Thursday, February 05, 2015

யார் ஞானி? - உத்யோக பர்வம் பகுதி 33அ

Who is wise? | Udyoga Parva - Section 33a | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 1}
பதிவின் சுருக்கம் : உறக்கமிழந்த திருதராஷ்டிரன் விதுரனை வரவழைப்பது; யார் யாருக்கு உறக்கமில்லாமல் போகும் என விதுரன் சொல்வது; தனக்கு நல்லதைச் சொல்லுமாறு விதுரனை திருதராஷ்டிரன் வேண்டுவது; ஞானி என்பவன் யார் என்று ஒரு பெரிய நீண்ட பட்டியலை விதுரன் சொல்வது; ஞானியிடம் {பண்டிதனிடம்} உள்ள குணங்களை விதுரன் திருதராஷ்டிரனிடம் எடுத்துரைப்பது ... 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், வாயில் காப்போனிடம், “நான் விதுரனைக் காண விரும்புகிறேன். தாமதமில்லாமல் அவனை {விதுரனை} இங்கே அழைத்து வா” என்றான்.

திருதராஷ்டிரனனால் அனுப்பப்பட்ட அந்தத் தாதுன் க்ஷத்ரியிடம் {விதுரனிடம்} சென்று, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பலமிக்க மன்னனான நமது தலைவன் {திருதராஷ்டிரன்} உம்மைக் காண விரும்புகிறார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விதுரன் (புறப்பட்டு), அரண்மனைக்கு வந்து வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்றான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, உமது கட்டளையின் பேரில் விதுரர் இங்கே வந்திருக்கிறார். அவர் உமது பாதங்களைக் காண விரும்புகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான்.


அதற்குத் திருதராஷ்டிரன் {வாயில்காப்போனிடம்}, “முற்போக்குப் பார்வையும், பெரும் ஞானமும் கொண்ட விதுரன் உள்ளே வரட்டும். விதுரனைக் காண நான் விரும்பாமலோ, தயார் நிலையில் இல்லாமலோ எப்போதும் இருந்ததில்லை” என்றான். பிறகு அந்த வாயில் காவலன் வெளியே சென்று விதுரனிடம் பேசினான். “ஓ! க்ஷத்ரி, ஞானமுள்ள மன்னனின் அந்தப்புரத்தில் நுழைவீராக. உம்மைக் காண எப்போதும் விரும்பாமலில்லை என்று மன்னர் சொல்கிறார்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரனின் அறையை அடைந்த விதுரன், சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {திருதராஷ்டிரனிடம்}, கூப்பிய கரங்களுடன், “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் விதுரன். உமது கட்டளையின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். {என்னால்} ஏதாவது செய்யப்படவேண்டுமானால் உத்தரவிடும். இதோ நான் இங்கே இருக்கிறேன்!” என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! விதுரா, சஞ்சயன் திரும்பிவிட்டான். என்னைக் கடிந்து கொண்டு அவன் {சஞ்சயன்} சென்றுவிட்டான். சபையின் மத்தியில், நாளை அவன் அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} செய்தியை வழங்குவான். அந்தக் குரு வீரன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தி அனுப்பியிருப்பான் என்பதை என்னால் இன்று உறுதி செய்ய இயலவில்லை. எனவே, எனது உடல் எரிகிறது {கொதிக்கிறது}, அது என்னைத் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. தூக்கமின்மையும், {உடல்} எரிச்சலும் {கொதிப்பும்} கொண்ட மனிதனுக்கு எது நன்மையானது என்பதை எங்களுக்குச் சொல். ஓ! குழந்தாய், நீ அறம் மற்றும் பொருளை {தர்மார்த்தங்களை} அறிந்திருக்கிறாய் .பாண்டவர்களிடமிருந்து சஞ்சயன் திரும்பி வந்ததிலிருந்து, எனது இதயம் அமைதியை அறியவில்லை. அவன் {சஞ்சயன்} என்ன சொல்லப்போகிறானோ என்ற அச்சத்தால் நிறைந்து இருக்கும் என் புலன்கள் அனைத்தும் குழம்பி இருக்கின்றன” என்றான் {திருதராஷ்டிரன்}.

{உறக்கமற்ற நிலை}


விதுரன் {திருதராஷ்டிரனிடன்}, “திருடன், காமுகன், தன் செல்வமனைத்தையும் இழந்தவன், வெற்றியடையத் தவறியவன், பலவீனமானவன், பலமான மனிதனால் தாக்கப்பட்டவன் ஆகியோரை உறக்கமின்மை ஆட்கொள்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரிய துயரங்களுக்கு நீர் ஆட்படவில்லை என நான் நம்புகிறேன். பிறர் பொருளின் மீது பேராசை கொண்டதால் நீர் வருந்தவில்லை எனவும் நான் நம்புகிறேன்” என்றான்.

{நன்மையானதும் அறநெறி நிரம்பியதும்}


 திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவையுமான வார்த்தைகளை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இந்த அரச முனிவர்களின் {ராஜரிஷிகளின்} குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய்” என்றான்.

 விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அனைத்து அறமும் அருளப்பட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான்; இருப்பினும், ஓ! திருதராஷ்டிரரே, உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடுகடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்.

 என்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் பார்வையற்றவராக இருப்பதால் {குருடராக இருப்பதால்}, முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே வருகிறான்.

பேரரசின் பராமரிப்பைத் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் கொடுத்த பிறகு, செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்?

{ஞானத்தின் குறியீடுகள்}


வாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் தன்னறிவு {ஆத்ம ஞானம், சுயஞானம்}, முயற்சி {உழைப்பு}, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி {wise man} எனப்படுகிறான். மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட மனிதனின் குறிகளாகும் {அங்கலட்சணமாகும்}. கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து நழுவச் செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.

ஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன் இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும் {உழைப்பவர்களும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.

விரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் {காரியங்களை} அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் {ஆசையால் அடையாமல் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அடைபவனும்}, கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், எது நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.

கங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான். (அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே என்று) அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், (தங்களது பொருட்களை) அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான். எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை {தர்க்க சாஸ்திரத்தை} அறிந்தவனும், மேதைமை உடையவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள். எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய காரணங்கள் {கொள்கைகள்} சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.


மற்ற பதிப்புகளில், உத்யோக பர்வம் 32ம் பகுதியில் சஞ்சயயான பர்வம் முடிந்து 33ம் பகுதியான இந்தப் பதிவில் இருந்து பிரஜாகர பர்வம் தொடங்குகிறது. உத்யோக பர்வம் பகுதி 33ல் இருந்து 41 வரை உள்ள பகுதிகளில் விதுர நீதி வருகிறது. அதுவே பிரஜாகர பர்வம் என்ற பெயரில் மற்ற பதிப்புகளில் உள்ளது. நாம் கங்குலியின் வழியிலேயே சேனோத்யோக பர்வம் என்றே தொடர்ந்து செல்கிறோம்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்