Paushya and Utanka! | Adi Parva - Section 3b | Mahabharata In Tamil
(பௌசிய பர்வம்)
பதிவின் சுருக்கம் : வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்...
அதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} அழைக்கப்பட்டான். அவனிடம் மீண்டும் பேசிய அவனது ஆசான் {அயோதா தௌம்யர்}, "வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்" என்றார்.(78) வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். அவனது ஆசானும் {அயோதா தௌம்யரும்} விரைவில் மனநிறைவு கொண்டார்.(79) அந்த மனநிறைவின் விளைவாக வேதா நற்பேற்றையும், உலகளாவிய அறிவையும் பெற்றான். இதுவே வேதாவின் சோதனை.(80)