Nakula killed Karna's sons! | Shalya-Parva-Section-10 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது....
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், "மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ! சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்" என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)
