Showing posts with label பகவத்யாந பர்வம். Show all posts
Showing posts with label பகவத்யாந பர்வம். Show all posts

Friday, July 10, 2015

துரியோதனனைக் குற்றஞ்சாட்டாதீர்! - உத்யோக பர்வம் பகுதி 160

Don't impute fault to Duryodhana! | Udyoga Parva - Section 160 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 89) {சைனியநிர்யாண பர்வம் - 10}

பதிவின் சுருக்கம் : கௌரவ மற்றும் பாண்டவப் படைகளைக் குறித்துச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் வேண்டிக் கேட்டு, தனது குறையையும் சொல்வது; நேர்ந்து வரும் தீமைக்குத் துரியோதனன் மட்டுமே பொறுப்பாளி அல்ல என்று சஞ்சயன் சொல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "படைவீரர்கள் இப்படிப் போருக்காக (குருக்ஷேத்திரக் களத்தில்) அணிவகுத்த பிறகு, ஓ! அந்தணர்களில் காளையே {வைசம்பாயனரே}, விதியால் உந்தப்பட்ட {காலனால் ஏவப்பட்ட} கௌரவர்கள் என்ன செய்தார்கள்?"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, படைவீரர்கள் இப்படிப் போருக்காக அணிவகுத்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்."

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வா, ஓ! சஞ்சயா, குரு {கௌரவ} மற்றும் பாண்டவத் துருப்புகளின் முகாம்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தின் முழு விபரங்களையும் எனக்குச் சொல்வாயாக. போரின் தீய விளைவுகள் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், *சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன். அனைத்தையும் அறிகிறேன். எனினும், எனது சொந்த நலனைக் கூட இன்னும் என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. ஓ! சூதா {சஞ்சயா}, (நடவடிக்கைகளின்) குறைபாடுகளைக் காணும் திறன் எனது புரிதலுக்கு {அறிவுக்கு} இருக்கிறது. எனினும், நான் துரியோதனனை அணுகும்போது, அந்தப் புரிதல் (சரியான அந்தப் பாதையில்) இருந்து நழுவி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஓ! சஞ்சயா, எது நடக்க வேண்டுமோ, அதுவே நடக்கும். உண்மையில், போரில் தனது உடலைத் தியாகம் செய்வது, க்ஷத்திரியர் ஒவ்வொருவருக்கும் பாராட்டத்தக்க கடமையே ஆகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்கும் இந்தக் கேள்வி உண்மையில் உமக்குத் தகுந்ததே. எனினும், துரியோதனன் மேல் மட்டுமே முழுத் தவறும் இருப்பதாக நீர் குற்றம் சாட்டுவது உமக்குத் தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இது குறித்து நான் விரிவாகப் பேசுகையில் என்னைக் {நான் சொல்வதைக்} கேட்பீராக. தனது தன்னடத்தையில் {சுய நடத்தையில்} உள்ள தவறின் விளைவாகத் தீமையை அடையும் ஒரு மனிதன், அந்தத் தவறுக்காக, காலத்தையோ, தேவர்களையோ எப்போதும் குற்றம் சாட்டக்கூடாது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீய செயல்கள் அனைத்தையும் நிகழ்த்தும் மனிதர்களில் ஒருவன், அச்செயல்களை நிகழ்த்தியதன் விளைவால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். எனினும், பகடை ஆட்டத்தின் விளைவால் தீங்கை அனுபவித்த பாண்டுவின் மகன்கள், அமைதியாக அத்தீங்குகள் அத்தனையையும் தங்கள் ஆலோசகர்கள் அனைவருடனும் தாங்கிக் கொண்டு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடைபெறயிருக்கும் போரில் குதிரைகள், யானைகள், அளவிலா சக்தி கொண்ட மன்னர்கள் ஆகியோரின் படுகொலைகளைக் குறித்து என்னிடம் முழுமையாகக் கேளும். ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே, இப்படிக் {வலிந்து} கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தக் கடும் போரால் ஏற்படப்போகும் உலக அழிவைப் பொறுமையாகக் கேட்ட பிறகு, சரியான அல்லது தவறான தனது செயல்பாடுகளுக்கு மனிதன் ஒருபோதும் பொறுப்பாக முடியாது என்பதைத் தவிர வேறு எதையும் தீர்மானிக்காதிருப்பீராக.

உண்மையில், மரப்பாவை {மரப் பொம்மை} போன்ற மனிதன், (தான் செய்யும் அனைத்துக்கும்) பொறுப்பாளியல்ல. இந்த வகையில், மூன்று கருத்துகள் சொல்லப்படுகிறது; அனைத்தும் கடவுளால் விதிக்கப்படுகிறது என்று சிலர் சொல்கின்றனர்; நமது தன்னிச்சையின் {சுய விருப்பத்தின்} விளைவே நமது செயல்கள் என்று சிலர் சொல்கின்றனர்; பிறரோ, நமது கடந்த கால வாழ்வுகளின் {முற்பிறவியில் நாம் செய்த செயல்களின்} விளைவே நமது செயல்கள் என்றும் சொல்கின்றனர். எனவே, நமக்கு நேர்ந்திருக்கும் தீமையைப் பொறுமையாகக் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.

*********பகவத்யாந பர்வம் முற்றும்*********
{*********சைனியநிர்யாண பர்வம் முற்றும்*********}
*சூதாட்டத்தில் மகிழ்ந்து, வஞ்சகத்தை அறிவாகக் கருதும் எனது மகனை {துரியோதனனை} என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, விதியே உயர்ந்தது என்றும், முயற்சி {உழைப்பு} பயனில்லாதது என்றும் கருதுகிறேன்...

திருக்குறள்/ பால்: அறத்துபால்/ இயல்: ஊழியல்/ அதிகாரம்: ஊழ்/ குறள்: 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
தமிழில் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.


Wednesday, July 08, 2015

புறக்கணிக்கப்பட்ட ருக்மி! - உத்யோக பர்வம் பகுதி 159

Rukmi rejected by the two sides! | Udyoga Parva - Section 159 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 88) {சைனியநிர்யாண பர்வம் - 9}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் முகாமுக்குள் ருக்மி வருவது; ருக்மியின் முன் கதை சுருக்கம்; மூன்று பெரும் விற்களான காண்டீவம், சாரங்கம் மற்றும் விஜயம் ஆகியவற்றின் வர்ணனையும் அவற்றை உடையவர்கள் குறித்த செய்தியும்; ருக்மி அர்ஜுனனிடம் தனது உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு சொல்வது; அர்ஜுனன் அவனைப் புறக்கணிப்பது; ருக்மி துரியோதனனிடம் அதே கோரிக்கையுடன் சென்றது; துரியோதனனும் ருக்மியைப் புறக்கணித்தது; போரில் இருந்து விலகிய ருக்மி...

கிருஷ்ணன் ருக்மிணியை கடத்தி வந்த போது பின்தொடர்ந்த அண்ணன் ருக்மி
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்த நேரத்தில் அங்கே பாண்டவப் பாசறைக்குள், பீஷ்மகனின் மகனும், உண்மைநிறைந்த தீர்மானத்தைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான ருக்மி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவன் வந்தான். வேறு பெயரில் ஹிரண்யரோமன் என்றும் அழைக்கப்பட்டவனான உயர் ஆன்ம பீஷ்மகன் {ருக்மியின் தந்தை} இந்திரனுக்கு நண்பனாக இருந்தான். போஜர்களின் வழித்தோன்றல்களில் பெரும் சிறப்புமிக்கவனாகவும், தென்னாடு முழுமைக்கும் ஆட்சியாளனாகவும் {தக்ஷிணதேசத்தாருக்குப் பதியுமாக} அவன் {பீஷ்மகன்} இருந்தான்.


கந்தமாதன மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனும், துரோணன் {துருமன்} என்ற பெயரில் அறியப்பட்டவனுமான கிம்புருஷர்களில் சிங்கம் போன்றவனுக்குச் {துருமனுக்கு} ருக்மி சீடனாக இருந்தான். அவன் {ருக்மி}, தனது ஆசானிடம் {துருமனிடம்} நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலை முழுமையாகக் கற்றான். வலிய கரங்களைக் கொண்ட அந்தப் போர்வீரன் {ருக்மி}, காண்டீவம் மற்றும் (கிருஷ்ணனால் தரிக்கப்படும்) சாரங்கத்திற்கு இணையான சக்தி கொண்டதும், பெரும் இந்திரனுக்குச் {மகேந்திரனுக்குச்} சொந்தமானதும், தெய்வீகத் தொழில்நுட்பம் வாய்ந்ததுமான விஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை {துருமனிடமிருந்து} அடைந்தான்.

வருணனுடைய காண்டீவம், இந்திரனுடைய விஜயம் என்று அழைக்கபட்ட வில், பெரும் சக்தி கொண்டதான விஷ்ணுவின் தெய்வீகமான வில் {சாரங்கம்} ஆகிய மூன்றும் சொர்க்கவாசிகளுக்குச் சொந்தமான தெய்வீக விற்களாக இருந்தன. பகை வீரர்களின் இதங்களில் பயத்தை உண்டாக்கும் இந்தக் கடைசி வில் (சாரங்கம்) கிருஷ்ணனால் தரிக்கப்பட்டது. காண்டவத்தை எரித்த நிகழ்வின் போது அக்னியிடம் இருந்து காண்டீவம் என்று அழைக்கப்பட்ட வில்லை இந்திரனின் மகன் (அர்ஜுனன்) பெற்றான். அதே வேளையில், விஜயம் என்ற வில்லைப் பெரும் சக்தி கொண்ட ருக்மி, {கிம்புருஷனான} துரோணனிடம் {துருமனிடம்} இருந்து பெற்றான்.

முரனின் சுருக்குகளை {பாசங்களை} கலங்கடித்து, அந்த அசுரனைத் {முரனைத்} தனது ஆற்றலால் கொன்றவனும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனை வீழ்த்தியவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பதினாறாயிரம் {16,000} பெண்களையும், பல்வேறு வகையான ரத்தினங்கள் மற்றும் கற்களையும், (அதிதியின்) மணிக்குண்டலங்களை மீட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட அந்த அற்புதமான வில்லையும் அடைந்தான்.

மேகங்களின் கர்ஜனைக்கு நிகரான நாணொலி கொண்ட விஜயம் என்ற வில்லை அடைந்த ருக்மி, அச்சத்தால் முழு அண்டத்தையும் கலங்கடித்தபடி பாண்டவர்களிடம் வந்தான். தனது கரங்களின் வலிமையில் செருக்கு கொண்டவனான அந்த ருக்மி, முன்னதாக {முன்பு ஒரு காலத்தில்}, தனது தங்கை ருக்மிணி புத்திமானான வாசுதேவனால் {கிருஷ்ணனால்} கடத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொல்லாமல் திரும்புவதில்லை" என்ற உறுதிமொழியை நோற்று அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றான்.

அழகான கவசங்களைத் தரித்து, பல்வேறு வகையான ஆயுதங்களையும் தரித்து, பெருகியோடும் கங்கையின் நீரோட்டத்தைப் போலப் பாய்வதும், (அணிவகுத்துச் செல்லும்போது) பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதியை ஆக்கிரமிப்பதுமான நால்வகைப் படைகளின் துணையுடன் வந்தவனும், ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {ருக்மி}, விருஷ்ணி குலத்தோனான வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்தான்.

குருசேத்திரம், இந்திரபிரஸ்தம், உபப்லாவ்யம், 
விராடபுரி, குண்டினம், போஜகடம்
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தவத்துறவுகளால் அடையத்தக்க அனைத்துக்கும் தலைவனான அந்த விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} வந்த ருக்மி, அவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டு அவமானம் அடைந்தான். அதன் காரணமாக அவன் {ருக்மி}, (தனது நகரான) குண்டினத்திற்குத் [1] {Kundina} திரும்பவில்லை. பகை வீரர்களைக் கொல்பவனான அவன் {ருக்மி} கிருஷ்ணனால் எந்த இடத்தில் வீழ்த்தப்பட்டானோ, அதே இடத்தில் போஜகடம் {Bojakata} என்ற பெயரில் ஓர் அற்புத நகரத்தைக் கட்டினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் படைகளுடனும், யானைகள் மற்றும் குதிரைகளுடனும் நிரம்பியிருக்ககும் அந்த நகரம், உலகத்தில் அந்தப் பெயராலேயே {போஜகடம் என்ற பெயராலேயே} பரந்து அறியப்பட்டது.

[1] நளனின் தலைநகரம் இதே குண்டினபுரம்தான். நளனின் நாடு நிடத {நைஷாத} நாடு என்று அழைக்கப்பட்டதாக வன பர்வத்தின் நளோபாக்யான பர்வத்தில் நாம் ஏற்கனவே கண்டோம். இங்கே அதே குண்டினத்தைத் தலைநகரமாகக் கொண்ட ருக்மியின் நாடு போஜர்களின் நாடாகச் சொல்லப்படுகிறது.

கவசம் பூண்டு, விற்கள், கையுறைகள், வாட்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றைத் தரித்திருந்த அந்தப் பெரும் சக்தி கொண்ட வீரன் {ருக்மி}, ஓர் அக்ஷௌஹிணி படையுடன் {உபப்லாவ்யத்தில் இருந்த} பாண்டவ முகாமுக்குள் விரைவாக நுழைந்தான். சூரியனைப் போன்று நிலையான சுடரொளியுடன் இருந்த அந்தப் {பாண்டவப்} பெரும்படைக்குள் நுழைந்த ருக்மி, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்கத்தக்கதைச் செய்ய விரும்பிய பாண்டவர்களிடம் தன்னை அறியச் செய்து கொண்டான். சில எட்டுகள் முன் வந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனுக்கு {ருக்மிக்குத்} தனது வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். முறையாக வழிபடப்பட்டு, பாண்டவர்களால் புகழப்பட்ட ருக்மி, பிறகு, தனது பதில் வணக்கத்தைத் தெரிவித்து, தனது துருப்புகளுடன் சிறிது நேரம் ஓய்ந்திருந்தான்.

*பிறகு, அவன் {ருக்மி}, கூடியிருந்த வீரர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகனான அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். நான் உனக்குத் தரும் உதவியை, உனது எதிரிகளால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆற்றலில் எனக்கு நிகரான எந்த மனிதனும் இவ்வுலகில் கிடையாது. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உனது எதிரிகளில் யாரை நீ எனக்கு ஒதுக்குகிறாயோ அவர்களை நான் கொல்வேன். துரோணர், கிருபர், பீஷ்மர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்களில் ஒருவரை நான் கொல்வேன். அல்லது, பூமியின் மன்னர்களான இவர்கள் அனைவரும் ஒரு புறம் நிற்கட்டும். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் முன்னிலையிலும், (கூடியிருந்த) ஏகாதிபதிகளும், (முகாமில்) இருந்த அனைவரும் கேட்கும்படியும் இதைச் சொன்னான். பிறகு, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் மீது தனது கண்களைச் செலுத்திய குந்தியின் புத்திசாலி மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, புன்னகைத்தவாறே, நட்பு கலந்த குரலில், "குரு {கௌரவக்} குலத்தில் பிறந்து, அதிலும் குறிப்பாகப் பாண்டுவின் மகனாகப் பிறந்து, எனது ஆசான் என்று துரோணரின் பெயரைச் சொல்லிக் கொண்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாக வைத்துக் கொண்டு, அதையெல்லாம் விடக் காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லையும் கொண்டிருக்கும் நான், அஞ்சுகிறேன் என்று எப்படிச் சொல்வேன்?

ஓ! வீரா {ருக்மியே}, கால்நடைகளைக் கணக்கெடுத்த நிகழ்வில் {கோஷ யாத்ரையின் போது} பலமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்டபோது, எனக்கு உதவி செய்ய எவன் இருந்தான்?

காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்று சேர்ந்து பெரும் எண்ணிக்கையில் வந்த தேவர்களுடனும், தானவர்களுடனும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நான் அவர்களுடன் போரிடுகையில், எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், நிவாதகவசர்களுடனும், காலகேயர்கள் என்று அழைக்கப்பட்ட பிற தானவர்களுடனும் நான் போரிட்டபோது, எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

மேலும், விராட நகரத்தில், எண்ணற்ற குருக்களுடன் நான் போரிட்ட போது, அந்தப் போரில் எனது கூட்டாளியாக எவன் இருந்தான்?

போரின் நிமித்தமாக ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன், வருணன், பாவகன் {அக்னி}, கிருபர், துரோணர், மாதவன் {கிருஷ்ணன்} ஆகியோருக்கு எனது மரியாதைகளைச் செலுத்துபவன் நான்.

ஓ! மனிதர்களில் புலியே {ருக்மியே}, ஏந்துவதற்குக் கடினமானதும், பெரும் சக்தி கொண்டதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான தெய்வீக வில்லைத் தரித்துக் கொண்டு, வற்றாத அம்புகள் மற்றும் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவன், புகழனைத்தையும் திருடிவிடக்கூடிய {இழந்துவிடக்கூடிய} "நான் அஞ்சுகிறேன்" என்ற வார்த்தைகளை வஜ்ரத்தைத் தாங்கியிருக்கும் இந்திரனிடம் கூட எப்படிச் சொல்வான்?

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் அஞ்சவில்லை, உனது உதவிக்கான எந்தத் தேவையும் எனக்கில்லை. எனவே, செல். அல்லது தங்கு. உனக்கு விருப்பமானதையோ, தகுந்ததையோ செய்துகொள்வாயாக {எதை வேண்டுமானாலும் செய்து கொள்}" என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ருக்மி, கடல் போன்று பரந்திருந்த தனது படையுடன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனிடம் சென்றான் {ருக்மி}. அங்கே சென்ற மன்னன் ருக்மி, துரியோதனனிடமும் இந்த வார்த்தைகளேயே திரும்பச் சொன்னான். தனது வீரத்தில் செருக்குக் கொண்ட அம்மன்னனும் {துரியோதனனும்}, அதே வழியில் {அர்ஜுனனைப் போலவே} அவனை {ருக்மியை} நிராகரித்தான்.

இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, விருஷ்ணி குலத்து ரோகிணியின் மகன் (ராமன் {பலராமன்}), மன்னன் ருக்மி ஆகிய இருவரும் போரில் இருந்து விலகினர். ராமன் {பலராமன்} தீர்த்த யாத்திரைக்குப் புறப்படவும், பீஷ்மகனின் மகன் ருக்மி இப்படி விலகவும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாண்டுவின் மகன்கள் ஒருவருக்குள் ஒருவர் ஆலோசிக்க அமர்ந்தனர். எண்ணிலடங்கா ஏகாதிபதிகள் நிறைந்ததும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் தலைமை தாங்கப்பட்டதுமான அந்தச் சபை, சிறிய ஒளி பொருட்ளாலும் {கோள்களாலும்}, அவற்றுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனாலும் அலங்கரிக்கப்பட்ட வானம் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது." 
*********************************************************************************
*ருக்மிணியின் அண்ணன் ருக்மி அர்ஜுனனிடம், "! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அச்சப்படுகிறாயெனில், போரில் உனக்கு உதவிகளை அளிக்க நான் இங்கு இருக்கிறேன். உனது எதிரிகளை நானே கொன்று, இந்தப் பூமியை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான் {ருக்மி}. இத்தகு வார்த்தைகளால் அர்ஜுனன் ருக்மியை நிராகரித்தான். துரியோதனனும், அதே வழியில் அர்ஜுனனைப் போலவே ருக்மியை நிராகரித்தான்...

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அமைச்சியல்/ அதிகாரம்: சொல்வன்மை/ குறள்: 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 
பொருளும் அதனினூஉங்கு இல்.
தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.


திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: குற்றங்கடிதல்/ குறள்: 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க 
நன்றி பயவா வினை.
தமிழில் விளக்கவுரை - சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.


Saturday, July 04, 2015

பலராமனின் தீர்த்தயாத்திரை! - உத்யோக பர்வம் பகுதி 158

The Pilgrimage of Balarama! | Udyoga Parva - Section 158 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 87) {சைனியநிர்யாண பர்வம் - 8}

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படைகளுக்கு ஏழு தலைவர்களை நியமிப்பது; அந்த எழுவருக்கும் தலைவனாகத் திருஷ்டத்யும்னனை நியமிப்பது; அனைவருக்கும் தலைவனாக அர்ஜுனனை நியமிப்பது; பாண்டவர்களின் முகாமுக்கு பலராமன் வந்தது; பாண்டவர்களையும், கௌரவர்களையும் சமமாகவே தான் கருதுவதாகவும், கௌரவர்களின் அழிவைத் தன்னால் பார்க்க முடியாததால் சரஸ்வதி தீர்த்தத்திற்குப் புனித யாத்திரை செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் பாண்டவர்களிடம் விடைபெற்றுச் செல்வது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "கங்கையின் உயர் ஆன்ம மகனும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவரும், பாரதர்களின் பாட்டனும், மன்னர்கள் அனைவருக்கும் தலைவரும், புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதிக்குப் போட்டியாளரும், ஈர்ப்பு விசையில் கடலைப் போன்றவரும், அமைதியில் இமயத்தைப் போன்றவரும், உன்னதத் தன்மையில் படைப்பாளனைப் {பிரம்மனைப்} போன்றவரும், சக்தியில் சூரியனைப் போன்றவரும், தன் கணைகளை மழையாகப் பொழிந்து எதிரிப் படைகளைக் கொல்வதில், பெரும் இந்திரனைப் போன்றவருமான பீஷ்மர், பார்ப்பதற்குப் பயங்கரமானதும், நினைக்கும்போதே ஒருவரை மயிர்ச்சிலிர்க்கச் செய்வதுமான போர் எனும் பெரும் வேள்வியின் நெருக்கத்தில், குரு {கௌரவப்} படையின் அதிகாரியாக {படைத்தலைவராக} நிறுவப்பட்ட செய்தியை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனும், ஆயுதம் தாங்குவோரில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன் கேட்ட போது, அது குறித்து என்ன சொன்னான்? பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள்? மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான்?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "செய்தியை அடைந்த போது, பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனும், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் மற்றும் நித்தியமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்) தனது முன்னிலைக்கு அழைத்தான். பேசுபவர்களில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, பிறகு, மென்மையான குரலில், "படைவீரர்களுக்கு மத்தியில் சுற்றி, கவசம் பூண்டு பாதுகாப்பாக இருப்பீர்களாக. நமது முதல் மோதல் நமது பாட்டனுடன் {பீஷ்மருடன்} இருக்கப் போகிறது. எனது துருப்புகளின் ஏழு {7} அக்ஷௌஹிணிகளின் (ஏழு) தலைவர்களைப் பார்ப்பீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.

கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே} இது போன்ற பயனுள்ள வார்த்தைகளையே இத்தகு சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். உண்மையில் நீர் அதையே சொல்லியிருக்கிறீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நானும் இதையே விரும்புகிறேன். எனவே, அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது செய்யப்படட்டும். உண்மையில், உமது படையின் ஏழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படட்டும்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "போர் செய்ய ஆவலோடு இருந்த வீரர்களான துருபதன், விராடன், சினி குலத்துக் காளை {சாத்யகி}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், மன்னன் திருஷ்டகேது, பாஞ்சாலத்தைச் சேர்ந்த இளவரசன் சிகண்டி, மகத ஆட்சியாளன் சகாதேவன் ஆகியோரை அழைத்த யுதிஷ்டிரன், அவர்களை முறையே தனது ஏழு பிரிவுகளுக்குத் தலைவர்களாக நியமித்தான் [1]. அவர்களுக்கெல்லாம் மேலாகத் துருப்புகள் அனைத்துக்கும் தலைவனாக, சுடர்விட்டெரியும் (வேள்வி) நெருப்பில், துரோணரின் அழிவுக்காக உதித்த திருஷ்டத்யுமனன் நியமிக்கப்பட்டான். சுருள் முடி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். பெரும் புத்திக்கூர்மையுடையவனும், சங்கர்ஷணனுக்குத் {பலராமனுக்குத்} தம்பியுமான அழகிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுக்கு வழிகாட்டியாகவும், அவனது {அர்ஜுனனின்} குதிரைகளைச் செலுத்துபவனாகவும் {குதிரையோட்டி [அ] தேரோட்டியாக} நியமிக்கப்பட்டான்.

[1] குருக்ஷேத்திரத்திற்குப் புறப்படும்போது //துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பீமசேனன் ஆகியோரே துருப்புகள் தலைவர்கள் See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section151.html// என்று ஏழு தலைவர்களை அறிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கே மீண்டும் துருபதன், விராடன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திருஷ்டகேது, சிகண்டி, சகாதேவன் எனப் புதிய பட்டியலைத் தருகிறான். ஒருவேளை முன்னவர்கள் அக்ஷௌஹிணிகளுக்குத் தலைவர்களும், பின்னவர்கள், ஏழு படைப்பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் இருப்பார்களோ என நினைக்கிறேன்.

பெரும் அழிவை உண்டாக்கப்போகும் போர் நெருங்கி வருவதைக் கண்டு, ஓ! மன்னா {ஜனமேஜா}, பாண்டவ முகாமுக்கு, அக்ரூரர், கதன், சாம்பன், உத்தவர், ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்|, ஆகுகனுடைய மகன்கள், சாருதேஷ்ணன் ஆகியோருடனும், பிறருடனும் ஹாலாயுதன் {பலராமன்} அங்கே வந்தான். வலிமைமிக்கப் புலிகளின் கூட்டம் போன்ற அந்த விருஷ்ணி குலத்தின் முதன்மையான போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டும், சூழப்பட்டும், மருத்தர்களின் மத்தியில் உள்ள வாசவனைப் {இந்திரனைப்} போலவும், கைலாய மலையின் சிகரத்தைப் போலவும் இருந்த அழகிய ராமன் {பலராமன்}, நீலப்பட்டாடை உடுத்தி, சிங்கத்தின் விளையாட்டு நடையுடனும், குடியால் சிவந்த கடைவிழிகளுடனும் அங்கே (அத்தகு நேரத்தில்) வந்தான்.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் பிரகாசம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பயங்கரச் செயல்களைப் புரியும் பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்}, காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் அங்கிருந்த பிற மன்னர்கள் அனைவரும் அவனைக் {பலராமனைக்} கண்டு, தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஹாலாயுதன் {பலராமன்} அந்த இடத்திற்கு வந்த போது அவர்கள் அனைவரும் தங்கள் வழிபாட்டைக் காணிக்கையாக்கினர். பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனின் {பலராமனின்} கரங்களைத் தனது கரங்களால் தொட்டான். எதிரிகளைத் தண்டிப்பவனான ஹாலாயுதனும் {பலராமனும்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் இருந்த அவர்கள் அனைவரையும் அணுகி, பதிலுக்கு அவர்களை வழிபட்டு, வயதால் மூத்த விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் (மரியாதையாக) வணங்கி, யுதிஷ்டிரனுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

மன்னர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் தன் பார்வையைச் செலுத்தியபடி பேச ஆரம்பித்தான். அவன் {பலராமன்}, இந்தக் கடுமையான, கொடூரமான படுகொலை தவிர்க்க முடியாததாகும். விதியின் கட்டளை இஃது என்பதில் ஐயமில்லை. மேலும் இது தவிர்க்கப்பட முடியாததே எனவும் நான் நினைக்கிறேன். எனினும், உங்கள் நண்பர்களுடன் கூடிய நீங்கள் அனைவரும், நல்ல உடல்களுடனும், முற்றான நலத்துடனும், இந்தக் கலவரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவீர்கள் என நம்புகிறேன். ஒன்றாகக் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவருக்கும், அவர்களது நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இரத்தம் மற்றும் சதையினாலான சேற்றில் மூழ்கிய ஒரு கடுமையான கைக்கலப்பு நேரப்போவது உறுதியாகிவிட்டது.

தனிமையில் நான் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நம்மிடம் சமமான உறவுமுறை கொண்டோரிடம் {நமது சம்பந்திகளுடன்}, சமமான நடத்தையை நோற்பாயாக. பாண்டவர்கள் நமக்கு எப்படியோ, அப்படியே மன்னன் துரியோதனனுமாவான். எனவே, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அதே உதவியைக் கொடுப்பாயாக. உண்மையில் அவன் {துரியோதனன்} திரும்பத் திரும்ப வேண்டினான்" எனச் சொன்னேன். எனினும், உங்களுக்காக மதுசூதனன் {கிருஷ்ணன்} எனது வார்த்தைகளை அலட்சியம் செய்தான். தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்த அவன் {கிருஷ்ணன்}, தனது முழு இதயத்துடன், உங்கள் காரியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.

பாண்டவர்களின் வெற்றி என்பது உறுதியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} விருப்பமும் அதுவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, கிருஷ்ணன் (என் அருகில்) இல்லாத உலகத்தில் எனது கண்களைச் செலுத்த நான் துணிய மாட்டேன். இதற்காகவே, கிருஷ்ணன் அடைய முயற்சிப்பது எதுவாக இருப்பினும், அதையே நானும் பின்பற்றுகிறேன். கதாயுதப் போரில் நல்ல திறம் வாய்ந்த இந்த வீரர்கள் இருவரும் {பீமனும், துரியோதனனும்} எனது சீடர்களாவர். எனவே, எனது அன்பு, பீமனுக்கு இணையாக மன்னன் துரியோதனனிடமும் உண்டு. இந்தக் காரணங்களுக்காக, *நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன். ஏனெனில், கௌரவர்களின் அழிவை என்னால் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றான் {பலராமன்}.

இப்படிச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட ராமன் {பலராமன்}, பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, (மேலும் மேலும் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த) மதுசூதனனைத் {கிருஷ்ணனை} தடுத்து, புனித நீர்நிலைகளுக்கான தனது பயணத்திற்குப் புறப்பட்டான்."
*******************************************************************************
*நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன்...

முந்தைய பகுதிகளில் கிருஷ்ணனிடம், துரியோதனனுக்காக பரிந்து பேசும் பலராமன், துரியோதனன் சார்பாக குருஷேத்திரப் போரில் ஈடுபட நாட்டமில்லாமலும், போரில் பங்கு கொள்ளாமலும் தீர்த்த யாத்திரை செல்கிறான்.

திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: தெரிந்துசெயல்வகை// குறள்:464

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:
தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

Friday, July 03, 2015

படைத்தலைவரானார் பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 157

Bhishma became the Commander! | Udyoga Parva - Section 157 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 86) {சைனியநிர்யாண பர்வம் - 7}

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, "வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ! பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.


ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.

ஓ! பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், "போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்" என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.

உம்மைப் பொருத்தவரை, நீர் உசனசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல, *எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன்}.

அதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு இணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.

எனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்" என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, "கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ! மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்" என்றான்.

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.

என்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.

பகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ஹஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது."
*********************************************************************************
*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்" என்றான் {துரியோதனன் பீஷ்மரிடம்.}...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:770.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை: 
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.


துரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156

Divisions of Duyodhana's army! | Udyoga Parva - Section 156 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 85) {சைனியநிர்யாண பர்வம் - 6}

பதிவின் சுருக்கம் : தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும் அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இரவு கடந்ததும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.


போரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்பட்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோடும் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.

[1] இதை முறம் என்கிறது வேறொரு பதிப்பு.

கவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், வேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.

அந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த தேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.

மணிகள், முத்துச் சரங்கள்,  மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.

கொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.

[2] இங்கே "அஸ்க்ரஹா" என்பது மூலச்சொல்லென்றும். அதன் பொருள், கனைத்துக் கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் தீய குணத்தில் இருந்து விடுபட்டவை என்றும் வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.

காலாட்படை வீரர்களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.

ஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.

ஐம்பதில் ஐந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.

[3] ஐம்பத்தைந்து மனிதர்களைக் கொண்டது ஒரு பத்தி என்று ஒரு வேறொரு பதிப்பில் காணப்படுகிறது.

வலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.

*********************************************************************************
*மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.

திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை            
படைத்தகையால் பாடு பெறும்.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது {படை} தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்