Sunday, March 19, 2017

யுதிஷ்டிரனை எள்ளிநகையாடிய கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 49

Karna mocked disparagingly unto Yudhishthira! | Karna-Parva-Section-49 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை நோக்கி விரைந்த கர்ணன்; கர்ணனை அறைகூவி அழைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; விரைவில் உணர்வு மீண்ட கர்ணன், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரத்தைப் பாதுகாத்த சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகியோரைக் கொன்றது; யுதிஷ்டிரனின் மேனியில் கர்ணன் ஆழமான காயத்தை உண்டாக்கியது; பிரம்மாஸ்திரத்தை ஏவிய கர்ணன்; யுதிஷ்டிரனின் வில்லையும் கவசத்தையும் அறுத்த கர்ணன்; கர்ணனை வேல்களால் தாக்கி அவனுக்குக் குருதியைக் கொப்பளிக்க வைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் தேரை அழித்த கர்ணன்; புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைத் தொடர்ந்து சென்று, அவனது தோள்களைத் தீண்டி, எள்ளி நகையாடிய கர்ணன்; யுதிஷ்டிரனை விடுவித்த கர்ணன்; சுரூதகீர்த்தியின் தேரில் ஏறிக் கொண்ட யுதிஷ்டிரன்; போரின் கோரத்தை வர்ணித்த சஞ்சயன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; திரும்பி வந்த பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்களிடம் புறமுதுகிட்டோடிய கௌரவப்படை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையின் ஊடாகச் சென்ற கர்ணன், ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோரால் சூழப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(1) எதிரிகளால் தன் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்களைத் தன் நூற்றுக்கணக்கான கடுங்கணைகளால் வெட்டிய விருஷன் {கர்ணன்}, அச்சமில்லாமல் அப்படையைத் துளைத்துச் சென்றான்.(2) உண்மையில், சூதனின் மகன் {கர்ணன்}, தன் எதிரிகளின் தலைகளையும், கரங்களையும், தொடைகளையும் வெட்டினான், அவர்களும் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(3) சாத்யகியால் தூண்டப்பட்ட திராவிட, அந்தக, நிஷாத காலாட்படை வீரர்கள், கர்ணனைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில அவனை நோக்கி மீண்டும் விரைந்தனர்.(4) கரங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை இழந்து, கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், (கோடரியால்) வெட்டப்பட்ட சாலமரக் காட்டைப் போல அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.(5)


இவ்வாறு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான போராளிகள் உயிரை இழந்து, தங்கள் புகழால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்து, தங்கள் உடல்களுடன் பூமியில் விழுந்தனர்.(6) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்ட கர்ணன், அந்தகனைப் போலப் போரில் கோபத்துடன் திரிந்து கொண்டிருந்தபோது, மந்திரங்கள் மற்றும் மருந்துகளால் நோயைத் தடுக்க முயலும் மக்களைப் போலப் பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் அவனுக்குத் {கர்ணனுக்குத்} தடைகளை ஏற்படுத்தினர்.(7) தாக்குபவர்களான அவர்கள் அனைவரையும் நொறுக்கிய கர்ணன், மந்திரங்கள், மருந்துகள் மற்றும் (தணிவடையச் செய்யும்) சடங்குகளால் தடுக்கப்பட முடியாத தாங்கிக் கொள்ள முடியாத நோயைப் போல, யுதிஷ்டிரனை நோக்கி மீண்டும் விரைந்தான்.(8) இறுதியாக, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள் ஆகியோர் அனைவராலும் தடுக்கப்பட்ட கர்ணன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களை வெல்ல முடியாத காலனைப் போல அவர்களைக் கடந்து செல்வதில் வெல்லவில்லை.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த யுதிஷ்டிரன், பகைவீரர்களைக் கொல்பவனும், சற்றுத் தொலைவில் தடுக்கப்பட்டிருந்தவனுமான கர்ணனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்,(10) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! வீண் நோக்குள்ளவனே. ஓ! சூதனின் மகனே, என் வார்த்தைகளைக் கேட்பாயாக. சுறுசுறுப்பான பல்குனனை {அர்ஜுனனை} நீ எப்போதும் அறைகூவி அழைக்கிறாய்.(11) திருதராஷ்டிரர் மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, நீ எப்போதும் எங்களை எதிர்க்க முயல்கிறாய். உன் பெரும் ஆற்றலைத் திரட்டி, உன் வலிமை அனைத்தையும், உன் சக்தி அனைத்தையும், மற்றும் பாண்டுவின் மகன்களிடம் நீ கொண்டுள்ள வெறுப்பனைத்தையும் இன்று காட்டுவாயாக.(12) இன்றைய பயங்கர போரில், போருக்கான உன் அசையை நான் அகற்றுவேன்” {என்றான் யுதிஷ்டிரன்}.(13)

இவ்வார்த்தைகளைச் சொன்ன பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(14) ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வில்லாளியுமான சூதன் மகன் {கர்ணன்}, பெருங்கவனத்துடன், கன்றின் பற்களைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் {வத்ஸதந்தங்களால்} பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்தான்.(15) ஏளனமாகச் சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் நெய்யேற்கும் நெருப்பைப் போலக் கோபத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(16) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், உறுதிமிக்கதுமான வில்லை வளைத்த அந்தப் பாண்டுவின் மகன், வில்லின் நாண்கயிற்றில் மலைகளையே துளைக்கவல்ல கூரிய கணை ஒன்றைப் பொருத்தினான்.(17) வில்லை முழுமையாக வளைத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால், காலனின் கணையைப் போன்று அழிவைத் தரக்கூடிய அந்தக் கணையை வேகமாக ஏவினான்.(18)

பெரும் வலிமை கொண்ட மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதும், இடிக்கு ஒப்பானதும், “விஸ்” என்ற ஒலியைக் கொண்டதுமான அந்தக் கணை வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் இடது பக்கத்தைத் திடீரெனத் துளைத்தது.(19) அந்தத் தாக்குதலின் பலத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட கர்ணன், பலவீனமடைந்த அங்கங்களுடன், கரங்களில் இருந்து தன் வில் தளர்ந்து விழத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்தான்.(20) கர்ணனை அந்தப் பரிதாப நிலையில் கண்ட அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது, போராளிகளின் முகங்கள் அனைத்தும் நிறமிழந்தன.(21) மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட பாண்டவர்களுக்கு மத்தியில் சிங்க முழக்கங்களும், கூச்சல்களும், குழப்பமான இன்பக் கதறல்களும் எழுந்தன.(22)

எனினும், கடும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, விரைவில் உணர்வுகள் மீண்டு, தன் இதயத்தை யுதிஷ்டிரனின் அழிவில் நிலைநிறுத்தினான்.(23) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விஜயம் என்றழைக்கப்படுவதுமான தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அளவிலா ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தடுக்கத் தொடங்கினான்.(24) அம்மோதலில் அவன் {கர்ணன்}, உயர் ஆன்ம யுதிஷ்டிரனுடைய தேரின் இருச்சக்கரங்களைப் பாதுகாத்த பாஞ்சால இளவரசர்களான சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரையும் கத்தி தலை கணைகள் இரண்டால் கொன்றான்.(25) யுதிஷ்டிரனுடைய தேரின் பக்கங்களில் நின்றிருந்த அந்த வீரர்கள் இருவரும், சந்திரனுக்குப் பக்கத்தில் இருந்து புனர்வசு {புனர்பூச} நட்சத்திரக்கூட்டத்தைப் [1] போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(26) எனினும், யுதிஷ்டிரன் மீண்டும் முப்பது கணைகளால் கர்ணனைத் துளைத்தான். மேலும் அவன், சுஷேணன் மற்றும் சத்யசேனன் என்ற இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.(27) மேலும் அவன் கர்ணனைப் பாதுகாத்த ஒவ்வொருவரையும் மும்மூன்று நேரான கணைகளால் துளைத்தான்.(28)

[1] இருபத்தேழு நட்சத்திரக்கூட்டங்களில், இந்தப் புனர்பூசம் ஏழாவது நட்சத்திரக் கூட்டமாகும். மிதுன இராசியில் இருக்கும் புனர்பூசம் என்ற இந்த நட்சத்திரப் பெருங்கூட்டம் பிரகாசமான இரு நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டதாகும். அவ்விரு நட்சத்திரக்கூட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் Castor and Pollux என்பார்கள்.

அப்போது, சிரித்துக் கொண்டே தன் வில்லை அசைத்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} மன்னனின் {யுதிஷ்டிரனின்} உடலில் ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்தி, மீண்டும் அறுபது கணைகளால் அவனைத் துளைத்து, உரக்க முழங்கினான்.(29) அப்போது பாண்டவர்களில் முதன்மையான வீரர்கள் பலர், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி கர்ணனை நோக்கி கோபத்தோடு விரைந்து, தங்கள் கணைகளால் அவனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(30) சாத்யகி, சேகிதானன், யுயுத்சு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(31) இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), பீமசேனன், சிசுபாலன் {சிசுபாலனின் மகனாக இருக்க வேண்டும்}, காருஷர்கள், மத்ஸ்யர்கள், சூரர்கள், கைகேயர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள்(32) ஆகிய இந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் அந்த வசுசேனனை {கர்ணனைத்} தாக்கினர். பாஞ்சால இளவரசனான ஜனமேஜயன், கர்ணனைப் பல கணைகளால் துளைத்தான்.(33)

பல்வேறு வகைகளிலான கணைகள்[2], பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பாண்டவ வீரர்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையுடன் கர்ணனை நோக்கி விரைந்து, அவனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(34,35) இவ்வாறு அந்தப் பாண்டவப் போர்வீரர்களில் முதன்மையானோரால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைகளால் நிறைத்தான்.(36) பிறகு அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பைப் போல, எரியும் தழல்களைக் கணைகளாகக் கொண்டு, பாண்டவத் துருப்புகள் எனும் காட்டை எரித்துப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(37) உயர் ஆன்மா கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், சில வலிமைமிக்க ஆயுதங்களைக் குறிபார்த்து, சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனான அந்த யுதிஷ்டிரனின் வில்லை அறுத்தான்.(38)

[2] “இங்கே குறிப்பிடப்படும் பல்வேறு வகைகளிலான கணைகளின் பெயர்களை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் சொல்லிவிட்டதால், மீண்டும் இங்கு நான் அவற்றைச் சேர்க்கவில்லை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “பாஞ்சால்யனான ஜனமேஜயனும், கர்ணனைப் பாணங்களாலும், வராஹகர்ணங்களாலும், நாராசங்களாலும், நாளீகங்களாலும், கூர்மையுள்ள அம்புகளாலும், வத்ஸதந்தங்களாலும், விபாடங்களாலும், க்ஷுரப்ரங்களாலும், சடகாமுகங்களாலும் அடித்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், இந்த 34 மற்றும் 35 சுலோகங்கள், “கர்ணனைக் கொல்லும் நோக்கோடு அவனை நோக்கிச் சென்ற அவர்கள் அனைவரும், பன்றிக்காது போன்ற கணைகள் {வராஹகர்ணங்கள்}, நாராசங்கள், நாளீகங்கள், நிஷ்டங்கள், கன்றின் பல் போன்ற கணைகள் {வத்ஸதந்தங்கள்}, விபாடங்கள், கத்தி வடிவம் கொண்ட கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களுடன் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் விரைந்து சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஜனமேஜயன், வராஹகர்ணங்கள், நாராசங்கள், நாளீகங்கள், வத்ஸதந்தங்கள், விபாடங்கள், க்ஷுரப்ரங்கள், அடகமுகங்கள் ஆகிய கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்” என்றிருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள அடகமுகங்கள் என்ற கணைகள் தனியாகச் சுழலும் தலைகளைக் கொண்ட கணைகள் என்றும், ஒருவேளை பல தலைகளைக் கொண்டவையாகவும் இருக்கலாம் என்றும் பிபேக்திப்ராய் விளக்குகிறார்.

மேலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகத் தொண்ணூறு நேரான கணைகளைக் குறிபார்த்த கர்ணன், அந்தக் கூர்மையான கணைகளால் தன் எதிராளியின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) காற்றால் விரட்டப்படும் மேகங்கள் சூரியக் கதிர்களால் துளைக்கப்படுவதைப்போலத் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கவசமானது, கீழே விழும்போது அழகாகத் தெரிந்தது.(40) உண்மையில், விலையுயர்ந்த சிறந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கவசம், மனிதர்களில் முதன்மையான அவனுடைய உடலில் இருந்து விழுந்தபோது, இரவில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(41) அக்கணைகளால் கவசம் அறுபட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கோபத்துடன் முழுக்க இரும்பாலான ஈட்டி ஒன்றை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(42) எனினும் கர்ணன், அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தபோதே, ஏழு கணைகளால் அதை (துண்டுகளாக) வெட்டினான்.(43)

அப்போது யுதிஷ்டிரன், நான்கு வேல்களால் கர்ணனின் இரு கரங்களையும், நெற்றியையும், மார்பையும் தாக்கி மீண்டும் மீண்டும் பெருமுழக்கம் செய்தான்.(44) அதன்பேரில், கர்ணனின் காயங்களில் இருந்து குருதி கொப்பளித்தது, இதனால் சினத்தால் நிறைந்து, பாம்பொன்றைப் போல மூச்சு விட்ட அவன் {கர்ணன்}, தன் எதிராளியின் கொடிமரத்தை வெட்டி, மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அந்தப் பாண்டவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(45) மேலும் அவன் {கர்ணன்}, (தன் எதிரி கொண்டிருந்த) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அவன் {யுதிஷ்டிரன்} செலுத்திவந்த) தேரையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான். அதன் பேரில், தந்தங்களைப் போன்ற வெண்ணிறத்தைக் கொண்டவையும், வாலில் கருப்பு முடிகளைக் கொண்டவையும், வழக்கமாக (போருக்கு) அவனைச் {யுதிஷ்டிரனைச்} சுமந்து வருபவையுமான குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு தேரில் ஏறி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தப்பி ஓடத் தொடங்கினான் {புறமுதுகிட்டு ஓடினான்}. இவ்வாறே பார்ஷினி சாரதி கொல்லப்பட்ட யுதிஷ்டிரன் பின்வாங்கத் தொடங்கினான்.(46,47) அவன் {யுதிஷ்டிரன்} மிகவும் உற்சாகமற்ற நிலையை அடைந்து, கர்ணனின் முன்னால் நிற்க முடியாதவனான். அப்போது, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்ற ராதையின் மகன் {கர்ணன்},(48) பலவந்தமாக அவனைக் கைப்பற்ற விரும்பி, அவனது தோள்களைத் தீண்டி, வஜ்ரம், குடை, அங்குசம், மீன், கொடி, ஆமை, சங்கு, ஆகிய மங்கலக் குறிகளால் அருளப்பட்ட (உள்ளங்கையைக் கொண்ட) தன் அழகான கையைத் தூய்மையாக்கிக் கொண்டான்.(49,50)

அப்போது சல்லியன், அவனிடம் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, மன்னர்களில் சிறந்த இவனைப் பிடிக்காதே. நீ அவனைப் பிடித்ததும், உன்னையும், என்னையும் அவன் சாம்பலாகக் குறைத்துவிடுவான்” என்றான்[3].(51) அப்போது எள்ளி நகையாடிய கர்ணன், அவனை {யுதிஷ்டிரனை} இழித்துரைக்கும் வகையில், “உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், உன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி அச்சத்தால் போரை விட்டு எவ்வாறு நீ விலகுகிறாய்? க்ஷத்திரியக் கடமைகளை நீ நன்கறிந்தவனில்லை என நான் நினைக்கிறேன்.(52,53) பிரம்ம சக்தியைக் கொண்ட நீ, உண்மையில் வேத கல்வி கற்பதிலும், வேள்விச் சடங்குகளைச் செய்வதிலும் அர்ப்பணிப்புள்ளவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மீண்டும் போரிடாதே, துணிவுமிக்க வீரர்களை நீ மீண்டும் அணுகாதே.(54) வீரர்களை நோக்கி கடுமொழியில் பேசாதே, மேலும் பெரும்போர்களுக்கு நீ வராதே. ஓ! ஐயா, நீ இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம், ஆனால், எங்களைப் போன்றோரிடம் அவ்வழியில் இனி ஒருபோதும் பேசாதே.(55) எங்களைப் போன்றோரிடம் இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், போரில் இதையும், இன்னும் பிற வகை நடத்தைகளையும் நீ சந்திக்க நேரிடும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன் இடத்திற்குத் திரும்பிச் செல்வாயாக, அல்லது கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக.(56) உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற ஒருவனைக் கர்ணன் ஒருபோதும் கொல்ல மாட்டான்” என்றான் {கர்ணன்}.

[3] வேறொரு பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு, பிபேக் திப்ராயின் பதிப்பு ஆகிய மற்ற அனைத்துப் பதிப்புகளிலும் சல்லியன் பேசுவதாகக் கங்குலியில் வரும் இவ்வசனமும், கர்ணனின் கரங்கள் தூய்மையான விவரிப்பும் இல்லை.

பிருதையின் மகனிடம் {{குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கர்ணன், யுதிஷ்டிரனை விடுவித்துவிட்டு,(57) அசுரப்படையைக் கொல்லும் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படையைக் கொல்லத் தொடங்கினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களின் ஆட்சியாளன் (யுதிஷ்டிரன்) தப்பி ஓடினான்.(58) மன்னன் தப்பி ஓடுவதைக் கண்ட சேதிகள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், மங்கா மகிமையைக் கொண்ட அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(59) திரௌபதியின் மகன், சூரர்கள், பாண்டுவுக்கு மாத்ரியிடத்தில் உண்டான இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, ஆகியோரும் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர். யுதிஷ்டிரனின் படைப்பிரிவு பின்வாங்குவதைக் கண்ட வீரக் கர்ணன், குருக்கள் அனைவருடன் சேர்ந்து மிகவும் மகிழ்ந்து, புறமுதுகிடும் படையைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான். பேரிகைகள், சங்குகள், மிருதங்கங்கள், விற்கள் ஆகியவற்றின் ஆரவாரங்களும்,(60,61) சிங்க முழக்கங்களும் தார்தராஷ்டிரத் துருப்புகளுக்கு மத்தியில் எழுந்தன. அதேவேளையில், ஓ! குருகுலத்தவரே {திருதராஷ்டிரரே}, சுரூதகீர்த்தியின் தேரில் வேகமாக ஏறிச் சென்ற யுதிஷ்டிரன், கர்ணனின் ஆற்றலைக் காணத் தொடங்கினான். பிறகு, தன் துருப்புகள் வேகமாகக் கொல்லப்படுவதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன்,(62,63) சினத்தால் நிறைந்து, தன் போர்வீரர்களிடம், “இந்த எதிரிகளைக் கொல்வீராக. ஏன் செயலற்று இருக்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான்.

அப்போது, மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பீமசேனன் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் உமது மகன்களை எதிர்த்து விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (இரு படைகளைச் சேர்ந்த) போர்வீரர்களின் கூச்சல்களும், தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியும், ஆயுதங்களின் மோதலொலியும் மிகப் பெரிதாக இருந்தன. “முயல்வீர், தாக்குவீர், எதிரியை எதிர்ப்பீர்”(64-66) போன்ற வார்த்தைகளையே அந்தப் பயங்கரப் போரில் போராளிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அவர்களால் ஏவப்பட்ட கணைமாரியின் விளைவாக, மேகங்களால் உண்டானதைப் போன்ற ஒரு நிழல் போர்க்களமெங்கும் பரவியது.(67) அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள் கணைகளால் மறைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதன் விளைவாக, அந்தப் போரில் அவர்கள், கொடிகள், கொடிமரங்கள், குடைகள், குதிரைகள், சாரதிகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களானார்கள்.(68) உண்மையில், அந்தப் பூமியின் தலைவர்கள், உயிரையும், அங்கங்களையும் இழந்துபூமியில் விழுந்தனர்.

சமமற்ற முதுகுகள் கொண்டதன் விளைவாக மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்த பெரும் யானைகள்,(69) தங்கள் சாரதிகளோடு சேர்ந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன. ஆயிரக்கணக்கான குதிரைகளும், தங்கள் கவசங்கள், கருவிகள், மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, தளரச் செய்யப்பட்டு, தங்கள் வீரச் சாரதிகளுடன் சேர்ந்து உயிரையிழந்து கீழே விழுந்தன. தேர்வீரர்கள் தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்து, (பகை) தேர்வீரர்களால் தங்கள் தேர்களையும், உயிரையும் இழந்தனர். காலாட்படைவீரர்களின் பெருங்கூட்டங்கள் அந்தப் பயங்கர மோதலில் பகைவீரர்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. தாமிர வண்ணத்தில் அகன்று விரிந்திருந்த கண்களாலும், தாமரை, அல்லது சந்திரன் போன்ற அழகிய முகங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளால், போர்வெறி ஏறிய அந்த வீரப் போராளிகளின் தலைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(70-72) பூமியில் துணிவுமிக்க எதிரிகளால் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுப் புதிதாக {சொர்க்கத்திற்கு} வந்த வீரர்களை தெய்வீகப் பாடற்கலைஞர்கள் எவற்றைக் கொண்டு தொடர்ந்து வரவேற்றனரோ, அவர்களை {அப்படி வந்தோரை} எந்த வாகனங்களில் அமர்த்தி (இந்திரலோகத்தை நோக்கிக்) கொண்டு சென்றனரோ, அந்தத் தெய்வீகத் தேர்களில் இருந்த அப்சரஸ் பெருங்கூட்டத்தில் இருந்து வந்த இசை மற்றும் பாடல்களின் விளைவாக வானத்தில் கேட்கப்படும் ஒலியைப் போன்ற பேரொலியை பூமியின் பரப்பிலும் மக்கள் கேட்டனர். அந்த அற்புதக் காட்சிகளைத் தங்கள் கண்களாலேயே நேரடியாகக் கண்டு, சொர்க்கத்திற்குச் செல்லும் விரும்பிய வீரர்கள்,(73-75) உற்சாகமிக்க இதயங்களுடன் வேகமாக ஒருவரையொருவர் கொன்றனர். அந்தப் போரில் தேர்வீரர்கள் {வேறு} தேர்வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும், அழகாகப் போரிட்டனர்,(76) யானைகள் யானைகளுடனும், குதிரைகள் குதிரைகளுடனும் அழகாகப் போரிட்டன. உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் அழிவைத் தந்த அந்தப் போரானது இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது,(77) துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் போர்க்களம் மறைக்கப்பட்டது.

பிறகு, எதிரிகள் எதிரிகளைக் கொன்றனர், நண்பர்களும் நண்பர்களைக் கொன்றனர். வாழ்வுக்கும், பாவங்களுக்கும் அழிவைத் தந்த அந்தக் கடும்போரில், போராளிகள் ஒருவரையொருவர் குழலைப் {மயிரைப்} பிடித்திழுத்தும், தங்கள் பற்களால் ஒருவரையொருவர் கடித்தும், நகங்களால் ஒருவரையொருவர் கிழித்தும்,(78) விரல்மடக்கி முட்டியால் ஒருவரையொருவர் தாக்கியும், வெறும் கரங்களால் ஒருவருடனொருவர் போரிடவும் செய்தனர். உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் பேரழிவைத் தந்த அந்தப் போர் இவ்வாறு மூர்க்கமாக நடந்து கொண்டிருந்த போது,(79) (கொல்லப்பட்ட) மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களில் இருந்து ஒரு குருதி ஆறே பாய்ந்தது. அந்த ஓடையானது {குருதி ஆறானது} யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் இறந்த உடல்களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டு சென்றது.(80) உண்மையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், நிறைந்த அந்தப் பரந்த படையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், குதிரைவீரர்கள் மற்றும் யானைவீரர்கள் ஆகியோரால் உண்டான அந்த ஆறு, சதையால் {இறைச்சியால்} சகதியாகி மிகப் பயங்கரமாக இருந்தது.(81) மருண்டோரை அச்சங்கொள்ள வைத்த அந்த ஓடையில், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் மிதந்தன. வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட சில போராளிகள் அதை வேகமாகக கடந்து சென்றனர், சிலர் மறுபக்கத்திலேயே இருந்தனர்.(82) சிலர் அதன் ஆழங்களுக்குள் பாய்ந்தனர், சிலர் அதில் மூழ்கினர், சிலர் அதன் பரப்பிற்கு எழுந்து அதை நீந்திக் கடந்தனர். மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட அவர்களது கவசங்களும், ஆயுதங்களும், ஆடைகளும் என அனைத்தும் குருதியாகவே இருந்தன.(83) சிலர் அதில் நீராடினர், சிலர் அதைக் குடித்தனர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிலர் பலவீனமடைந்தனர். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள், ஆயுதங்கள் ஆபரணங்கள்,(84) ஆடைகள், கவசங்கள், கொல்லப்பட்டோ, கொல்லப்படவோ இருந்த போராளிகள், பூமி, வானம், ஆகாய விரிவு, திசைப்புள்ளிகள் என அனைத்தும் சிவப்பாயின.(85) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மணம், தீண்டல், சுவை, அந்தக் குருதியின் மிகச் சிவப்பான காட்சி, அதன் பாயும் ஒலி,(86) ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட அனைத்துப் போராளிகளுமே உற்சாகத்தை மிகவும் இழந்தனர்.

அப்போது, பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், தங்களை ஏற்கனவே வீழ்த்திய அந்த (குரு) படையை எதிர்த்து மீண்டும் மூர்க்கமாக விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைந்து வரும் அந்தப் பாண்டவ வீரர்களின் மூர்க்கம் தடுக்கப்பட முடியாததாக இருப்பதைக் கண்ட(87,88) உமது மகன்களின் அந்தப் பரந்த படை அந்தப் போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடியது. உண்மையில், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்கள் நிறைந்த உமது படையானது, எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, கட்டுக்கோப்பான வியூகமாக மேலும் நீடித்திராமல், கவசங்கள் இடம்பெயர்ந்து, தங்கள் பிடியில் இருந்த ஆயுதங்கள் மற்றும் விற்கள் தளர்ந்து, காட்டில் சிங்கங்களால் பீடிக்கப்படும் யானைக் கூட்டத்தைப் போல அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(89,90)
------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -49ல் உள்ள சுலோகங்கள் : 90

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்