Thursday, September 04, 2014

ஜெயத்ரதன் அவமானமும் விமோசனமும்! - வனபர்வம் பகுதி 270

The Insult and redemption to Jayadratha!  | Vana Parva - Section 270 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

ஜெயத்ரதன் பீமனிடம் பிடிபடுவது; பீமன் ஜெயத்ரதனின் சிரத்தை மழிப்பது; யுதிஷ்டிரனிடம் அழைத்துச் செல்வது; யுதிஷ்டிரனும், திரௌபதியும், ஜெயத்ரதனை விடுவிப்பது; அவமானத்தில் திரும்பிய ஜெயத்ரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது; ஜெயத்ரதன் பெற்ற வரம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனது உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய ஜெயத்ரதன், அந்த இரு சகோதரர்களையும் {பீமனையும், அர்ஜுனனையும்} கண்டு, உயர்த்திய கரங்களுடன் மிகுந்த துன்பத்துடனும், மிகுந்த வேகத்துடனும், முன் எச்சரிக்கையுடனும் ஓடினான். ஆனால் வலிமைமிக்கக் கோபக்கார பீமசேனன், தனது தேரைவிட்டு இறங்கி, ஓடிக்கொண்டிருந்த அவனைத் தொடர்ந்தோடி, அவனின் {ஜெயத்ரதனின்} தலை மயிரைப் பற்றிப் பிடித்தான். அப்படியே அவனைக் காற்றில் மேலே தூக்கி, வன்முறையுடன் தரையில் எறிந்தான். பிறகு அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பற்றி அவனை அடித்தான். சுய நினைவு திரும்பிய பிறகு, அந்த இழிந்தவன் {ஜெயத்ரதன்} உரக்கத் தேம்பி அழுதான். பீமன் தனது கால் மற்றும் கை முட்டிகளால் அவனது மார்பைக் குத்தினான். இப்படி நையப்புடைக்கப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} விரைவில் உணர்வை இழந்தான்.




(தங்கள் தங்கை) துச்சலை குறித்து யுதிஷ்டிரன் சொன்னதை ஞாபகப்படுத்தி, சினம் கொண்ட பீமசேனன், அந்த இளவரசனை {ஜெயத்ரதனை} மேலும் தண்டிக்காமல் பல்குனன் {அர்ஜுனன்} அவனை {பீமனை} அறிவுறுத்தினான். ஆனால் பீமன், “இந்த இழிந்த பாவி {ஜெயத்ரதன்}, கொடுமை தாங்கா கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} கொடுந்தீங்கைச் செய்திருக்கிறான். எனவே, இவன் என் கையால் இறக்கத்தக்கவன்! ஆனால் நான் என்ன செய்ய? மன்னர் எப்போதும் கருணையால் நிரம்பி வழிகிறார். நீயும் குழந்தைத்தனமான அறவுணர்வால் {தர்ம உணர்வால்} எனது வழியில் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்துகிறாய்!” என்று மறுமொழி கூறினான். இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, தனது பிறைவடிவ அம்பை {அர்த்தச் சந்திரக் [பாதி நிலவு] கணையை} எடுத்து, அந்த இளவரசனின் {ஜெயத்ரதனின்} ஆங்காங்கே ஐந்து கொத்துகளை {குடுமிகளை} விட்டு விட்டு, தலையில் உள்ள மயிரைச் சிரைத்தான்.

ஜெயத்ரதன் இதுகுறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு எதிரியிடம் பேசிய விருகோதரன் {பீமன்}, “நீ வாழ விரும்பினால், நான் சொல்வதைக் கேள். ஓ! மூடனே! உன் விருப்பத்தை நீ அடைவது குறித்து {எப்படி என்று} நான் உனக்குச் சொல்கிறேன். பொதுக்கூட்டங்களிலும், திறந்த சபைகளிலும் "நான் பாண்டவர்களின் அடிமை" என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனது உயிரை உனக்குக் கொடுப்பேன்! இது போர்க்களம் வென்றவர்கள் செய்யும் வழக்கமான விதியே" என்றான். இப்படி நடத்தப்பட்டும், சொல்லப்பட்டும் இருந்த மன்னன் ஜெயத்ரதன், பார்க்க எப்போதும் கடுமையாக இருந்த கடும்வலிமைமிக்க வீரனிடம் {பீமனிடம்}, “அப்படியே ஆகட்டும்" என்றான். அவன் {ஜெயத்ரதன்} புழுதிபடிந்த தேகத்துடன் உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்தான். பிறகு அர்ஜுனனும் விருகோதரனும் {பீமனும்} சேர்ந்து அவனைச் சங்கிலியால் கட்டி தேரில் புகுத்தினார்கள். அர்ஜுனனுடன் தேரில் ஏறிய பீமன், அதை ஆசிரமத்திற்குச் செலுத்தினான். பிறகு அங்கே அமர்ந்திருந்த யுதிஷ்டிரனை அணுகி, அந்நிலையில் இருந்த ஜெயத்ரதனை மன்னன் {யுதிஷ்டிரன்} முன்பு கிடத்தினான். மன்னன் {யுதிஷ்டிரன்} சிரித்துக் கொண்டே, சிந்து நாட்டு இளவரசனை {ஜெயத்ரதனை} விடுவிக்குமாறு அவனிடம் {பீமனிடம்} சொன்னான்.


பிறகு பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த இழிந்தவன் பாண்டவர்களின் அடிமையானன் என்பதைத் திரௌபதிக்குச் சொல்லும்" என்றான். அதற்கு அவனது {பீமனின்} அண்ணன் {யுதிஷ்டிரன்}, அவனிடம் {பீமனிடம்} பாசத்துடன், “நீ நம் மீது ஏதாவது மரியாதை வைத்திருக்கிறாயானால், இந்த இழிந்தவனை விடுவித்துவிடு" என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} மனதைப் படித்த திரௌபதியும், “அவனை விட்டுவிடுங்கள். அவன் மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அடிமையாகிவிட்டான். மேலும் தலையில் ஐந்து குடிமிகளை வைத்து நீரும்  அவனை உருகுலைத்து விட்டீர்" என்றாள். பிறகு சிகரத்தில் இருந்து விழுந்தவனான அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, விடுதலையைப் பெற்று, மன்னன் யுதிஷ்டிரனை அணுகி, அவனை வணங்கினான். அங்கிருந்த முனிவர்களைக் கண்டு, அவர்களையும் வணங்கினான்.

பிறகு தர்மனின் மகனான இளகிய மனம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனால் தாங்கப்பட்ட ஜெயத்ரதனின் நிலையைக் கண்டு, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ இப்போது சுதந்திர மனிதன்; நான் உன்னை விடுவிக்கிறேன்! மீண்டும் இதுபோன்று செய்யாது கவனமாக இருப்பாயாக. இப்போது நீ போகலாம். தீய மனம் கொண்ட நீ, சக்தியற்றவனாக இருப்பினும், ஒரு மங்கையை வன்முறையால் அபகரிக்க முயன்றாய்! இஃது உனக்கு அவமானமே! உன்னைத் தவிர வேறு எந்தக் கேடுகெட்டவன் இச்செயலைச் செய்வான்?” என்றான். பிறகு பாரதகுலத்தின் முதன்மையான மன்னன் {யுதிஷ்டிரன்} தீய செயல்கள் புரிந்த அவன் மீது கருணைக் கண் கொண்டும், அவன் உணர்வை இழந்துவிட்டான் என்று உணர்ந்தும், “உனது இதயத்தில் அறம் வளரட்டும்! அறநெறி மீறிய செயல்களில் உனது இதயத்தைச் செலுத்தாதே! உன் தேரோட்டிகள், குதிரைப்படை, காலாட்படையுடன் இப்போது நீ அமைதியாகச் செல்லலாம்" என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த இளவரசன் {ஜெயத்ரதன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் அவமானமடைந்து, தலையைத் தொங்கப்போட்டவாறு, ஒடுங்கிச் செல்லும் கங்கை, சமவெளிகளில் அகன்று செல்லும் ஓர் இடத்திற்கு அமைதியுடனும், துயரத்துடனும் சென்றான். உமையின் கணவனான முக்கண் தேவனின் {சிவனின்} பாதுகாப்பை இறைஞ்சி, அவ்விடத்தில் கடும் தவத்தைச் செய்தான். அவனது {ஜெயத்ரதனின்} தவத்தில் நிறைவு கொண்ட முக்கண் தேவனும் அவனது தகுதிக்குத்தக்க காணிக்கைகளை {தவத்தை} ஏற்க நேரடியாக வந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} ஒரு வரத்தையும் அருளினான். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இளவரசன் {ஜெயத்ரதன்} எவ்வாறு வரத்தைப் பெற்றான் என்பதைக் கேள்.

அத்தேவனிடம் {சிவனிடம்} பேசிய ஜெயத்ரதன், “தங்கள் தேர்களில் இருக்கும் பாண்டுவின் ஐந்து மகன்களையும் போர்க்களத்தில் நான் வீழ்த்த வேண்டும்" என்ற ஓரு வரத்தைக் கேட்டான். எனினும், அந்தத் தேவன் {சிவன்}, “இது நடக்காது" என்றான். மகேஸ்வரன், “அவர்களைப் போர்க்களத்தில் வெல்லவோ, கொல்லவோ யாராலும் முடியாது. எனினும், அர்ஜுனனைத் தவிர்த்து, மீதம் உள்ளவர்களைப் போர்க்களத்தில் உன்னால் (ஒரு முறை மட்டும்) தடுக்க முடியும். வலிய கரங்கள் கொண்ட வீரனான அர்ஜுனன், நரனின் பாணி {Nara styled} கொண்ட தேவ அவதாரமாவான். அவன் {நரனான அர்ஜுனன்} பழங்காலத்தில் பதரியில் தவம் பயின்றவன். தேவனான நாராயணன் அவனது நண்பனாவான். எனவே, தேவர்களாலேயே அவனை வீழ்த்த முடியாது. நானே கூட அவனுக்குப் பாசுபதம் என்ற தெய்வீக ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன். திசைப்புள்ளிகளின் பத்து லோகபாலகர்களிடம் இருந்து, வஜ்ரம் முதற்கொண்ட பலமிக்கப் பல்வேறு ஆயுதங்களை அவன் {அர்ஜுனன்} பெற்றிருக்கிறான். தேவர்களுக்குத் தலைமை குருவும், எல்லையற்ற ஆவியைக் கொண்ட பெரிய தேவனுமான விஷ்ணுவே {நாராயணனே} குணங்களற்ற தலைமையானவனாவான். அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருந்து, முழுப் படைப்பிலும் உள்ளுறைந்து இருக்கிறான். காலங்களின் சக்கரம் முடியும்போது, அனைத்தையும் உட்கொள்ளும் நெருப்பு வடிவம் கொண்டு, மலைகள், கடல்கள், தீவுகள், குன்றுகள், காடுகள், வனங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் உட்கொள்கிறவன் அவனே {விஷ்ணுவே}. பாதாள லோகத்தில் இருக்கும் நாகலோகத்தையும் இவ்வாறே அழித்ததும், பலவர்ணக் குவியல்களாகப் பெருமுழக்கமிடும் மேகங்களையும், மின்னல்கீற்றுகளையும் முழு வானத்திலும் பரவி, உயரத்தில் தோன்றச் செய்து, பிறகு தேர்களின் அச்சு அளவு கனம் கொண்ட நீரை அடர்த்தியாகப் பொழிந்து, எங்கும் வெளியை {நீரால்} நிறைத்து, அனைத்தையும் எரிக்கும் நெருப்பை அணைக்கிறான்.

நாலாயிரம் {4000} யுகங்கள் முடியும் நெருக்கத்தில் இந்தப் பூமி முழுவதும் ஒரே பெரிய கடலாக நீரால் நிறைந்திருக்கும். அசையும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு. சூரியன், சந்திரன், காற்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோள்கள் நட்சத்திரங்கள் அற்ற அண்டத்தில், ஆயிரம் தலைகளுடன், பல கண்கள் மற்றும் கால்கள் கொண்ட புலன்களால் உணரமுடியாத நாராயணன் என்று அழைக்கப்படும் பரமாத்மா ஓய்வெடுக்க விரும்பினான். ஆயிரம் தலைகளுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும் சேஷன் என்ற பாம்பு, பத்தாயிரம் சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டு, குருக்கத்திப்பூ {Kunda flower} போலவோ, சந்திரனைப் போலவோ, முத்துச்சரம் போலவோ, வெண்தாமரை போலவோ, பாலைப் {பால்} போலவோ, தாமரைத் தண்டின் இழைகளைப் போலவோ இருந்து, அவனது சங்காகச் {conch} {இங்கு படுக்கையாக என்ற பொருள் வர வேண்டும் என நினைக்கிறேன்} செயல்படுகிறது. வணங்கத்தக்க, எல்லாம்வல்ல தேவன், வெளிகள் அனைத்தையும் இரவின் அந்தகாரத்தில் மூழ்கடித்து, ஆழத்தின் மார்பில் இப்படியே உறங்கினான்.

பிறகு அவனது படைப்புத் தொழில் தூண்டப்பட்டதும், அவன் எழுந்திருந்து, எதுவுமில்லாமல் புறக்கணிக்கப்பட்ட அண்டத்தைக் காண்கிறான். நாராயணன் என்பதன் பொருளை மதித்து உரைக்கும், இது தொடர்பான ஒரு சுலோகம், “(முனிவர்) நரனால் நீர் படைக்கப்பட்டது. அதுவே {நீரே} அவனது உடலானது; எனவே அது நரனின் பாணி எனக் கேள்விப்படுகிறோம். அதுவே {நீரே} அவனது அயணத்தை (ஓய்வெடுக்கும் இடத்தை) உருவாக்கியதால், அவன் நாராயணன் {நரன் + அயணம் = நாராயணன்} என்று அறியப்படுகிறான்" என்கிறது. அண்டத்தின் மறு படைப்புக்காக, அந்த நித்தியமானவன் தியானத்தில் இருக்கும் போது, ஒரு தாமரை மலர் அவனது தொப்புளில் {நாபியில்} இருந்து உதித்தது. நான்முகனான பிரம்மன் அந்தத் தொப்புள்த்தாமரையில் இருந்து வெளியே வந்தான். பிறகு அனைத்து உயிரினங்களுக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, அந்த மலரில் அமர்ந்து, முழு அண்டமும் வெறுமையாய் இருப்பதைக் கண்டு, தன் சுய விருப்பத்தின் பேரில், மரீசி மற்றும் பிறரரடங்கிய (ஒன்பது) [1] பெரும் முனிவர்களைப் படைத்தான்.

[1] மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், நாரதர், பிருகு ஆகியோர் அந்த ஒன்பது முனிவர்கள் என்று சொல்லப்படுகிறது.

அவர்களும் {முனிவர்களும்}, தங்கள் பங்குக்கு அதையே {வெறுமையைக்} கண்டு, யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஊர்வன, மனிதர்கள் மற்றும் அனைத்து அசையும் அசையா உயிரினங்களைப் படைத்து, படைப்பை முழுமை செய்தனர். பரமாத்மா மூன்று நிலைகளில் இருக்கிறான். பிரம்மனின் உருவத்தில் அவன் படைக்கிறான்; விஷ்ணுவின் உருவத்தில் அவன் காக்கிறான்; ருத்ரனின் உருவத்தில் அவன் அண்டத்தை அழிக்கிறான். ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, வேதங்களை அறிந்த முனிவர்களாலும், அந்தணர்களாலும் சொல்லப்படும் விஷ்ணுவின் அற்புத சாதனைகளை நீ கேட்டதில்லையா? இப்படி ஒரு முறை பரந்த நீர்ப்பரப்புக் கொண்ட உலகம், ஒரே கடலாக, தனக்கு மேலே ஆகாயத்துடன் இருந்தபோது, மழைக்காலத்து இரவின் மின்மினிப் பூச்சிகள் போல, அந்தத் தலைவன் {விஷ்ணு}, தனது படைப்புகளுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்காக, நிலையான தரையைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். பிறகு நீரில் மூழ்கியிருந்த பூமியை உயர்த்த விருப்பம் கொண்டான்.

"இந்த வெள்ளத்திலிருந்து பூமியை மீட்க நான் என்ன வடிவம் எடுப்பது?” என்று நினைத்து, தெய்வீகப் பார்வையால் கண்டு, நீரில் விளையாட விரும்பும் காட்டுப் பன்றியின் வடிவம் {வராக அவதாரம்} கொள்ள நினைத்தான். பிறகு, வேதங்கள் மூலம் உள்ளுணர்வு கொண்டு பத்து யோஜனை நீளத்துடன், கூரிய தந்தங்களுடன், மேகம் போன்ற கரிய நிறத்துடன், மலை போன்ற பெரிய உருவத்துடன், மேகத்திரள் போன்று கர்ஜித்த அந்தத் தலைவன் நீருக்குள் மூழ்கி, தனது {பன்றியாக இருந்த தனது} ஒரு தந்தத்தால் பூமியை உயர்த்தி, அதைச் சரியான கோளத்தில் மாற்றி வைத்தான்.

இன்னுமொரு காலத்தில், அந்தப் பலம்வாய்ந்த தலைவன் {நாராயணன்}, பாதிச் சிங்கம் பாதி மனிதன் கொண்ட அற்புத வடிவம் {நரசிம்ம அவதாரம்} கொண்டு, தனது கைகளைப் பிசைந்து கொண்டு, தைத்தியர்களின் ஆட்சியாளன் சபைக்குச் சென்றான். தேவர்களின் எதிரியும், திதியின் மகனும் தைத்தியர்களின் மூதாதையுமானவன் {ஹிரண்யகசிபு}, அந்தத் தலைவனின் {நரசிம்மனின்} விசித்திர வடிவத்தைக் கண்டு, உணர்வுகளால் வெடித்து, கடுங்கோபம் கொண்டு, கொழுந்துவிட்டு எரியும் கண்களைக் கொண்டான். போர்க்குணம் மிக்கத் திதியின் மகனும், தேவர்களின் எதிரியுமான அந்த ஹிரண்யகசிபு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கருமேகத்திரள் போலக் காட்சியளித்து, கையில் திரிசூலம் கொண்டு, மேகமெனக் கர்ஜித்து, பாதிச் சிங்கம், பாதி மனிதன் வடிவம் கொண்டவனை நோக்கி விரைந்தான். பிறகு பாதிச் சிங்கம் பாதி மனிதனாக இருந்த வலிமைமிக்கவனான காட்டுவிலங்குகளின் மன்னன் {நாராயணன்}, ஒரே பாய்ச்சலில் காற்றில் எழுந்து, தனது கூரிய நகங்களால் அந்தத் தைத்தியனை  {ஹரிரண்யகசிபுவை} இருகூறாக கிழித்துப் போட்டான். பெரும் பிரகாசம் கொண்ட, அந்தப் புகழத்தக்க தாமரைக் கண் தலைவன் {நாராயணன்}, அனைத்து உயிர்களின் நன்மைக்காக அந்தத் தைத்திய மன்னனைக் {ஹிரண்யகசிபுவைக்} கொன்று, மீண்டும் அதிதியின் கருவறையில் காசியபரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்தான்.

ஆயிரம் வருடங்கள் முடிந்ததும், அவள் {அதிதி} அந்தத் தெய்வீகக் கருவைப் பெற்றெடுத்தாள். பிறகு மழை நிறைந்த மேகங்களின் நிறத்துடன், பிரகாசமிக்கக் கண்களுடன், குள்ளமான வடிவத்துடன் அவன் {நாராயணன் வாமனனாகப்} பிறந்தான். அவன் துறவுக்கான தண்டத்தையும், நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கைகளில் கொண்டிருந்தான். அவனது மார்பில் ஒரு சுருட்டை முடி சின்னமாகக் {ஸ்ரீவத்சம்} குறிக்கப்பட்டிருந்தது. அந்த வணங்கத்தக்கவன் {வாமனன்} சடாமுடி தரித்து, பூணூல் அணிந்து, சற்றுப் பருமனான, அழகான, பிரகாசமான காந்தி கொண்ட உடலைப் பெற்றிருந்தான். தானவ மன்னனான பலியின் வேள்வி முடியும் தருவாயில் அந்த வேள்விக்கூட்டத்திற்குள் பிருஹஸ்பதியின் உதவியுடன் அவன் {வாமனன்} நுழைந்தான். குட்டை உடல் கொண்டவனைக் கண்ட அந்தப் பலி மனநிறைவு கொண்டு அவனிடம், “உம்மைக் கண்டு மகிழ்கிறேன், ஓ! அந்தணரே {வாமனரே}, என்னிடம் உமக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லும்" என்று கேட்டான்.

பலியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குட்டை தேவன் {வாமனன்}, புன்சிரிப்புடன், “{ஸ்வஸ்தி} அப்படியே ஆகட்டும்! தானவர்கள் தலைவா {பலியே}, எனக்கு {என் காலடி அளவு கொண்ட} மூன்றடி நிலம் கொடு" என்று கேட்டான். எல்லையற்ற சக்திகொண்ட அந்த அந்தணன் கேட்டதைக் கொடுக்க பலி மனநிறைவு கொண்டான். பிறகு {தனது} காலடிகளால் பூமியை அளக்க எண்ணங்கொண்ட போது, அந்த ஹரி {வாமனன்}, அற்புதமான இயல்புக்குமிக்க வடிவத்தை அடைந்தான். மூன்று காலடிகளில் எல்லையற்ற உலகத்தை அளந்தான். பிறகு, என்றுமுள்ள தேவனான விஷ்ணு, அதை இந்திரனுக்குக் கொடுத்தான். இப்போது உனக்குச் சொல்லப்பட்ட வரலாறு, “வாமன அவதாரம்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவனிலிருந்து அனைத்து தேவர்களும் தங்கள் நிலையை அடைந்தனர். அவனுக்குப் பிறகு, இந்த உலகம் வைஷ்ணவம் என்றும் விஷ்ணுவால் நிறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. தீயவர்களின் அழிவுக்காகவும், அறத்தைக் காக்கவும், அவனே இப்போது யது குலத்தில் அவதரித்திருக்கிறான். வணங்கத்தக்க விஷ்ணு இப்போது கிருஷ்ணனின் பாணியில் இருக்கிறான்.


ஓ! சிந்து நாட்டு மன்னா {ஜெயத்ரதா}, உலகே வணங்கும் தலைவனின் சாதனைகள் இவையே. கற்றவர்கள் அவனையே {நாராயணனையே} ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், பிறப்பற்றவன் என்றும், தெய்வீகமானவன் என்றும் வர்ணிக்கிறார்கள். போர்க்கலைகளை அறிந்தவர்களில் சிறந்தவனாக, மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி, தெய்வீகமாக, சுருள்முடிச் சின்னம் {ஸ்ரீவத்சம் என்ற மச்சம்} தரித்து, கைகளில் கதாயுதம், சக்கரம், சங்கு ஆகியவற்றோடு கூடிய, வெல்லப்பட முடியாதவனை, கிருஷ்ணன் என்று அவர்கள் {கற்றவர்கள்} அழைக்கிறார்கள். இத்தகு குணங்களைக் கொண்ட கிருஷ்ணன் அர்ஜுனனைப் பாதுகாக்கிறான். எல்லையற்ற சக்தி கொண்ட புகழ்பெற்றவனான அந்தத் தாமரைக் கண் கொண்டவன் {கிருஷ்ணன்}, ஒரே தேரில் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {அர்ஜுனனுடன்} பயணித்து அவனைப் பாதுகாக்கிறான்! எனவே, அவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவன்; தேவர்களாலேயே அவனது சக்தியைத் தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது மனிதத் தன்மை கொண்டவர்களால் எப்படிப் பிருதையின் மகனைப் {அர்ஜுனனைப்} போர்க்களத்தில் வீழ்த்த முடியும்? எனவே, ஓ! மன்னா {ஜெயத்ரதா}, அவனைத் தனியாக விடு! {உன்னால் அர்ஜுனனை வெல்ல முடியாது}. எனினும், நீ ஒரு நாளைக்கு மட்டும் மீதியுள்ள யுதிஷ்டிரனின் படையினர் அனைவரையும், உனது எதிரிகளான பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் வீழ்த்துவாய்" என்றான் {சிவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளை அந்த இளவரசனுக்கு {ஜெயத்ரதனுக்குச்} சொன்ன, பாவங்களை அழிப்பவனும், உமையின் கணவனும், காட்டுவிலங்குகளின் தலைவனும், {தக்ஷனின்} வேள்வியை அழித்தவனும், திரிபுரனைக் கொன்றவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், குள்ளர்கள் மற்றும் கூன்முதுகர்களாலும், பயங்கரக் கண்களும், காதுகளும், உயர்த்திய கைகளும் கொண்ட பயங்கரத் தொண்டர்களாலும் சூழப்பட்டிருக்கும் வணங்கத்தக்க ஹரன் {சிவன்}, தனது மனைவியான உமையுடன், அந்த இடத்திலிருந்து மறைந்து போனான். அந்தத் தீய ஜெயத்ரதனும் தனது இல்லம் திரும்பினான். பாண்டுவின் மகன்கள் தொடர்ந்து காம்யக வனத்தில் வசிக்கலானார்கள்.”


269ம் பகுதியோடு திரௌபதி ஹரணப் பர்வம் முடிவடைய வேண்டும். 270வது பகுதியான இந்தப் பகுதி ஜெயத்ரத விமோக்ஷண பர்வமாகியிருக்க வேண்டும். அடுத்தப் பகுதியான 271ம் பகுதியில் இருந்து ராமோபாக்யான பர்வம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கங்குலி இவை யாவையும் செய்யவில்லை. எனவே நாமும் அவர் {கங்குலி} வழியையே பின்பற்றி திரௌபதி ஹரணப் பர்வமாகவே தொடர்கிறோம்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்