தியின் மகனுமான அந்தக் கிரீடம் தரித்தவன் {கிரீடியான அர்ஜுனன்}, போஜர்களின் படையைப் படுகொலை செய்யத் தொடங்கினான். உண்மையில், அசையாத மைநாக மலையைப் போல நின்ற வெல்லப்பட முடியாத அந்தத் துரோணரைத் தவிர்த்த அர்ஜுனன், கிருதவர்மனுக்கும், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணனுக்கும் இடையில் தன் நிலையை எடுத்துக் கொண்டான்.

அப்போது மனிதர்களில் புலியான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, வெல்லப்பட முடியாதவனும், குரு வழித்தோன்றல்களில் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்} மீது கங்க இறகுகளால் சிறகு அமைந்த பத்து கணைகளால் நிதானமாகத் துளைத்தான். பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்து ஐந்து கூரிய கணைகளால் அர்ஜுனனை மார்பில் துளைத்தான். பிறகு மேலும் ஐந்து கூரிய கணைகளால் மீண்டும் பார்த்தனைத் துளைத்தான். பார்த்தனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு ஒன்பது கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் துளைத்தான்.

குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருதவர்மனின் தேருக்கு முன்பு தடுக்கப்பட்டிருப்பதைக் கண்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, காலமேதும் வீணாகக் கூடாது என்று நினைத்தான். பிறகு கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "கிருதவர்மனுக்கு எந்தக் கருணையும் காட்டாதே! (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக!" என்றான். பிறகு அர்ஜுனன் தன் கணைகளால் கிருதவர்மனை மலைக்கச் செய்து, தன் வேகமான குதிரைகளால் காம்போஜ படைப்பிரிவினரிடம் சென்றான். வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் காம்போஜப் படைக்குள் ஊடுருவியதைக் கண்ட கிருதவர்மன் கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கிருதவர்மன்}, தன் வில்லை எடுத்து அதில் கணைகளைப் பொருத்திப் பாஞ்சால இளவரசர்கள் இருவருடன் மோதினான். உண்மையில் கிருதவர்மன், அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்துப் பின்தொடர்ந்த இரு பாஞ்சால இளவரசர்களையும் தன் கணைகளால் தடுத்து நிறுத்தினான்.

பிறகு, போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மன் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜசை நான்கு கணைகளாலும் அவர்கள் இருவரையும் கூரியக் கணைகளால் துளைத்தான். பதிலுக்கு அந்த இளவரசர்கள் இருவரில் ஒவ்வொருவரும் அவனைப் {கிருதவர்மனைப்} பத்து கணைகளால் துளைத்தனர். அதற்கு மேலும், யுதாமன்யு மூன்று கணைகளையும், உத்தமௌஜஸ் மூன்று கணைகளையும் ஏவி கிருதவர்மனின் கொடிமரத்தையும் வில்லையும் அறுத்தனர். அப்போது மற்றொரு வில்லை எடுத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சினத்தால் மதங்கொண்டு, அவ்விரு வீரர்களின் விற்களையும் இழக்கச் செய்து, அவர்களைக் கணைகளால் மறைத்தான். பிறகு வேறு இரு விற்களை எடுத்து நாணேற்றிய அந்த இரு வீரர்களும் கிருதவர்மனைத் துளைக்கத் தொடங்கினர்.

அதே வேளையில் பீபத்சு {அர்ஜுனன்} பகைவரின் படைக்குள் ஊடுருவினான். ஆனால் கிருதவர்மனால் தடுக்கப்பட்ட அந்த இளவரசர்கள் இருவரும் கடுமையாகப் போராடினாலும் திருதராஷ்டிரப் படைக்குள் நுழைய முடியவில்லை. வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்தப் போரில் தன்னை எதிர்த்த படைப்பிரிவுகளை விரைவாகப் பீடித்தான். எனினும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தன் அருகில் அகப்பட்டிருந்த கிருதவர்மனைக் கொல்லவில்லை.

அப்படிச் செல்லும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் சுருதாயுதன், கோபத்தால் நிறைந்து, தன் பெரிய வில்லை அசைத்துக் கொண்டு அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். அவன் {சுருதாயுதன்} பார்த்தனை மூன்று கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் துளைத்தான். மேலும் அவன் {சுருதாயுதன்} கத்தி போன்ற தலை கொண்ட மிகக் கூரிய கணை ஒன்றால் பார்த்தனின் கொடிமரத்தைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் நிறைந்த அர்ஜுனன், (பாகன் ஒருவன்) அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் தாக்குவதைப் போல, தன் எதிராளியை நேரான தொண்ணூறு {90} கணைகளால் ஆழத் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுதனால், பாண்டு மகனின் ஆற்றல்மிக்க அந்தச் செயல்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்கு அர்ஜுனனை எழுபத்தேழு கணைகளால் {நாராசங்களால்} துளைத்தான்.

அப்போது அர்ஜுனன், சுருதாயுதனனின் வில்லையும், அதன் பிறகு அவனது அம்பறாத்தூணியையும் அறுத்து, மேலும் கோபத்துடன் நேரான எழுபது கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் தன் புலன்களை இழந்த மன்னன் சுருதாயுதன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒன்பது கணைகளால் வாசவன் மகனின் {இந்திரன் மகன் அர்ஜுனனின்}} கரங்களிலும், மார்பிலும் அடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன் சிரித்துக் கொண்டே பல்லாயிரம் கணைகளால் சுருதாயுதனைப் பீடித்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, பின்னவனின் {சுருதாயுதனின்} குதிரைகளையும், தேரோட்டியையும் விரைவாகக் கொன்றான். பெரும் பலம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எழுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு வீரமன்னன் சுருதாயுதன் குதிரைகளற்ற அந்தத் தேரைக் கைவிட்டு, அம்மோதலில் தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான்.

வருணனின் மகனான வீர மன்னன் சுருதாயுதன், குளிர்ந்த நீரைக் கொண்டதும், பர்ணாசை [2] என்றழைக்கப்படுவதுமான பெரும் நதியையே தன் தாயாகக் கொண்டவனும் ஆவான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், "இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்" என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், "எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ! ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்" என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, "இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ! சிறப்புமிக்கப் பிள்ளாய், (அப்படி ஏவப்பட்டால்), அஃது எதிர்த்திசையில் சென்று, ஏவிய மனிதனையே கொல்லும்" என்றான் {வருணன்}.

[2] பர்ணாசை நதியானது, ராஜஸ்தானில் ஓடும் சம்பல் நதியின் கிளை நதியாகக் கருதப்படுகிறது.

அவனுடைய வேளை வந்ததால், சுருதாயுதன் அந்தக் கட்டளையை மீறியதாகத் தெரிந்தது. வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால் அவன் {சுருதாயுதன்} ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தாக்கினான். வீரக் கிருஷ்ணன் அந்தக் கதாயுதத்தை நன்கு வளர்ந்த தன் பருத்த தோள்கள் ஒன்றில் ஏற்றான். விந்திய மலையை அசைக்கத் தவறிய காற்றைப் போல, அது சௌரியை {கிருஷ்ணனை} அசைக்கத் தவறியது. அந்தக் கதாயுதம் ஸ்ருதாயுதனையே நோக்கித் திரும்பி, மந்திரவாதியின் தவறான மந்திரம் அவனேயே காயப்படுத்துவதைப் போல, தன் தேரில் நின்றிருந்த அந்தத் துணிச்சல்மிக்கக் கோபக்கார மன்னனைத் தாக்கிக் கொன்றதால் அந்த வீரன் பூமியில் விழுந்தான். கதாயுதம் திரும்பி சுருதாயுதனைக் கொன்றதையும், எதிரிகளைத் தண்டிப்பவனான சுருதாயுதன் தன் ஆயுதத்தாலேயே கொல்லப்பட்டதையும் கண்ட துருப்புகளுக்கு மத்தியில் "ஐயோ" என்றும், "ஓ" என்றும் கூச்சல்கள் எழுந்தன [3].

[3] ஒரே பொருளைக் கொண்ட இணைவாக்கியங்களாக மூலத்தில் இவ்வாக்கியம் இருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் பீமனால் கொல்லப்பட்ட சுருதாயுஷும், இங்கே அர்ஜுனானால் கொல்லப்படும் சுருதாயுதனும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும். இதையும் தவிர துரோண பர்வம் பகுதி 92லும் ஒரு சுருதாயுஸ் வருகிறான்.  சுருதாயுஷ், சுருதாயுதன், சுருதாயுஸ் என மூன்று பெயர்கள் மாறி மாறிக் காணக்கிடைக்கின்றன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுருதாயுதன், போரில் ஈடுபடாத ஜனார்த்தன் மீது அந்தக் கதாயுதத்தை ஏவியதால், ஏவிய அவனையே அது கொன்றுவிட்டது. மேலும் அந்தச் சுருதாயுதன் வருணன் சொன்ன விதத்திலேயே களத்தில் அழிந்தான். உயிரை இழந்த அவன் வில்லாளிகள் அனைவரின் கண்கள் முன்பாகவே பூமியில் விழுந்தான். அப்படி விழுந்த போது, பர்ணாசையின் அன்புக்குரிய அந்த மகன் {சுருதாயுதன்}, கிளை பரப்பியிருந்த ஒரு நெடும் ஆலமரம் காற்றால் விழுந்து கிடந்ததைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சுருதாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு துருப்புகள் அனைத்தும், முக்கிய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.

அப்போது காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனான துணிச்சல்மிக்கச் சுதக்ஷிணன், தன் வேகமான குதிரைகளை எதிரிகளைக் கொல்பவனான பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைவாகச் செலுத்தினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} அவன் {சுதஷிணன்} மீது ஏழு கணைகளை ஏவினான். அந்த வீரனின் உடலைக் கடந்து சென்ற அந்தக் கணைகள் பூமியில் நுழைந்தன. போரில் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட சுதக்ஷிணன், பதிலுக்கு அர்ஜுனனைக் கங்க இறகுகளால் சிறகமைந்த பத்துக் கணைகளால் துளைத்தான். வாசுதேவனை மூன்று கணைகளால் துளைத்த அவன், மேலும் ஐந்தால் பார்த்தனைத் துளைத்தான்.

அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுதக்ஷிணனின் வில்லை அறுத்துப் பின்னவனின் {சுதக்ஷிணனின்} கொடிமரத்தையும் வெட்டி வீழ்த்தினான். பாண்டுவின் மகன், பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் இரண்டால் தன் எதிராளியைத் துளைத்தான். எனினும், சுதக்ஷிணன், மீண்டும் மூன்று கணைகளால் பார்த்தனைத் துளைத்து சிங்க முழக்கம் செய்தான். பிறகு, கோபத்தால் நிறைந்த துணிச்சல் மிக்கச் சுதக்ஷிணன், முழுக்க இரும்பாலானதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பயங்கர ஈட்டியைக் காண்டீவதாரியின் {அர்ஜுனன்} மீது ஏவினான். பெரும் எரிநட்சத்திரத்தைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு வலிமைமிக்க அந்தத் தேர்வீரனை {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்று பூமியில் விழுந்தது. அந்த ஈட்டியால் ஆழமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த அர்ஜுனன், மிக விரைவாகவே {மயக்கத்திலிருந்து} மீண்டான்.

பிறகு வலிமையும், சக்தியும், காண இயலா சாதனைகளும் கொண்ட வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, கங்க இறகுகளால் சிறகமைந்த பதினான்கு கணைகளால் தன் எதிரியை அவனது குதிரைகள், கொடிமரம், வில், தேரோட்டி ஆகியவற்றோடு துளைத்தான். மேலும் பார்த்தன், எண்ணற்ற பிற கணைகளால் சுதக்ஷிணனின் தேரைச் சுக்குநூறாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் காரியமும், ஆற்றலும் கலங்கடிக்கப்பட்டவனான காம்போஜர்களின் இளவரசனான சுதக்ஷிணனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். காம்போஜர்களின் துணிச்சல்மிக்க அந்த இளவரசன் {சுதக்ஷிணன்}, தன் கவசம் பிளக்கப்பட்டு, அங்கங்கள் பலவீனமடைந்து, தன் கிரீடமும், அங்கதங்களும் நழுவ, இயந்திரத்தில் இருந்து வீசப்பட்ட இந்திரக் கம்பம் {இந்திரத்வஜம்} போலத் தலை குப்புற பூமியில் விழுந்தான்.

வசந்தகாலத்தில், மலைமுகட்டில், அழகிய கிளைகளுடன் நன்கு வளர்ந்திருக்கும் அழகிய கர்ணிகார (கோங்கு) மரம், காற்றினால் ஒடிக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் போல, விலைமதிப்புமிக்கப் படுக்கையையும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்படத்  தகுந்த அந்தக் காம்போஜர்களின் இளவரசன் {சுதக்ஷிணன்} உயிரை இழந்து வெறுந்தரையில் கிடந்தான். அழகுமிக்கவனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனும், நெருப்பின் காந்தியைக் கொண்ட தங்க மாலையைத் தலையில் சூடியவனும், காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சுதக்ஷிணன், பார்த்தனின் கணைகளால் வீழ்த்தப்பட்டு, சமமுகடு கொண்ட அழகிய மலையைப் போல உயிரையிழந்து பூமியில் கிடந்தான். சுருதாயுதனும், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணனும் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகனின் துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடின" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்