Wednesday, November 25, 2015

கர்ணனை நினைத்த துரியோதனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 058

Duryodhana thought of Karna! | Bhishma-Parva-Section-058 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் மன்னர்கள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; சாத்யகி மற்றும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட சகுனி; சாத்யகியின் தேரைக் காந்தார வீரர்கள் தூள் தூளாக்குவது; யுதிஷ்டிரனின் படைப்பிரிவைத் தாக்கிய துரோணரும், பீஷ்மரும்; துரியோதனனின் மார்பைத் துளைத்து, மயங்கச் செய்து களத்தை விட்டு ஓடச் செய்த பீமன்; சிதறி ஓடிய துரியோதனனின் படைப்பிரிவு; பீஷ்மர் மற்றும் துரோணரின் படைப்பிரிவுகளைச் சிதறி ஓடச் செய்த திருஷ்டத்யும்னனும், யுதிஷ்டிரனும்; கௌரவப் படையைச் சிதறி ஓடச் செய்த அர்ஜுனன்; சிதறி ஓடும் கௌரவப் படையைத் தடுத்த துரியோதனன்; பீஷ்மரைக் கண்டித்த துரியோதனன்; பீஷ்மர் ஏற்ற உறுதி...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரிடும் பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பல்லாயிரம் தேர்களுடன் அவனை {அர்ஜுனனைப்} அனைத்து புறங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பெருமளவிலான தேர்ப்படைகளுடன் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் புறங்களில் இருந்தும் பல்லாயிரம் கணைகளால் அவனை மறைத்தனர். கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவத் தரப்பின் மன்னர்கள்}, கூரிய முனை கொண்ட பிரகாசமான வேல்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, தோமரங்கள் போர்க்கோடரிகள், முத்கரங்கள் {சம்மட்டி போன்றவை} மற்றும் உலக்கைகள் {கனத்த தடிகள்} ஆகிய ஆயுதங்களைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர்மீது வீசினார்கள்.


வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல, அனைத்துப் புறங்களிலும் (தன்னை நோக்கி) வரும் ஆயுதங்களின் மழையைப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு தடுத்தான். அச்சந்தர்ப்பத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கர வேகத்தை வெளிப்படுத்திய பீபத்சுவை {அர்ஜுனனைக்} கண்ட தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி அவனைப் {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

பெரும்படையுடன் இருந்த சுபலன் மகனின் {சகுனியின்} காந்தார வீரர்கள் [1], சாத்யகியையும், அபிமன்யுவையும் சூழ்ந்து கொண்டார்கள். சுபலனின் மகனால் {சகுனியால்} தலைமை தாங்கப்பட்டவர்களும், துணிவுமிக்கவர்களும், கோபமடைந்தவர்களுமான அந்த வீரர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களுடன் இருந்த அந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} அற்புதத் தேரைத் துண்டுகளாக வெட்டினார்கள். அந்தக் கடும் மோதலில் தனது தேரைக் கைவிட்ட சாத்யகி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் தேரில் விரைந்து ஏறிக் கொண்டான். ஒரே தேரில் இருந்த அவ்விருவரும் சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கூரிய முனை கொண்ட தங்கள் நேரான கணைகளால் விரைந்து கொல்லத் தொடங்கினர்.

[1] கங்குலியில் கந்தர்வ வீரர்கள் என்று இங்கே இருக்கிறது. அது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் பிழையாகவோ இருக்க வேண்டும். காந்தார வீரர்கள் என்பதே இங்கு சரியாக இருக்கும்.

போரில் நிலைத்துப் போராடிக் கொண்டிருந்த துரோணரும், பீஷ்மரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் படைப்பிரிவைக் கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைக் கொண்ட கூரிய கணைகளால் படுகொலை செய்யத் தொடங்கினர். அப்போது தர்மனின் மகனும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மூலம் பிறந்தவர்களான பாண்டுவின் மற்ற இரு மகன்களும் {நகுலனும், சகாதேவனும்}, மொத்தப்படையும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, துரோணரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். அங்கே நடைபெற்ற போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரப் போரைப் போலக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

பீமசேனன் மற்றும் கடோத்கசன் ஆகிய இருவரும் பெரும் காரியங்களைச் செய்தனர். அப்போது அங்கே வந்த துரியோதனன் அவர்கள் இருவரையும் தடுத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அதுவரை தான் போரிட்டதைவிட மிக அற்புதமாகத் தன் தந்தையை விஞ்சும் அளவுக்குப் போரிட்டான்.

கோபத்தால் தூண்டப்பட்டும் புன்னகைத்தவாறே இருந்த பாண்டுவின் மகன் பீமசேனன், பழிவாங்கும் தன்மையுடன் துரியோதனனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். அந்தத் தாக்குதலின் பலத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன் தனது தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். உணர்விழந்தவனை {துரியோதனனைக்} கண்ட அவனது தேரோட்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விரைவாகக் களத்தைவிட்டு வெளியே {தேரில்} அவனைச் சுமந்து சென்றான். அப்போது துரியோதனனை ஆதரித்த துருப்புகள் சிதறி ஓடினர். இப்படி அனைத்துப் புறங்களிலும் ஓடிப்போகும் குரு படையைக் கூர்முனைக் கணைகளால் தாக்கியபடியே பீமன் துரத்திச் சென்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான பிருஷதன் மகனும் (திருஷ்டத்யும்னனும்), பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும், எதிரிப்படைகளைக் கொல்லும் கூரிய கணைகளால், துரோணர், கங்கையின் மைந்தன் {பீஷ்மர்} ஆகிய இருவரின் படையை அவர்களது கண்ணெதிரிலேயே கொன்றனர். இதனால் சிதறி ஓடிய உமது மகனின் படையைத் தடுக்க இயலாதவர்களாகவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரும் இருந்தனர். பீஷ்மரும், உயர் ஆன்மத் துரோணரும் தடுக்க முயற்சித்தும், அந்தப் படைத் துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் கண் முன்பே சிதறி ஓடினர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடிய போது, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சினி {சிநி} குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே தேரில் இருந்து கொண்டு, போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கொல்லத் தொடங்கினர். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, குரு குலத்துக் காளையும் {அபிமன்யுவும்}, தேய்பிறையின் கடைசித் திதியைக் {புதுநிலவைக் [அமாவாசைக்]} கடந்து ஆகாயத்தில் சேர்ந்திருக்கும் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனும், நீரோடைகளில் மழை பொழியும் மேகங்களைப் போல உமது படையின் மீது அம்புகளைப் பொழிந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் போரில் இப்படிக் கொல்லப்பட்ட அந்தக் கௌரவப்படை துயரத்திலும் அச்சத்திலும் நடுங்கி சிதறி ஓடினர். சிதறி ஓடும் படையைக் கண்டவர்களும், வலிமைமிக்கவர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கோபத்தால் தூண்டப்பட்டும், துரியோதனனின் நன்மையை விரும்பியும் அதை {அந்தப் படை ஓடிப்போவதைத்} தடுக்க முனைந்தனர்.

பிறகு, மன்னன் துரியோதனனே நேரடியாகப் போராளிகளைத் தேற்றி [2], அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் அந்தப் படையைத் தடுத்தான். அந்த வலிமைமிக்க க்ஷத்திரிய வீரர்கள் அனைவரும் உமது மகனை {துரியோதனனை} எங்குக் கண்டார்களோ அங்கேயே நின்றனர். அப்படி நின்றவர்களைக் கண்டு பொதுவான வேறு பல வீரர்களும் வெட்கத்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் வீரத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்ட விரும்பியும் நின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி மீண்டும் திரட்டப்பட்ட அந்தப் படையின் வேகம், நிலவு உதிக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் கடலைப் போல வேகமுடையதாயிற்று.

[2] பீமனின் கணையால் தாக்கப்பட்டு மயக்கமடைந்து, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட துரியோதனன், களத்திற்கு மீண்டும் வந்து சிதறி ஓடும் தனது படையை மீண்டும் திரட்டுகிறான்.

போரிடுவதற்காக மீண்டும் திரண்ட தனது படையைக் கண்ட மன்னன் துரியோதனன், விரைவாகச் சந்தனுவின் மகன் பீஷ்மரிடம் சென்று, "ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீரும், ஆயுதமறிந்தோரில் முதன்மையான துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, நமது நண்பர்கள் பிறரும் உயிரோடிருக்கையிலேயே, ஓ! குருவின் மகனே {பீஷ்மரே}, மேலும், வலிமைமிக்க வில்லாளியான கிருபர் உயிரோடிருக்கையிலேயே இப்படி எனது படை சிதறி ஓடுவதை நம்பத்தகுந்ததாக நான் கருத இல்லை.

போரில் பாண்டவர்களை, உமக்கோ, துரோணருக்கோ, துரோணரின் மகனுக்கோ {அஸ்வத்தாமனுக்கோ}, கிருபருக்கோ எவ்வழியிலும் இணையாக நான் கருதவில்லை. ஓ! வீரரே {பீஷ்மரே}, எனது படை கொல்லப்படுவதை மன்னிக்கும் நீர், ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டுவின் மகன்களுக்குச் சாதகமாக இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {பீஷ்மரே}, போர் நடைபெறுவதற்கு முன்னரே, பாண்டவர்களுடன் போரிட மாட்டீர் என்பதை என்னிடம் நீர் சொல்லியிருக்க வேண்டும். உம்மிடமிருந்தும், துரோணரிடமிருந்தும் அத்தகு வார்த்தைகளை நான் கேட்டிருந்தால், ஓ! பாரதரே {பீஷ்மரே}, என்ன வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கர்ணனுடன் கூடி நான் சிந்தித்திருப்பேன். உங்கள் இருவரினாலும் போரில் கைவிடத்தகாதவன் நான் எனில், ஓ! மனிதர்களில் காளையரே {பீஷ்மரே, துரோணரே}, உங்கள் ஆற்றல்களுக்குத் தக்கவாறு போரிடுவீராக" என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் சிரித்த பீஷ்மர், கோபத்தால் தனது கண்களைச் சுழற்றிக் கொண்டு, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதும், நன்மை நிறைந்ததுமான வார்த்தைகளை நான் பல முறை உனக்குச் சொன்னேன். வாசவனைத் {இந்திரனைத்} தங்களுடன் கொண்ட தேவர்களாலும் கூடப் பாண்டவர்களைப் போரில் வெல்ல இயலாது. எனினும், கிழவனான என்னால் என்ன செய்ய முடியுமோ, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதை என் சக்திக்குத் தக்கபடி இந்தப் போரில் நான் செய்வேன். உனது சொந்தங்களுடன் கூடி அதை இப்போது நீ சாட்சியாகக் காண்பாயாக. தனியனான நான், அனைவரின் பார்வையிலும் இன்று, தங்கள் துருப்புகளின் தலைமையில் உள்ள பாண்டுமகன்களை அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துத் தடுக்கப் போகிறேன்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, சங்குகளை முழக்கவும், பேரிகைகளை அடிக்கவும் ஏற்பாடு செய்தான். உரத்த முழக்கங்களைக் கேட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கி, பேரிகைகளையும், முரசுகளையும் அடிக்கச் செய்தனர்" {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்