Wednesday, September 28, 2016

துரியோதனனை வென்ற யுதிஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 152

Yudhishthira vanquished Duryodhana! | Drona-Parva-Section-152 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பயங்கரப் போர்; பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் இயல்புக்கு மீறிய வீரம்; அவனால் ஏற்பட்ட பேரழிவு; துரியோதனனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனை மீட்கச் சென்ற துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பலத்தில் பெருகியிருந்த உமது யானைப்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையை மீறி எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தது.(1) மறு உலகம் செல்லத் தீர்மானித்த பாஞ்சாலர்களும், கௌரவர்களும், பெருகிவந்த யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் நுழைவதற்காக ஒருவரோடொருவர் போரிட்டனர்.(2) துணிவுமிக்க எதிராளிகளுடன் மோதிய துணிவுமிக்கப் போர்வீரர்கள், கணைகளாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும் துளைத்து யமனின் வசிப்பிடத்திற்கு ஒருவரையொருவர் அனுப்பிக் கொண்டிருந்தனர்.(3) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கிடையில் நடந்த போரானது குருதியின் கடும் பாய்ச்சலால் பயங்கரமாக இருந்தது.(4) மதங்கொண்ட எதிராளிகளுடன் மோதிய மதங்கொண்ட யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று பீடித்தன.(5)

புகழ் வேண்டிய குதிரை வீரர்கள் அந்தக் கடும் மோதலில் சூலங்களாலும், ஈட்டிகளாலும், போர்க்கோடரிகளாலும் {பகைவரணியைச் சேர்ந்த} குதிரைவீரர்களைத் துளைத்து வெட்டி வீழ்த்தினர்.(6) நூற்றுக் கணக்கான காலாட்படைவீரர்களும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, உறுதியான தீர்மானத்துடன் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(7) பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன இனம், குலம் மற்றும் தனிப்பட்ட பெயர்களைக் கேட்டு மட்டுமே எங்களால் வேறுபாட்டைக் காண முடிந்தது என்ற அளவுக்கு அங்கே பெருங்குழப்பம் நிலவியது.(8) கணைகளாலும், ஈட்டிகளாலும், கோடரிகளாலும் ஒருவரையொருவர் மறு உலகத்திற்கு அனுப்பியபடியே போர்வீரர்கள் அச்சமற்றவகையில் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(9) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததன் விளைவாக, போராளிகளால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பத்து திசைப்புள்ளிகளும் முன்பைப் போல ஒளிரவில்லை.(10)

பாண்டவர்கள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைகளுக்கு மத்தியில் துரியோதனன் ஊடுருவினான்.(11) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதில் பெரும் கோபத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, தன் உயிரையே விடத் தீர்மானித்துப் பகைவரின் படைக்குள் ஊடுருவினான்.(12) உமது மகன் {துரியோதனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்து, அவளை {பூமியை} நடுங்கச் செய்தபடியே பாண்டவப் படையை அணுகினான்.(13) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அவர்களுக்கும் {பாண்டவப்படையினருக்கும்} இடையில் நடந்த பயங்கரமான போரானது, துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை உண்டாக்கியது.(14) நடுப்பகலில் தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல உமது மகன் {துரியோதனன்}, தன் கணைமாரியால் [1] பகைவரின் படையை எரித்தான்.(15) பாண்டவர்கள் தங்கள் சகோதரனை (துரியோதனனைப்) பார்க்கவும் இயலாதவர்களானார்கள். தங்கள் எதிரியை வெல்வதில் கையறு நிலையை {விரக்தியை} அடைந்த அவர்கள், களத்தைவிட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(16)

[1] உண்மையில், "சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான கணைகள்" என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சுடர்மிக்க முனைகளுடனும், தங்கச் சிறகுகளுடனும் கூடிய கணைகளைக் கொண்டு, வில்தரித்த உமது சிறப்புமிக்க மகனால் {துரியோதனனால்} கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(17) அந்தக் கூரிய கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள் கீழே தரையில் விழத் தொடங்கின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அரச மகன் {துரியோதனன்} அடைந்ததைப் போன்ற இத்தகு சாதனையை அடைவதில் பாண்டவர்கள் எப்போதும் வெல்லவில்லை [2].(18) ஒரு யானையினால் நசுக்கப்பட்டுக் கலக்கப்படும் தாமரைக் கூட்டத்தைப் போல அந்தப் போரில் உமது மகனால் பாண்டவப்படை நசுக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது [3].(19) மேலும், உமது மகனுடைய ஆற்றலின் விளைவால், சூரியனாலும், காற்றாலும் நீர் வற்றி அழகை இழந்த தாமரைக் கூட்டத்தைப் போலவே பாண்டவப் படையும் ஆனது.(20)

[2] கங்குலியில் பாண்டவர்கள் செய்யவில்லை என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் பாண்டுவின் மகன்கள் என்றே இருக்கிறது. வேறொரு பதிப்பில் இவ்வரி, "ராஜாவான உமது குமாரன் செய்ததுபோன்ற செய்கையை யுத்தத்தில் உம்மைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் செய்யவில்லை" என்றிருக்கிறது. இதுவே சரியானதாக இருக்க வேண்டும்.

[3] "அல்லது, 'தாமரைகள் நிறைந்து வளர்ந்த தடாகமொன்று ஒரு யானையால் அனைத்துப் பக்கங்களிலும் கலக்கப்படுவதைப் போல' என்றும் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} பாண்டவப்படைக் கொல்லப்படுவதைக் கண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான பாஞ்சாலர்கள் அவனை {துரியோதனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(21) அப்போது அவன் {துரியோதனன்}, பீமசேனனைப் பத்து கணைகளாலும், மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} ஒவ்வொருவரையும் மூன்றாலும், விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறாலும், சிகண்டியை நூறாலும், திருஷ்டத்யும்னனை எழுபதாலும், யுதிஷ்டிரனை ஏழாலும், கைகேயர்களையும், சேதிகளையும் எண்ணற்ற கூரிய கணைகளாலும், சாத்வதனை {சாத்யகியை} ஐந்தாலும், திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் மூன்றாலும், கடோத்கசனை சிலவற்றாலும் {சில கணைகளாலும்} துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(22-24) அந்தப் பெரும்போரில் நூற்றுக்கணக்கான பிற போர்வீரர்களையும், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் தன் கடுங்கணைகளால் வெட்டி வீழ்த்திய அவன் {துரியோதனன்}, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போலவே நடந்து கொண்டான் [4].

[4] "இதன் பிறகு பம்பாய் பதிப்பில் வரும் பதினாறு வரிகள், கல்கத்தா பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியும் அவற்றைத் தவிர்த்தே இருக்கிறார். வேறொரு பதிப்பில் அதிகமாக இருக்கும் வரிகள் பின்வருமாறு, "நராதிபரே, உமது புத்திரனான அந்தத் துரியோதனனால் அம்புகளால் வதைக்கப்படுகிற அந்தப் பாண்டவ சேனையானது யுத்தத்தில் ஓடியது. அரசரே, மகாயுத்தத்தில் சூரியனைப் போல ஜ்வலிக்கின்ற அந்தக் குருராஜனைப் பாண்டு புத்திரனுடைய படைவீரர்கள் பார்ப்பதற்கு சக்தியற்றவர்களானார்கள். ராஜசிரேஷ்டரே, பிறகு, கோபங்கொண்ட யுதிஷ்டிரராஜர் குருராஜனான உம்முடைய குமாரனைக் கொல்லும் எண்ணத்துடன் எதிர்த்து வந்தார். சத்துருக்களை அடக்குகிறவர்களும், குரு குலத்தில் தோன்றியவர்களும், பராக்ரமசாலிகளுமான துர்யோதனன், யுதிஷ்டிரர் இருவரும் யுத்தத்தில் தத்தம் பிரயோஜனத்தைக் கருதி எதிர்த்தார்கள். பிறகு, துரியோதனன், கோபங்கொண்டு உட்படிந்த கணுக்களுள்ள பத்தம்புகளாலே (தர்மபுத்திரரை) அடித்து ஒரு பாணத்தினால் விரைவாகக் கொடியையும் அறுத்தான். மன்னரே, மகாத்மாவும் அரசருமான பாண்டவருக்குப் பிரியமான சாரதியான இந்திசேனனை மூன்று பாணங்களால் நெற்றியில் அடித்தான். மகாரதனான துரியோதனன் வேறொரு பாணத்தால் அவருடைய வில்லையும் அறுத்து நான்கு பாணங்களால் அவருடைய நான்கு குதிரைகளையும் அடித்தான். பிறகு, யுதிஷ்டிரர் கோபங்கொண்டு ஒரு நிமிஷத்திற்குள் வேறு வில்லைக் கையிலெடுத்து வேகத்தோடு கௌரவனை எதிர்த்தார்" என்றிருக்கிறது. மேற்கண்டவை கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.

எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} "மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்" என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.

அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, "நில், நில்" என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.(35)
-------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 152-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்