Monday, August 19, 2013

பல கணவர்களுக்கு பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199

Common wife for many husbands! | Adi Parva - Section 199 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : இந்திரன் சிவனிடம் பெற்ற சாபத்தையும், பழைய காலத்தில் திரௌபதி சிவனிடம் ஐந்து கணவர்களை வரமாகப் பெற்ற கதையையும் வியாசர் துருபதனிடம் சொன்னது...

வைசம்பாயனர் சொன்னார், "வியாசர் தொடர்ந்தார்,[1] "பழங்காலத்தில், தேவர்கள் நைமிச வனத்தில் ஒரு பெரும் வேள்வியை ஏற்பாடு செய்தனர். ஓ மன்னா, விவஸ்வானின் மகனான யமன், அந்த வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்ட விலங்குகளைக் கொல்பவன் ஆனான்.(1) அந்த வேள்வியில் இப்படி நியமிக்கப்பட்ட யமன் (அவ்வேளையில்) ஒரு மனிதனையும் கொல்லவில்லை. உலகத்தில் மரணம் தவிர்க்கப்பட்டு, மனிதர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகமானது.(2) சோமன், சக்ரன் {இந்திரன்}, வருணன், குபேரன், சாத்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள்  ஆகிய தேவர்கள் அண்டத்தைப் படைப்பவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(3) மக்கள் தொகை அதிகமானதைக் கண்டு அஞ்சி அவர்கள் அந்த அண்டப் படைப்பாளனிடம், "ஓ தலைவா, பூமியில் மக்கள் தொகை அதிகமானதால் அஞ்சி, உம்மிடம் தீர்வைப் பெற வந்திருக்கிறோம். உண்மையில் நீர் தரும் பாதுகாப்புக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.(4)



[1] கும்பகோணம் பதிப்பில், வியாசர் இந்தக் கதையைச் சொல்வதற்கு முன்னர் நளாயினியின் கதையைச் சொல்கிறார். இந்திரசேனை என்ற நாளாயினி தனது கணவரான மௌத்கல்யரை மகிழ்விக்க, அதில் மகிழ்ந்த அவர் ஐந்து வடிவங்களை எடுத்து அவளோடு இணைந்ததையும், அந்தப் போகத்தில் அவள் நிறைவையடையாததால், "ஐந்து கணவர்களை அடைவாய்" என்று மௌத்கல்யர் சபித்ததையும், அவள், சிவனை நோக்கித் தவமிருந்து ஐந்து முறை "கணவனைக் கொடுப்பாயாக" என்று வேண்டியதையும் சொல்லி, அவளே துருபதனின் மகளாகக் கிருஷ்ணையாகப் பிறந்திருக்கிறாள் என்றும் சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களில் விரியும் இந்தக் கதை கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.

இதைக்கேட்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, "மக்கள் தொகைப் பெருகுவதால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் இறவாதவர்கள். நீங்கள் மனிதர்களைப் பார்த்து அஞ்சுவது தகாது" என்றான்.(5)

அதற்குத் தேவர்கள், "மரணிப்பவர்கள் {மனிதர்கள்} இப்போது இறப்பதில்லை. இப்போது எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த வேறுபாடுகள் மறைந்ததால் வெறுத்துப் போய், எங்களுக்கும் அவர்களுக்குமான வேறுபாட்டை நீர் அருள்வீர் என்றே உங்களிடம் வந்திருக்கிறோம்" என்றனர்.(6)

அதற்கு அந்தப் படைப்பாளி {பிரம்மன்}, "விவஸ்வானின் {சூரியனின்} மகன் {யமன்} இன்னும் அந்தப் பெரும் வேள்வியில் பங்கு கொண்டிருக்கிறான். அதனால் தான் மனிதர்கள் இறவாமல் இருக்கின்றனர். அந்த வேள்வியில் எமனின் தொடர்பு நிறைவடைந்தால், மனிதர்கள் முன்பைப் போலவே இறப்பார்கள்.(7) நேரம் வரும்போது, அந்த விவஸ்வான் மகன் {யமன்}, உங்கள் ஒவ்வொருவரின் சக்தியைக் கொண்டும், சக்தி மீதம் இல்லாமல் உலகத்தில் வாழும் அவர்கள் அனைவரையும் ஆயிரக்கணக்கில் பெருக்கித் தள்ளுவான் {கொல்வான்}" என்றான்".(8)

வியாசர் தொடர்ந்தார், "தேவர்களில் முதலில் பிறந்தவரின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அந்தப் பெரும் வேள்வி நடந்த இடத்திற்குத் திரும்பினர்.பாகீரதியின் {கங்கையின்} அருகே அமர்ந்திருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர்கள் {தேவர்கள்} நீரோட்டத்தில் ஒரு (தங்கத்) தாமரை அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தேவர்களில் முதன்மையான இந்திரன், அஃது எங்கிருந்து வருகிறது என்பதை உறுதி செய்யப் பாகீரதியின் {கங்கையின்} போக்குக்கு {நீரோட்டத்துக்கு} எதிராகத் தொடர்ந்து சென்றான். கங்கை, வற்றாத நீரை வெளியிடும் இடத்திற்கு {நதி மூலத்திற்கு} வந்த இந்திரன், நெருப்புப் போன்ற பிரகாசமுள்ள ஒரு மங்கையைக் கண்டான்.(9,10) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அந்த நீரோட்டத்திலிருந்து நீர் எடுக்க வந்த அந்த மங்கை, அழுது கொண்டே இருப்பதையும் கண்டான். அவள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள், அந்த நீரோட்டத்தில் விழுந்து, தங்கத்தாமரைகளாக மாறிக் கொண்டிருந்தன.(11) இந்த அற்புதக் காட்சியைக் கண்ட வஜ்ரதாரி {இந்திரன்} அந்த மங்கையை அணுகி, "ஓ இனிமையான மங்கையே நீ யார்? நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? நான் உண்மையை அறிய விரும்புகிறேன். என்னிடம் அனைத்தும் சொல்வாயாக" என்று கேட்டான்".(12)

வியாசர் தொடர்ந்தார், "அதற்கு அந்த மங்கை, "ஓ சக்ரா {இந்திரா}, நான் யார் என்பதையும், நான் ஏன் நற்பேறற்றவளாக இருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருக்கலாம். நான் அழைத்துச் செல்லும் இடத்திற்கு நீ வந்தால் நான் அழமாட்டேன். அப்படி வந்தால், நான் ஏன் அழுகிறேன் என்பதை அறிந்து கொள்வாய்" என்றாள்.(13)

அந்த மங்கையின் வார்த்தைகளைக் கேட்டு, அவளர் சென்ற வழியே இந்திரனும் பின்தொடர்ந்து சென்றான். விரைவில் இமயத்தின் சிகரங்கள் ஒன்றில் ஓர் அழகான இளைஞனும், ஒரு மங்கையும் அரியணையில் அமர்ந்து கொண்டு பகடை விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) {ஆணும், பெண்ணுமான} அந்த இளைஞர்களைக் கண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, "ஓ புத்திமானான இளைஞனே, இந்த அண்டம் எனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாயாக" என்றான். இருப்பினும், அந்த மனிதன் பகடையில் அவ்வளவு ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததால், வந்தவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இந்திரன், "நானே அண்டத்தின் தலைவன்" என்றான்.(15)

அந்த இளைஞன் (தேவர்கள் தேவன்) மஹாதேவனைத் {சிவனைத்} தவிர வேறு யாரும் இல்லை. அவன், கோபத்தில் இருந்த இந்திரனைக் கண்டு, சிறு புன்னகை மட்டுமே புரிந்தான். இருப்பினும் அந்தப் பார்வையால், தேவர்கள் தலைவன் உடனே முடக்கப்பட்டு மரக்கட்டையைப் போல அங்கே நின்றான்.(16) பகடை விளையாட்டு முடிந்ததும், அந்த ஈசானன், அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், "சக்ரனை {இந்திரனை} இங்கே கொண்டு வா. மறுபடியும் செருக்கு அவனது இதயத்திற்குள் வராதவாறு, அவனுக்கு நான் பாடம் புகட்ட வேண்டும்" என்றான்.(17)  முடக்கப்பட்டிருந்த தேவர்கள் தலைவன் சக்ரன் {இந்திரன்}, அந்தப் பெண்மணியால் தொடப்பட்ட அந்தத் தீண்டலால் தரையில் விழுந்தான். பெரும் சக்தி கொண்ட சிறப்புவாய்ந்த ஈசானன் அவனிடம், "ஓ சக்ரா {இந்திரா}, இனி ஒருபோதும் இவ்வாறு நடந்து கொள்ளாதே.(18) உனது பலமும், சக்தியும் அளவிடமுடியாதவை, இந்தப் பெரும் கல்லை அகற்றி, சூரியனுக்கு ஒப்பான பிரகாசமுள்ள மற்றவர்கள் காத்திருக்கும் அந்தக் குழிக்குள் செல்வாயாக. அவர்கள் அனைவரும் உன்னைப் போன்றவர்களே" என்றான்.(19)

இந்திரன் அந்தக் கல்லை அகற்றி, மலைகளின் அரசனின் மார்பில் இருக்கும் அந்தக் குகையில், தன்னைப் போலவே நான்கு பேர் இருப்பதைக் கண்டான். அவர்களது அவல நிலையைக் கண்ட சக்ரன் {இந்திரன்} துயரத்தால் பீடிக்கப்பட்டு, "நானும் இவர்களைப் போல இருக்க வேண்டுமா?" என்றான்.(20)

பிறகு அந்தக் கிரீச தேவன் {சிவன்}, இந்திரனை முழுமையாகக் கண்டு கோபத்தில் கண்களை விரித்து, "ஓ ஆயிரம் வேள்விகள் செய்தவனே, என்னை அவமதித்துத் தவறு இழைத்ததால், நேரம் கடத்தாமல் குகைக்குள் நுழைவாயாக" என்றான். (21) ஈசானனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, பழித்துப் பேசப்பட்ட அந்தப் பயங்கரமான சூழலால் பெரும் வலி கொண்டு, உறுப்புகள் பலமற்றுப் போய், காற்றில் படபடக்கும் இமயத்தின் அத்திமர இலை {அரச இலை} போல அச்சத்தால் நடுங்கினான்.(22) காளை வாகனம் கொண்ட அந்தத் தேவனின் {சிவனின்} எதிர்பாராத சாபத்திற்கு உள்ளான இந்திரன், கரங்கள் குவித்துத் தலை முதல் கால் வரை நடுங்கிப் பல வடிவங்களும், அவதாரங்களும் எடுக்கும் அந்தக் கடும் தெய்வத்திடம், "ஓ பவனே, முடிவற்ற அண்டத்தின் காவலன் நீயே" என்றான்.(23)

கடும் சக்தி கொண்ட அந்தத் தேவனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்த அவன் {சிவன்}, "உன்னைப் போன்ற நிலை கொண்டவர்கள் எனது அருளை அடைய மாட்டார்கள். ஒருசமயத்தில் இவர்கள் அனைவரும் (குகையில் இருப்பவர்கள்) உன்னைப் போல்தான் இருந்தனர். இந்தக் குகைக்குள் நுழைந்து, சிறிது காலத்திற்கு இங்கேயே கிடப்பாயாக.(24) உங்கள் அனைவரின் தலைவிதியும் நிச்சயமாக ஒன்றே. நீங்கள் அனைவரும் உலகத்தில் மனிதர்களாகப் பிறந்து, பல கடினமான பணிகளைச் செய்து, கணக்கிலடங்கா மனிதர்களைக் கொன்று, உங்கள் நற்செயல்களால் தகுதியடைந்து, மீண்டும் மதிப்பு மிக்க இந்திரலோகம் திரும்புவீர்கள். நான் சொன்னதையும் தவிர்த்து, இன்னும் பல சாதனைகளையும் அங்கே நீங்கள் செய்வீர்கள்" என்றான்.(25,26)

அதன் பிறகு, பிரகாசமுள்ள அந்த இந்திரர்கள், "எங்கள் உலகத்திலிருந்து நாங்கள், மனிதர்களின் உலகத்திற்குச் சென்று எங்கள் முக்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடும் சாதனைகளைச் செய்வோம். ஆனால், தர்மனும், வாயுவும், மகவத்தும் {இந்திரனும்}, அஸ்வினிகளும் எங்கள் தாயாரிடம் எங்களைப் பெறட்டும். தேவ மற்றும் மனித ஆயுதங்களைப் பயன்படுத்தி மனிதர்களுடன் போரிட்டு, நாங்கள் மீண்டும் இந்திரலோகம் திரும்புவோம்" என்றனர்.(27)

வியாசர் தொடர்ந்தார், "பழைய இந்திரர்களின் அப்பேச்சைக் கேட்ட, வஜ்ரதாரி {இந்திரன்} அந்தத் தேவர்களில் முதன்மையானவனிடம், "இக்கடினமான பணிக்கு நானே நேரடியாகச் செல்லாமல், என்னிலிருந்து ஒரு பகுதியை உற்பத்தி செய்து, இவர்களில் ஐந்தாவது ஒருவனாக அனுப்புகிறேன்" என்றான்.(28)

விசுவபுக், பூததாமன், பெரும் சக்தி கொண்ட சிபி {சிபிச்சக்கரவர்த்தி}, நான்காவது சாந்தி மற்றும் தேஜாஸ்வி ஆகியோரே அந்தப் பழைய இந்திரர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர்(29). வல்லமைமிக்க வில்லைக் கொண்ட அந்த ஒப்பற்ற தேவன் {சிவன்}, அந்த ஐந்து இந்திரர்களிடமும் கருணை கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்ய அருளினான். மேலும், தெய்வீக ஸ்ரீ-ஆன (அருள் தேவதையான) {லட்சுமிதேவியான} ஒப்பற்ற அழகு கொண்ட அந்த மங்கையை மனித உலகில் அவர்களுக்குப் {அந்த ஐந்து இந்திரர்களுக்குப்} பொது மனைவியாக நியமித்தான்.(30)

அந்த ஐந்து இந்திரர்களையும் அழைத்துக் கொண்டு, அளவிடமுடியா ஆற்றல் கொண்டவனும், முடிவற்றவனும், படைக்கப்படாத ஆவியானவனும், பழையவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், வரம்புகள் இல்லாத அண்டங்களின் ஆவியுமான நாராயணனிடம் ஈசன் சென்றான்.(31) அனைத்தையும் நாராயணன் அங்கீகரித்தான். அந்த இந்திரர்கள் மனிதர்களின் உலகில் பிறந்தார்கள். பிறகு ஹரி (நாராயணன்) தனது உடலில் இருந்து கறுப்பும், வெள்ளையுமான இரு முடிகளை {மயிர்களை} எடுத்தான்.(32) அந்த இரு முடிகளும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற யது குலத்தின் கருவறைகளில் புகுந்தன. வெள்ளையாக இருந்த அந்த முடிகளில் ஒன்று பலதேவன் {பலராமன்} ஆனது. அந்தக் கறுப்பு முடியானது, கேசவனின் வடிவமாகக் கிருஷ்ணன் ஆனது.(33)

இமயத்தின் குகைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பழங்காலத்தின் இந்திரர்கள், பெரும் சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பாண்டவர்களில், சவ்யசச்சின் {சம திறமையுடன் இரு கைகளினாலும் செயல்படுத்துபவன்} என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், சக்ரனின் {இந்திரனின்} ஒரு பகுதியாவான்".(34)

வியாசர் தொடர்ந்தார், "ஓ மன்னா, இப்படியாகப் பழங்காலத்திய இந்திரர்கள் பாண்டவர்களாகப் பிறந்தனர். அந்தத் தெய்வீக ஸ்ரீ-யே ஒப்பற்ற அழகு கொண்ட திரௌபதியாகப் பிறந்து, அவர்களின் பொது மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(35) சூரியனையும், நிலவையும் போன்ற காந்தி கொண்டு இரண்டு மைல்கள் வரைத் தனது நறுமணத்தை வீசும் அவள், வேள்விச் சடங்கின் அறத்தால் பூமியில் பிறக்காமல் எப்படிச் சாதாரணமாகப் பிறக்க முடியும்?(36) ஓ மன்னா, எனது ஆன்மப் பார்வையைக் கொண்டு நான் உனக்கு ஒரு வரத்தை மகிழ்ச்சியாகத் தருகிறேன். அவர்களுடைய புனிதமான பழைய தெய்வீக உடல்களுடன் குந்தியின் மகன்களை இப்போது பார்" என்றார்".(37)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன அறச் செயல்புரியும் அந்தப் புனிதமான பிராமணரான அந்த வியாசர், தனது ஆன்ம பலத்தால், அந்த மன்னனுக்கு தெய்வீகப் பார்வையை அளித்தார். அதனால் அந்த மன்னன் {துருபதன்} பாண்டவர்களை அவர்களது பழைய தெய்வீக உடலுடன் கண்டான்.(38) அந்த மன்னன் {துருபதன்} அவர்களைப் பழைய தெய்வீக உடலுடனும், தங்கக் கிரீடங்களுடனும், தெய்வீக மாலைகளுடனும், இந்திரனைப் போல அனைத்து ஆபரணங்களும் பூண்டு, நெருப்பையும், சூரியனையும் போன்ற நிறத்தில் அழகாகவும், இளமையாகவும், அகன்ற மார்புகளுடனும், ஐந்து முழ உயரத்திலும் இருப்பதைக் கண்டான்.(39) அவர்கள், அனைத்துச் சாதனைகளையும் தன்னகத்தே கொண்டு, தெய்வீக ஆடைகள் பூண்டு, பெரும் அழகுடனும், மாலைகளின் நறுமணத்துடனும் முக்கண் கடவுளரை (மகாதேவர்களை) {சிவன்களைப்} போல, அல்லது வசுக்களைப் போல, அல்லது ருத்திரர்களைப் போல, அல்லது ஆதித்யர்களைப் போல இருந்தனர்.(40)

பாண்டவர்களையும், குறிப்பாக அர்ஜுனனையும் பழைய இந்திரர்களாகக் கண்ட மன்னன் துருபதன் பெரும் மனநிறைவு கொண்டான். அந்தத் தெய்வீகச் சக்தி அவர்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்ட அந்த ஏகாதிபதி {துருபதன்} மிகவும் ஆச்சரியமடைந்தான்.(41) அம்மன்னன் பெரும் அழகுடன் கூடிய பெண்மணிகளில் முதன்மையான தனது மகளை நோக்கி, அவளிடம், அந்தத் தெய்வீகப் பிறவிகளுக்கு மனைவியாகப் போகும் நெருப்பைப் போன்றும், நிலவைப் போன்றும் பிரகாசமான, பெரும் அழகும், புகழும் கொண்ட அந்தத் தெய்வீக மங்கையைக் கண்டான் {கங்கைக் கரையில் அழுது கொண்டிருந்தாளே அந்த மங்கை}.(42)

அந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதி! சத்தியவதி மகனின் {வியாசரின்} பாதங்களைத் தொட்டு, "ஓ பெரும் முனிவரே, எதுவும் உமக்கு அதிசயமன்று" என்று சொன்னான்.(43)

அப்போது, அந்த முனிவர் மகிழ்ச்சியாகத் தொடர்ந்தார், "ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில், ஒரு சிறப்புவாய்ந்த முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகானவளாகவும், கற்புக்கரசியாகவும் இருந்தாள். ஆனால் அவள் ஒரு கணவனை அடையவில்லை.(44) எனவே, அந்தப் பெண் கடும் தவங்கள் இயற்றிச் சங்கரனை (மகாதேவனை) {சிவனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். அந்தத் தெய்வமான சங்கரன், அவளது தவத்தால் மனநிறைவை அடைந்து, அவளிடம், "நீ விரும்பிய வரத்தைக் கேள்" என்றார்.(45)

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, அந்தத் தன்னிகரில்லா தலைவனிடம், மறுபடியும் மறுபடியும் "அனைத்துச் சாதனைகளையும் செய்யும் கணவரை அடைய நான் விரும்புகிறேன்" என்றாள்.(46) தேவர்களின் தலைவனான சங்கரனும் அவளை மனநிறைவு கொள்ளச் செய்ய, "இனிமையான மங்கையே, நீ ஐந்து கணவர்களை அடைவாய்" என்றான்.(47) அந்தத் தேவனை மனநிறைவு கொள்ளச் செய்ய அந்த மங்கை மறுபடியும், "ஓ சங்கரா, உன்னிடம் இருந்து அனைத்து அறமும் கொண்ட ஒரு கணவரை அடையவே நான் விரும்புகிறேன்" என்றாள்.(48) அந்தத் தேவர்க்குத் தேவன், அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு மறுபடியும், "ஓ மங்கையே, நீ ஐந்து முறை என்னிடம், 'எனக்குக் கணவனைக் கொடு' என்று கேட்டாய்(49). எனவே, ஓ இனிமையானவளே, நீ கேட்டவாறே உனக்குக் கிடைக்கும். நீ அருளப்பட்டிருப்பாயாக. இருப்பினும் இவை அனைத்தும் உனது எதிர்கால வாழ்விலேயே {அடுத்த ஜென்மத்திலேயே} கிடைக்கும்" என்றான்".(50)

வியாசர் தொடர்ந்தார், "ஓ துருபதா, இந்தத் தெய்வீக அழகுடைய உனது மகளே அந்தக் கன்னிகையாவாள். உண்மையில், பிருஷதனின் குலத்தில் வந்த இந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, ஐந்து கணவர்களுக்குப் பொது மனைவியாகும்படி முன்பே விதிக்கப்பட்டிருக்கிறாள்.(51) அந்தத் தெய்வீக ஸ்ரீ, கடும் தவங்களை இயற்றி, பாண்டவர்களுக்காகவே உனது மகளாக அந்தப் பெரும் வேள்வியில் பிறந்தாள்.(52) அந்த அழகிய தேவியே, அனைத்து தேவர்களாலும் {இந்திரர்களாலும்} சேவிக்கப்பட்டு, அவளது தனிப்பட்டச் செயல்களின் மூலமே ஐந்து கணவர்களுக்கும் மனைவியாகிறாள். இதன்காரணமாகவே சுயம்பு இவளைப் படைத்தான்” என்றார்[2]. இவை யாவற்றையும் கேட்ட மன்னன் துருபதன், "நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வீராக" என்று சொன்னான்.(53)

[2] கும்பகோணம் பதிப்பில் வியாசர் இதை விவரித்தபிறகு நிந்தந்து என்ற மன்னனின் மகன்களான ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்துசாரன், அதிஸாரன் ஆகிய ஐவரும், சிபியின் மகளான பௌமாஸ்வி என்பவளாள் சுயம்வரத்தில் வரிக்கப்பட்டதையும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகனை ஈன்றதையும், அவர்களின் வம்சத்தில் வந்தவர்களே ஸால்வேயர்கள், சூரசேனர்கள், ஸ்ருதசேனர்கள், திந்துஸாரர்கள், அதிஸாரர்கள் என்பதையும் துருபதனுக்குச் சொல்கிறார். இந்தக் கதையும் கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்