Monday, September 12, 2016

கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 144

Aswatthaman rescued Karna! | Drona-Parva-Section-144 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 59)

பதிவின் சுருக்கம் : ஜெயத்ரதனின் தேரை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; ஜெயத்ரதனைப் பாதுகாக்கக் கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட ஜெயத்ரதன் உள்ளிட்ட கௌரவர்கள்; அர்ஜுனனுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான கடும் மோதல்; கர்ணனைக் குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்; தன் எதிரிகள் அனைவரையும் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய அர்ஜுனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தச் சூழ்நிலையில் குரு போர்வீரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூரிஸ்ரவஸ் மறு உலகத்திற்குச் சென்ற பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) “ஓ! கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ! கிருஷ்ணா, சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டி, என் சபதத்தை உண்மையாக்குவாயாக” என்று சொல்லி {கிருஷ்ணனைத்} தூண்டினான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் போன்ற குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் பலர், எவனுடைய கணைகள் எப்போதும் கலங்கடிக்கப்பட்டதில்லையோ, எவன் பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் செல்கிறானோ அந்த அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தனர். எனினும் பீபத்சு {அர்ஜுனன்}, தன் எதிரில் நின்று கொண்டிருந்த சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைந்து, அவன் மீது தன் பார்வையைச் செலுத்தி, கோபத்தால் சுடர்விட்ட தனது கண்களால் அவனை எரிக்கப்போவது போலத் தெரிந்தான்.(4-9)

அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} விரைவாகப் பேசினான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) “ஓ! விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ! உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ! கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ! கர்ணா, நிச்சயம் வெற்றி நமதே.(13) சூரியன் மறைவது வரை சிந்துக்களின் ஆட்சியாளன் பாதுகாக்கப்பட்டால், பிறகு சபதம் பொய்யாக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} சுடர்மிக்க நெருப்பில் நுழைவான்.(14)

பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, அர்ஜுனனின் சகோதரர்களால், அர்ஜுனன் இல்லாத உலகில் ஒருக்கணமும் வாழ இயலாது.(15) பாண்டுவின் மகன்கள் இறந்ததும், ஓ! கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ! கர்ணா, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் அழிவுக்காகவே ஜெயத்ரதனைக் கொல்வது குறித்த இந்தச் சபதத்தைச் செய்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(18)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ உயிரோடிருக்கையில், சிந்துக்களின் ஆட்சியாளனைச் சூரியன் அஸ்த மலைகளை அடைவதற்கு முன் பல்குனனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(19)

மத்ர மன்னனாலும், சிறப்புமிக்கக் கிருபராலும் ஜெயத்ரதன் பாதுகாக்கப்படும்போது, பின்னவனை {ஜெயத்ரதனைத்} தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(20)

துரோணராலும், என்னாலும், துச்சாசனனாலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனை அடைய விதியால் தூண்டப்பட்டவனாகத் தெரியும் பீபத்சுவால் {அர்ஜுனனால்} எவ்வாறு முடியும்?(21)

போரில் ஈடுபடும் வீரர்கள் பலராவர். சூரியனோ வானத்தின் கீழே சாய்கிறான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் ஜெயத்ரதனை நெருங்கக்கூட முடியாது.(22)

எனவே, ஓ! கர்ணா, என்னோடும், துணிவும், வலிமையும் மிக்கப் பிற தேர்வீரர்களோடும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோரோடும் சேர்ந்து, பெரும் உறுதியோடும், தீர்மானத்தோடும் முயற்சி செய்து போரில் பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிடுவாயாக” என்றான் {துரியோதனன்}.(23)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் சொல்லப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, குருக்களில் முதன்மையான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்:(24) “மூர்க்கமாகத் தாக்கவல்லவனும், துணிவுமிக்க வில்லாளியுமான பீமசேனனின் தொடர்ச்சியான கணைமாரியால் போரில் எனது உடல் ஆழமாகத் துளைக்கப்பட்டிருக்கிறது. ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ! மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, என் ஆண்மையைச் சார்ந்து உனக்காக நான் இன்று அர்ஜுனனுடன் போரிடுவேன்.(31) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறப்போகும் கடும்போரை இன்று துருப்புகள் அனைத்தும் காணட்டும்” என்றான் {கர்ணன்}.

இப்படிப் போரில் கர்ணனும், குரு மன்னனும் {துரியோதனனும்} ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன், தன் கூரிய கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(32, 33) பெருங்கூர்மை கொண்ட தன் பல்லங்களால் அவன் {அர்ஜுனன்}, பரிகங்கள் {முள் பதித்த தண்டாயுதங்கள்}, அல்லது யானைகளின் துதிக்கைகளைப் போலிருக்கும் பின்வாங்காத வீரர்களின் கரங்களை அந்தப் போரில் வெட்டத் தொடங்கினான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் அவர்களது சிரங்களையும் அறுத்தான்.(34, 35) மேலும் அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, யானைகளின் துதிக்கைகளையும், குதிரைகளின் கழுத்துகளையும், சுற்றிலும் உள்ள தேர்களின் அக்ஷங்களையும் {ஏர்க்கால்களையும்}, ஈட்டிகள் மற்றும் வேல்களை ஏந்திய இரத்தக் கறை கொண்ட குதிரைவீரர்களையும் க்ஷுரப்ரங்களால் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக அறுத்தான். குதிரைகள், முதன்மையான யானைகள், கொடிமரங்கள், குடைகள், விற்கள், சாமரங்கள், தலைகள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் வேகமாக விழத்தொடங்கின.(36, 37) வைக்கோல் பொதியை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல உமது படையை எரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, விரைவில் பூமியைக் குருதியால் மறைத்தான்.(38) வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்து விரைவில் சிந்துக்களின் ஆட்சியாளனை அடைந்தான்.

பீமசேனன் மற்றும் சாத்வதனால் {சாத்யகியால்} பாதுகாக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(39, 40) பல்குனனை {அர்ஜுனனை} அந்நிலையில் கண்ட மனிதர்களில் காளையரான உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளால் அவனை {அர்ஜுனனைப்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், சிந்து மன்னனுக்காக {ஜெயத்ரதனுக்காகப்} போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோரும், ஏன் சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} கூடக் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(41-43) போரில் திறன்வாய்ந்த அந்தப் போர்வீரர்கள் அனைவரும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தங்கள் பின்னால் நிறுத்திக் கொண்டு, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கொல்ல விரும்பி, போரை நன்கறிந்த வீரனும், தன் தேர் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்து கொண்டிருந்தவனும், வில்லின் நாணொலியாலும், தன் உள்ளங்கையாலும் கடும் ஒலிகளை உண்டாக்கியவனும், வாயை அகல விரித்திருக்கும் யமனுக்கு ஒப்பானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அச்சமற்ற வகையில் சூழ்ந்து கொண்டனர்.(44, 45)

அப்போது வானத்தில் சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்றான். அவன் {சூரியன்} (வேகமாக) மறைய விரும்பிய கௌரவ வீரர்கள், பாம்பின் உடல்களுக்கு ஒப்பான (கூம்பு போன்ற) கரங்களால் தங்கள் விற்களை வளைத்து, சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தங்கள் நூற்றுக்கணக்கான கணைகளைப் பல்குனனை {அர்ஜுனனை} நோக்கி ஏவினர்.(46) இப்படித் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும், இரண்டு, மூன்று அல்லது எட்டு துண்டுகளாக வெட்டியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், போரில் வெல்லப்படாதவனுமான அர்ஜுனன், அம்மோதலில் அவர்கள் அனைவரையும் துளைத்தான். சிங்கத்தின் வாலைத் தன் கொடியில் அடையாளமாகப் பொறித்திருக்கும் அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிக்காட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினான்.(47, 48) உண்மையில் அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பார்த்தனைப் பத்து கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏழாலும் துளைத்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தபடியே, அர்ஜுனனின் பாதையில் நின்றான்.

பிறகு, குருக்களில் முதன்மையானவர்கள் பலரும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் விற்களை வளைத்து, கணக்கிலடங்கா கணைகளை ஏவிய அவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காக்கத் தொடங்கினர்.(50, 51) அப்போது நாங்கள் துணிச்சல்மிக்கப் பார்த்தனின் கர வலிமையையும், அவனது கணைகளின் வற்றாத தன்மையையும், அவனது காண்டீவத்தின் வலிமையையும் கண்டோம்.(52) தன் ஆயுதங்களால் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருபரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அந்தப் போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் ஒன்பது கணைகளால் துளைத்தான்.(53)

அப்போது அவனைத் {அர்ஜுனனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இருபத்தைந்து கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும், துரியோதனன் இருபதாலும், கர்ணனும் சால்வனும் {சல்லியனும்} மூன்றாலும் துளைத்தனர்.(54) அவர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனை} நோக்கி முழங்கி, அடிக்கடி அவனைத் துளப்பதைத் தொடர்ந்தனர்.(55) தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே அவர்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். விரைவில் அவர்கள் தங்கள் தேர்களை அர்ஜுனனைச் சுற்றி வரிசையாக நிறுத்தினர்.(56) சூரியன் (வேகமாக) மறைய விரும்பியவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான கௌரவப் படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனை நோக்கி முழங்கத் தொடங்கி, தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைமாரியால் அவனை மறைத்தனர்.(57) கனமான தண்டாயுதங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பீமசேனனும், சாத்வதனும் {சாத்யகியும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் தன் கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(60)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் போர்க்களத்தில் சூதன் மகனை {கர்ணனைப்} பத்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். அப்போது சாத்வதன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஒரு புறத்தில்) கர்ணன் தனியாகவும், (மறுபுறத்தில்) பலருக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது. அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டு மூன்று பெரும் தேர்வீரர்களையும் தனியாக அவன் {கர்ணன்} தடுத்ததால், அப்போது நாங்கள் கண்ட சூதன் மகனின் {கர்ணனின்} ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(64)

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில், ஒரு நூறு {100} கணைகளால், விகர்த்தனன் மகனான கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடியவனும், பெரும் ஆற்றலும், துணிச்சலும் கொண்டவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பதிலுக்கு ஐம்பது {50} கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(65, 66) அந்தப் போரில் அவனால் {கர்ணனால்} வெளிக்காட்டப்பட்ட கர நளினத்தைக் கண்டு அதை அர்ஜுனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(67) அவனது வில்லை அறுத்த வீரனான பிருதையின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனின் நடு மார்பில் ஒன்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் வேகம் தேவைப்பட்ட நேரத்தில் சூரியப் பிரகாசம் கொண்ட கணையொன்றைப் பெரும் வேகத்தோடு கர்ணனின் அழிவுக்காக ஏவினான்.(68, 69) எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை (கர்ணனை நோக்கி) மூர்க்கமாகச் சென்ற போது, அர்த்தச்சந்திரக்கணை ஒன்றால் அதை வெட்டினான். இப்படி அஸ்வத்தாமனால் வெட்டப்பட்ட அந்தக் கணை கீழே பூமியில் விழுந்தது.(70)

பிறகு பெரும் ஆற்றலைக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பல்லாயிரம் கணைகளால் பாண்டுவின் மகன் {அர்ஜுனனை} மறைத்தான்.(71) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, விட்டிற்பூச்சிகளை விரட்டும் காற்றைப் போலக் கர்ணனின் வில்லில் இருந்து வந்த அந்த அசாதாரணக் கணை மாரியைத் தன் கணைகளால் விலக்கினான்(72). அப்போது அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிப்படுத்தித் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கணைகளால் அந்தப் போரில் கர்ணனை மறைத்தான்.(73) படைகளைக் கொல்பவனான கர்ணனும், அர்ஜுனனின் அருஞ்செயலுக்கு எதிர்வினையாற்ற விரும்பி, பல்லாயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.(74) ஒன்றையொன்று நோக்கி முழங்கும் இரு காளைகளைப் போல மனிதர்களில் சிங்கங்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரான கணைகளின் மேகங்களால் ஆகாயத்தையே மறைத்தனர்.(75) அடுத்தவர் கணை மாரியால் கண்ணுக்குப் புலப்படாமல் போன அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். ஒருவரையொருவர் நோக்கி முழங்கி, “நான் பார்த்தன், காத்திருப்பாயாக”, அல்லது “நான் கர்ணன், ஓ! பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக” என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி, ஒருவரோடொருவர் போரிட்டனர்.(78)

அப்போது துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களிடம், “ராதையின் மகனை {கர்ணனைக்} கவனமாகப் பாதுகாப்பீராக. அர்ஜுனனைக் கொல்லாமல் அவன் போரில் இருந்து விலக மாட்டான். இது விருஷனே {கர்ணனே} என்னிடம் சொன்னதாகும்” என்றான்.(79, 80) அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்ட நான்கு கணைகளால், கர்ணனின் நான்கு குதிரைகளை யமனின் ஆட்சிப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். மேலும் அவன், ஒரு பல்லத்தால் கர்ணனின் தேரோட்டியையும் அவனது தேரில் இருந்து வீழ்த்தினான்.(81, 82) உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணைகளின் மேகங்களால் அவன் கர்ணனை மறைத்தான். இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்டு, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன கர்ணன், அந்தக் கணைமாரியால் மலைப்படைந்து, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(83)

அவன் {கர்ணன்} தேரற்றவனாக்கப்பட்டதைக் கண்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏழு கணைகளாலும் துளைத்தனர்.(87) குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்கள் அனைவரையும் பதிலுக்குத் துளைத்தான். உண்மையில் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு {64} கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நூறாலும் {100}, சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} பத்து பல்லங்களாலும், விருஷசேனனை மூன்று கணைகளாலும், சரத்வானின் மகனை {கிருபரை} இருபதாலும் {20} துளைத்துப் பெருங்கூச்சலிட்டான்.(88, 89) சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சபதத்தைக் கலங்கடிக்க விரும்பிய உமது போர்வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர்.(90)

அப்போது அர்ஜுனன், தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வாருண ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும், விலைமதிப்புமிக்கத் தேர்களில் இருந்த கௌரவர்கள், கணைமாரிகளைப் பொழிந்து கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர்.(91) ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தாலும், தங்க மாலையாலும் அலங்கரிக்கப்பட்ட இளவரசனான அந்த அர்ஜுனன், பெரும் குழப்பத்துடன் கூடியதும், மலைக்கச் செய்வதுமான அந்தக் கடுமையான போரின் போது ஒரு போதும் தன் உணர்வுகளை இழக்கவில்லை. மறுபுறம், அவன் {அர்ஜுனன்} தொடர்ந்து தன் கணைகளின் மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான்.(92) அரசாங்கத்தை மீட்க விரும்பி, குருக்களின் விளைவாகப் பனிரெண்டு {12} வருடங்கள் அனுபவித்த தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தவனும், உயர் ஆன்மா கொண்டவனும், அளவிட முடியாதவனுமான அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் இருளச் செய்தான்.(93) ஆகாயம் எரிகற்களால் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வானத்தில் இருந்து இறங்கிய எண்ணற்ற காகங்கள் (இறந்து போன போராளிகளின்) உடல்களைக் கொத்தின. அதே வேளையில் அர்ஜுனன், பழுப்பு நிற நாண் கொண்டு பினாகையால் அசுரர்களைக் கொன்ற மகாதேவனை {சிவனைப்} போலக் காண்டீவத்தால் எதிர்களைக் கொல்வதைத் தொடர்ந்தான்.(94)

அப்போது எதிரிகளை அடக்குபவனான சிறப்புமிக்கக் கிரீடி {அர்ஜுனன்}, தன் உறுதிமிக்க வில்லால் எதிரியின் கணைகளை விலக்கி, முதன்மையான தங்கள் குதிரைகளிலும், யானைகளிலும் ஏறியிருந்த குருக்களில் முதன்மையானோர் பலரைத் தன் கணைகளால் கொன்றான்.(95) பிறகு, கனமான கதாயுதங்கள், இரும்பாலான தண்டாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான பிற பலமிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மன்னர்கள் பலர், பயங்கரத் தோற்றங்களை ஏற்று, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துத் திடீரென விரைந்தனர்.(96) பிறகு அர்ஜுனன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், யுக முடிவின் போது திரளும் மேகங்களின் முழக்கங்களைப் போல உரத்த நாணொலி கொண்டதும், தன் உறுதிமிக்க வில்லுமான காண்டீவத்தைத் தன் கரங்களால் வளைத்துச் சிரித்துக் கொண்டே உமது துருப்புகளை எரித்தபடியே யமனுடைய அரசாங்கத்தின் மக்கள் தொகையை அதிகரித்தான்.(97) உண்மையில் அந்த வீரன் {அர்ஜுனன்}, அப்படிக் கோபத்துடன் வந்த அந்தப் போர்வீரர்களை, அவர்களது தேர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த வில்லாளிகளோடு சேர்த்து கரங்களற்றவர்களாகவும், உயிரற்றவர்களாகவும் செய்து, இப்படியே யமனின் ஆட்சிப் பகுதிகளுடைய மக்கள் தொகையை அதிகரித்தான்” {என்றான் சஞ்சயன்} [1].(98)

[1] வேறொரு பதிப்பில், இந்தப் பகுதி முழுவதும் வேறு மாதிரியாக இருக்கிறது. கர்ணனுடன் சாத்யகி போரிட்டதாகச் சொல்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது.
--------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 144ல்  வரும் மொத்த சுலோகங்கள் 98 

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்