Wednesday, September 14, 2016

ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 145

Arjuna killed Jayadratha! | Drona-Parva-Section-145 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 60)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் துணிச்சலோடு போரிட்ட ஜெயத்ரதன்; ஜெயத்ரதனின் கொடிமரத்தை வெட்டி, அவனது சாரதியைக் கொன்ற அர்ஜுனன்; வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட ஜெயத்ரதன்; யோக சக்தியால் சூரியனை மறைத்த கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்ட அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; மனித சக்திக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனின் வீரம்; விருத்தக்ஷத்திரனின் கதையை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்டிய அர்ஜுனன்; விருத்தக்ஷத்திரனின் தலை சுக்குநூறாகச் சிதறியது; இருளை விலக்கியக் கிருஷ்ணன்; பயங்கரக் கூச்சலால் யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்பிய பீமசேனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் வில்லை வளைத்தபோது யமனின் உரத்த அழைப்புக்கோ, இந்திரனுடைய வஜ்ரத்தின் பயங்கர முழக்கத்துக்கோ ஒப்பான நாணொலியைக் கேட்ட அந்த உமது படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீன்கள் மற்றும் மகரங்களுடன் கூடிய கடல் நீரானது, யுக முடிவில் எழும் சூறாவளியால் சீற்றத்துடன் அடிக்கப்பட்டு, மலை போன்ற அலைகளாக உடைவதைப் போல மிகவும் கலங்கியது. அப்போது பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரே நேரத்தில் திசைகள் அனைத்திலும் இருப்பவனைப் போலத் தன் அற்புத ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(1-3) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுக்கிறான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்துகிறான், எப்போது வில்லை வளைக்கிறான், எப்போது அவற்றை விடுகிறான் என்பதை நாங்கள் காண முடியாத அளவுக்கு அவனது கரநளினம் {கரலாகவம்} இருந்தது. பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, வெல்லப்பட முடியாத ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்துப் பாரதர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். தெய்வீக ஆயுதங்களின் சக்தியுள்ள மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, நெருப்பு போன்ற வாய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுடர்மிக்கக் கணைகள் அதிலிருந்து {அந்த ஐந்திராஸ்திரத்தில் இருந்து} பாய்ந்தன. நெருப்புக்கோ, சூரியனின் கதிர்களுக்கோ ஒப்பான அந்தக் கணைகள், கடும் மூர்க்கத்துடன் விரைந்ததால், மின்னும் எரிக்கோள்களால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் காண முடியாததாக ஆனது.(4-7)


கௌவர்களின் கணைகளால் உண்டானதும், மற்றவரால் கற்பனையிலும் கூட அகற்றப்பட முடியாததுமான அந்த இருளை {சஸ்திராந்தகாரத்தை}, களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியபடி திரிந்து கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அதிகாலையில் சூரியன் இரவின் இருளைத் தன் கதிர்களால் விரைவாக அகற்றுவதைப் போலத் தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தன் கணைகளால் {அந்த இருளை} அழித்தான்.(8, 9) , சூரியன் தன் வெப்பக் கதிர்களால் குளங்கள் மற்றும் தடாகங்களில் உள்ள நீரை உறிஞ்சுவதைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன், சுடர்மிக்கத் தன் கணைகளால் உமது போர்வீரர்களின் உயிர்களை உறிஞ்சினான்.(10) உண்மையில், சூரியனின் கதிர்கள் பூமியை மறைப்பதைப் போல (அர்ஜுனனால் ஏவப்பட்ட) தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய அந்தக் கணைகளின் மாரி அந்தப் பகைவரின் படையை மறைத்தன.(11) (தனஞ்சயனால்) ஏவப்பட்ட கடுஞ்சக்தி கொண்ட பிற கணைகள் உயிர் நண்பர்களைப் போல (பகை) வீரர்களின் இதயங்களுக்குள் வேகமாக நுழைந்தன.(12) உண்மையில், அந்தப் போரில் அர்ஜுனனுக்கு எதிரில் வந்த அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அனைவரும், சுடர்மிக்க நெருப்பை அணுகிய பூச்சிகளைப் போல அழிந்தனர்.(13) இப்படித் தன் எதிரிகளின் உயிர்களையும், அவர்களது புகழையும் நசுக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, உடல் கொண்டு வந்த யமனைப் போலவே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(14)

பார்த்தன் {அர்ஜுனன்}, கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரிகளின் தலைகள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் பருத்த கரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் ஆகியவற்றைத் தன் கணைகளால் அறுத்தான்.(15) யானைப்பாகர்களின் ஈட்டிகளுடன் கூடியவையும், குதிரைவீரர்களின் வேல்களுடன் கூடியவையும், காலாட்படைவீரர்களின் கேடயங்களுடன் கூடியவையும், தேர்வீர்களின் விற்களுடன் கூடியவையும், தேரோட்டிகளின் சவுக்கு மற்றும் சாட்டைகளுடன் கூடியவையுமான கரங்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(16, 17) உண்மையில், தன்னொளியுடன் சுடர்விடும் முனை கொண்ட கணைகளுடன் கூடிய அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இடையறாத பொறிகள் மற்றும் எழுதழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18)  ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} இணையான வீரனும், மனிதர்களில் காளையும், ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடியே தன் தேரில் தான் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடி காணப்படுபவனும், தன் வில்லின் நாண்கயிறாலும் உள்ளங்கைகளாலும் செவிடாகும்படி ஒலியெழுப்பக்கூடியவனும், எரிக்கும் கதிர்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பானவனுமான அந்தத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைத்} தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்ட பகை மன்னர்கள் அனைவராலும் பார்க்ககூட முடியவில்லை.(19-21)

சுடர்மிக்க முனைகளைக் கொண்ட தன் கணைகளுடன் கூடியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மழைக்காலங்களில் வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மழைநிறைந்த மேகங்களின் வலிமைமிக்கத் திரளைப் போல அழகாகத் தெரிந்தான்.(22) வலிமைமிக்க ஆயுதங்களின் அந்தப் பலமான வெள்ளத்தை ஜிஷ்ணு {அர்ஜுனன்} பாயச் செய்த போது, போர்வீரர்களின் காளையரான பலர் தாங்க முடியாத அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் மூழ்கினர்.(23) துதிக்கைகளோ, தந்தங்களோ வெட்டப்பட்ட மதங்கொண்ட யானைகள், குளம்புகளையோ, கழுத்துகளையோ இழந்த குதிரைகள், துண்டு துண்டாகக் குறைந்து போன தேர்கள், குடல்கள் வெளியேறிய போர்வீரர்கள், கால்களோ, பிற அங்கங்களோ வெட்டப்பட்ட பிறர், முற்றிலும் அசையாமலோ, சுயநினைவின்றி அசைந்து கொண்டோ கிடந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உடல்கள் ஆகியவை விரவி கிடந்ததும், பார்த்தன் {அர்ஜுனன்} போரிட்டுக் கொண்டிருந்ததும், யமனே ஆசைப்படும் இடத்துக்கு ஒப்பானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், பழங்காலத்தில் ருத்ரன் {சிவன்} உயிரினங்களை அழித்த போது, அவன் {சிவன்} விளையாடிய மைதானம் போன்றதுமான அந்தப் பரந்த களத்தை நாங்கள் கண்டோம்.(24-27) க்ஷுரப்ரங்களில் {கத்தி போன்ற முனை கொண்ட கணைகளில்} வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக் கிடந்த அந்தக் களத்தில் சில பகுதிகள், பாம்புகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. அதே போல வெட்டப்பட்ட போர்வீரர்களின் தலைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள், தாமரை மலர் மாலைகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. பல வண்ணங்களிலான அழகிய தலைக்கவசங்கள், மகுடங்கள், கேயூரங்கள், அங்கதங்கள், காது குண்டலங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டட கவசங்களுடனும், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் {தங்க} இழைகள், பிற ஆபரணங்களுடனும், அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான கிரீடங்களுடனும் பூமியானவள் புதுமணப்பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தாள்.

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, அச்சமிக்கப் பொருள்களால் நிறைந்து, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் வைதரணீக்கு ஒப்பாகப் பாய்வதும், சீற்றமிக்கதுமான ஒரு பயங்கர ஆற்றை {நதியை} அங்கே உண்டாக்கினான். (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மஜ்ஜையும் கொழுப்பும் அதன்  சகதியாகின. குருதி அதன் ஓடையாகியது. உறுப்புகளாலும், எலும்புகளாலும் நிறைந்திருந்த அஃது அடியற்ற ஆழம் கொண்டதாக இருந்தது. உயிரினங்களின் மயிர்கள் அதன் பாசிகளும், புற்களுமாகின. சிரங்களும், கரங்களும் அதன் கரைகளில் உள்ள கற்களாகின. கொடிமரங்கள், பலவண்ணங்களிலான கொடிகள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடைகளும், விற்களும் அதன் அலைகளாகின. உயிரிழந்த பெரும் யானைகளின் உடல்களால் அது நிறைந்திருந்தது. தேர்க்கூட்டங்கள் அதன் பரப்பில் மிதக்கும் நூற்றுக்கணக்கான தெப்பங்களாகின. கணக்கிலடங்கா குதிரைகளின் சடலங்கள் அதன் கரைகளாகின. பாம்புகளைப் போலத் தெரிந்த தேர்களின் அக்ஷங்கள், கூபரங்கள், தோமரங்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகள், கணைகள் ஆகியவற்றின் விளைவால் அது கடப்பதற்குக் கடினமானதாக இருந்தது. அண்டங்காக்கைகளும், கங்கப் பறவைகளும் அதன் முதலைகளாகின. நரிகள் அதன் மகரங்களாக அமைந்து அதைப் பயங்கரமாக்கின. கடும் கழுகுகள் அதன் சுறாக்களாகின. துள்ளித் திரியும் பேய்களாலும், பிசாசங்களாலும், ஆயிரக்கணக்கான பிறவகை ஆவிகளாலும் அது நிறைந்திருந்தது [1]. மேலும் அதில் உயிரற்ற போர்வீரர்களின் கணக்கிலடங்கா உடல்கள் மிதந்தன. யமனுக்கு ஒப்பான முகத்தோற்றம் கொண்ட அந்த அர்ஜுனனின் ஆற்றலைக் கண்டு, அந்தப் போர்க்களத்தில் இதற்கு முன் எப்போதும் நேராத அளவுக்குக் குருக்கள் பீதியை அடைந்தனர்.(28-38)

[1] வேறொரு பதிப்பில், “ஆயிரக்கணக்காகக் கூத்தாடும் பிரேதம் {சடலம்}, பிசாசம் முதலான பூதங்களால் நான்கு பக்கங்களும் சூழப்பட்டிருந்தது” என்றிருக்கிறது. பேய், ஆவி போன்ற சொற்கள் பயன்படுத்தப்படாதது இங்கே கவனிக்கத்தக்கது.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களால் பகைவீரர்களைக் கலங்கடித்துக் கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டு, அவன் {அர்ஜுனன்} கடுஞ்சாதனைகளைச் செய்யும் போர்வீரன் என அனைவரையும் உணரச் செய்தான்.(39) அப்போது, அர்ஜுனன் தேர்வீரர்களில் முதன்மையான அனைவரையும் விஞ்சி நின்றான்.(40) ஆகாயத்தில் எரிக்கும் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல, உயிரினங்கள் ஏதாலும் அவனைப் பார்க்கக்கூட முடியவில்லை.(41) அந்தப் போரில் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} வில்லான காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகள், ஆகாயத்தில் நாரைகளின் வரிசைக்கு ஒப்பாக எங்களுக்குத் தெரிந்தன.(42) அந்த வீரர்கள் அனைவரின் ஆயுதங்களையும் தன் ஆயுதங்களால் கலங்கடித்து, தான் ஈடுபட்ட பயங்கரச் சாதனைகளால் தன்னைக் கடுஞ்சாதனைகள் கொண்ட போர்வீரனாகக் காட்டிக் கொண்ட அர்ஜுனன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் விஞ்சி அவர்கள் அனைவரையும் தன் கணைகளால் மலைக்கச் செய்தான்.(44) கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடி, அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் திரிந்து அழகாகக் காட்சியளித்தான்.(45) அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் வானத்தினூடாகத் தொடர்ந்து செல்வது ஆகாயத்தில் காணப்பட்டது.(46) அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், உண்மையில் அந்தப் பாண்டுவின் மகன் எப்போது அதைக் குறிபார்த்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை எங்களால் கவனிக்கவே முடியவில்லை.(47)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்து, போரில் தேர்வீரர்கள் அனைவரையும் பீடித்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை நோக்கிச் சென்று, அவனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு {64} நேரான கணைகளால் துளைத்தான்.(48) பிறகு, ஜெயத்ரதனை நோக்கிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட குருவீரர்கள் அனைவரும் போரில் இருந்து விலகினர்.(49) உண்மையில், அந்த வீரர்கள் ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிருடன் தப்புவான் என்ற} நம்பிக்கையற்றுப் போனார்கள். அந்தக் கடும்போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்த உமது வீரர்களில் ஒவ்வொருவரும், ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் கணையால் தங்கள் உடலில் ஆழத் துளைக்கப்பட்டனர்.(50) வலிமைமிக்கத் தேர்வீரனும், வெற்றியாளர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், நெருப்பு போலச் சுடர்விட்ட தன் கணைகளால், உமது படையைத் தலைகளற்ற உடல்களின் {கபந்தங்களின்} [2] கூட்டமாக மாற்றினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படியே நால்வகைப் படைப்பிரிவுகளுடன் கூடிய உமது படையில் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஜெயத்ரதனை நோக்கி முன்னேறினான். மேலும் அவன் {அர்ஜுனன்} துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஐம்பது கணைகளாலும், விருஷசேனனை {கர்ணனின் மகனை} மூன்றாலும் துளைத்தான்.(51-53) அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஒன்பது கணைகளால் கிருபரை மென்மையாகத் தாக்கினான். மேலும் அவன், சல்லியனைப் பதினாறு கணைகளாலும், கர்ணனை முப்பத்திரண்டாலும் துளைத்தான்.(54) அதற்கு மேலும் அவன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.

[2] “ஒரு கபந்தம் என்பது உயிருடன் கூடியதும், நடக்கக்கூடியதுமான தலையற்ற உடலாகும். இந்தத் தலையற்ற முண்டங்கள் தங்கள் பிடிக்குள் அகப்பட்டு இரையாவோரின்  குருதியைக் குடிக்கும் என்று கதைகள் சொல்லப்படுகின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

எனினும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சினத்தால் நிறைந்தான்.(55) பன்றிக் கொடியைத் தாங்கிய அவன் {ஜெயத்ரதன்}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கழுகின் சிறகுகளைக் கொண்டவையுமான நேரான கணைகள் பலவற்றைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர் மீது விரைவாக ஏவினான்.(56, 57) பிறகு கோவிந்தனை {கிருஷ்ணனை} மூன்று கணைகளால் துளைத்த அவன் {ஜெயத்ரதன்}, அர்ஜுனனை ஆறால் {6 கணைகளால்} தாக்கினான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} எட்டு கணைகளால் அர்ஜுனனின் குதிரைகளையும், மற்றொன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(58) அப்போது அர்ஜுனன், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} ஏவப்பட்ட கூரிய கணைகளைக் கலங்கடித்த அதே வேளையில், இரண்டு கணைகளால் ஜெயத்ரதனுடைய தேரோட்டியின் தலையையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தையும் அறுத்தான். வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கொடிமரம், நெருப்பின் தழல் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது. அதே வேளையில் சூரியனும் வேகமாகக் கீழே இறங்கினான்.(59-61)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைவாக, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வலிமையும், வீரமும் மிக்க ஆறு தேர்வீரர்களுக்கு மத்தியில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்.(62) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்த ஜெயத்ரதனும், அங்கே அச்சத்துடன் காத்திருக்கிறான். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, தடையின்றி நீ முயன்றாலும், அந்த ஆறு தேர்வீரர்களையும் போரில் வெல்லாமல் உன்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லவே முடியாது. எனவே, நான் யோகத்தை {யோக சக்தியைப்} பயன்படுத்திச் சூரியனை மறைக்கப் போகிறேன். (அதன் விளைவாக) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியன் மறைவதைக் காண்பான். ஓ! தலைவா {அர்ஜுனா}, உயிரை விரும்புபவனான அந்தப் பொல்லாதவன், தன் அழிவுக்காகவே மகிழ்ச்சியை அடைந்து, அதற்கு மேலும் தன்னை மறைத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஓ! குருக்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நீ அவனைத் {ஜெயத்ரதனைத்} தாக்க வேண்டும்.(65-66)

சூரியன் உண்மையாகவே மறைந்துவிட்டான் என்று எண்ணி நீ உன் ஊக்கமான முயற்சியைக் கைவிட்டுவிடாதே” என்றான் {கிருஷ்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.(67)

அப்போது ஹரி என்றும் அழைக்கப்படுபவனும், தவச் சக்திகளைக் கொண்டவனும், தவசிகள் அனைவரின் தலைவனுமான கிருஷ்ணன், யோகத்தைப் பயன்படுத்தி, சூரியனை மறைப்பதற்காக இருளை உண்டாக்கினான் [3].(68)

கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள், சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பார்த்தன் {அர்ஜுனன்} தன் உயிரை விடப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(69)

உண்மையில், உமது போர்வீரர்கள், சூரியனைக் காணாது மகிழ்ச்சியிலேயே நிறைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைத் திருப்பிக் கொண்டு நின்றனர். மன்னன் ஜெயத்ரதனும் அதே மனநிலையில்தான் இருந்தான். இப்படி அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மீண்டும் தனஞ்சயனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, உன் மீது கொண்ட அச்சத்தை விட்டு, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(72) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பொல்லாத ஆன்மா கொண்ட அவனை {ஜெயத்ரதனைக் கொல்ல} இதுவே தகுந்த நேரம். விரைவாக அவனது தலையை அறுத்து உனது சபதத்தை உண்மையாக்குவாயாக” என்றான் [4].(73)

[3] வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் ஒரு அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "இங்கே சில புஸ்தகங்களில் பல பாட பேதங்கள் காணப்படுகின்றன. "வாசுதேவர் சக்ரத்தினால் சூரியனை மறைத்தார்" என்பது அவைகளுள் முக்கியமானது" என்று இருக்கிறது. இந்தக் குறிப்பு கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.

[4] வேறொரு பதிப்பில் இதன் பிறகு நேரடியாக ஜெயத்ரதன் கொல்லப்படும் காட்சிக்கே செல்கிறது. கங்குலியில் பின்வருவன, கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது நடந்ததாக அந்தப் பதிப்பில் விவரிக்கப்படுகிறது.

இப்படிக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட அந்தப் பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்}, காந்தியில் சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான தன் கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(74) மேலும் அவன் {அர்ஜுனன்} கிருபரை இருபது கணைகளாலும், கர்ணனை ஐம்பதாலும் துளைத்தான். சல்லியன், துரியோதனன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறு கணைகளால் அவன் தாக்கினான்.(75) மேலும் அவன் {அர்ஜுனன்} விருஷசேனனை எட்டு கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபது {60} கணைகளாலும் துளைத்தான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற போர்வீரர்களைத் தன் கணைகளால் தாக்கியபடியே ஜெயத்ரதனை எதிர்த்து விரைந்தான். தழல் நாக்கை விரித்துப் பரவும் நெருப்பைப் போலத் தங்கள் முன்னிலையில் அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள் மிகவும் குழம்பினர்.(76, 77) பிறகு வெற்றியை விரும்பிய உமது போர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இந்திரனின் மகனை {அர்ஜுனனைக்} கணைத்தாரைகளால் குளிப்பாட்டினர்.(78) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், குருவின் வெற்றிகொள்ளப்படாத வழித்தோன்றலுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இடைவிடாத கணை மழையால் மறைக்கப்பட்டுச் சினத்தால் நிறைந்தான்.(79)

அப்போது, மனிதர்களில் புலியான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, உமது படையைக் கொல்ல விரும்பி, அடர்த்தியான கணை வலைகளை உண்டாக்கினான். பிறகு, அவ்வீரனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.(80, 81)

இரு மனிதர்களாகச் சேர்ந்து ஓடும் எவரையும் காண முடியாத வகையில் அவர்கள் அப்படி {தனித்தனியாகத்} தப்பி ஓடினர். குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அப்போது கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(82) உண்மையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {அர்ஜுனன்} அப்போது செய்ததைப் போல இதுவரை செய்யப்பட்டதும் இல்லை, இனி செய்யப்படப் போவதும் இல்லை. உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனைப் போலத் தனஞ்சயன், யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரை சாரதிகள், (தேர்வீரர்கள்) மற்றும் தேரோட்டிகள் ஆகியோரைக் கொன்றான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்படாத எந்த ஒரு யானையையோ, குதிரையையோ, மனிதப் போர்வீரனையோ நான் அந்தப் போரில் காணவில்லை.(83-84)

புழுதியாலும், இருளாலும் பார்வை தடைபட்ட உமது வீரர்களால் ஒருவரையொருவர் வேறுபடுத்திக்காண முடியாமல் முற்றிலும் உற்சாகத்தை இழந்தனர்.(85)

விதியால் உந்தப்பட்டும், கணைகளால் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் இருந்த உமது படை வீரர்கள், விழவோ, நொண்டித் திரியவோ தொடங்கினர்.(86) அவர்களில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, செயல் இழந்தனர், சிலரோ மரணம் ஏற்பட்டதைப் போல இருண்டனர் {நிறம் மங்கினர்}. யுக முடிவில் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு ஒப்பாக நடந்த அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, வெகுசிலரே தப்ப முடிந்த மூர்க்கமான அந்தக் கொடூரப் போரில் சிந்திய குருதி பூமியை நனைத்தது, பூமியில் எழுந்த புழுதியானது அப்படிச் சிந்திய குருதி மழை மற்றும் களத்தில் வீசிய வேகமான காற்று ஆகியவற்றின் விளைவால் மறைந்து போனது. தேர்ச்சக்கரங்களின் மத்திய பகுதி வரை மூழ்கும் அளவுக்கு அந்த இரத்த மழை ஆழமாக இருந்தது.(88, 89)

பெரும் வேகத்தைக் கொண்டவையும், மதங்கொண்டவையுமான உமது படையின் ஆயிரக்கணக்கான யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகர்கள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வலியால் கதறிக்கொண்டு நட்புப் படையணிகளைத் தங்கள் நடையால் நசுக்கியபடியே தப்பி ஓடின.(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரதிகளை இழந்த குதிரைகளும், காலாட்படை வீரர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு, அச்சத்துடன் தப்பி ஓடினர்.(91) உண்மையில் உமது படைவீரர்கள், கலைந்த கேசங்களுடன், தங்கள் கவசங்களை இழந்து, தங்கள் காயங்களில் இரத்தப் பெருக்கெடுத்து, அச்சத்தால் போர்க்களத்தை விட்டே தப்பி ஓடினர். ஒரு சிலர், ஏதோ தங்கள் கீழ் உறுப்புகள் {கால்கள்} முதலைகளால் பற்றப்பட்டதைப் போல அசையும் சக்தியை இழந்து களத்தில் கிடந்தனர்.(92, 93) வேறு சிலரோ, கொல்லப்பட்ட யானைகளின் உடல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

இப்படி உமது படையை முறியடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தோரைப் பயங்கரக் கணைகளால் தாக்கத் தொடங்கினான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} தன் கணை மாரியால் கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், விருஷசேனன், துரியோதனன் ஆகியோரை மறைத்தான். எப்போது அர்ஜுனன் தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது வில்லை வளைத்தான், எப்போது அவற்றைத் தொடுத்தான் என்பதை எவராலும் கவனிக்க முடியாத அளவுக்கு அவனுடைய {அர்ஜுனனின்} வேகம் இருந்தது. உண்மையில் எதிரியைத் தாக்கும்போது, அவனது வில்லானது இடைவிடாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.(95-97) அவனது கணைகளும் இடைவிடாமல் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டு அனைத்துத் திசைகளிலும் இறைக்கப்படுவதும் காணப்பட்டது.

அப்போது கர்ணனின் வில்லையும், விருஷசேனனுடையதையும் வெட்டிய அர்ஜுனன், ஒரு பல்லத்தால் சல்லியனின் தேரோட்டியும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(98) பிறகு வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாமனும் மைத்துனனுமாக உறவுமுறை கொண்ட கிருபரையும், அஸ்வத்தாமனையும் பல கணைகளால் ஆழமாகத் துளைத்தான். இப்படி உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை மிகவும் பீடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நெருப்பு போன்ற காந்தி கொண்ட பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(99, 100) இந்திரனின் வஜ்ரத்தைப் போலத் தெரிந்ததும், தெய்வீக மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதுமான அந்த உறுதி மிக்கக் கணை, எந்தக் கடுமையையும் தாங்கவல்லதாக இருந்தது.(101) மேலும் அது நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் எப்போதும் வழிபடப்பட்டதாக இருந்தது. (மந்திரங்களின் துணையுடன்) வஜ்ரத்தின் சக்தியால் அதை ஈர்த்தவனும், குருவின் வழித்தோன்றலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன், காண்டீவத்தில் அதைப் பொருத்தினான்.(102) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தக் கணை வில்லின் நாணில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் உரத்த கூச்சல்கள் கேட்கப்பட்டன.(103)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மீண்டும் அர்ஜுனனிடம் விரைவாகப் பேசினான், “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தீய ஆன்மா கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலையை விரைவாக அறுப்பாயாக. சூரியன் அஸ்த மலைகளை அடையப் போகிறான். எனினும், ஜெயத்ரதனின் கொலை குறித்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. உலகம் அனைத்திலும் அறியப்படும் விருத்தக்ஷத்திரன் ஜெயத்ரதனின் தந்தையாவான்.(105) நெடுங்காலத்திற்குப் பிறகே அவன் {விருத்தக்ஷத்திரன்}, எதிரிகளைக் கொல்பவனான ஜெயத்ரதனைத் தன் மகனாக அடைந்தான். (அந்த மகன் பிறந்த போது) வடிவமற்ற கண்ணுக்குத் தெரியாத குரல் ஒன்று, மேகங்கள் அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த ஒலியுடன் விருத்தக்ஷத்திரனிடம், “இந்த உனது மகன் {ஜெயத்ரதன்}, ஓ! தலைவா {விருத்தக்ஷத்திரா}, குருதியாலும், நடத்தையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும், இன்னும் பிற குணங்களாலும், இவ்வுலகின் இரு குலங்களுக்கு (சூரியன் மற்றும் சந்திர குலங்களுக்குத்) தகுந்தவனாவான். க்ஷத்திரியர்களில் முதன்மையடையும் அவன் {ஜெயத்ரதன்}, வீரர்களால் எப்போதும் வழிபடப்படுபவனாக இருப்பான்.(107-109) ஆனால் போரில் போராடிக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்களில் காளையும், உலகில் பகட்டானவனுமான ஒருவன், கோபத்தால் தூண்டப்பட்டு இவனது தலையை அறுப்பான்” என்றது.(110) பகைவர்களைத் தண்டிப்பவனான அந்தச் சிந்துக்களின் (பழைய) ஆட்சியாளன் {விருத்தக்ஷத்திரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டுச் சில காலம் சிந்தித்தான். தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவன் {விருத்தக்ஷத்திரன்} தன் சொந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம்,(111) “எந்த மனிதன் போரில் போராடிக் கொண்டிருக்கும் என் மகனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பூமியில் விழச் செய்வானோ, அவன் பெரும் சுமையைச் சுமப்பான், அந்த மனிதனின் தலை நிச்சயம் நூறு துண்டுகளாகச் சிதறும் என நான் சொல்கிறேன்” என்றான்.(12)

இவ்வார்த்தைகளைச் சொல்லி, ஜெயத்ரதனை அரியணையில் நிறுவிய விருத்தக்ஷத்திரன் காடுகளுக்குச் சென்று தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(113) ஓ! குரங்குக் கொடியோனே {அர்ஜுனா}, பெரும் சக்தி கொண்ட அவன் {விருத்தக்ஷத்திரன்} இப்போதும் கூட இதே சமந்தபஞ்சகத்துக்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே கடுந்தவத்தைச் செய்து கொண்டிருக்கிறான். எனவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் போரில் ஜெயத்ரதனின் தலையை வெட்டும் நீ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அற்புதச் செயல்களைச் செய்யும் உனது கடுமையான தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு, ஓ! வாயு தேவன் மகனின் {பீமனின்} தம்பியே {அர்ஜுனா}, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை {ஜெயத்ரதனின் தலையை} விரைவாக அந்த விருத்தக்ஷத்திரனின் மடியிலேயே விழச் செய்வாயாக. ஜெயத்ரதனின் தலையை நீ பூமியில் வீழ்த்தினால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும் என்பதில் ஐயமில்லை.(116, 117) தெய்வீக ஆயுதத்தின் துணை கொண்டு, பூமியின் தலைவனான அந்த முதிய சித்து மன்னன் {விருத்தக்ஷத்திரன்} அறியாத வண்ணம் இச்செயலைச் செய்வாயாக. உண்மையில், ஓ! வாசவனின் {இந்திரனின்} மகனே, ஓ! அர்ஜுனா, மூன்று உலகங்களிலும் உன்னால் அடைய முடியாததோ, செய்ய முடியாததோ  எதுவுமில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

(கிருஷ்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்டத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான தீண்டலைக் கொண்டதும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும், தெய்வீக ஆயுதமாக {அஸ்திரமாக} மாற்றப்பட்டதும், கடினங்கள் எதையும் தாங்கவல்லதும், நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் கொண்டு எப்போதும் வழிபடப்பட்டதும் ஜெயத்ரதனைக் கொல்லத் தன்னால் எடுக்கப்பட்டதுமான அந்தக் கணையை விரைவாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை வேகமாகச் சென்று, மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு பறவையைக் கவர்ந்து செல்லும் ஒரு பருந்தைப் போல ஜெயத்ரதனின் தலையைக் கவர்ந்து சென்றது. அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் கணைகளைக் கொண்டு அந்தத் தலையை (கீழே விழாதபடிக்கு) ஆகாயத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தான்.(118-123) தன் எதிரிகள் கவலையையும், தன் நண்பர்கள் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை மீண்டும் மீண்டும் அந்தத் தலையின் மீது ஏவி அதை {அந்தத் தலையைச்} சமந்தபஞ்சகத்தின் எல்லைகளுக்கு அப்பால் செலுத்தினான்.(124)

அதேவேளையில் உமது மருமகனின் {ஜெயத்ரதனின்} தந்தையும், பெரும் சக்தியைக் கொண்டவனுமான மன்னன் விருத்தக்ஷத்திரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் மாலைவேளை வேண்டுதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(125) அமர்ந்த நிலையில் தன் வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த விருத்தக்ஷத்திரனின் மடியில் கருங்குழல்களாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஜெயத்ரதனின் தலை விழுந்தது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை தன் மடியில் வீசப்பட்டது மன்னன் விருத்தக்ஷத்திரனால் காணப்படவில்லை. எனினும், பின்னவன் {விருத்தக்ஷத்திரன்} தன் வேண்டுதலைகள் முடித்து எழுந்த போது, திடீரென அது கீழே பூமியில் விழுந்தது. ஜெயத்ரதனின் தலையானது கீழே பூமியில் விழுந்தபோது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த முதிய விருத்தக்ஷத்திரனின் தலை நூறு துண்டுகளாகச் சிதறியது. இந்தக் காட்சியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன.(126-130). அவர்கள் அனைவரும் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, வலிமைமிக்கப் பீபத்சுவையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அந்த இருள் விலக்கிக் கொள்ளப்பட்டது.(131) அதன் பிறகே தொண்டர்களோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் கண்ட அந்த இருள் வாசுதேவனால் உண்டாக்கப்பட்ட மாயையே என்பதை அறியவந்தனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மருமகனான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, எட்டு அக்ஷௌஹிணிகளைக் கொல்லச் செய்து {கொல்லப்பட காரணமாக அமைந்து}, நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைக் கொண்ட பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான். சிந்துக்களின் ஆட்சியாளனான ஜெயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையடைந்த உமது மகன்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.(132-134) பார்த்தனால் {அர்ஜுனனால்} ஜெயத்ரதன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவன் {கிருஷ்ணன்} தன் சங்கை முழக்கினான், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனும் தனது சங்கை முழக்கினான்.(135) பீமசேனனும், அந்தப் போரில் யுதிஷ்டிரனுக்குச் செய்தியை அனுப்புபவனைப் போல, பேராற்றலுடன் கூடிய சிங்க முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(136) அந்தப் பிரம்மாண்டமான கூச்சலைக் கேட்டவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைப் புரிந்து கொண்டான்.(137) துந்துபி ஒலிகளாலும், பிற கருவிகளாலும் தன் படையின் போர்வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டிய அவன் {யுதிஷ்டிரன்} போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(138)

அதன் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததும், துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சோமகர்கள்}, ஜெயத்ரதன் வீழ்ந்த பிறகு, முடிந்த மட்டும் முயன்று அவருடன் {துரோணருடன்} போரிட்டனர். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று வெற்றியடைந்த பிறகு, அந்த வெற்றியால் போதை கொண்டு துரோணருடன் போரிட்டனர்.(139-141) அர்ஜுனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் ஜெயத்ரதனைக் கொன்ற பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டான்.(142) உண்மையில், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தன் முந்தைய சபதத்தைச் சாதித்த பிறகு, தானவர்களை அழிக்கும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவோ, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.143
-----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 145ல்  வரும் மொத்த சுலோகங்கள் 143


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்