Friday, July 01, 2016

துரியோதனனுக்கு கவசம் பூட்டிய துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 093

Drona tied an armour on Duryodhana! | Drona-Parva-Section-093 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : துரோணரை நிந்தித்த துரியோதனன்; அவனது கவலை; தன் நிலையை விளக்கிய துரோணர்; அவர் சொன்ன விருத்திரன் கதை; தான் அந்தக் கவசத்தை அடைந்த கதையைச் சொன்னது; கவசத்தை துரியோதனனுக்கு அளித்து அவனை அர்ஜுனனுக்கு எதிராக அனுப்பியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, துரோணர் மற்றும் போஜர்களின் தடுக்கப்படமுடியாத படைப்பிரிவுகளைப் பிளந்து சென்ற பிறகு, காம்போஜ ஆட்சியாளனின் வாரிசான இளவரசன் சுதக்ஷிணன் கொல்லப்பட்ட பிறகு, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} வீர சுருதாயுதனைக் கொன்ற பிறகு, (குரு) படையணியினர் தப்பி ஓடி அனைத்துப் பக்கங்களிலும் குழப்பம் நேரிட்ட போது, அப்படிப் பிளக்கப்பட்ட தன் படையைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} துரோணரிடம் சென்றான்.




துரோணரிடம் விரைவாக வந்த துரியோதனன், "அந்த மனிதர்களில் புலி (அர்ஜுனன்), இந்தப் பரந்த படையை நொறுக்கிவிட்டு, ஏற்கனவே அதைக் கடந்து சென்றுவிட்டான். உமது அறிவின் துணை கொண்டும், {நமக்கு ஏற்பட்ட} பயங்கரமான பேரழிவைக் கருத்தில் கொண்டும், அர்ஜுனனைக் கொல்வதற்கு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பீராக. நீர் அருளபட்டிருப்பீராக, அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} ஜெயத்ரதனைக் கொல்வதில் வெல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுப்பீராக. நீரே எங்கள் ஒரே புகலிடம்.

சீற்றம் கொண்ட காட்டுத்தீயானது உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியல்களை எரிப்பது போல, தனஞ்சய நெருப்பானது, அவனது கோபம் என்ற காற்றால் உந்தப்பட்டு, புற்களையும், வைக்கோலையும் போல என் துருப்புகளை எரிக்கிறது. ஓ! எதிரிகளை எரிப்பவரே, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இந்தப் படையைப் பிளந்து அதைக் கடந்து போவதைக் கண்டு, ஜெயத்ரதனைப் பாதுகாத்துவரும் வீரர்கள் (பார்த்தனைத் தடுக்கும் தங்கள் திறனில்) ஐயமுறுகின்றனர். ஓ! பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரே {துரோணரே}, துரோணரை மீறித் தனஞ்சயனால் உயிருடன் செல்வதில் வெல்ல முடியாது என்பதே மன்னர்களின் முடிவான தீர்மானமாக இருந்தது. எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படைப்பிரிவைப் பார்த்தன் {அர்ஜுனன்} பிளந்து செல்கிறான் என்றால், நான் என் படையை மிகப் பலவீனமானதாகவே கருதுகிறேன். உண்மையில் எனக்குத் துருப்புகளே இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே {துரோணரே}, பாண்டவர்களின் நன்மையில் நீர் அர்ப்பணிப்பு கொண்டவர் என்பதை நான் அறிவேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதில் நான் என் அறிவை இழக்கிறேன். என் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி நான் உம்மை நிறைவு கொள்ளச் செய்யவும் முயல்கிறேன். எனினும், நீர் இவையாவையும் மனத்தில் தாங்கவில்லை {நினைத்துப் பார்க்கவில்லை}. ஓ! அளவிலா ஆற்றலுடையவரே, நாங்கள் உமக்கு அர்ப்பணிப்புடன் இருந்தாலும், நீர் எங்கள் நன்மையை நாட மறுக்கிறீர். நீர் எப்போதும் பாண்டவர்களிடம் மகிழ்ந்து, எப்போதும் எங்களுக்குத் தீமை செய்வதிலேயே ஈடுபடுகிறீர். உமது வாழ்வாதாரத்தை எங்களிடம் பெற்றாலும், எங்களுக்குத் தீமை செய்வதிலேயே நீர் ஈடுபடுகிறீர். தேனில் முக்கியக் கத்தி நீர் என்பதை நான் அறியாமல் இருந்துவிட்டேன்.

பாண்டவர்களை அவமதித்துத் தடுப்பதாக நீர் எனக்கு வரமளித்திருக்காவிடில், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதை நான் தடுத்திருக்கவே மாட்டேன். உமது பாதுகாப்பை எதிர்பார்த்து, சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு உறுதியளித்த நான் மூடனே, மேலும், என் மடமையால், நான் அவனை {ஜெயத்ரதனை} யமனுக்குப் பலியாகக் காணிக்கை அளித்துவிட்டேன். யமனின் கோரப்பற்களுக்கிடையே நுழைந்த மனிதன் கூடத் தப்பலாம், ஆனால் எப்போது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கரங்களுக்கு அருகில் வருகிறானோ, அப்போது ஜெயத்ரதனால் தப்ப முடியாது. ஓ! சிவப்பு குதிரைகளைக் கொண்டவரே, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} காக்கப்படத் தேவையானவற்றைச் செய்வீராக. அல்லலுற்றவனான என் பிதற்றல்களைக் கேட்டு கோபங்கொள்ளாதீர், ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்பீராக" என்றான் {துரியோதனன்}.

அதற்குத் துரோணர் {துரியோதனனிடம்}, "உன் வார்த்தைகளில் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. அஸ்வத்தாமனைப் போலவே நீ எனது அன்புக்குரியவன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களின்படி இப்போது செயல்படுவாயாக. கிருஷ்ணன், தேரோட்டிகள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். அவனது குதிரைகளோ, அவ்வினத்தில் முதன்மையானவையாகும். சிறு இடைவெளி கிடைத்தாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அதன் வழியாக வெகு விரைவாகக் கடந்து விடுவான். கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) அப்படிச் செல்கையில், அவனது {அர்ஜுனனது} வில்லில் இருந்து ஏவப்படும் எண்ணற்ற கணைகள் அவனது  தேரிலிருந்து முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவுக்குச் செல்வதை நீ காணவில்லையா [1]? வயது முதிர்ந்ததனால், அவ்வளவு வேகமாகச் செல்ல என்னால் முடியவில்லை.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "பிரயோகிக்கப்பட்டவைகளும், ரதத்திற்குப் பின்புறத்தில் ஒரு குரோச தூரம் வந்து விழுகின்றவைகளும், விரைவாகச் செல்லுகின்றவைகளுமான கிரீடியினுடைய பாணச் சமூகங்களை நீ பார்க்கவில்லையா?" என்று இருக்கிறது. குரோசம் என்ற அளவே மூலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், பார்த்தர்களின் மொத்தப் படையும் இப்போது நமக்கு முன்னிலையில் நெருங்கி இருக்கிறது. யுதிஷ்டிரனும் என்னால் பிடிக்கப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அப்படியே வில்லாளிகள் அனைவருக்கு முன்னிலையிலும், க்ஷத்திரியர்கள் அனைவருக்கு மத்தியிலும் என்னால் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ! மன்னா, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கைவிடப்பட்டுத் தன் துருப்புகளின் முகப்பில் இப்போது அவன் {யுதிஷ்டிரன்} இருக்கிறான். எனவே, நான் நமது வியூகத்தின் வாயிலைக் கைவிட்டு பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். குலத்திலும், செயல்பாடுகளிலும் உனக்கு இணையானவனும், தனியனுமான அந்த உன் எதிரியுடன் {அர்ஜுனனுடன்}, முறையான உதவி பெற்றவனான நீயே போரிட வேண்டும். அஞ்சாதே. சென்று அவனுடன் போரிடுவாயாக. நீ உலகத்தின் ஆட்சியாளன். நீயே மன்னன், நீயே வீரன். புகழைக் கொண்ட நீ, (உன் எதிரிகளை) வெல்வதில் சாதித்தவனாவாய். ஓ! பகை நகரங்களை அடக்கும் துணிவுள்ளவனே, பிருதையின் மகனான தனஞ்சயன் இருக்கும் இடத்திற்கு நீயே செல்வாயாக" என்றார் {துரோணர்}.

அதற்குத் துரியோதனன் {துரோணரிடம்}, "ஓ! ஆசானே, ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையான உம்மையே மீறிச் சென்ற தனஞ்சயனை {அர்ஜுனனை} என்னால் எவ்வாறு தடுக்க முடியும்? வஜ்ரதாரியான தேவர்களின் தலைவனே {இந்திரன்} கூடப் போரில் வெல்லப்படலாமேயன்றி, பகைநகரங்களை அடக்குபவனான அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாது. போஜர்களின் ஆட்சியாளனான ஹிருதிகனின் மகன் (கிருதவர்மன்), தேவனுக்கு இணையான நீர் ஆகிய இருவரும் எவனுடைய ஆயுதங்களின் பலத்தால் வெல்லப்பட்டீர்களோ, எவனால் சுருதாயுசும், சுதக்ஷிணனும், மன்னன் சுருதாயுசும் கொல்லப்பட்டனரோ, எவனால் சுருதாயுசும் [2], அச்யுதாயுசும், மிலேச்சர்களின் கூட்டமும் கொல்லப்பட்டனரோ, அனைத்தையும் எரிக்கும் நெருப்புப் போன்றவனும், ஆயுதங்களின் தலைவனாகச் சாதித்தவனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரில் எவ்வாறு நான் மோதுவேன்? மேலும் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடத் தகுந்தவன் என்று என்னை எவ்வாறு நீர் நினைக்கிறீர்? ஓர் அடிமையைப் போல நான் உம்மையே நம்பி இருக்கிறேன். என் புகழைக் காப்பீராக [3]" என்றான் {துரியோதனன்}.

[2] மூன்று சுருதாயுஸ்கள் அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகத் துரியோதனனால் இங்கேயே சொல்லப்படுகின்றனர்.

[3] வேறொரு பதிப்பில், "இப்போது அவனோடு எனக்கு யுத்தம் நேருவது தகுதியானதென்று எண்ணுவீராகில் என்னைக் கட்டளையிடும். கிங்கனைப் போல் உமக்கு நான் உடன்பட்டிருக்கிறேன். என்னுடைய கீர்த்தியைக் காப்பாற்றுவீராக" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

துரோணர் {துரியோதனனிடம்}, "ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, தனஞ்சயன் {அர்ஜுனன்} தடுக்கப்பட முடியாதவன் என்று நீ சொல்வது உண்மையே. எனினும், நீ அவனைத் தாங்க இயலும்படி நான் செய்யப் போகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குந்தியின் மகன் {அர்ஜுனன்} உன்னால் தடுக்கப்படும் அந்த அற்புத செயலை இவ்வுலகில் உள்ள வில்லாளிகள் அனைவரும் காணட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, மனிதனால் பயன்படுத்தும் எந்த ஆயுதத்தாலும் போரில் உன்னைத் தாக்க முடியாதவாறு இந்த உனது தங்கக் கவசத்தை உன் உடலில் நான் கட்டப்போகிறேன். அசுரர்கள், தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், மனிதர்கள் அனைவருடனும் கூடிய மூன்று உலகங்களும் இன்று உன்னுடன் போரிட்டாலும், உனக்கு அச்சம் தேவையில்லை. கிருஷ்ணனாலோ, குந்தியின் மகனாலோ {அர்ஜுனனாலோ}, போரில் ஆயுதம் தரித்த பிறர் எவராலோ இந்த உனது கவசத்தைக் கணைகளால் பிளக்க முடியாது. இந்தக் கவசத்தைத் தரித்துக் கொண்டு, கோபக்கார அர்ஜுனனை இன்றைய போரில் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. அவனால் உன்னைத் தாங்கிக் கொள்ள இயலாது" என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இவ்வார்த்தைகளைச் சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர், நீரைத் தொட்டு, முறையான மந்திரங்களை உச்சரித்து, அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் துரியோதனனின் வெற்றிக்காக அவனது உடலில் மிக அற்புதமான பிரகாசமான கவசத்தை விரைவாகக் கட்டி (அச்செயலால்) மனிதர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் [4].

[4] வேறொரு பதிப்பில், "பிரம்ம வித்துக்களுள் உத்தமரான துரோணர் இவ்வாறு சொல்லிவிட்டு உலகங்களை வித்தையினால் ஆச்சரியப்படும்படி செய்பவராகி அந்தப் பெரிய யுத்தத்தில் உமது குமாரனுடைய ஜயத்தை வேண்டி விரைவுடனே தீர்த்தத்தைத் தொட்டு ஆசமனஞ்செய்து அத்யாச்சரியகரமான மந்திரத்தை முறைப்படி ஜபித்துப் பிரகாசிக்கின்ற கவசத்தைத் துரியோதனனுக்குப் பூட்டினார்" என்று இருக்கிறது.

துரோணர் {துரியோதனனிடம்}, "வேதங்களும், பிரம்மனும், பிராமணர்களும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஓ! பாரதா {துரியோதனா}, ஊர்வனவற்றில் அனைத்து உயர்ந்த வகுப்புகளும் {மேன்மையான பாம்புகளும்} ஆசீர்வாதத்திற்கு ஆதாரமாக உனக்கு அமையட்டும். யயாதி, நகுஷன், துந்துமாரன், பகீரதன் மற்றும் பிற அரச முனிகளும் உனக்கு எவை நன்மையோ, அவையனைத்தையும் செய்யட்டும். ஒரு காலை மட்டுமே கொண்ட உயிரினங்களிடமிருந்தும், பல கால்களைக் கொண்டவற்றிடமிருந்து உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். கால்களே இல்லாத உயிரினங்களிடம் இருந்தும் இந்தப் பெரும்போரில் உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். சுவாஹா, சுவாதா, சச்சி ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும்.

ஓ! பாவமற்றவனே, லட்சுமியும், அருந்ததியும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். அசிதர், தேவலர், விஸ்வாமித்ரர், அங்கிரஸ், வசிஷ்டர், கசியபர் ஆகியோரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். தாத்ரி, உலகங்களின் தலைவன், திசைகள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, ஆறு முகம் கொண்ட கார்த்திகேயன் {முருகன்} ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும். தெய்வீக விவஸ்வான் உனக்கு முழுமையான நன்மையைச் செய்யட்டும். நான்கு திக்குகளின் நான்கு யானைகளும் {திக் கஜங்களும்}, பூமியும், ஆகாயமும், கோள்களும், பூமிக்கு அடியில் அவளைத் (தன் தலையில்) தாங்கும் பாம்புகளில் முதன்மையான சேஷனும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும்.

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, முன்பொரு காலத்தில் விருத்திரன் என்ற பெயர் கொண்ட அசுரன் போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களில் சிறந்தவர்களைப் போரில் வென்றான். ஆயிரமாயிரமாக எண்ணிக்கையில் இருந்தவர்களும், சொர்க்கலோகவாசிகளுமான பின்னவர்கள் {தேவர்கள்} அனைவரும், சிதைந்த உடல்களுடன், பலத்தையும் சக்தியையும் இழந்து, பெரும் அசுரனான விருத்திரனுக்கு அஞ்சி, இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு பிரம்மனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள். அந்தத் தேவர்கள், "ஓ! தேவர்களில் சிறந்தவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, விருத்திரனால் இப்போது நொறுக்கப்படும் தேவர்களுக்கு நீர் புகலிடமாவீராக. உண்மையில் இந்தப் பெரும் அச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக" என்றனர்.

அதற்குப் பிரம்மன் தன்னருகே இருந்த விஷ்ணுவிடமும், உற்சாகமற்றிருந்தவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் இருந்தவர்களுமான அந்தத் தேவர்களில் சிறந்தவர்களிடமும் உண்மை நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினான்: "உண்மையில், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், பிராமணர்களும் எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். விருத்திரன் எதிலிருந்து உண்டாக்கப்பட்டானோ அந்தத் துவஷ்டிரியின் {த்வஷ்டாவின்} சக்தி வெல்லப்பட முடியாததாகும். தேவர்களே, முற்காலத்தில் பத்து லட்சம் வருடங்களுக்குத் தவத்துறவுகளைச் செய்த துவஷ்டிரி, மகேஸ்வரனிடம் அனுமதி பெற்று விருத்திரனை உண்டாக்கினான். உங்களுடைய அந்த வலிமைமிக்க எதிரி {விருத்திரன்}, தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} அருளினால் உங்களைத் தாக்குவதில் வென்றான். சங்கரனிருக்கும் {சிவன்} இடத்திற்குச் செல்லாமல் உங்களால் தெய்வீக ஹரனைக் காண முடியாது. அந்தத் தேவனைக் {சிவனைக்} கண்ட பிறகே உங்களால் விருத்திரனை வெல்ல முடியும். எனவே நீங்கள் தாமதிக்காமல் மந்தர மலைகளுக்குச் செல்வீராக. தவத்துறவுகளின் தோற்றமானவனும் {தவத்துறவுகைளத் தோற்றுவித்தவனும்}, தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பிநாகையைத் தாங்குபவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பகனேத்திரன் [5] என்று அழைக்கப்பட்ட அசுரனைக் கொன்றவனுமான அவன் {சிவன்} அங்கேயே இருக்கிறான்" என்றான் {பிரம்மன்}.

[5] வேறொரு பதிப்பில், "தவங்களுக்குக் காரணரும், தக்ஷனுடைய யாகத்தை அழித்தவரும், பிநாகமென்கிற வில்லைக் கையிலெடுத்தவரும், சர்வபூதங்களுக்கும் நாதரும், பகனுடைய நேத்திரத்தைக் {கண்களை} கீழே தள்ளினவருமான அந்த ஈஸ்வரர் வாசம் பண்ணுகிற மந்தரப் பர்வதத்துக்குச் செல்லுங்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "தவத்துறவுகளின் தோற்றமானவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பிநாகையைத் தாங்கியவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தப் பகநேத்திரன் அங்கேயே வசிக்கிறான்" என்றிருக்கிறது. எனவே கங்குலியில் உள்ளதைப் போல "பகனேத்திரன் என்ற அழைக்கப்பட்ட அசுரனைக் கொன்றவன்" என்று சொல்வது பிழையாகவே இருக்கும்.

பிரம்மனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், பிரம்மனின் துணையுடன் மந்தரத்திற்குச் சென்று, சக்தியின் குவியலும், கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவனை {ஈஸ்வரனைக்} கண்டனர். தேவர்களைக் கண்ட மகேஸ்வரன், அவர்களை வரவேற்று, தான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென விசாரித்தான். "ஜோதியானவனைக் {ray person} கண்டது ஒருபோதும் கனியற்றதாகாது. உங்கள் விருப்பங்கள் கனிவது இதிலிருந்து தொடங்கட்டும் [6]" என்றான். இப்படி அவனால் சொல்லப்பட்ட சொர்க்கவாசிகள், "விருத்திரனால் எங்கள் சக்தியை நாங்கள் இழந்தோம். நீ சொர்க்கவாசிகளின் புகலிடமாவாயாக. ஓ! தலைவா, அவனது அடிகளால் தாக்கப்பட்டு, காயம்பட்ட எங்களது உடல்களைக் காண்பாயாக. ஓ! மகேஸ்வரா, நீ எங்களது புகலிடமாவாயாக" என்றனர் {தேவர்கள்}.

[6] வேறொரு பதிப்பில், "என்னுடைய தர்சனமானது பயனோடு கூடியது. ஆதலால், உங்களுக்கு அபீஷ்டசித்தி உண்டாகட்டும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "என்னைக் காண்பது பலனற்றதாக இருக்க முடியாது. எனவே, உங்கள் ஆசைகள் ஈடேறுவது இதில் இருந்து தொடரட்டும்" என்றிருக்கிறது.

தேவர்களுக்குத் தேவன் என்று சொல்லப்படும் சர்வன் {சிவன்}, "தேவர்களே, பெரும் பலம் நிறைந்ததும், பயங்கரமானதும், தவத்தகுதியற்றவர்களால் தடுக்கப்படமுடியாததுமான இந்தச் செயல்பாடு {விருத்திரன்} எவ்வாறு (தேவ தச்சனான) துவஷ்டிரியின் சக்தியில் இருந்து உதித்துத் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரை, சொர்க்கவாசிகளுக்கு என் உதவியைக் கொடுப்பது நிச்சயம் என் கடமையாகும். ஓ! சக்ரா {இந்திரா}, என் உடலில் இருந்து இந்தப் பிராகசமிக்கக் கவசத்தை எடுப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, மனத்தில் இந்த மந்திரங்களைச் சொல்லி அஃதை அணிந்து கொள்வாயாக" என்றான் {சிவன்}.

துரோணர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைச் சொன்ன வரமளிப்பவன் (சிவன்), (அணிந்து கொள்பவன் உச்சரிக்க வேண்டிய) மந்திரங்களுடன் அந்தக் கவசத்தை அளித்தான். அந்தக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட சக்ரன் {இந்திரன்}, போரில் விருத்திரனை எதிர்த்துச் சென்றான். அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு விதங்களிலான ஆயுதங்கள் அவன் {இந்திரன்} மீது ஏவப்பட்டாலும், அந்தக் கவசத்தின் இணைப்புகள் பிளக்கப்படவில்லை. அதன்பிறகு, தேவர்களின் தலைவன் {இந்திரன்} விருத்திரனைக் கொன்றதும், மந்திரங்களால் அமைக்கப்பட்ட இணைப்புகளை உடைய அந்தக் கவசத்தை அங்கிரசிடம் கொடுத்தான். அங்கிரஸ், தன் மகனும், மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவருமான பிருஹஸ்பதியிடம் அந்த மந்திரங்களைக் கொடுத்தார். பிருஹஸ்பதி அந்த அறிவைப் பெரும் நுண்ணறிவு கொண்ட அக்னிவேஸ்யரிடம் அளித்தார். அக்னிவேஸ்யர் அஃதை எனக்கு அளித்தார், அந்த மந்திரங்களின் துணை கொண்டே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நான் உன் உடலைப் பாதுகாப்பதற்காக, இந்தக் கவசத்தை உன் உடலில் பூட்டுகிறேன்" {என்றார் துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், ஆசான்களில் காளையுமான துரோணர், பெரும் பிரகாசம் கொண்ட உமது மகனிடம் மீண்டும் பேசினார், "ஓ! மன்னா {துரியோதனா}, இந்தக் கவசத்தின் துண்டுகளைப் பிரம்ம நாணின் துணை கொண்டு இணைத்து, உன் உடலில் நான் பூட்டுகிறேன். பழங்காலத்தில், போரில் பிரம்மனே இதை விஷ்ணுவுக்குப் பூட்டியிருக்கிறான். தாரகையைக் கடத்தியதன் விளைவாக ஏற்பட்ட போரில் இந்திரனுக்கு இந்தக் கவசத்தைப் பூட்டிய பிரம்மனைப் போலவே, நான் இஃதை உனக்குப் பூட்டுகிறேன்" என்றார் {துரோணர்}.

இப்படியே, துரோணர் அந்தக் கவசத்தை மந்திரங்களுடன் துரியோதனன் மேல் பூட்டி, அம்மன்னனை {துரியோதனனைப்} போருக்கு அனுப்பினார். வலிமைமிக்கக் கரங்களையும், தாக்குவதில் சாதனையும் கொண்ட அம்மன்னன் {துரியோதனன்}, உயர் ஆன்ம ஆசானால் {துரோணரால்} கவசம்பூட்டப்பட்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட மதங்கொண்ட ஆயிரம் யானைகள், நூறாயிரம் குதிரைகள் மற்றும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் அர்ஜுனனின் தேரை நோக்கிச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன், பல்வேறு விதங்களிலான இசைக்கருவிகளின் ஒலியுடன், விருசோனனின் மகனைப் (பழங்காலத்தின் பலி சக்கரவர்த்தியைப்) போலத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆழங்காண இயலாத கடலைப் போலச் செல்லும் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்