Sunday, September 06, 2015

அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 025

The Distress of Arjuna! | Bhishma Parva - Section 025 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 5) {பகவத் கீதை - பகுதி 1}

பதிவின் சுருக்கம் : குருக்ஷேத்திரக் களத்தைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு வர்ணிப்பது; துரியோதனன் துரோணரிடம் பீஷ்மரின் பாதுகாப்புக் குறித்துப் பேசுவது; பீஷ்மர் சங்கை முழங்கியது; பாண்டவத் தரப்பிலும் அனைவராலும் சங்கு முழக்கப்பட்டது; அர்ஜுனன் கிருஷ்ணனிடம் தேரை இரு படைகளுக்கு நடுவில் நிறுத்த சொல்வது; எதிர்த்தரப்பில் இருக்கும் தனது சொந்தங்களையும் நண்பரைகளையும் நினைத்து வருந்தும் அர்ஜுனன் தனது வில்லை எறிந்துவிட்டுத் தேர்த்தட்டில் அமர்வது...
{இந்த உபபர்வமானது பகவத்கீதைக்கான  உபபர்வமானதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளேன்}

{இங்கிருந்து பகவத் கீதை ஆரம்பமாவதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளன}

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, புனிதக்களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் திரண்டிருந்த என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?" என்றான். (1:1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவப் படையின் அணிவகுப்பைக் கண்ட மன்னன் துரியோதனன், ஆசானை (துரோணரை) அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்: (1:2)


"ஓ! ஆசானே, உமது புத்திசாலி சீடனான துருபதன் மகனால் (திருஷ்டத்யும்னனால்) அணிவகுக்கப்பட்ட பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பரந்த படையைப் பாரும். (1:3)

அங்கே (அந்தப்படையில்), பீமனுக்கும், அர்ஜுனனுக்கும் போரில் இணையானவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான பல வில்லாளிகள் இருக்கிறார்கள். (அவர்களில்) யுயுதானன் {சாத்யகி}, விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், (1:4) திருஷ்டகேது, சேகிதானன், பெரும் சக்தியுடைய காசியின் ஆட்சியாளன்; புருஜித், குந்திபோஜன், மனிதர்களில் காளையான சைப்பியன், (1:5) பெரும் ஆற்றல் படைத்த யுதாமன்யு, பெரும் சக்தி கொண்ட உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் [**] பெரும் தேர் வீரர்களாக இருக்கிறார்கள் (1:6). (1:4-6)

[**] யுயுதானன் - சாத்யகி என்ற பெயரும் உண்டு. அர்ஜுனனின் சீடன், சினியின் மகன், மகாபாரதப் போரில் இறக்காதவர்களில் இவனும் ஒருவன்.  யுயுதானன் என்ற பெயரில் வேறு ஒரு வீரனும் இருந்ததாகக் குறிப்பு உண்டு (உத்யோக பர்வம் 152).

விராடன் - மத்ஸ்ய நாட்டு மன்னன். பாண்டவர்களின் சம்பந்தி, அபிமன்யுவின் மாமனர். ஓராண்டு தலைமறைவு வாழ்வில் பாண்டவர்கள் இவனது மாளிகையிலேயே இருந்தனர்.

துருபதன் - பாஞ்சால நாட்டு மன்னன், பாண்டவர்களின் மாமனார், திரௌபதியின் தகப்பன்.  துரோணருக்கு நண்பனாக இருந்து எதிரியானவன். இவனது பாதி நாட்டைத் துரோணருக்கு வென்று கொடுத்தவர்கள் பாண்டவர்கள். துரோணரை அழிக்கவே இவன் திருஷ்டத்யும்னன் எனும் மகனை வேள்வித்தீயில் பெற்றான்.

திருஷ்ட கேது - சேதி நாட்டு மன்னன், சிசுபாலனின் மகன், மகாபாரதப் போரில் துரோணரால் கொல்லப்பட்டவன்.

சேகிதானன் -  விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வீரன். பாண்டவர்களின் ஏழு படைத்தலைவர்களுள் இவனும் ஒருவன். மகாபாரதப் போரில் துரியோதனனால் இவன் கொல்லப்பட்டான்.

காசிமன்னன் - காசியின் மன்னன். இவன் பெயர் எது என்பதில் குழப்பமுண்டு. உத்யோக பர்வம் பகுதி 171 இவனது பெயர் சேனா பிந்து என்றும், குரோதஹந்தன் என்றும் குறிப்பிடப்படுகிறது. கர்ண பர்வம் பகுதி 6ல் இவனது பெயர் அபிபூ என்று  குறிப்பிடப்படுகிறது.

புருஜித், குந்திபோஜன் - இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் மகாபாரதப் போரில் துரோணரால் கொல்லப்படுகிறார்கள் கர்ண பர்வம் பகுதி 6ல் இந்தக் குறிப்பு வருகிறது.

சைப்யன் - யுதிஷ்டிரனின் மாமனார். இவனது பெண்ணான தேவிகா யுதிஷ்டிரனின் மனைவியாவாள். இவன் நரபுங்கவன் என்றும் அழைக்கப்படுகிறான்.

யுதாமன்யு, உத்தமௌஜா இவர்கள் இருவரும் பாஞ்சால இளவரசர்கள் ஆவர்.  இவர்களுக்கு முறையே விக்ராந்தன், வீரியவான் என்ற பெயர்களும் உண்டு. மகாபாரதப் போரின் இறுதியில், இரவில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை அஸ்வத்தாமா கொல்கிறான். சௌப்திக பர்வம் பகுதி 8ல் இது குறிக்கப்படுகிறது.

அபிமன்யு - அர்ஜுனன் மற்றும் கிருஷ்ண பலராமர்களின் சகோதரியான சுபத்திரையின் மகன். துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிருஹத்பலன், கிருதவர்மன் ஆகிய ஆறு பேர் சேர்ந்து இவனது மரணத்திற்குக் காரணமானார்கள். முடிவில்  துச்சாசனனின் மகன் அவனது தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றான். இது துரோண பர்வம் பகுதி 49ல் குறிக்கப்படுகிறது.

திரௌபதியின் ஐந்து மகன்கள் -பிரதிவிந்தியன், சுதசோமன், ஸ்ருதகர்மா, சதானீகன், ஸ்ருதசேனன் ஆகியோர். மகாபாரதப் போரின் இறுதியில், இரவில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை அஸ்வத்தாமா கொல்கிறான். சௌப்திக பர்வம் பகுதி 8ல் இது குறிக்கப்படுகிறது.

இந்தக் குறிப்புகள் கீதா பிரஸ் ஸ்ரீ ஜயதயால் கோயந்தகரின் கீதா-தத்வவிவேசனீ என்று நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {துரோணரே}, நம்மில் புகழ்பெற்ற எவரெல்லாம் படைத்தலைவர் என்பதைக் கேளும். (உமது) தகவலுக்காக {கவனத்திற்காக} நான் அவர்களின் பெயரை உமக்குச் சொல்கிறேன். (1:7)

நீர், பீஷ்மர், கர்ணன், எப்போதும் வெல்பவரான கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தன் {சோமதத்தனின் மகன் பூரிஸ்ரவஸ்} மற்றும் ஜெயத்ரதன் (ஆகியோரே அவர்கள்) (1:8) [1]. இவர்களைத் தவிர, போரில் சாதித்தவர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவர்களும், எனக்காகத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருக்கும் துணிச்சல்மிக்கவர்களுமாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். (1:8-9)

[1] "கீதையின் உரை எந்தவித இடைச்செருகலும் இல்லாமல் நம்மிடம் இறங்கியது என இங்கே துணிந்த குறிப்பிடலாம். சில பல உரைகளில் சிலபல வேறுபாடுகள் இருக்கலாம் அவ்வளவே. இங்கே ஜெயத்ரதனுக்குப் பதில் சில உரைகளில் tathaivacha என்றிருக்கிறது" என்கிறார் கங்குலி. பாரதியாரின் மொழிபெயர்ப்பு, கோயந்தகரின் தத்வவிவேசனி, பிரபுபாதரின் கீதை-உண்மையுருவில் ஆகியவற்றில்  ஜெயத்ரதனின் குறிப்பு இல்லை.

இருந்தாலும், பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை போதுமானதுக்கு குறைவாகவே இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் இவர்களுடைய (பாண்டவர்களுடைய) இந்தப் படை போதுமானதாக இருக்கிறதே [2]. 1:10

[2] "Aparyaptam மற்றும் Paryaptam என்ற வார்த்தைகள் விரிவுரையாளர்கள் அனைவரையும் சோதித்திருக்கிறது. Paryaptam என்பது "போதுமானது" என்றானால் (அதுவே நிச்சயமானதுமாகும்), Aparyaptam என்பது "போதுமானதுக்கு அதிகமானது என்றும் குறைவானது என்றும் பொருள் தரலாம். எனினும், இந்தப் {இங்கு சொல்லப்படும்} பின்னணி, வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் அச்சத்தால் தனது ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் துரியோதனனையே காட்டுகிறது. எனவே, நான் aparyaptam என்பதற்குப் போதுமானதற்குக் குறைவானது என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்" என்கிறார் கங்குலி. இங்கே, பாரதியார் கங்குலியின் இக்கூற்றுக்கு வலு சேர்ப்பது போல, "நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்க வில்லை. இவர்களுடைய படையோ நிறைந்திருக்கிறது" என்று மொழிபெயர்த்திருக்கிறார். கோயந்தகரின் தத்வவிவேசனீ மற்றும்  இஸ்கானின் பகவத்கீதை உண்மையுருவில் ஆகியவற்றில், "நமது படை அளக்க முடியாதது, பாண்டவப் படை அளவிடக்கூடியதே"  என்றே இருக்கிறது.

உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் படைப்பிரிவுகளின் நுழைவாயில்களில் உங்களை நிறுத்திக் கொண்டு {தங்கள் தங்கள் இடங்களில் இருந்தபடி}, பீஷ்மரை மட்டுமே நீங்கள் அனைவரும் பாதுகாப்பீராக" என்றான் {துரியோதனன்}. 1:11

(சரியாக அதே நேரத்தில்) வீரமிக்கவரும், மதிப்புக்குரியவருமான குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனுக்கு (துரியோதனனுக்கு) பெரும் மகிழ்வை அளிக்கும்படி உரத்த சிங்க முழக்கத்தைச் செய்தபடி, (தனது) சங்கை ஊதினார். 1:12

பிறகு, சங்குகள், பேரிகைகள் {மத்தளங்கள்}, தாறைகள், கொம்புகள் ஆகியன ஒரே சமயத்தில் முழக்கப்பட்டன. அப்படி (ஏற்பட்ட) இரைச்சல், உரத்த பெரும் ஆரவாரமாக மாறியது. 1:13

பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சிறந்த தேரில் இருந்த மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன் (அர்ஜுனன்) ஆகியோர் தங்கள் தெய்வீக சங்குகளை முழக்கினார்கள். 1:14

ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாஞ்சஜன்யத்தையும் (பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கையும்), தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவதத்தத்தையும் (தேவதத்தம் என்றழைக்கப்பட்ட சங்கையும்) முழக்கினர். பயங்கரச் செயல்களைச் செய்யும் விருகோதரன் {பீமன்}, பௌண்டரம் என்ற (என்று அழைக்கப்பட்ட) பெரிய சங்கை ஊதினான். 1:15

குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயத்தையும் (என்று அழைக்கப்பட்ட சங்கையும்); நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சுகோஷம் மணிபுஷ்பகம் (என்று முறையாக அழைக்கப்பட்ட சங்குகள்) ஆகியவற்றையும் முழக்கினர். 1:16

அற்புத வில்லாளியான காசியின் ஆட்சியாளன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வீழ்த்தப்பட இயலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் மகன்கள், வலிய கரங்களைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} ஆகிய இவர்கள் அனைவரும், ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, தத்தமது சங்குகளை முழக்கினார்கள். 1:17-18

வானத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த உரத்த முழக்கம், தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பிளந்தது. 1:19

அணிவகுக்கப்பட்ட தார்தராஷ்டிரத் துருப்புகளைக் கண்டவனும், குரங்குக் {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லை உயர்த்தினான். சரியாக ஏவுகணைகளை {சஸ்திரங்களை} வீசும் தருணம் வந்தபோது, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம் அர்ஜுனன்} சொன்னான் [3]. 1:20

[3] ரிஷிகேசன் என்றால் "புலன்களின் தலைவன்" என்று பொருள் என்கிறார் கங்குலி.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "அழிவிலாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, போரிட விரும்பி நிற்பவர்களையும், இந்தப் போரில் நான் உழைப்பைச் செலுத்தி யாருடன் போராட வேண்டும் (1:22) என்பதையும் [4] நோக்கும் வகையில் எனது தேரை இரு படைகளுக்கும் இடையில் (ஒருமுறை) நிறுத்துவாயாக  (1:21). 1:21-22

[4] Ranasamudyame என்பது "போருக்கு ஆரம்பத்தில்" என்றும் பொருள் தரும் என்கிறார் கங்குலி.

தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதற்காக இங்கே கூடியிருப்பவர்களையும், போரிடத் தயாராக இருப்பவர்களையும் நான் உற்று நோக்கப் போகிறேன்" என்றான் {அர்ஜுனன்}. 1:23

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. குடாகேசனால் {உறக்கத்தை வென்றவனான அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட ரிஷிகேசன், இரண்டு படைகளுக்கும் மத்தியில், (1:24) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மன்னர்கள் அனைவருக்கும் எதிரில் அந்தச் சிறந்த தேரை நிறுத்தி, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கூடியிருக்கும் இந்தக் குருக்களைப் {கௌரவர்களைப்} பார்" என்றான் (1:25). 1:24-25

(தனது) தந்தைமார், பேரப்பிள்ளைகள், நண்பர்கள், மாமனார், இரு படைகளின் நலன் விரும்பிகள் [5] ஆகியோர் அங்கே நிற்பதை அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} கண்டான். (1:26)

[5] வேறு பதிப்புகளில் இங்கே தந்தைமார், பாட்டன்மார், ஆசான்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் பல நலன்விரும்பிகளை அர்ஜுனன் கண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.


 (அங்கே) நின்று கொண்டிருந்த அந்தச் சொந்தங்கள் அனைவரையும் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பெருங்கருணை கொண்டு, மனத்தளர்ச்சியுடன் (இவ்வார்த்தைகளைச்) சொன்னான். (1:27) 

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, போரிடும் ஆவலில் ஒன்று கூடியிருக்கும் எனது சொந்தங்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்வடைகின்றன, எனது வாய் உலர்ந்து போகிறது. (1:28) 

எனது உடல் நடுங்குகிறது, எனக்கு மயிர் கூச்சம் ஏற்படுகிறது காண்டீவம் எனது கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் எனது தோலும் எரிகிறது. (1:29)

(இனிமேலும்) நிற்க என்னால் முடியவில்லை; எனது மனம் அலைபாய்கிறது. ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் எதிர்மறையான {விபரீத} சகுனங்களையும் காண்கிறேன்.  1:30

நான் வெற்றியையோ, அரசுரிமையையோ, இன்பங்களையோ விரும்பவில்லை. (1:31) ஓ! கிருஷ்ணா,  அரசுரிமை, இன்பங்கள், சுகங்கள் ஆகியவை யாருக்காக எங்களால் விரும்பப்பட்டனவோ, அப்படிப்பட்ட ஆசான்கள், தந்தைமார், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள் மற்றும் சொந்தங்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் செல்வத்தையும் விடத் தீர்மானித்துப் போருக்குத் தயாராக இங்கே அணிவகுத்து நிற்கும்போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அரசுரிமையோ, இன்பங்களோ ஏன் உயிரோ கூட எங்களுக்கு எப்படிப் பயன்படும்? ஓ! மதுசூதனா, இவர்கள் என்னைக் கொல்பவர்களாக இருப்பினும், மூவுலகங்களின் அரசுரிமைக்காககூட நான் இவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன் எனும்போது, (இந்தப்) பூமியின் நிமித்தமாக ஏன் கொல்ல வேண்டும்? [6] ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} தார்தராஷ்டிரர்களைக் கொல்வதால், என்ன மனநிறைவை நாங்கள் பெறுவோம்? அவர்கள் பகைவர்களாகக் கருதப்பட்டாலும் கூட, நாங்கள் அவர்களைக் கொன்றால் எங்களைப் பாவமே பீடிக்கும். 1:31-36

[6] இது போன்ற ஒரு வளமான வெகுமதிக்கான வாய்ப்பின் போதுகூட, இவ்வளவு அன்பானவர்களையும், எனக்கு நெருக்கமானவர்களை நான் கொல்ல மாட்டேன். மாறாக, அவர்களின் அடிகளில் துன்புற்றாலும், நான் அவர்களைத் திருப்பி அடிக்க மாட்டேன் என்பதே இங்கே பொருளாகும் என்கிறார் கங்குலி.


எனவே, இரத்த உறவினர்களான திருதராஷ்டிர மகன்களைக் கொல்வது எங்களுக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் சொந்த இரத்த உறவினர்களைக் கொல்வதால் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? 1:36


பேராசையினால் கெட்டுப்போன தீர்மானங்களையுடைய {மனத்தையுடைய} இவர்கள், குலத்தின் அழிவால் விளையும் தீமையையும், உட்பகைச் சண்டையால் விளையும் பாவத்தையும் அறியாதிருந்தாலும், (1:37) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குல அழிவால் ஏற்படக்கூடிய தீங்கை நன்கு அறிந்த நாங்கள் பாவமிழைப்பதில் இருந்து விலக ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? (1:38) 1:37-38

ஒரு குலம் அழிந்தால், அந்தக் குலத்தின் நிலைத்த {பல கால} வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போகும்; அந்த வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போனால், மொத்த குலத்தையும் பாவம் பீடிக்கும். 1:39

பாவம் மேலோங்கினால், ஓ! கிருஷ்ணா, அந்தக் குலத்தின் பெண்கள் கெட்டுப்போவார்கள். ஓ! விருஷ்ணியின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, பெண்கள் கெட்டுப் போனால், வர்ணக் கலப்பு ஏற்படுகிறது [7]. 1:40

[7] கங்குலி இங்கே வர்ண சங்கர என்ற மூலச் சொல்லை Caste intermixture என்று மாற்றியிருக்கிறார். வர்ணம் என்பதற்கும் சாதி என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. எனவே, சாதி என்று கங்குலி பயன்படுத்தியிருக்கும் சொல்லை நாம் வர்ணம் என்று கையாண்டிருக்கிறோம். இந்த இடத்தில் பிரபுபாதர் "தேவையற்ற சந்ததி உண்டாகும்" என்று சொல்கிறார். கோயந்தகரும் பாரதியாரும், "வர்ணக் கலப்பு என்றே சொல்கின்றனர்.

இப்படி ஏற்படும் வர்ணங்களின் கலப்பு, அந்தக் குலத்தை அழித்தவர்களையும், அந்தக் குலத்தையுமே கூட நரகத்திற்கு இட்டுச் செல்கிறது. அந்தக் குலத்தின் மூதாதையர்கள், பிண்டம் மற்றும் நீர்க்கடன் சடங்குகளை இழந்து, (சொர்க்கத்திலிருந்து) விழுகின்றனர். 1:41


வர்ணங்களிலும், வர்ண விதிகளிலும், கலப்பை ஏற்படுத்தி, குலத்தை அழைப்பவர்களின் இந்தப் பாவங்களினால் குடும்பங்களின் நிலைத்த சடங்குகள் அழிந்து போகின்றன. 1:42

ஓ! ஜனார்த்தனா {மக்களைக் காப்பவனே, கிருஷ்ணா}, குடும்பச் சடங்குகள் அழிந்த போன மனிதர்கள் எப்போதும் நரகத்தில் வசிக்கிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். 1:43

ஐயோ, அரசுரிமையின் இனிமைகளில் இச்சை கொண்டு எங்கள் இரத்த சொந்தங்களையே கொல்லத் தயாராகி, பெரும் பாவத்தைத் தரும் வன்செயலைச் செய்யத் தீர்மானித்துவிட்டோமே. 1:44

கையில் ஆயுதம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்கள், ஆயுதமின்றி எதிர்க்காமல் இருக்கும் என்னைப் போரில் கொன்றால், அஃது எனக்குச் சிறப்பானதாகவே இருக்கும். {அஃது எனக்கு மிகுந்த நன்மையையே செய்யும்}" என்றான் {அர்ஜுனன்}. 1:45

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "போர்க்களத்தில் இவ்வாறு சொன்ன அர்ஜுனன், கவலையால் மனம் பதைத்து, தனது வில்லையும், கணைகளையும் வீசி எறிந்து விட்டுத் தேரில் அமர்ந்தான்" 1:46


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்