Sunday, June 14, 2015

அண்டப்பெருவடிவம் - விஸ்வரூபம்! - உத்யோக பர்வம் பகுதி 131

The universal form! | Udyoga Parva - Section 131 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –60)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் தன்னுள் அண்டசராசரங்களின் காட்சியை வெளிப்படுத்தியது; கிருஷ்ணன் வெளிப்படுத்திய அண்டப்பெருவடிவைக் கண்டவர்கள் அனைவரும் அஞ்சித் தங்கள் கண்களை மூடிக்கொள்வது; அண்டத்தில் உள்ள அனைத்தும் கிருஷ்ணனின் வடிவத்தில் தெரிந்தது; அந்த வடிவத்தைப் பீஷ்மர், துரோணர் விதுரர், சஞ்சயன் மற்றும் சில முனிவர்கள் மட்டுமே கண்டது; பிறகு மீண்டும் பழைய உருவத்தை அடைந்த கிருஷ்ணன் சபையை விட்டு வெளியேறி, பாண்டவர் மற்றும் கௌரவர்களின் நிலைகளைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களிடம் அதை உறுதி செய்து, குந்தியின் வீட்டுக்குச் சென்றது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரர் இதைச் சொன்னதும், பகையணிகளைக் கொல்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகன் துரியோதனனிடம், "மாயையால், ஓ! சுயோதனா {துரியோதனா}, நான் தனியன் என்று நீ கருதுகிறாய். அதனால்தான், ஓ! சிறுமதி படைத்தவனே, வன்முறையால் என்னை வீழ்த்தி பிறகு, என்னைச் சிறைபிடிக்க நீ முயல்கிறாய். எனினும், பாண்டவர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள். ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.


இதைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்தான். அப்படி அந்தச் சௌரி {கிருஷ்ணன்} சிரித்த போது, அவனது உடலில் இருந்து, சுடர்மிகும் நெருப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், கட்டைவிரலைவிடச் சிறிய அளவில், மின்னலின் பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற தேவர்கள் வெளிப்பட்டனர். அவனது {கிருஷ்ணனின்} முன்நெற்றியில் பிரம்மனும், மார்பில் ருத்ரனனும் தோன்றினார்கள். அவனது கரங்களில் லோகபாலர்கள் தோன்றினார்கள். அவனது வாயில் {முகத்தில்} இருந்து அக்னி, ஆதித்யர்கள், சத்யஸ்கள், வசுக்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோர், இந்திரன் மற்றும் விஸ்வதேவர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்.

அண்டப் பெருவடிவம் - விஸ்வரூபம்
எண்ணற்ற யக்ஷர்களும், கந்தர்வர்களும், ராட்சர்களும்கூட அதே அளவில் அங்கே வெளிப்பட்டனர். அவனது இரு கரங்களில் இருந்து சங்கர்ஷணனும் {பலராமனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெளிப்பட்டனர். வலது பக்கத்தில் வில்லுடன் அர்ஜுனன் நின்றான். இடது பக்கத்தில் கலப்பையுடன் பலராமன் நின்றான். அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்னே, பீமன், யுதிஷ்டிரன் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் நின்றனர். அவனுக்கு முன்னே அந்தகர்கள், பிரத்யும்னனுடன் கூடிய விருஷ்ணிகள் மற்றும் வலிமை நிறைந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்த மற்ற தலைவர்களும் இருந்தனர்.

{பாஞ்சஜன்யம் என்ற} சங்கு, {சுதர்சனம் எனும்} சக்கரம், {கௌமோதகி எனும்} கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், {ஹாலம் எனும்} கலப்பை, {சக்தி ஆயுதம் எனும்}, நந்தகம் {என்ற வாள்} மற்றும் இன்னும் பிற ஆயுதங்கள் அவனது பல்வேறு கரங்களில் பிரகாசத்துடனும், அடிப்பதற்கு உயர்த்திப் பிடித்த நிலையிலும் இருந்தன. அவனது கண்கள், மூக்கு {நாசி}, காதுகள் மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் புகையுடன் கலந்த தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவனது உடலின் நுண்துளைகளில் {pores} இருந்து சூரியக் கதிர்களைப் போன்ற தீப்பொறிகள் வெளிப்பட்டன.

{கீழ்வருவன கங்குலியில் இல்லாதவை : அவன் ஆயிரம் கால்களும், ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் கொண்டவனாக ஆனான். அப்போது, நாகலோகம் அவனது காலுக்கடியில் காணப்பட்டது. சந்திரனும் சூரியனும் கண்களாக, கோள்களும் [கிரகங்களும்] மற்ற அனைத்தும் அவனுடைய மாட்சிமை பொருந்திய உடலாகவும் இருந்தன. ஆறுகளும், கடல்களும் அவனுடைய வேர்வையாக இருந்தன. மலைகள் அனைத்தும் அவனுடைய எலும்புகளாக இருந்தன. மரங்கள் அவனுடைய உடல் மயிர்களாயின. இரவும் பகலும் அவனது இமைக்கொட்டுகள் ஆயின. சரஸ்வதி தேவி அவனது நாவில் இருந்தாள். என்று வேறு ஒரு பதிப்பில் காணக்கிடைக்கிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}

அந்த உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} பயங்கர வடிவத்தைக் {அண்டப்பெருவடிவைக்} கண்டு, துரோணர், பீஷ்மர், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட விதுரன்,  பெரும் நற்பேறுடைய சஞ்சயன் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்கள் ஆகியோரைத் தவிர, (மற்ற) மன்னர்கள் அனைவரும் அச்சம் கொண்ட இதயத்தோடு தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் அந்தத் தெய்வீக ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவர்களுக்கு தெய்வீகப் பார்வையை அளித்திருந்திருந்தான்.  

{துரோணர், பீஷ்மர், விதுரன், சஞ்சயன் மற்றும் முனிவர்கள் மட்டும் தங்கள் சொந்தக் கண்களுடன் அந்த அண்டப்பெருவடிவைக் கண்டனர். அந்தச் சக்தியற்ற மற்றவர்கள் கிருஷ்ணன் அளித்த ஞானக் கண்களால் அதைக் கண்டனர் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்.}.

{கீழ்வருவன கங்குலியில் இல்லாதவை : அவன் தெய்வீகப் பார்வை கொண்ட கண்களைத் திருதராஷ்டிரனுக்கு அளித்தான். அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன் அற்புதமான அந்த வடிவத்தைக் கண்டான். பிறகு தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், மஹோரகர்கள், பெரும்பேறு பெற்ற முனிவர்கள், லோகபாலர்கள், ஆகியோர் அந்தத் தலைவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் தலையால் வணங்கி பணிவுடன் நின்று துதித்தார்கள்.

அவர்கள் "ஓ! தலைவா, கோபத்தை அடக்கும்; அடக்கிவிடும். தேவர்களும், மனிதர்களும் கூடிய இந்தப் பூமி முழுமையாக அழியும் முன்னர் உம்மால் வெளிப்படுத்தப்பட்டபடி உம்முள் இருக்கும் இந்த வடிவத்தை அடக்கிவிடும். படைப்பவனும் நீயே; அழிப்பவனும் நீயே; காப்பவனும் நீயே. அண்டசராசரங்களில் வியாபித்திருப்பவனும் நீயே. ஓ! வலிய தோள்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அரசர்களிடம் இருப்பது என்ன? அவர்களது வீரம் என்ன? ஆற்றல் என்ன? அவர்களுக்காக இந்தத் தெய்வீக வடிவத்தை வெளிப்படுத்தினாயே" என்றார்கள். என்று வேறு பதிப்பில் காணப்படுகிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}

அந்த உயர்ந்த அற்புதக் காட்சியை (குருக்களின்) அந்தச் சபையில் கண்டு, (வானத்தில்) தேவ துந்துபிகள் முழங்கின, (அவன் {கிருஷ்ணன்} மீது) பூமாரி பொழிந்தது.

{கீழ் வருவன கங்குலியில் இல்லாதவை : அப்போது திருதராஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அழிவற்ற இதயத் தாமரையில் வசிப்பவனே {புண்டரீகாக்ஷனே}! யாதவர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, உலகம் அனைத்துக்கும் இதமானவன் நீயே. அருள்செய்வாய் நீயே {எனவே, அருள்செய்வாயாக}. ஓ! தலைவா, மீண்டும் எனது கண்கள் குருடாகட்டும். உன்னைப் பார்த்த கண்களால் மற்றவரைக் காண நான் விரும்பவில்லை" என்றான்.

அப்போது வலிமைமிக்கத் தோள்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம், "ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, உமது கண்கள் இரண்டும் இனி காணாது" என்றான். ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில், அதற்கு முன்னர் {கிருஷ்ணனின்} அண்டப் பெருவடிவை {விஸ்வரூபத்தைக்} காண விரும்பிய திருதராஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கண்களை அடைந்தது அதிசயமே. கண்களைப் பெற்ற திருதராஷ்டிரனைக் கண்டு ஆச்சரியமுற்ற மன்னர்கள், முனிவர்களுடன் கூடி அந்த மதுசூதனனைத் {கிருஷ்ணனைத்} துதித்தனர். என்று வேறு பதிப்புச் சொல்கிறது. கீழ்வருவன கங்குலியின் தொடர்ச்சியாகும்}.

பூமி முழுதும் நடுங்கியது. கடல்கள் கலங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூமியில் வசிப்போர் பெரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்}, தெய்வீகமானதும், உயர்ந்த அற்புதம் நிறைந்ததும், மிகவும் மாறுபட்டதுமான தனது மங்கல வடிவத்தை {விஸ்வரூபக் காட்சியை} விலக்கிக் கொண்டான்.

பிறகு சாத்யகியை ஒரு புறமும், ஹிருதிகனின் மகனை (கிருதவர்மனை) [1] மறுபுறமும், கரத்தோடு கரங்களாகக் கொண்டு, முனிவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} அங்கிருந்து வெளியேறினான். பிறகு அங்குப் பெரும் ஆரவாரம் ஏற்பட்டபோது, அந்த முனிவர்களும், நாரதரும், பிறரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் செல்ல {அங்கேயே} மறைந்து போனார்கள். மற்றும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக இதுவும் அங்கே நடந்தது.

[1] இங்கே கிருதவர்மன் என்ற இடத்தில் விதுரன் என்று இருக்க வேண்டும். கிருதவர்மனைத்தான் சாத்யகி வாயிலில் காத்திருக்கும்படி சொல்லியிருந்தானே. இதே பதிவிலேயே பின்னர்க் கங்குலி, கிருதவர்மன் தேரோட்டியான தாருகனுடன் காத்திருந்ததாகச் சொல்கிறார். வேறு ஒரு பதிப்பில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் விதுரன் என்றே வருகிறது. கிருதவர்மன் என்று இங்கே கங்குலி தவறாகக் குறிப்பிடுவதாகவே நான் நினைக்கிறேன்.

அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்} சபையை விட்டுச் செல்வதைக் கண்ட கௌரவர்களும், மன்னர்கள் அனைவரும், இந்திரனைப் பின்தொடர்ந்து செல்லும் தேவர்களைப் போல, அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றார்கள். எனினும், அளக்கமுடியா ஆன்மா கொண்ட சௌரி {கிருஷ்ணன்}, தன்னைத் தொடர்ந்து வருவோரைக் குறித்து ஒரு சிந்தனையும் செய்யாமல், புகையுடன் கலந்த சுடர்மிகும் நெருப்பைப் போலச் சபையை விட்டு வெளியேறினான்.

{சபையின்} வாயிலில், கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையாலும், தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதும், மேகங்கள் உருளும் ஒலியைப் போன்ற பெரும் சடசடப்பொலியை எழுப்பும் சக்கரங்களைக் கொண்டதும், வெள்ளைப் புலித் தோல்களால் முழுவதும் மூடப்பட்டதும், தனது {கிருஷ்ணனின்} குதிரைகளான சைவியம் (மற்றும் பிறவற்றால்) பூட்டப்பட்டதுமான தனது {கிருஷ்ணனின்} பெரிய வெண்தேரில், தனது தேரோட்டியான தாருகன் காத்திருப்பதைக் கண்டான். விருஷ்ணிகளுக்குப் பிடித்தமான வீரனும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேரோட்டியுமான கிருதவர்மனும் தனது தேரில் அங்கே தோன்றினான். 

எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரைத் தயார் செய்து புறப்படும்போது, மன்னன் திருதராஷ்டிரன் மீண்டும் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! எதிரிகளை வாட்டுபவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகன்கள் மீது நான் கொண்ட அதிகாரத்தை {சக்தியை} நீ கண்டாய். உண்மையில், இவை அனைத்தையும் நீ உனது கண்களாலேயே கண்டாய். இப்போது நீ அறியாதது எதுவுமில்லை. குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நான் முயன்றதைக் கண்டு, (நான் இருக்கும்) எனது நிலையை அறிந்து, என் மீது நீ எந்தச் சந்தேகமும் கொள்ளாதிருப்பதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் பாண்டவர்கள் மீது எந்தப் பாவம் நிறைந்த உணர்வுகளையும் கொள்ளாதவன். சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, சமாதானத்தை ஏற்படுத்த நான் செய்த அனைத்து முயற்சிகளையும் கௌரவர்களும், பூமியின் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "திருதராஷ்டிரன், துரோணர், பெரும்பாட்டனான {பிதாமஹரான} பீஷ்மர், க்ஷத்ரி, பாஹ்லீகர், கிருபர் ஆகியோரிடம், வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, "குருக்களின் சபையில் நடந்த அனைத்தையும், கல்லாத இழிந்தவனைப் போல, கோபத்தில், தீயவனான துரியோதனன்  எப்படிக் சபையை விட்டு வெளியேறினான் என்பதையும், தான் அதிகாரம் {சக்தி} அற்றவர் என்று மன்னன் திருதராஷ்டிரரே சொல்வதையும் நீங்கள் சாட்சியாகக் கண்டீர்கள். உங்கள் அனைவரின் அனுமதியின் பேரில் நான் இப்போது யுதிஷ்டிரனிடம் திரும்பப் போகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

பிறகு அவர்களை வணங்கிய மனிதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரில் ஏறிப் புறப்பட்டான். பாரதர்களில் வீரக் காளைகளான பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்}, அஸ்வத்தாமன், விகர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகிய வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். குருக்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவன் {கிருஷ்ணன்}, கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய வெண்தேரில், தன் அத்தையின் (குந்தியின்) வசிப்பிடத்திற்குச் சென்றான்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்