Friday, September 16, 2016

கர்ணனை வென்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 146

Satyaki vanquishes Karna! | Drona-Parva-Section-146 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 61)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுடன் கோபத்தோடு மோதிய கிருபர்; இறந்ததைப் போலத் தேரில் மயங்கிக் கிடந்த கிருபரைக் கண்டு வருந்திய அர்ஜனன்; அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன்; கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையிலான மோதல்; கர்ணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்ற சாத்யகி; கர்ணனைக் காக்க விரைந்தோர் அனைவரையும் வென்ற சாத்யகி, அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்து கர்ணனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு எனது போர் வீரர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(1)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கண்ட சரத்வானின் மகன் கிருபர், கோபவசப்பட்டு, அடர்த்தியான கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தார்.(2) துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(3) தேர்வீரர்களில் முதன்மையான அவ்விருவரும், தங்கள் தேர்களில் எதிர்த்திசையில் இருந்து தங்கள் கூரிய கணைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர்.(4) தேர்வீரர்களில் முதன்மையான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், (கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரின்) கணை மழைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்தான்.(5) எனினும், தன் ஆசானையும் (கிருபரையும்), (மற்றொரு ஆசானான) துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} கொல்ல விரும்பாதவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தானே ஆயுதங்களின் ஆசானைப் போலச் செயல்படத் தொடங்கினான்.(6)

தன் ஆயுதங்களால் அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகிய இருவரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைக் கொல்ல விரும்பாமல் மெதுவாகச் செல்லும் கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(7) எனினும், ஜெயனால் {அர்ஜுனால்} (மெதுவாகவே) ஏவப்பட்ட அக்கணைகள், கிருபரையும், அவரது மருமகனையும் {அஸ்வத்தாமனையும்} பெரும்பலத்துடன் தாக்கித் தங்கள் எண்ணிக்கையில் விளைவாக அவ்விருவருக்கும் பெரும் வலியை உண்டு பண்ணின.(8) பிறகு, சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பலம் அனைத்தையும் இழந்து, தன் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தார்.(9) கணைகளால் பீடிக்கப்பட்ட தன் தலைவர் உணர்வுகளை இழந்ததைப் புரிந்து கொண்டு, அவர் {கிருபர்} இறந்துவிட்டார் என்று நம்பிய கிருபரின் தேரோட்டி, கிருபரை போருக்கு {போர்க்களத்திற்கு} வெளியே தேரில் கொண்டு சென்றான்.(10) சரத்வானின் மகனான கிருபர் இப்படிப் போருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட பிறகு, அஸ்வத்தாமனும், பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால் அவனிடம் இருந்து தப்பி ஓடினான்.(11)

அப்போது வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகன் {கிருபர்} கணைகளால் பீடிக்கப்பட்டு மயங்கியதைக் கண்டு, தன் தேரில் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினான்.(12) கண்ணீர் நிறைந்த முகத்துடனும், இரக்கம் கொண்ட இதயத்துடனும் கூடிய அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “பெரும் ஞானம் கொண்ட விதுரர், இழிந்தவனும், தன் குலத்தை அழிப்பவனுமான சுயோதனன் {துரியோதனன்} பிறந்த போது, திருதராஷ்டிரரிடம், “தன் குலத்தின் இழிந்தவனான இவன் {துரியோதனன்} விரைவில் கொல்லப்பட வேண்டும்.(13, 14) இவனால் குருகுலத்தில் முதன்மையானோருக்கு பேரிடர் நேரப்போகிறது” என்றார். ஐயோ, உண்மையைப் பேசும் விதுரரின் வார்த்தைகள் உண்மையாகிவிட்டனவே.(15) அவனது {துரியோதனின்} நிமித்தமாகவே என் ஆசான் {பீஷ்மர்} அம்புப்படுக்கையில் கிடப்பதை நான் காண்கிறேன். க்ஷத்திரிய நடைமுறைக்கு ஐயோ. என் வலிமைக்கும், ஆற்றலுக்கும் ஐயோ.(16) என்னைப் போல வேறு எவன் தான் ஒரு பிராமணரிடம், அதுவும் தன் ஆசானிடமே போரிடுவான்? கிருபர் ஒரு முனிவரின் மகனாவார்; அவர் எனது ஆசானுமாவர்; மேலும் அவர் துரோணரின் அன்பு நண்பருமாவார்.(17) ஐயோ, அவர் என் கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் தேர்த்தட்டில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறாரே. விரும்பாமலே நான் என் கணைகளால் அவரை நசுக்கிவிட்டேனே.(18) தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடக்கும் அவர் {கிருபர்} {கிருபர்}, என் இதயத்தை மிகவும் வலிக்கச் செய்கிறார். கணைகளால் அவர் என்னைப் பீடித்திருந்தாலும், பளபளக்கும் காந்தி கொண்ட அந்தப் போர் வீரரை (பதிலுக்குத் தாக்காமல், அவரை) நான் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும்.(19) எண்ணற்ற என் கணைகளால் தாக்கப்பட்ட அவர் {கிருபர்}, அனைத்து உயிரினங்களின் வழியிலேயே சென்றுவிட்டார். அதனால் என் மகனின் {அபிமன்யுவின்} கொலையைவிட எனக்கு அதிக வலியைத் தந்துவிட்டார்.(20)

ஓ! கிருஷ்ணா, இப்படிப் பரிதாபகரமாகத் தன் தேரில் உணர்வற்று கிடக்கும் அவர் எந்நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டார் என்பதைப் பார். தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்த பிறகு விருப்பத்திற்குரிய பொருட்களை அவர்களுக்குக் கொடுக்கும் மனிதர்களில் காளையர் தெய்வீகத் தன்மையை அடைகின்றனர். மறுபுறம், தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்துவிட்டு, அவர்களைத் தாக்கும் மனிதர்களில் இழிந்தோரான அந்தத் தீய மனிதர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.(21, 22) நான் செய்திருக்கும் இச்செயல் என்னை நரகத்திற்கே வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.(23) கிருபரின் பாதங்களில் ஆயுத அறிவியலை நான் படித்துக் கொண்டிருந்த அந்நாட்களில், அவர் {கிருபர்} என்னிடம்,(24) “ஓ! குரு குலத்தோனே {அர்ஜுனா}, உன் ஆசானை ஒரு போதும் தாக்காதே” என்று சொன்னார். என் கணைகளால் கிருபரை நான் தாக்கியதால், நீதிமானும், உயர் ஆன்மா கொண்டவருமான என் ஆசானின் {கிருபரின்} அந்தக் கட்டளைக்கு நான் கீழ் படியவில்லை.(25) பின்வாங்காதவரும், கௌதமரின் வழிபடத்தகுந்த மகனுமான அந்த வீரரை {கிருபரை} நான் வணங்குகிறேன்.(26) ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நான் அவரைத் தாக்கியதால் எனக்கு ஐயோ {என்னை இகழவே வேண்டும்}” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, கிருபருக்காகப் புலம்பிக் கொண்டிருந்த போது, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்} அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான்.(27) இப்படி ராதையின் மகன் {கர்ணன்}, அர்ஜுனனின் தேரை நோக்கி விரைவதைக் கண்ட பாஞ்சால இளவரசர்களும், சாத்யகியும் திடீரென அவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(28) வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, ராதையின் மகன் {கர்ணன்} முன்னேறி வருவதைக் கண்டு, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} புன்னகைத்துக் கொண்டே,(29) “அதோ அதிரதன் மகன் {கர்ணன்}, சாத்யகியின் தேரை எதிர்த்து வருகிறான்.(30) போரில் பூரிஸ்ரவஸின் கொலையை அவனால் {கர்ணனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை [1]. ஓ! ஜனார்த்தனா, கர்ணன் எங்கே வருகிறானோ, அங்கே என் குதிரைகளைத் தூண்டுவாயாக.(31) அந்த விருஷன் (கர்ணன்), சாத்வத வீரனை {சாத்யகியைப்} பூரிஸ்ரவஸின் வழியை அடையச் செய்ய வேண்டாம்” என்றான் {அர்ஜுனன்}.

[1] வேறொரு பதிப்பில் சாத்யகிக்கும் கர்ணனுக்கு இடையில் நேரப்போகும் இந்த மோதல் பூரிஸ்ரவஸின் கொலைக்குப் பிறகு வருகிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இங்கேயே வருகிறது. வேறொரு பதிப்பில் உள்ளவாறே துரோண பகுதி 144ல் வரும் அர்ஜுனன் கர்ணன் மோதல் காட்சிகள் இந்த 146ம் பகுதியிலும், இந்த 146ல் வரும் சாத்யகி கர்ணன் காட்சிகள் 144லும் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும் வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்} சந்தர்ப்பத்திற்கு ஏற்ற இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்(32): “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியானவன், தனியாகவே கர்ணனுக்கு இணையானவனாவான்.(33) அப்படியிருக்கையில் துருபதனின் இரு மகன்களுடன் சேர்ந்திருக்கும் இந்தச் சாத்வதர்களில் காளை {சாத்யகி} எவ்வளவு மேன்மையாக இருப்பான்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தற்போது நீ கர்ணனுடன் போரிடுவது முறையாகாது.(34) பின்னவன் {கர்ணன்}, வாசவன் {இந்திரன்} அவனுக்குக் கொடுத்த கடும் எரிக்கோளைப் போன்ற சுடர்மிக்க ஈட்டி {சக்தி} ஒன்றைத் தன்னிடம் வைத்திருக்கிறான். ஓ! பகைவீரர்களைக் கொல்பவனே {அர்ஜுனா}, அவன் {கர்ணன்} அதை மரியாதையுடன் வழிபட்டு உனக்காகவே அதைத் தன்னிடம் வைத்திருக்கிறான்.(35) எனவே கர்ணன் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்துச் சுதந்திரமாகச்செல்லட்டும். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போது நீ உன் கூரிய கணைகளால் அவனை {கர்ணனை} அவனது தேரில் இருந்து தள்ள வேண்டுமோ அந்தக் காலத்தை, அந்தப் பொல்லாதவனின் நேரத்தை நான் அறிவேன்” என்றான் {கிருஷ்ணன்} [2]” {என்றான் சஞ்சயன்}.(36)

[2] வேறொரு பதிப்பில், கர்ணனின் புகழையும், மேன்மையையும் கிருஷ்ணன் சொல்லி அர்ஜுனனைக் காத்திருக்கப் பணிப்பதாக வருகிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறு இல்லை.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ சஞ்சயா, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, வீரக் கர்ணனுக்கும், விருஷ்ணி குலத்தோனான சாத்யகிக்கும் இடையில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வயாக. சாத்யகியோ {பூரிஸ்ரவஸால்} தேரற்றவனாக்கப்பட்டான். {அப்படியிருக்கையில்} அவன் எந்தத் தேரில் ஏறிச் சென்றான்? (அர்ஜுனனின் தேர்ச்) சக்கரங்களைப் பாதுகாப்போரான அந்தப் பாஞ்சால இளவரசர்கள் இருவரும் (யுதாமன்யுவும், உத்தமௌஜஸும்} எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான்.(37, 38)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்தப் பயங்கரப் போரில் நடைபெற்ற யாவையும் உமக்கு விளக்கிச் சொல்கிறேன். உமது தீய நடத்தையை (தீய நடத்தையின் விளைகளைப்) பொறுமையாகக் கேட்பீராக.(39) மோதல் நடைபெறுவதற்கு வெகு முன்பே, யூபக் கொடியோனால் (பூரிஸ்ரவஸால்) வீரச் சாத்யகி வெல்லப்படுவான் என்பதைக் கிருஷ்ணன் தன் இதயத்தில் அறிந்திருந்தான்.(40)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடந்ததையும், நடக்கப்போவதையும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அறிவான். அதன் காரணமாக, தன் தேரோட்டியான தாருகனை அழைத்த அவன் {கிருஷ்ணன்}, அவனிடம் {தாருகனிடம்}, “நாளை என் தேர் தயாராக இருக்கட்டும்” என்றான்.(41) இதையே அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்} கட்டளையிட்டான். தேவர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, மனிதர்களோ அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} வெல்லத் தகுந்தவர்கள் அல்ல.(42) பாட்டனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், சித்தர்களும், இவ்விருவரின் ஒப்பிலா ஆற்றலை அறிவார்கள்.(43) எனினும், போரை நடந்தவாறே இப்போது கேட்பீராக.

தேரற்ற சாத்யகியையும், போருக்குத் தயாராக இருக்கும் கர்ணனையும் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, ரிஷப ஸ்வரத்தில் [3] பேரொலியுடன் சங்கை முழக்கினான்.(44) (கேசவனின்) சங்கொலியைக் கேட்டுப் பொருளைப் புரிந்து கொண்ட தாருகன், பெரிய கொடிமரத்தைக் கொண்ட அந்தத் தேரைக் கேசவனிடம் கொண்டு சென்றான்.(45)

சிநியின் பேரன் {சாத்யகி}, கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியுடன், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பானதும், தாருகனால் வழிநடத்தப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறினான்.(46) தெய்வீக வாகனத்திற்கு ஒப்பானதும், விரும்பிய இடத்திற்குச் செல்லவல்லதும், சைப்யம், சுக்ரீவம், மேகபுஸ்பம் மற்றும் வலாஹகம் ஆகிய முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறிய சாத்யகி, கணக்கிலடங்கா கணைகளை இறைத்தபடி ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(47, 48) (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜஸும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரைக் கைவிட்டு, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(49) ராதையின் மகனும் {கர்ணனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கணைமாரியை ஏவியபடி, வெல்லப்படாத சிநியின் பேரனை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தான்.(50)

[3] ஏழு ஸ்வரங்களுக்குள் இரண்டாவது ஸ்வரம் இஃது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரானது இதற்கு முன்னர்ப் பூமியிலோ, சொர்க்கத்திலோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள் அல்லது ராட்சசர்களுக்கு மத்தியிலோ கூட நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதில்லை என்ற அளவக்கு இருந்தது. தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்ட மொத்த படையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரு போர்வீரர்களின் மலைக்கத்தக்க செயல்களைக் கண்டு போரிடுவதைக் கைவிட்டது.(51, 52) அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு மானுட வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் போரையும், தேரை வழிநடத்தும் தாருகனின் திறனையும் கண்டு அமைதியான பார்வையாளர்களாக இருந்தனர்.(53) உண்மையில் தாருகன், தேரில் நின்று கொண்டு, அந்த வாகனத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும், பக்கவாட்டில் சென்றும், வட்டமாகச் சுழன்றும், ஒரே அடியாக நிறுத்தியும் வழிநடத்திய போது, அவனது திறனைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர். ஆகாயத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், கர்ணனுக்கும் சிநியின் பேரனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடைபெற்ற போரை ஊன்றிக் கவனித்து வந்தனர்.(54, 55) பெரும் வலிமை கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, தங்கள் ஒவ்வொருவரின் நண்பர்களுக்காகவும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.(56)

தேவனைப் போலத் தெரிந்த கர்ணனும், யுயுதானனும் {சாத்யகியும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின்மேல் ஒருவர் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(57) உண்மையில், தன் கணைப்பொழிவால் சிநியின் பேரனை {சாத்யகியைக்} கலங்கடித்த கர்ணனால், (சாத்யகியால்} குரு வீரன் ஜலசந்தனின் [4] கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(58) துயரால் நிறைந்து, பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரன் {சாத்யகி} மீது கோபப் பார்வைகளை வீசிக்கொண்டு, அதனாலேயே அவனை எரித்து விடுபவனைப் போல அவனை நோக்கி மூர்க்கமாக மீண்டும் மீண்டும் விரைந்தான்.(59) சினத்தால் நிறைந்திருந்த அவனை {கர்ணனைக்} கண்ட சாத்யகி, (பகை யானையைத்) தன் தந்தங்களால் துளைக்கும் யானையொன்றைப் போல, அடர்த்தியான கணைமாரிகளை ஏவி பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(60) புலிகளின் சுறுசுறுப்பையும், ஒப்பற்ற ஆற்றலையும் கொண்ட மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், அந்தப் போரில் ஒருவரையொருவர் மூர்க்கமாகச் சிதைத்துக் கொண்டனர்.(61)

[4] துரோண பர்வம் பகுதி 114ல்  ஜலசந்தனைச் சாத்யகி கொன்றான்.

அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான கணைகளால், எதிரிகளைத் தண்டிப்பவனான கர்ணனின் அங்கங்களனைத்திலும் மீண்டும் மீண்டும் துளைத்தான். மேலும் ஒரு பல்லத்தால் அவன் கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(62, 63) மேலும் அவன் {சாத்யகி} தன் கூரிய கணைகளால், வெண்ணிறத்தைக் கொண்ட அதிரதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். மேலும் ஒரு நூறு கணைகளால் கர்ணனின் கொடிமரத்தை நூறு துண்டுகளாக அறுத்த அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர்.(64, 65)

அப்போது கர்ணனின் மகனான விருஷசேனன், மத்ர ஆட்சியாளனான சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(66) பிறகு எதையும் காண முடியாத ஒரு குழப்பம் தோன்றியது. உண்மையில், வீரக் கர்ணன், சாத்யகியால் தேரற்றவனாக்கப்பட்ட போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன(67).

சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குழந்தை பருவத்தில் இருந்து உமது மகனுடன் கொண்ட தன் நட்பை நினைவு கூர்ந்து, துரியோதனனுக்கு அரசுரிமையை அளிப்பதாகத் தான் செய்த உறுதிமொழியை உண்மையாக்க முயன்று, மிகவும் பலவீனமடைந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டே துரியோதனனின் தேரில் ஏறினான்.(68, 69)

கர்ணன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, ஓ! மன்னா, சுயக்கட்டுப்பாடு கொண்டவனும், பீமசேனனின் சபதத்தைப் பொய்யாக்க விரும்பாதவனுமான சாத்யகியால், துச்சாசனன் தலைமையிலான உமது துணிச்சல்மிக்க மகன்கள் கொல்லப்படாதிருந்தனர். முன்னர்ப் பார்த்தனால் {அர்ஜுனனால்} (கர்ணனைக் கொல்வது குறித்து) செய்யப்பட்ட சபதத்தையும் பொய்யாக்க விரும்பாத சாத்யகி, வெறுமனே அவர்களைத் தேரற்றவர்களாக்கி மிகவும் பலவீனர்களாக்கினானே ஒழிய அவர்களைக் கொல்லவில்லை.(70, 71) உண்மையில், உமது மகன்களைக் கொல்வதாகப் பீமன் சபதம் செய்திருந்தான், மேலும் இரண்டாம் பகடையாட்டத்தின் போது கர்ணனைக் கொல்வதாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} சபதம் செய்திருந்தான்.(72) கர்ணனின் தலைமையிலான அந்தப் போர் வீரர்கள் அனைவரும், சாத்யகியைக் கொல்லப் பலமான முயற்சிகளைச் செய்தாலும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அவனைக் {சாத்யகியைக்} கொல்வதில் தோற்றனர்.(73) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், நூற்றக்கணக்கான க்ஷத்திரியர்களின் முதன்மையானோர் ஆகியோர் அனைவரையும் தன் ஒரே வில்லைக் கொண்டு சாத்யகி வெற்றி கொண்டான்.(74) அந்த வீரன் {சாத்யகி}, நீதிமனான மன்னன் யுதிஷ்டிரனின் நலனையும், சொர்க்கத்தையும் அடைய விரும்பியே போரிட்டான்.(75) உண்மையில், எதிரிகளை நசுக்குபவனான அந்தச் சாத்யகி, சக்தியில் இரு கிருஷ்ணர்களுக்கும் {இரு கருப்பர்களுக்கும்} இணையானவனாக இருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே உமது துருப்புகள் அனைத்தையும் வெற்றி கொண்டான்.(76) இவ்வுலகில், கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்}, சாத்யகி ஆகிய மூவர் மட்டுமே வலிமைமிக்க வில்லாளிகளாவர். நான்காவதாக ஒருவன் காணப்படவில்லை” {என்றான் சஞ்சயன்}.(77)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தாருகனைச் சாரதியாகக் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேரில் ஏறியவனும், தன் கரவலிமையில் செருக்குடையவனும், போரில் வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனுமான சாத்யகி கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். சாத்யகி (கர்ணனனுடனான மோதல் முடிந்த பிறகு) வேறு ஏதேனும் தேரில் ஏறினானா?(78, 79) ஓ! சஞ்சயா, நான் இதைக் கேட்க விரும்புகிறேன். உரைப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். தாங்கிக் கொள்ளப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாகச் சாத்யகியை நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(80)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஃது எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக. நுண்ணறிவு கொண்ட தாருகனின் தம்பி, தேவைக்குரிய அனைத்தையும் கொண்ட மற்றொரு தேரைச் சாத்யகியிடம் கொண்டு வந்தான்.(81) இரும்பு, தங்கம் மற்றும் பட்டுப் பட்டைகளில் இணைக்கப்பட்ட ஏர்க்காலைக் கொண்டதும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், சிங்க வடிவம் பொறிக்கப்பட்ட கொடிமரம் கொண்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும் காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், மேக முழக்கத்தைப் போல ஆழமான சடசடப்பொலி கொண்டதுமான தேர் அவனிடம் {சாத்யகியிடம்} கொண்டு வரப்பட்டது.(82, 83) அதில் ஏறிய சிநியின் பேரன் {சாத்யகி}, உமது துருப்புகளுக்கு எதிராக விரைந்தான். அதே வேளையில் தாருகன் முன்பைப் போலவே கேசவன் {கிருஷ்ணன்} பக்கத்தில் சென்றான்.(84)

கர்ணனுக்கும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சிறந்த இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சங்கு, அல்லது பசுவின் பால் போன்ற வெண் நிறத்தைக் கொண்டவையுமான வேகமானக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு புதிய தேர் கொண்டு வரப்பட்டது. அதன் காக்ஷமும், கொடிமரமும் தங்கத்தாலானவையாக இருந்தன. கொடிகள், இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அந்த முதன்மையான தேர் ஒரு சிறந்த சாரதியையும் கொண்டிருந்தது. மேலும் அஃது அனைத்து வகை ஆயுதங்களையும் தன்னகத்தே அபரிமிதமாகக் கொண்டிருந்தது. அந்தத் தேரில் ஏறி, கர்ணனும் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். நீர் கேட்ட அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டனே.(85-87)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையால் விளைந்த அழிவை (அழிவின் அளவை) அறிந்து கொள்வீராக. உமது மகன்களில் முப்பத்தோரு {31} பேர் பீமசேனனால் கொல்லப்பட்டனர் [5].(88) துர்முகனை முதன்மையாகக் கொண்ட அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். சாத்யகியும், அர்ஜுனனும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} பீஷ்மர் மற்றும் பகதத்தன் முதலான நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றிருக்கின்றனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} உமது தீய ஆலோசனைகளின் காரணமாக அழிவு தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(89, 90)

[5] பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 56 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் நாம் பார்த்தவரை இதுவரை 32 பேரைக் கொன்றிருக்கிறான். துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் மேற்சொன்ன படி 31 என்ற கணக்கு சரியாகவே வரும். மேலதிக விவரங்களுக்குத் துரோண பர்வம் பகுதி 136ன் அடிக்குறிப்பு [1] ஐக்  காண்க...
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 146ல்  வரும் மொத்த சுலோகங்கள் 90
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்