Thursday, February 16, 2017

சாரதியாவதை ஏற்ற சல்லியன்! - கர்ண பர்வம் பகுதி – 32

Salya accepts to be a driver! | Karna-Parva-Section-32 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனுக்குச் சாரதியாக இருக்குமாறு சல்லியனை வேண்டிய துரியோதனன்; சினம் கொண்ட சல்லியன் வீட்டுக் திரும்புவதாகச் சொல்வது; வர்ணங்களின் உயர்வு தாழ்வு சொல்வது; சல்லியனைத் தடுத்து அவனைப் புகழ்ந்த துரியோதனன்; துரியோதனனின் புகழ்ச்சியில் நிறைந்த சல்லியன், ஒரு நிபந்தனையுடன் கர்ணனுக்குச் சாரதியாக இருப்பதாக ஏற்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, அவனிடம் பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மெய்நோன்புகள் கொண்டவரே, ஓ பெரும் நற்பேற்றைக் கொண்டவரே, ஓ! எதிரிகளின் கவலைகளை அதிகரிப்பவரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! போரில் வீரரே, ஓ! பகைவர் துருப்புகளை அச்சுறுத்துபவரே,(2) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, என்னிடம் பேசிய கர்ணனின் நிமித்தமாக, இந்த மன்னர்களில் சிங்கங்களின் முன்னிலையில், உம்மிடம் வேண்டிக் கேட்க நான் எவ்வாறு விரும்புகிறேன் என்பதையே நீர் கேட்டுக் கொண்டிருக்கிறீர்.(3) ஓ! ஒப்பிலா ஆற்றலைக் கொண்டவரே, ஓ! மத்ரர்களின் மன்னரே, எதிரியின் அழிவுக்காக, பணிவுடன் சிரம் தாழ்த்தி நான் இன்று உம்மை வேண்டிக் கேட்கிறேன்[1].(4) எனவே, பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நன்மைக்காகவும், ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, தேரோட்டியின் பணியை அன்புடன் ஏற்பதே உமக்குத் தகும்.(5)


[1] கங்குலியில் 3 மற்றும் 4ம் சுலோகங்களில் வரும் இந்தச் செய்தி, வேறொரு பதிப்பில், “எனக்குப் பிரியத்தைச் செய்வதின் பொருட்டும், நன்மையைச் செய்வதின் பொருட்டும், அவ்வாறே பார்த்தனுடைய வதத்தின் பொருட்டும் ராஜஸ்ரேஷ்டர்களுடைய மத்தியில் கர்ணன் சொன்ன வார்த்தையை நீர் கேட்டிருக்கிறீர். உம்மை நான் பிரார்த்திக்கிறேன். ஒப்பற்ற வீர்யமுடையவரே, சத்துரு பக்ஷங்களுக்கு நாசத்தையுண்டுபண்ணுகிறவரே! ஆதலால், நான் இப்பொழுது உம்மை முடியினால் வணங்கி வேண்டுகிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ பேச்சாளர்களில் சிறந்தவரே, கர்ணன் என்ன சொன்னான் என்பதையும், இளவரசர்களில் முதன்மையானோர் அனைவரிலும் அந்த வீரன் (கர்ணன்) உம்மையே தேர்ந்தெடுக்கிறான் என்பதையும் நீர் கேட்டீர். இவ்வாறு இருக்கும் உம்மிடம், ஓ வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்டவரே, ஓ மத்ரர்களின் இளவரசரே, என் எதிரிகளின் அழிவிற்காகப் போதுமான பணிவுடன், என் சிரத்தால் வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஓ சொற்பொழிவாளர்களில் உயர்ந்தவரே, கர்ணனின் வார்த்தைகளை நீர் கேட்டீர். இந்த மன்னர்களில் சிங்கங்களுக்கு மத்தியில் நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நலத்துக்காகவும் ஆகும்" என்றிருக்கிறது.

ராதையின் மகன் {கர்ணன்}, தனது சாரதியாக உம்மைக் கொண்டு என் எதிரிகளை அடக்குவான். ஓ! பெரும் நற்பேற்றைப் பேற்றவரே {சல்லியரே}, போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவரே, கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களைப் பிடிப்பதற்கு உம்மைத் தவிர வேறு எவனும் இல்லை. மகேஸ்வரனை {சிவனைக்} காக்கும் பிரம்மனைப் போல நீர் அனைத்து வழிகளிலும் கர்ணனைக் காப்பீராக.(6,7) பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அனைத்து ஆபத்துகளிலும், அனைத்து வழிகளிலும் காக்கும் விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! மத்ரர்களின் தலைவா, இன்று நீர் ராதையின் மகனைக் காப்பீராக.(8) பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும், நீரும், போஜர்களின் வீரத்தலைவன் {கிருதவர்மன்}, சுபலரின் மகன் சகுனி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரும், நானும் நமது படையின் முக்கியப் பலமாக இருக்கிறோம்.(9) இவ்வாறே, ஓ! பூமியின் தலைவா, நாம் பகைவரின் படையை ஒவ்வொருவருக்கும் ஒரு பங்காக ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம். பீஷ்மருக்குப் பகிர்ந்தளித்த பங்கானது இப்போது இல்லை. அதே போல, உயர் ஆன்ம துரோணருக்குப் பகிர்ந்தளித்த பங்கும் இப்போது இல்லை.(10) அவர்கள் இருவரும் தங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கிற்கு அதிகமாகவே என் எதிரிகளைக் கொன்றிருக்கின்றனர்.

மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், கிழவர்கள் என்றாலும், வஞ்சகத்தாலேயே அவ்விருவரும் கொல்லப்பட்டார்கள்.(11) அடைவதற்கரிய மிகக் கடினமாகச் சாதனைகளைச் செய்த அவ்விருவரும், ஓ! பாவமற்றவரே, சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்கள். அதே போலவே நம் படையைச் சார்ந்த மனிதர்களில் புலிகளான பலரும், தங்கள் சிறந்த சக்திகளைப் பயன்படுத்திப் பெருமுயற்சி செய்த பிறகு, போரில் எதிரியால் கொல்லப்பட்டு, தங்கள் உயிரைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12,13) எனவே, ஓ! மன்னா {சல்லியரே}, முதலில் நம்மை விடக் குறைவானவர்களாக இருந்த பார்த்தர்களால், பெரும்பகுதி கொல்லப்பட்ட இந்த என் படை {இப்போது} இந்நிலையை அடைந்திருக்கிறது. இப்போது என்ன செய்யப்பட வேண்டும்?(14) ஓ! பூமியின் தலைவா, வலிமைமிக்கவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான உயர் ஆன்ம குந்தியின் மகன்களால் {பாண்டவர்களால்} எஞ்சிய என் படையும் அழிவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வீராக.(15)

ஓ! தலைவா {சல்லியரே}, என் இந்தப் படையின் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைப் போரில் பாண்டவர்கள் கொன்றுவிட்டனர்.(16) ஓ!மனிதர்களில் புலியே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனும், மொத்த உலகத்தில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான நீரும் மட்டுமே நமது நன்மையில் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்.(17) ஓ! சல்லியரே, கர்ணன் இன்று அர்ஜுனனுடன் போரிட விரும்புகிறான். ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, அவன் {கர்ணன்} வெற்றிப் பெறுவான் என்ற நம்பிக்கை என்னில் பெரிதாக இருக்கிறது.(18) கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களை நன்றாகப் பிடிக்கத்தக்கவர் (உம்மைத் தவிர) வேறு எவரும் இவ்வுலகில் இல்லை. கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன், போரில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருப்பதைப் போலவே, ஓ! மன்னா {சல்லியரே}, கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரில் முதன்மையான நீர் கர்ணனின் தேரில் இருப்பீராக.(19) ஓ! ஐயா, போரில் அவனது {கிருஷ்ணனின்} துணையுடனும், அவனால் பாதுகாக்கப்பட்டும் பார்த்தன் {அர்ஜுனன்} அடையும் சாதனைகள் அனைத்தும் உம் முன்பாக இருக்கின்றன.(20) முன்பெல்லாம் அர்ஜுனன், போரில் இது போலத் தன் எதிரிகளை எப்போதும் கொன்றதில்லை. எனினும், இப்போதோ, கிருஷ்ணனுடன் சேர்ந்து அவனது ஆற்றல் பெரிதாகியிருக்கிறது.(21) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனுடன் சேர்ந்திருப்பதால் நாளுக்கு நாள் இந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது நிர்மூலமாக்கப்படுகிறது.(22)

ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, கர்ணனுக்கும், உமக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கு ஒன்று இருக்கிறது. கர்ணனுடன் சேர்ந்து அந்தப் பங்கைச் சுமந்து, போரில் அஃதை அழிப்பீராக.(23) சூரியன், அருணனுடன் சேர்ந்து இருளை அழிப்பதைப் போலவே, நீர் கர்ணனுடன் சேர்ந்து போரில் பார்த்தர்களைக் கொல்வீராக.(24) அடிவானில் உதித்தெழும் இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட வீரர்களுமான கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரைப் போரில் கண்டு, (எதிரியின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் தப்பித்து ஓடட்டும்.(25) சூரியனையும் அருணனையும் கண்ட இருள் அழிவதைப் போல, கௌந்தேயர்களும், அவர்களுடன் சேர்ந்த பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களும், உம்மையும் கர்ணனையும் கண்டு அழிந்து போகட்டும்.(26) கர்ணன் தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும், நீரோ சாரதிகளில் முதன்மையானவராகவும் இருக்கிறீர்கள். மீண்டும் ஏற்படப்போகும் இந்தப் போரின் மோதலில், உமக்கு இணையானவர் எவரும் இல்லை.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} காப்பதைப் போல, போரில் நீரும் விகர்த்தனன் மகனான கர்ணனைக் காப்பீராக.(28) உம்மைச் சாரதியாகக் கொண்ட கர்ணன், சக்ரனை {இந்திரனைத்} தலைமையில் கொண்ட தேவர்களுடன் கூடப் போரில் வெல்லப்பட முடியாதவன் ஆகிவிடுவான். பிறகு, பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல என்ன இருக்கிறது? என் வார்த்தைகளில் ஐயம் கொள்ளாதீர்” {என்றான் துரியோதனன்}.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு சல்லியன் சினத்தால் நிறைந்தான். தன் புருவங்களை மூன்று கோடுகளாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்து,(30) கோபத்தால் சிவந்த தன் பெரிய கண்களை உருட்டியவனும், பருத்த கரங்களைக் கொண்டவனும், தன் குலப்பிறப்பு, செல்வம், அறிவு, பலம் ஆகியவற்றில் பெருமை கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {சல்லியன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(31) சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் “சாரதியாகச் செயல்படுவாயாக” என்று என்னை நீ வேண்டிக் கொள்வதால், நீ என்னை அவமதிக்கிறாய், அல்லது என்னைச் சந்தேகிக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(32) எம்மை விடக் கர்ணனை மேன்மையானவனாகக் கருதுவதால் நீ அவனை இவ்வாறு புகழ்கிறாய். எனினும் நான், ராதையின் மகனைப் {கர்ணனைப்} போரில் எனக்கு இணையானவனாகக் கருதவில்லை.(33) ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, இன்னும் பெரிய பங்கை எனக்கு நீ அளிப்பாயாக. அதை {அந்தப் பங்கைப்} போரில் அழித்து, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே திரும்பிச் செல்வேன்.(34) அல்லது, நீ விரும்பினால், ஓ! குருக்களை மகிழ்விப்பவனே, எதிரியுடன் நான் தனியொருவனாகவே போரிடுவேன். இன்று எதிரிகளை எரிக்கப்போகும் என் ஆற்றலைக் காண்பாயாக. (35)

எம்மைப் போன்ற ஒரு மனிதன், {மனத்தில்} ஓர் அவமானத்தை அடைகாத்துக் கொண்டு, நான் செய்யும் பணியில் எப்போதும் ஈடுபடமாட்டான். போரில் என்னை நீ எப்போதும் {இப்படி} அவமதிக்கக்கூடாது.(36) இடியைப் போன்றவையும், பருத்தவையுமான என்னிரு கரங்களைப் பார். என் சிறந்த வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான இந்தக் கணைகளையும் பார்.(37) காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட என் தேரைப் பார். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சணல் கயிறுகளால் பின்னப்பட்டதுமான என் கதாயுதத்தையும் பார்.(38) கோபத்தில் நிறைந்தால், ஓ! மன்னா, என் சக்தியைக் கொண்டு பூமியைப் பிளக்கவும், மலைகளைச் சிதறடிக்கவும், பெருங்கடல்களை வற்ற செய்யவும் என்னால் முடியும்.(39) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரிகளைப் பீடிக்க இவ்வளவு வல்லவனாக என்னை அறிந்தும்கூட, அதிரதன் மகனை {கர்ணனைப்} போல இழிந்த பிறப்புக் கொண்ட ஒரு மனிதனுக்குப் போரில் சாரதி அலுவலில் என்னை ஏன் நீ நியமிக்கிறாய்?[2](40)

[2] உத்யோக பர்வம் பகுதி 8ல் சல்லியன் எவ்வாறு துரியோதனனின் தரப்பை அடைகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் யுதிஷ்டிரன் சல்லியனிடம், கர்ணனுக்குத் தேரோட்டும் வாய்ப்பு சல்லியனுக்குக் கிடைக்கலாம் என்றும், அப்போது கர்ணனின் உற்சாகத்தை அவன் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறான்.

ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இத்தகு அற்பப் பணிகளை எனக்கு அளிப்பது உனக்குத் தகாது. இவ்வளவு மேன்மையான நான், பாவம் நிறைந்த ஒரு மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய என் மனத்தை இணங்கச் செய்ய முடியாது.(41) தன் அன்புக்குக் கீழ்ப்படிந்து, தன் சொந்த விருப்பத்தோடு வந்த ஒரு மேன்மையான மனிதனைப் பாவம் நிறைந்த அற்பனுக்கு எவன் வசப்படச் செய்வானோ, அவன், மேன்மையானவனோடு கீழ்மையானவனைக் குழப்பிக் கொண்டதற்காக நிச்சயம் பாவத்தையே அடைவான்[3].(42)
பிரம்மன் பிராமணர்களை அவனது வாயிலிருந்து படைத்தான், 
க்ஷத்திரியர்களை அவனது கரங்களில் இருந்து படைத்தான். 
வைசியர்களை அவனது தொடைகளில் இருந்தும், 
சூத்திரர்களை அவனது பாதங்களில் இருந்தும் படைத்தான்.
அந்த நால்வகையில் ஒன்றோடொன்று இணைந்ததன் விளைவால், மேலான வர்க்கங்களில் பிறந்த மனிதர்கள், தங்களைவிடக் கீழான வர்க்கங்களின் பெண்களைத் திருமணம் செய்தும், நிலையெதிர்மாறாகச் செய்தும் {மேன்மையான பெண்கள், கீழ்மையான ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதாலும்}, அந்த நான்கிலிருந்து குறிப்பிட்ட வர்க்கங்கள் உதித்தன[4].(44)

[3] வேறொரு பதிப்பில், “தன்னை வந்து அடுத்தவனும் மிக்கக் கௌரவமுள்ளவனுமான மித்திரனை அதிகப் பாவியான ஒருவனுடைய வசத்தில் எவன் இருக்கும்படி செய்கிறானோ, அவனுடைய அக்காரியம் கீழோரை மேம்படுத்தலும், மேலோரைக் கீழ்ப்படுத்தலுமாகிற விபரீதச் செய்கையினாலுண்டான பாவமாகும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஒரு மேன்மையான மனிதன் பாசத்தாலும், பணிவாலும் வந்திருக்கிறான். அத்தகு மனிதன் ஒருவனை எவன் ஒருவன் தாழ்ந்த மனிதனின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் செய்கிறானோ, அவன், மேன்மையானவனைக் கீழ்மையானவனுடன் குழப்பும் குற்றத்தைச் செய்கிறான்” என்றிருக்கிறது.

[4] வேறொரு பதிப்பில், “நான்கு வர்ணங்களிடத்தினிந்தும் ஒன்றோடொன்று சேர்வதினால் அனுலோம, பிரதிலோம, ஸாங்கர்யத்தினாலுண்டான ஜாதிவிசேஷங்களுடைய உட்பிரிவுகள் உண்டாகின்றன” என்று இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே உள்ளது. மன்மதநாதத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

(பிற வர்க்கங்களின்) பாதுகாவலர்கள், செல்வத்தை அடைபவர்கள், அதையே {செல்வத்தைக்} கொடுப்பவர்கள் ஆகியோரே {மேலே} விளக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் ஆவர். வேள்விகளில் துணை செய்வது, கல்வி பயிற்றுவிப்பது, தூய கொடைகளை ஏற்பது ஆகியவற்றைச் செய்து மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காகப் பூமியில் நிறுவப்பட்டிருக்கிறார்கள்.

(45) உழவு, கால்நடை வளர்த்தல், கொடை ஆகியவையே சாத்திரங்களின் படி வைசியர்களின் தொழில்கள்.(46)

அதே போலச் சூதர்கள் {வர்ணக்கலப்பில் பிறந்தவர்கள்}, க்ஷத்திரியர்களுக்குப் பணியாட்களாவர், க்ஷத்திரியர்களோ சூதர்களுக்குப் பணியாட்கள் அல்ல. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக.(47) என்னைப் பொறுத்தவரை, புனித நீராடலுடன் மகுடம் சூடியவன் நான். அரச முனிகளின் குலத்தில் நான் பிறந்திருக்கிறேன். பெரும் தேர்வீரனாக நான் அறியப்பட்டிருக்கிறேன். வழிபாட்டுக்கும், பாணர்களும், சூதர்களும் {புகழ்ந்து} சொல்வன அல்லது பாடுவன ஆகியவற்றுக்கும் நான் தகுந்தவனாக இருக்கிறேன்.(48) ஓ! பகைவரின் துருப்புகளைக் கொல்பவனே, இவை யாவையுமாக இருக்கும் என்னால், போரில் சூதன் மகனுக்கு {கர்ணனுக்குச்} சாரதியாகச் செயல்பட முடியாது.(49) இந்த அவமதிப்பை அடைந்த நான் ஒருபோதும் போரிட மாட்டேன். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நான் வீடு திரும்புவதற்கு உன் அனுமதியைக் கேட்கிறேன்” என்றான் {சல்லியன்}.(50)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், சபைகளின் ரத்தினமுமான சல்லியன், சினத்தால் நிறைந்து, வேகமாக எழுந்து, மன்னர்களின் அந்தச் சபையில் இருந்து வெளியேற முயன்றான்.(51) எனினும், உமது மகன் {துரியோதனன்}, பாசத்தாலும், பெரும் மதிப்பினாலும் அம்மன்னனை நிறுத்தி, அனைத்து நோக்கங்களையும் அடையவல்ல இந்த இனிமையான, சமரச வார்த்தைகளை அவனிடம் {சல்லியனிடம்} சொன்னான்:(52) “ஓ! சல்லியரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது {யாவும் இருக்கின்றன} என்பதில் ஐயமில்லை. ஆனால், நான் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தையே என் பார்வையில் கொள்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, அதைக் கேட்பீராக.(53) ஓ! மன்னா {சல்லியரே}, கர்ணன் உம்மிலும் மேன்மையானவன் இல்லை, மேலும் நான் உம்மில் ஐயங்கொள்ளவுமில்லை. மத்ரர்களின் அரசத் தலைவர் தவறானதை ஒருபோதும் செய்ய மாட்டார்.(54) மனிதர்களில் முதன்மையான உமது முன்னோர்கள் எப்போதும் உண்மையையே சொன்னார்கள். இதன் காரணமாகவே நீர் ஆர்த்தாயனி (உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வாரிசு)[5] என்று அழைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.(55)

[5] ருத்ம என்பதன் பொருள் உண்மை {சத்தியம்} என்பதாகும்; ருதாயனர் என்றால் சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டவர் என்று பொருள்; ஆர்த்தாயனி என்றால் அந்த மரபில் தோன்றியவர் என்று வேறொரு பதிப்பில் அடிக்குறிப்பு இருக்கிறது.

ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, நீர் எதிரிகளுக்கு, முள்பதித்த கணையொன்றைப் {ஒரு கர்ணியைப்} போன்றவர்[6], எனவேதான் நீர் பூமியில் சல்லியன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறீர்.(56) வேள்விகளில் (பிராமணர்களுக்குப்) பெரும் கொடைகளை அளிப்பவரே, ஓ! அறவோனே, நீர் சாதிப்பீர் என்று முன்பு சொன்ன அனைத்தையும் சாதிப்பீராக.(57) அந்த முதன்மையான குதிரைகளுக்குச் சாரதியாக நான் தேர்ந்தெடுத்த உமக்கு, ராதையின் மகனோ {கர்ணனோ}, நானோ வீரத்தில் மேம்பட்டவர்கள் இல்லை.(58) எனினும், ஓ! ஐயா {சல்லியரே}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு) மேம்பட்டவராக உலகம் உம்மைக் கருதவதைப் போலவே, கர்ணனும் பல குணங்களில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே.(59) ஓ! மனிதர்களில் காளையே, ஆயுதகாரியங்களில் நிச்சயமாகக் கர்ணன் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே. குதிரைகளின் அறிவு மற்றும் வலிமையில் நீரும் கிருஷ்ணனுக்கு மேம்பட்டவரே.(60) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, குதிரைகளில் உமது அறிவானது, உயர் ஆன்ம வாசுதேவனை {கிருஷ்ணனை} விட இரண்டு மடங்கு அதிகமானது என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.(61)

[6] வேறொரு பதிப்பில், “நீர் யுத்தத்தில் பகைவர்களுக்கு மனத்தில் நாட்டப்பட்ட முளை போலிருத்தலால் உமக்குச் சல்யன் என்கிற பெயர் இப்புவியில் சொல்லப்படுகிறது” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே “முளை” என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, இந்தத் துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, தேவகியின் மகனுக்கு {கிருஷ்ணனுக்கு} மேம்பட்டவனாக என்னை நீ விவரிப்பதால், உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன்.(62) நீ வேண்டிக் கொள்வதைப் போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுகையில், பெரும்புகழைக் கொண்ட ராதையின் மகனுக்கு {கர்ணனுக்கு} நான் சாரதியாக இருப்பேன்.(63) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, விகர்த்தனன் மகனுடனான {கர்ணனுடனான} என் புரிதல் {புரிந்துணர்வு ஒப்பந்தம்} இவ்வாறு {பின்வருமாறு} இருக்கட்டும். அவனது முன்னிலையில் என் விருப்பப்படி எந்த வார்த்தைகளையும் நான் பேசுவேன்” என்றான் {சல்லியன்}.(64)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே, உமது மகன் {துரியோதனன்}, கர்ணனுடன் சேர்ந்து, அந்த மத்ரர்களின் இளவரசனிடம் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(65)
----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -32ல் உள்ள சுலோகங்கள் : 65

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்