Tuesday, August 16, 2016

தம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன்! - துரோண பர்வம் பகுதி – 126

Bhima killed eleven brothers! | Drona-Parva-Section-126 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 42)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் பாதுகாப்பை திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்த பீமன்; வெற்றிக் குறிக்கும் சகுனங்களைக் கண்ட பீமன்; துரோணரை அடைந்த பீமன் அவரை அவமதித்த பீமன்; பீமனை எதிர்த்த கௌரவச் சகோதரர்கள்; துரியோதனன் தம்பிகளில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்; துரோணரின் படைப்பிரிவை மீண்டும் அடைந்த பீமன்...


பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "முன்னர் எந்தத் தேர் பிரம்மன், ஈசானன், இந்திரன், வருணன் ஆகியோரை (போருக்குத்) தாங்கிச்சென்றதோ, அதே தேரில் ஏறியே இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களான, அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன்} சென்றிருக்கின்றனர். {எனவே} அவர்களுக்கு எந்த ஆபத்திலும் அச்சமேற்படாது. எனினும், உமது ஆணையை என் சிரம் மேல் கொண்டு இதோ நான் செல்கிறேன். வருந்தாதீர். அந்த மனிதர்களில் புலிகளைச் சந்தித்ததும், உமக்குத் தகவலை அனுப்புகிறேன்" என்றான் {பீமன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கப் பீமன், திருஷ்டத்யும்னனிடமும், (பாண்டவக் காரியத்திற்காகப் போராடும்) இன்னும் பிற நண்பர்களிடமும் மீண்டும் மீண்டும் {சொல்லி} யுதிஷ்டிரனை {யுதிஷ்டிரனின் பாதுகாப்பை} ஒப்படைத்துவிட்டுப் புறப்படத் தொடங்கினான். உண்மையில், வலிமையும் பலமும் கொண்ட அந்தப் பீமசேனன், திருஷ்டத்யும்னனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, மன்னரைக் {யுதிஷ்டிரரைக்} காக்கும் என் கடமைக்கு மேலாக (அர்ஜுனன் மற்றும் சாத்யகியிடம்) நான் செல்லவே கூடாது. எனினும், மன்னர் யுதிஷ்டிரரே என்னைப் போகுமாறு உத்தரவிட்டிருக்கிறார், {எனவே} நான் அவருடன் {யுதிஷ்டிரருடன்} முரண்படத் துணிய மாட்டேன். மரணத்தின் விளிம்பில் உள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன். முழுமையான வாய்மையுடன் {மனநேர்மையுடன்} [1] என் தம்பி (அர்ஜுனன்) மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட சாத்யகி ஆகியோரின் வார்த்தைகளின் படியே நான் செயல்பட வேண்டும். எனவே, இன்று நீ பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரரைப் பாதுகாக்க கடுந்தீர்மானத்துடன் போரிட வேண்டும். அனைத்துப் பணிகளை விடவும் போரில் இதுவே உனது உயர்ந்த கடமையாகும்" என்றான் {பீமன்}.

[1] இங்கே என் அண்ணன் யுதிஷ்டிரன் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். வேறொரு பதிப்பில், "தர்மராஜரின் சொற்படி சந்தேகமின்றி இருக்க வேண்டும். நான் சகோதரனான அர்ஜுனன், புத்திசாலியான சாத்வதன் இவர்களுடைய வழியிற்செல்வேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், "அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரருடைய ஆணையின் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றுவது எனது கடமையாகும். என் தம்பியும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் நுண்ணறிவு கொண்ட வாரிசான சாத்யகியும் சென்ற பாதையில் நான் செல்லப் போகிறேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் வார்த்தைகளே சரியானவையாக இருக்க வேண்டும்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருகோதரனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன், "உமது விருப்பத்தை நான் செய்வேன். ஓ! பிருதையின் மகனே {பீமரே}, எவ்வகையிலான கவலையுமில்லாமல் செல்வீராக. போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல், துரோணரால் மன்னர் யுதிஷ்டிரரைப் போரில் அவமதிக்க {கீழ்ப்படுத்த} முடியாது" என்றான்.

இப்படியே பாண்டுவின் அரச மகனை {யுதிஷ்டிரனை} திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அண்ணனை வணங்கிய பீமசேனன், பல்குனன் {அர்ஜுனன்} எங்கிருந்தானோ அவ்விடத்தை நோக்கிச் சென்றான். எனினும், அவனை {பீமனை} அனுப்புவதற்கு முன்னர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனனைக் கட்டித்தழுவி, அவனது உச்சியை முகர்ந்து, அவனுக்கு நல்லாசிகளை வழங்கினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, பிராமணர்கள் பலரை வலம் வந்து, வழிபாட்டாலும், தானங்களாலும் {பிராமணர்களை} மனநிறைவு செய்து, எட்டு மங்கலப் பொருட்களைத் [2] தொட்டு, கைராதகத் தேனைப் பருகியதால், போதையால் கடைக்கண்கள் சிவந்து, தன் வலிமை இரட்டிப்பானதை உணர்ந்தான் [3]. பிராமணர்கள் அவனுக்குப் {பீமனுக்குப்} பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். வெற்றியைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் அவனை {பீமனை} வரவேற்றன. அவற்றைக் கண்ட அவன் {பீமன்} தான் எதிர்பார்க்கும் வெற்றியால் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனது வெற்றியைக் குறிக்கும்படி சாதகமான காற்றும் வீசத் தொடங்கியது.

[2] எட்டு மங்கலமான பொருட்களாவன: நெருப்பு, பசு, தங்கம், அறுகம்புல், கோரோசனை {மாட்டின் வயிற்றில் உள்ள பித்தப்பை கல்}, அமிருதம் {பசுவின் பால்}, அக்ஷதம் {அரிசி}, தயிர் ஆகியனவாகும்.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "குந்தியினடத்தில் வாயுவினால் உண்டுபண்ணப்பட்டவனும், ரதிகர்களுள் உத்தமனும், வீரனும், மகாபாகுபலமுள்ளவனுமான பீமசேனன், தர்மராஜரால் கட்டித்தழுவி அவ்வாறே உச்சிமோந்து மங்களகரமான ஆசீர்வாதங்கள் செய்யப்பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களும் சந்தோஷமுள்ள மனத்தையுடையவர்களுமான பிராம்மணர்களைப் பிரதிக்ஷிணம் செய்து எட்டு மங்களத் திரவியங்களைத் தொட்டு கைராதமென்கிற மதுவைப் பானஞ்செய்து, மதத்தினால் கடைக்கண்கள் சிவந்து இரண்டு மடங்கு பலமுள்ளவனான்" என்றிருக்கிறது.

தேர்வீரர்களில் முதன்மையானவனும், கவசந்தரித்தவனும், காதுகுண்டலங்கள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தோலுரைகளால் தன் கைகள் மறைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் தன் அற்புதத் தேரில் ஏறினான். எஃகால் ஆனதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அவனது {பீமனது} விலையுயர்ந்த கவசமானது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்தைப் போலவே தெரிந்தது. மஞ்சள், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளால் அவனது {பீமனது} உடல் அழகாக மறைக்கப்பட்டிருந்தது. கழுத்தையும் பாதுகாத்த வண்ணமயமான மார்புக்கவத்தை {கண்டஸூத்திரத்தை} அணிந்திருந்த பீமசேனன், வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளுக்கு எதிராகப் பீமசேனன் புறப்படும் சமயத்தில், {கிருஷ்ணனின் சங்கான} பாஞ்சஜன்யத்தின் கடும் வெடிப்பொலிகள் மீண்டும் கேட்கப்பட்டன.

மூவுலகங்களையும் அச்சத்தில் நிறைக்க வல்ல பயங்கரமான வெடிப்பொலிகளை உரக்கக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பீமசேனனிடம், "அங்கே, விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்} தன் சங்கைக் கடுமையாக முழங்குகிறான். உண்மையில் அந்தச் சங்குகளின் இளவரசன் {பாஞ்சஜன்யம்} தன்னொலியால் பூமியையும் ஆகாயத்தையும் நிறைக்கிறான். சவ்யசச்சின் {அர்ஜுனன்} பெரும் துயரில் வீழ்ந்திருக்கிறான் என்பதிலும், சங்கு மற்றும் கதாயுதம் தரித்தவன் {கிருஷ்ணன்} குருக்கள் அனைவருடனும் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மதிப்புக்குரிய குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்று மங்கலமற்ற சகுனங்களையே அதிகமாகக் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ! பார்த்தா {பீமா}, திசைகளின் புள்ளிகள் அனைத்தும் என் கண்களுக்கு வெறுமையாகத் தெரிகின்றன" என்றான் {யுதிஷ்டிரன்}.

தனக்கு மூத்தவனால் {யுதிஷ்டிரனால்} மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டவனும், பாண்டுவின் வீர மகனுமான பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கைகளில் தோலுறையை அணிந்து கொண்டு தன் வில்லை எடுத்துக் கொண்டான். தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தன் அண்ணனால் தூண்டப்பட்ட தம்பியுமான பீமசேனன் துந்துபிகளை முழக்கச் செய்தான். தன் சங்கையும் பலமாக ஊதிய பீமன், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தன் வில்லில் நாணொலியை எழுப்பத் தொடங்கினான். அந்தச் சிங்க முழக்கங்களால் பகை வீரர்களுடைய இதயங்களின் ஊக்கத்தைக் கெடுத்த அவன் {பீமன்}, பயங்கரமான வடிவத்தை ஏற்றுத் தன் எதிரிகளை நோக்கி விரைந்தான். வேகமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், கடுமையான கனைப்பொலிகளைக் கொண்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள் அவனைச் {பீமனைச்} சுமந்து சென்றன. காற்று அல்லது மனோ வேகத்தைக் கொண்ட அவற்றின் கடிவாளங்கள் {பீமனின் தேரோட்டியான} விசோகனால் பற்றப்பட்டிருந்தன. அப்போது அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தன் வில்லின் நாணை பெரும் பலத்துடன் இழுத்து, அங்கே இருந்த போராளிகளைத் துளைத்தும், சிதைத்தும், பகைவருடைய வியூகத்தின் தலையை {முகப்பை} நசுக்கத் தொடங்கினான். அப்படி அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்} சென்ற போது, மகவத்தை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலத் துணிச்சல்மிக்கவர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் அவனுக்குப் {பீமனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றனர்.

அப்போது சகோதரர்களான துச்சாசனன், சித்திரசேனன், குண்டபேதி, விவிம்சதி, துர்முகன், துஸ்ஸஹன், {விகர்ணன்}, சலன், விந்தன், அனுவிந்தன், சுமுகன், தீர்க்கபாகு, சுதர்சனன், {பிருந்தாரகன் [மந்துரகஸ்]}, சுஹஸ்தன், சுஷேணன், தீர்க்கலோசனன், அபயன், ரௌத்ரகர்மன், சுவர்மன், துர்விமோசனன் ஆகியோர் {21 இருபத்தொருவரும்} [4] பீமசேனனைச் சூழ்ந்து கொண்டனர். முதன்மையான தேர்வீரர்களும், பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான இந்த வீரர்கள் அனைவரும், உறுதியுடன் போரிடும் தீர்மானத்துடன், தங்கள் துருப்புகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.

[4] கங்குலியில் விகர்ணன் மற்றும் பிருந்தாகரனின் பெயர்கள் விடுபட்டிருக்க வேண்டும். வேறொரு பதிப்பில் அவர்களது பெயரும் இடம்பெறுகின்றன. மன்மதநாத தத்தரின் பதிப்பில் விகர்ணனின் பெயர் இருக்கிறது, ஆனால் பிருந்தாரகனுக்குப் பதில் மந்துரகஸ் என்ற பெயர் இருக்கிறது.

வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான அந்த வீரப் பீமசேனன் இப்படிச் சூழப்பட்டதும், அவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, சிறு விலங்குகளை எதிர்க்கும் சிங்கத்தின் வேகத்துடன் அவர்களை எதிர்த்து விரைந்தான். அவ்வீரர்கள், வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தி உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலக் கணைகளால் பீமனை மறைத்தனர். வேகத்துடன் அவ்வீரர்கள் அனைவரையும் கடந்த பீமசேனன், துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, தன் எதிரே இருந்த யானைப் படையைக் கணைமாரியால் மறைத்தான். வாயு தேவனின் மகன் {பீமன்} தன் கணைகளால் சிதைத்ததும், அந்த யானை படைப்பிரிவு கிட்டத்தட்ட நேரமேதும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. உண்மையில், காட்டில் சரபத்தின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் விலங்குகளைப் போல, அந்த யானைகள் அனைத்தும் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டே தப்பி ஓடின. அந்தக் களத்தை வேகமாகக் கடந்த அவன் {பீமன்} துரோணரின் படைப்பிரிவை அடைந்தான்.

அப்போது அந்த ஆசான் {துரோணர்}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போல அவனது {பீமனது} வழியைத் தடுத்தார். சிரித்துக் கொண்டே அவர் {துரோணர்}, ஒரு கணையால் பாண்டுவின் மகனுடைய முன்நெற்றியைத் தாக்கினார். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் மேல்நோக்குக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். அந்த ஆசான் {துரோணர்}, முன்னர்ப் பல்குனன் {அர்ஜுனன்} செய்ததைப் போலப் பீமனும் தன்னிடம் மரியாதை காட்டுவான் என்று நினைத்தார். விருகோதரனிடம் {பீமனிடம்} பேசிய அவர் {துரோணர்}, "ஓ! பீமசேனா, போரில் உன் எதிரியான என்னை வெல்லாமல், பகைவரின் படைக்குள் நுழைவது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனுடன் கூடிய உன் தம்பி {அர்ஜுனன்} என் அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழைந்தாலும், அப்படிச் செய்வதில் உன்னால் வெல்ல முடியாது" என்றார்.

ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அச்சமற்ற பீமன், கோபத்தால் தூண்டப்பட்டு, ரத்தம், அல்லது புடம்போட்ட தாமிரத்தைப் போன்ற சிவந்த கண்களுடன் துரோணரிடம் மறுமொழியாக, "ஓ! இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ! துரோணரே, நான் அர்ஜுனனைப் போன்று கருணையுள்ளவன் அல்ல என நீர் என்னை அறிவீராக. மறுபுறம் நான் உமது எதிரியான பீமசேனன் ஆவேன். நாங்கள் உம்மைத் தந்தையாகவும், ஆசானாகவும், நண்பராகவும் கருதுகிறோம். எங்களை நாங்கள் உமது மகன்களாகவே காண்கிறோம். அப்படி நினைத்தே நாங்கள் உம்மிடம் எப்போதும் பணிவாக நடக்கிறோம். எனினும், இன்று இத்தகு வார்த்தைகளை நீர் எங்களிடம் பயன்படுத்தும்போது, அவை அனைத்தும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. நீர் உம்மை எங்களது எதிரியாகக் கருதிக் கொண்டால், நீர் நினைப்பது போல அப்படியே ஆகட்டும். பீமனைத் தவிர வேறு எவனுமாக இல்லாத நான், ஓர் எதிரியிடம் எப்படி நான் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே தற்போது உம்மிடம் நடந்து கொள்வேன்" என்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு, மரணக்கோலைச் சுழற்றும் யமனைப் போல அதைத் துரோணரின் மீது வீசினான். எனினும், துரோணர் (தன் பாதுகாப்பை நிச்சயித்துக் கொள்ளும் வகையில்) விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்தார். அந்தக் கதாயுதமோ குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடிய துரோணரின் தேரைப் பூமியில் நசுக்கித் தரைமட்டமாக்கியது. பிறகு மரங்களைப் பலத்துடன் நசுக்கும் சூறாவளியைப் போல அந்தப் பீமன் எண்ணற்ற போர்வீரர்களை நசுக்கினான். அப்போது உமது மகன்கள், அந்த முதன்மையான தேர்வீரனை {பீமனை} மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அதேவேளையில், தாக்குபவர்களில் முதன்மையான துரோணர் மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, வியூகத்தின் வாயிலுக்குச் சென்று போரில் அங்கேயே நிலைகொண்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட கோபக்கார பீமன், தன் முன்னே இருந்த தேர்ப்படையைத் தன் கணை மாரியால் மறைத்தான். பிறகு, போரில் இப்படித் தாக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள் வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் பீமனுடன் போரிட்டனர்.

அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், பீமசேனனைக் கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான கூரிய ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது வீசினான். எனினும் பீமன், உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்த அந்தக் கடும் ஈட்டியை இரண்டாக வெட்டினான். இச்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்}, மூன்று கூரிய கணைகள் பிறவற்றால் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைக் கொன்றான். மேலும் அவனுடன் {பீமனுடன்} போரிட்ட உமது வீர மகன்களுக்கு மத்தியில், குருக்களின் புகழை அதிகரிப்பவனான வீரப் பிருந்தாரகனைப் பீமன் கொன்றான். பிறகு பீமன், மேலும் மூன்று கணைகள் பிறவற்றால், அபயன், ரௌத்ரகர்மன் மற்றும் துர்விமோசனன் ஆகிய உமது மூன்று மகன்களைக் கொன்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்க வீரனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள், எதிரிகளைத் தாக்குபவனான பீமனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள், கோடையின் முடிவில் மலைச் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். படைகளைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் வாரிசு {பீமன்}, கல்மழையை ஏற்கும் ஒரு மலையைப் போல அந்தக் கணை மாரியை ஏற்றான். உண்மையில் அந்த வீரப் பீமன் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்} சிரித்துக் கொண்டே, உமது மகன்களான விந்தன், அனுவிந்தன், சுவர்மன் ஆகியோரைத் தன் கணைகளின் மூலம் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} உமது வீர மகன் சுதர்சனை அந்தப் போரில் விரைவாகத் துளைத்தான். அதன்பேரில் பின்னவன் கீழே விழுந்து இறந்தான் [5].

[5] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன், உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் நான்காம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் எட்டாம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின், விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் எட்டாம் நாள் போரிலுமாக எனப் பீமன் இதற்கு முன் துரியோதனன் தம்பிகளில் மொத்தம் 24 பேரைக் கொன்றிருக்கிறான். இப்போது துரோண பர்வம் பகுதி 126ல் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரைக் கொன்றிருப்பதோடு சேர்த்தால், இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 35 பேரைக் கொன்றிருக்கிறான் பீமன்.

குறுகிய காலத்திற்குள் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பார்வைகளை அந்தத் தேர்படையின் மீது செலுத்தி, தன் கணைகளின் மூலம் அஃதை அனைத்துத் திசைகளிலும் ஓடச் செய்தான். தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியையோ, உரத்த முழக்கத்தையோ கேட்டு அஞ்சும் மான்கூட்டத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் கௌரவர்களைத் துளைக்கத் தொடங்கினான்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது படைவீரர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தவிர்த்துவிட்டுத் தங்கள் சிறந்த குதிரைகளை மிக வேகமாகத் தூண்டி போரைவிட்டுத் தப்பி ஓடினர். பிறகு, வலிமைமிக்கப் பீமசேனன், போரில் அவர்களை வென்று சிங்க முழக்கங்கள் செய்து, தன் அக்குள்களை {தோள்களைத்} தட்டி பேரொலியை உண்டாக்கினான். மேலும் வலிமைமிக்கப் பீமசேனன், தன் உள்ளங்கைகளாலும் கடும் ஒலியை உண்டாக்கி, அதனால் தேர்ப்படையையும், அதிலிருந்த முதன்மையான தேர்வீரர்களையும் அச்சுறுத்தி (அவனால் வெல்லப்பட்ட) அந்தத் தேர்ப்படையைக் கடந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்