Saturday, October 01, 2016

பீமசேனனின் ருத்ரதாண்டவம்! - துரோண பர்வம் பகுதி – 154

The Rudrathandava of Bhimasena! | Drona-Parva-Section-154 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : சிபியைக் கொன்ற துரோணர்; கலிங்கர்களின் இளவரசன், துருவன், ஜயராதன் ஆகியோரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்களான துர்மதன், துஷ்கர்ணன் ஆகியோரைத் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்ற பீமன்; குரு படையை விரட்டியடித்த பீமசேனன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்?(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்?(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்? சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்?(3, 4)


வரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? ஓ! சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர்? போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்?(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ! சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்?(7)

அந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்?(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்?(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ! சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)

[1] கங்குலியின் பதிப்பில் world of spirits என்றும், மன்மதநாதத்தரின் பதிப்பில் region of the departed spirits என்றும் இருக்கிறது. வேறொரு பதிப்பில், “பிரேதலோகத்திற்கு அனுப்பி வைத்தார்” என்றிருக்கிறது.

பாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)

கலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)

[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீஷ்ம பர்வம் பகுதி 54ல் விவரிக்கப்படும் இரண்டாம் நாள் போரில் பீமனால் கொல்லப்பட்டான். இப்போது நடப்பது பதினான்காம் நாளின் இரவு நேரப் போராகும்.

கர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)

[3] இவன் கலிங்க இளவரசனின் சகோதரன் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவன் துருமன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் துருமனும், ஜெயராதனும் கர்ணனின் சகோதரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

அப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)

சினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)

அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)

[4] இந்தத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைச் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 58 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 34 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 136ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் 33 பேரைக் கொன்றிருக்கிறான். மேலதிக விவரங்களுக்குத் துரோண பர்வம் பகுதி 136ன் அடிக்குறிப்பு [1] மற்றும் [3] ஐ காண்க.

அப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.(46)
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 154-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-46


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்