Monday, July 13, 2015

சகுனியின் மகன் உலூகன்! - உத்யோக பர்வம் பகுதி 163

Uluka, the son of Sakuni! | Udyoga Parva - Section 163 | Mahabharata In Tamil

(உலூகதூதாகமன பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்னனதைத் திரும்பத் திரும்பச் சொன்ன உலூகன் பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டியது; பீமசேனனன் தனது உறுதிமொழிகளையும் ஆணைகளையும் நினைவூட்டி துரியோதனனுக்கு உலூகன் மூலம் மறுமொழி கூறியது; உலூகனையும், உலூகனின் தந்தை சகுனியையும் தானே கொல்வதாகச் சகாதேவன் சூளுரைப்பது; அர்ஜுனன், யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் உலூகன் மூலம் துரியோதனனுக்கு மறுமொழி சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போல இருந்த அர்ஜுனனை தனது சொல்லடிகளால் மேலும் தூண்டும்வகையில், தான் பேசியதை மீண்டும் பேசினான் உலூகன். இதுபோன்று திரும்பத் திரும்பச் சொல்லி போதுமான அளவுக்குச் சினமூட்டப்பட்டிருந்த பாண்டவர்கள், இவ்வார்த்தைகளை (இரண்டாம் முறையாகக்) கேட்டாலும், அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனுடைய [1] {உலூகனுடைய} நிந்தனைகளைக் கேட்டு, தங்கள் பொறுமையை மீறும் வகையில் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் {தங்கள் இருக்கைகளில் இருந்து} எழுந்து, தங்கள் கரங்களை நீட்டினார்கள் {உதறினார்கள்}. கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல இருந்த அவர்கள், தங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் பார்வையை வீசத் தொடங்கினர்.

[1] இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.

கீழ்நோக்கித் தனது முகத்தை வைத்திருந்த பீமசேனன், ஒரு பாம்பைப் போல கடுமையாக மூச்சுவிட்டபடி, இரத்தச் சிவப்புடைய தனது கடைவிழிகளால் கேசவனை {கிருஷ்ணனை} நோக்கி, அவனைச் {கிருஷ்ணனைச்} சாய்வாகப் பார்க்க ஆரம்பித்தான். அந்த வாயுத் தேவனின் மகன் {பீமன்} பெரிதும் பாதிக்கப்பட்டு, கோபத்தால் மிகவும் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "நொடியும் தாமதிக்காமல் இங்கிருந்து சென்றுவிடு. ஓ! சூதாடியின் மகனே {உலூகா}, சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன. அதன் பொருளும் உணரப்பட்டது. நீ விரும்பியது நடைபெறட்டும்" என்ற இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.

ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பெரும் அறிவுடைய யுதிஷ்டிரனை மீண்டும் ஒருமுறை பார்த்தான். பிறகு, சிருஞ்சயர்கள், பெரும்புகழுடைய கிருஷ்ணன், தனது மகன்களுடன் கூடிய துருபதன், விராடன் மற்றும் (அங்குக் கூடியிருந்த) மன்னர்கள் அனைவருக்கும் மத்தியிலும், முன்னிலையிலும், கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்பைக் குச்சியால் எரிச்சலூட்டுவது போல, அர்ஜுனனிடம் அதே வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சொன்ன உலூகன், மீண்டும் அவனை {அர்ஜுனனைத்} தூண்டினான். பிறகு அவன் {உலூகன்}, கிருஷ்ணன் மற்றும் பிறர் அனைவரிடமும் துரியோதனன் தனக்கு அறிவுறுத்தியபடியே சொன்னான். உலூகனால் உச்சரிக்கப்பட்ட அந்தக் கடுமையான மற்றும் ஏற்கத்தகாத வார்த்தைகளைக் கேட்ட பார்த்தன் {அர்ஜுனன்} மிகவும் கலங்கி, தனது நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} இந்நிலையில் கண்ட அந்த ஏகாதிபதிகளின் சபையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனுக்கும், உயர் ஆன்ம பார்த்தனும் {அர்ஜுனனுக்கும்} நேர்ந்த அவமதிப்பைக் கண்ட பாண்டவர்களின் தேர் வீரர்கள் அனைவரும் பெரிதும் கலங்கினர். அவர்கள் பெரும் மனோ உறுதி கொண்டவர்களாக இருப்பினும், அந்த மனிதர்களில் புலிகள் கோபத்தில் எரியத் {எரிச்சலடையத்} தொடங்கினர். திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, மன்னன் திருஷ்டகேது, பெரும் ஆற்றல் கொண்ட பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து குதித்தெழுந்தனர். கோபத்தால் அவர்களது கண்கள் சிவந்திருந்தன. சிவந்த சந்தனக் குழம்பாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அழகிய கரங்களை அவர்கள் உதறிக் கொண்டார்கள்.

பிறகு, குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்}, அவர்களது உடல் அசைவுகளையும், இதயங்களையும் புரிந்து கொண்டு, தனது இருக்கையில் இருந்து எழும்பினான். தனது பற்களைக் கடித்து, தனது கடைவாயை நாவால் நக்கி, கோபத்தால் எரிந்து, தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, தனது கண்களைக் கடும் சிவப்பாக்கி,  {பீமன்} உலூகனிடம், "அறியா மூடா {உலூகா}, நாங்கள் ஏதோ அறிவாற்றலற்ற பேதையர் கூட்டம் என்று நினைத்து எங்களைத் தூண்டும் நோக்கோடு துரியோதனனால் சொல்லப்பட்ட உனது வார்த்தைகள் அனைத்தும் {எங்களால்} கேட்கப்பட்டன! இப்போது நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, {கௌரவர்களிடம் சென்று}, சூதனின் மகனும் {கர்ணனும்}, தீய இதயம் படைத்த சகுனியும் கேட்டுக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் மத்தியில் அணுக முடியாதபடி இருக்கும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} திரும்பச் {இவ்வார்த்தைகளைச்} சொல்வாயாக.

{பீமன், துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம்} "நாங்கள் எப்போதும் எங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனை} மனநிறைவு கொள்ளச் செய்யவே முயல்கிறோம்! ஓ! தீய நடத்தை கொண்டவனே {துரியோதனா}, இதற்காகவே நாங்கள் உனது செயல்களைப் பொறுத்தோம். இதை உனக்குக் கிடைத்த உயர்ந்த நற்பேறாக நீ கருதவில்லையா? பெரும் புத்திக்கூர்மையுடையவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரர், நமது குலத்தின் நன்மைக்காக மட்டுமே, சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ரிஷிகேசனை {கிருஷ்ணனை} குருக்களிடம் அனுப்பி வைத்தார். விதியால் உந்தப்பட்ட நீயோ யமனுலகு செல்ல விரும்புகிறாய் என்பதில் ஐயமில்லை. வா, எங்களிடம் போரிடுவாயாக. எப்படியிருப்பினும், நாளை அது நிச்சயம் நடக்கும்!

உண்மையில், நான் உனது சகோதரர்களுடன் சேர்த்து உன்னைக் கொல்வதாகவே உறுதியேற்றிருக்கிறேன். ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, அதில் சிறு ஐயத்திற்கும் இடங்கொடாதே. ஏனெனில் நான் உறுதியேற்றபடியே அது நடக்கும்! வருணனின் வசிப்பிடமான கடலே கூட அதன் கண்டங்களைத் திடீரென மீறலாம். மலைகளேகூடப் பிளந்து போகலாம். எனினும் எனது வார்த்தைகள் மட்டும் பொய்யாக முடியாது! யமனோ, குபேரனோ, ருத்ரனோகூட நேரடியாக உனக்குத் துணைபுரிய வந்தாலும், பாண்டவர்கள் தங்கள் உறுதிமொழியைச் சாதிப்பார்கள். {வாக்கைக் காப்பார்கள்}. நான் என் விருப்பப்படி துச்சாசனனின் இரத்தத்தைக் குடிக்கப்போவது உறுதி! கோபத்தோடு என்னை நோக்கி வரும் க்ஷத்திரியன் எவனாக இருப்பினும் யமனுலகு அனுப்புவேன். படைகளின் முன்னணியில் பீஷ்மரே வந்தாலும், நான் அவரையும் {பீஷ்மரையும்} யமனுலகு அனுப்பி வைப்பேன்! க்ஷத்திரிய சபைக்கு மத்தியில் நான் சொன்னவை நிச்சயம் உண்மையாகும். இஃது என் ஆன்மா மீது ஆணை" என்றான் {பீமன்}.

பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோபம் நிறைந்த சகாதேவனும், கோபத்தால் கண்கள் சிவந்து, (கூடியிருந்த) துருப்புகளுக்கு மத்தியில் பெருமை மிக்க வீரனொருவனுக்கு உரித்தான வகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னான். அவன் {சகாதேவன் உலூகனிடம்}, "ஓ! பாவியே {உலூகா}, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. அவற்றை உனது தந்தையிடம் {சகுனியிடம்} மீண்டும் சொல்வாயாக! {உனது தந்தையிடம்}, "உனக்கும் திருதராஷ்டிரருக்கும் உறவுமுறை இல்லையெனில், எங்களுக்கும், குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} இடையில் பிளவு {கலகம்} ஏற்பட்டிருக்காது! பாவச் செயல்களைச் செய்து, உனது குலத்தையே அழித்துக் கொள்ளும் நீ, திருதராஷ்டிரர் குலத்தின் அழிவுக்காகவும், முழு உலகத்தின் அழிவுக்காகவும், பூசலே {சண்டையே} உருவம் கொண்டு வந்தது போலப் பிறந்திருக்கிறாய்" என்று சொல்வாயாக. ஓ! உலூகா, எங்கள் பிறப்பிலிருந்தே உனது தந்தையான பாவி {சகுனி} எப்போதும் எங்களுக்குக் காயம் ஏற்படுத்தவும், தீமை செய்யவுமே முயன்றிருக்கிறான். அந்தப் பகை உறவின் எதிர்கரையை அடைய நான் விரும்புகிறேன். {தொடர்ச்சியான அந்தப் பகைக்கு அடைய முடியாத முடிவை அடையப்போகிறேன்}. அந்தச் சகுனியின் கண் முன்பாகவே முதலில் {உலூகனாகிய} உன்னைக் கொன்று, பிறகு வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் சகுனியைக் கொல்வேன்!" என்றான் {சகாதேவன்}.

பீமன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரின் சொற்களைக் கேட்ட பல்குனன் {அர்ஜுனன்}, புன்னகைத்துக் கொண்டே பீமனிடம், "ஓ! பீமசேனரே, உம்முடன் பகைமை பாராட்டுபவர் எவரும் உயிருடன் இருக்க முடியாது! அந்த மூடர்கள் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்கள் மரணத்தின் வலையிலேயே சிக்கியிருக்கிறார்கள்! ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீமரே}, உமது கடுமொழிகளுக்கு உலூகன் தகுந்தவனல்ல. தூதர்களிடம் என்ன தவறு இருக்கிறது? (சொல்ல வேண்டும்) என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள்" என்றான் {அர்ஜுனன்}.

பயங்கர ஆற்றல் கொண்ட பீமனிடம் இப்படிப் பேசிய அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பிறகு, வீரமிக்கத் தனது கூட்டாளிகளிடமும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான நலன்விரும்பிகளிடமும், "வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, குறிப்பாக என்னையும் பழித்துத் திருதராஷ்டிரரின் பாவம் நிறைந்த மகன் {துரியோதனன்} சொன்ன வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்! அவற்றைக் கேட்ட நீங்கள், எங்கள் நலனை விரும்புவதால் கோபத்தால் நிறைந்தீர்கள்! ஆனால், வாசுதவேனின் {கிருஷ்ணனின்} வலிமையாலும், உங்களது முயற்சிகளாலும் நான் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை! உங்கள் அனுமதியின் பேரில் நான் உலூகனிடம் பேசப் போகிறேன். அந்த வார்த்தைகளுக்கான மறுமொழிகளையும், உண்மையில் அவன் துரியோதனனிடம் சொல்ல வேண்டியவற்றையும் நான் சொல்லப் போகிறேன். {என்ற அர்ஜுனன் துரியோதனனிடம் சொல்லும்படி உலூகனிடம்} "நாளை விடிந்ததும், எனது பிரிவின் தலைமையில் நிலைத்திருக்கும் நான், உனது வார்த்தைகளுக்கான பதிலை எனது காண்டீவத்தின் மூலம் சொல்கிறேன்! ஏனெனில், அலிகளே வார்த்தைகளால் பதிலளிப்பார்கள்!" என்றான் {அர்ஜுனன்}.

இதைக்கேட்ட மன்னர்களில் சிறந்தோர் அனைவரும் அந்த மறுமொழியில் உள்ள புத்திக்கூர்மையால் ஆச்சரியப்பட்டுத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பாராட்டினார்கள். பிறகு, அந்த மன்னர்கள் அனைவரிடமும் அவர்களது வயதுக்கும், தகுதிக்கும் ஏற்றபடி மென்மையாகப் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இறுதியாக, துரியோதனனிடம் கொண்டு செல்ல வேண்டிய வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். மேலும் யுதிஷ்டிரன் {உலூகனிடம்}, "நல்ல மன்னன் எவனும் அவமதிப்பைப் பொறுக்கலாகாது. இவ்வளவு நீண்ட நேரம் நீ சொன்னதைக் கேட்ட நான், இப்போது எனது மறுமொழி என்ன என்று உன்னிடம் சொல்லப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம், "ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான யுதிஷ்டிரன், கோபத்தால் கண்கள் மிகச் சிவந்து, கடும் நஞ்சு கொண்ட பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, தனது நாவால் தன் கடைவாயை நக்கி, கோபம் பெருகி, தனது கண்களை ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீதும், தனது தம்பிகள் மீதும் செலுத்தியபடி, மென்மை, ஆவேசம் ஆகிய இரண்டும் நிறைந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான்.

தனது பெரும் கரங்களை வீசி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, "ஓ! உலூகா, போ. நன்றியற்றவனும், தீய எண்ணம் கொண்டவனும், பகைமையின் உருவமாக இருப்பவனும், குலத்தின் இழிந்த பாவியுமான துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. "ஓ! பாவம் நிறைந்த இழிந்தவனே {துரியோதனா}, நீ எப்போதும் பாண்டவர்களிடம் கோணலாகவே நடக்கிறாய்! ஓ! பாவம் நிறைந்த மூடா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில், எவன் தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி, தனது ஆற்றலை வெளிப்படுத்தி, தனது எதிரிகளை (போருக்கு) அழைத்து, தனது வார்த்தைகளை நிறைவேற்றுகிறானோ, அவனே ஆண்மையுள்ளவன்! ஓ! பாவம்நிறைந்த இழிந்தவனே, க்ஷத்திரியனாக இருப்பாயாக. எங்களைப் போருக்கு அழைப்பாயாக!

ஓ! உனது குலத்தில் புகழற்றவனே, நாங்கள் மரியாதை வைத்திருக்கும் பிறரை உனக்கு முன்னே விட்டு, போர் செய்யாதே. ஓ! கௌரவா {துரியோதனா}, உனது சொந்த பலத்தையும், உனது சேவகர்களையும் நம்பி பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போருக்கு அழைப்பாயாக! அனைத்து வகையிலும் க்ஷத்திரியனாக இருப்பாயாக! பகைவரை எதிர்கொள்ள முடியாமல், பிறரின் வலிமையை நம்பி, தனது எதிரிகளை அழைப்பவன், உண்மையில், அலியே ஆவான்! எனினும், பிறரின் வலிமையை நம்பியிருக்கும் நீ, உன்னை உயர்வாக நினைத்துக் கொள்கிறாய்! பலவீனனாகவும், திறனற்றவனாகவும் இருக்கும் நீ, எங்களிடம் (வார்த்தைகளில்) ஏன் இப்படிக் கொக்கரிக்கிறாய்? {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {உலூகனிடம்}, "ஓ! சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனது வார்த்தைகளையும் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} சொல்வாயாக. "நாளை விடிந்ததும் போர் நடக்கப் போகிறது. ஓ! தீய ஆன்மா கொண்டவனே, ஆண்மையோடிருப்பாயாக! ஓ! மூடா, பாண்டவர்களுக்குத் தேரோட்டியாக மட்டுமே செயல்படத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} போரிட மாட்டான் என்று நினைத்து நீ அச்சமற்று இருக்கிறாய். எனினும், அஃது ஒருக்கணம் கூட நிலைக்காது. எனது கோபம் தூண்டப்பட்டால், வைக்கோலை எரிக்கும் நெருப்பு போல, நான் (உன்னால் கூட்டப்பட்டிருக்கும்) மன்னர்கள் அனைவரையும் எரித்துவிடுவேன்.

எனினும், யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில், புலன்களை முழுமையாக அடக்கியவனும், தனியாகப் போரிடப் போகிறவனுமான உயர் ஆன்ம பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக மட்டும் எனது பணிகளைச் செய்வேன். மூவுலகங்களின் எல்லைகளுக்கு அப்பால் நீ பறந்து சென்றாலும், பூமியின் ஆழங்களுக்குள் நீ மூழ்கிப் போனாலும், அந்த இடங்களில் எல்லாம் நீ அர்ஜுனனின் தேரை நாளை காலையில் காண்பாய். பீமனின் வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டது என்று நீ நினைக்கிறாய். ஆனால் துச்சாசனனின் இரத்தம் ஏற்கனவே குடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவாயாக. என்னதான் நீ குறுக்கான, மாறுபாடான வார்த்தைகளைப் பேசினாலும், பார்த்தனோ {அர்ஜுனனோ}, மன்னன் யுதிஷ்டிரரோ, பீமசேனனோ, இரட்டையர்களோ உன்னைத் துரும்பாகவும் மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}" என்று {உலூகனிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}."


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்