Thursday, September 18, 2014

இலங்கையை அடைந்தான் ராமன்! - வனபர்வம் பகுதி 281

Rama reached Lanka!  | Vana Parva - Section 281 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது...


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி  {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.



[1] இங்கே கங்குலியில் கவக்ஷயன் என்றே இருக்கிறது. ஆனால் அடுத்துச் சொல்லப்படும் குரங்குக்கும் அதே பெயர் இருப்பதால் இங்கே வேறு பதிப்பிலிருந்து எடுத்து பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[2] இங்கே படிப்பதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சில நூல்களில் ஐம்பத்து ஏழு கோடி {57,00,00,000}என்று இருக்கின்றன என்கிறார் கங்குலி.

[3] இங்கே ஒரு வித்தியாசம் காணக்கிடைக்கிறது என்கிறார் கங்குலி. ஆனால் என்னவென்று சொல்லவில்லை. கும்பகோணம் பதிப்பில் முகத்தில் திலகக் குறி என்பதற்குப் பதில், முகத்தில் "ம்" போன்ற அடையாளமான புணட்ரம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.

அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது.  கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.

கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் - வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.

பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்" என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.

இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்" என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.
[4] இது ஆசமனம் என்கிற சுத்திகரிப்புச் சடங்கு. இந்நாள் வரை, எந்த ஹிந்துவும், ஆசமனத்தை முதலில் செய்யாமல் எந்தச் சடங்கையும் செய்ய முடியாது என்கிறார் கங்குலி

[5] இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார் கங்குலி.

ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.

ராமன், பெருங்கடலின் இக்கரையில்  இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்