Tuesday, May 23, 2017

கர்ண பர்வச் சுவடுகளைத் தேடி!


அனுமன் ஜெயந்தியில் (28.12.2016 அன்று) தொடங்கப்பட்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு முடிய இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. கர்ண பர்வத்தை மொழிபெயர்க்க கிட்டத்தட்ட 145 நாட்கள் பிடித்திருக்கின்றன. இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பை ஆரம்பிக்கும்போதே சற்றுப் பயம்தான். மொழிபெயர்க்கத் தொடங்கியதில் இருந்தே வாரத்திற்கு, ஒருவர் அல்லது இருவர், “நினைச்சதெல்லாம் எழுதாதீங்க?”, “கர்ணனைக் குறைச்சு எழுதுனா மரியாதை கெட்டுடும்” என்று நிச்சயம் சொல்லிவிடுவார்கள். அவர்களுக்குப் பதிலளித்துக் கொண்டு நேர விரயம், சில குடும்ப விழாக்கள் மற்றும் தொழில் சம்பந்தமான சில முக்கியக் காரியங்கள் ஆகியவற்றுக்கு எடுத்துக் கொண்ட நாட்கள் என நாட்கள் இவ்வளவு தள்ளிப் போய்விட்டன. இந்தப் பர்வம் நெடுகவே, இன்று முடித்துவிடலாம் என்று நினைத்து, ஒரு பதிவையும் முடிக்க முடிந்ததே கிடையாது. கர்ணன் அனுமதித்தால்தான் உண்டு என்ற நிலை. கர்ணன் கொடைவள்ளல் என்ற பெயரெடுத்தவன், அதனாலோயென்னவோ எனக்கு வேலைகளை நிறைய அளித்து, கொஞ்சம் பொருளீட்டவும் வைத்து, இந்தப் பர்வம் முடிவதற்கு இவ்வளவு நாட்களைக் கடத்திவிட்டான் போலும்.


கர்ணனின் ஈகை “கர்ண பர்வத்தை” மொழிபெயர்க்க ஆரம்பித்ததுமே தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் “தென்றல்” ஜனவரி மாத இதழில் என் நேர்காணல் ஒன்று வெளி வந்தது.  திரு.அரவிந்தன் சுவாமிநாதன் அவர்கள் அதைத் தொகுத்திருந்தார். முழுமஹாபாரதத்திற்கான வாசகப் பரப்பு அமெரிக்காவிலும் வளர்ந்தது. இன்று நமது வலைத்தளத்தை ஒரு நாளைக்கு 4000 பேர் பார்க்கிறார்கள் என்றால், அதில் 1800 பார்வைகள் அமெரிக்காவில் இருந்து கிடைக்கின்றன. இதற்காகத் தென்றல் இதழுக்கும், திரு. அரவிந்தன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றிகூற வேண்டும். ஜனவரி மாத இறுதியில், அலைபேசியில், பழைய பதிவுகளைத் தேடிப் படிப்பதற்காகப் பொருளடக்கச் சுட்டி ஒன்றை தயார் செய்தேன்.  அதன் மூலமும் மகாபாரதத்தை மொபைலில் படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

முழுமஹாபாரதத்தின் ஒவ்வொரு அடுத்த நகர்விலும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. இப்போதும் இல்லாமல் போகுமா? அதிலும் கர்ணன் விட்டுவிடுவானா? சென்னை, வடபழனியில் நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நான்கு மணிநேரம் வெண்முரசு குறித்தும், முழுமஹாபாரதம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாக ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது, ஜெயமோகன் அவர்களின் மகனையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான், வண்ணதாசனுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்தித்தித்திருந்த மணிமாறன் அவர்கள் என் வங்கிக் கணக்கில் நன்கொடையாகப் பணம் அனுப்பியிருந்தார்.

இப்படியெல்லாம் உற்சாகங்கள் கிடைத்தாலும், என் வரைகலைத் தொழிலில் வேலைப்பளு அதிகரித்துவிட்டதும், ஏப்ரல் மாதத்தில் தங்கையின் திருமணத்தை நிச்சயித்திருந்ததாலும், மொழிபெயர்ப்பதில் சுணக்கமே இருந்தது. முழுமஹாபாரதம் முகநூல் பக்கத்தில், “ஏன் இவ்வளவு மெதுவாக மொழிபெயர்க்கிறீர்கள்” என்று வாசகர் ஒருவர் கேட்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பின் வேகம் குறைந்துவிட்டது. ஏப்ரல் 24க்குப் பிறகுதான் மொழிபெயர்ப்பில் கொஞ்சம் வேகம் கூடியது.

பீஷ்ம பர்வத்தில், பகவத் கீதை வரும் பகுதியில் மட்டும் ISKONன் Bhagavad Gita - As it is என்ற பதிப்பில் இருந்து சுலோக எண்களை எடுத்துப் பொருத்தியிருந்தேன். அதன்பிறகு துரோண பர்வம் மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டிருக்கும்போது, கங்குலியின் இரண்டாம் பதிப்புக் கிடைக்கப் பெற்றேன். அதில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சுலோக எண்களும் இருந்தன. அதனால், துரோண பர்வத்தின் 151வது பகுதியில் இருந்து சுலோக எண்களைக் குறித்து வந்தேன். கங்குலியின் இரண்டாம் பதிப்பிலும், பீஷ்ம பர்வத்தில் இருந்தே சுலோக எண்கள் இருக்கின்றன. அதற்கு முந்தைய பர்வங்களில் சுலோக எண்கள் இல்லாமலேயே இருக்கின்றன. கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. இதில் மொத்தம் 4,887 சுலோகங்கள் இருக்கின்றன. சுலோக எண்களுடன் முழுமையாக நிறைவடைந்திருப்பது இந்தக் கர்ண பர்வம் மட்டுமே. மஹாபாரதத்தில் “ஹரிவம்சத்தை” சேர்க்காமல் மொத்தம் 84829 சுலோகங்கள் உண்டு. இதில் இந்தக் கர்ண பர்வத்தின் முடிவுவரை 51,564 சுலோகங்களைக் கடந்திருக்கிறோம். ஆக இதுவரை நாம் மஹாபாரதத்தில் 60% பகுதியைக் கடந்திருக்கிறோம் என்று சொல்லலாம். இனிவருவதில் பனிரெண்டாம் பர்வமான சாந்தி பர்வமே மிகப் பெரியது. மொத்தம் 14,725 சுலோகங்கள் அதில் மட்டுமே அடங்கும். அதன் பிறகு 13வதாக வரும் அனுசாசன பர்வத்தில் 8000 சுலோகங்கள் உண்டு. இவற்றைத் தவிர்த்த இனி வரப்போகும் பிற பர்வங்கள் அளவில் மிகச் சிறியனவே.

இதற்கிடையில், முழுமஹாபாரதத்தை அச்சில் கொண்டு வர ஒரு பதிப்பகம் முன் வந்திருக்கிறது. ஆதிபர்வத்தை மட்டுமல்ல, இதுவரை மொழிபெயர்த்திருக்கும் 8 பர்வங்களையும் மொத்தமாக அச்சில் கொண்டுவந்துவிடலாம் என்று பதிப்பகத்தார் சொல்கிறார்கள். நான் அவர்களிடம் இந்தச் சுலோக எண்கள் குறிப்பதைக் குறித்துச் சொன்னேன். “அனைத்து பர்வங்களும் ஸ்லோக எண்களுடன் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று பதிப்பகத்தார் கருதுகின்றனர்; நானும் அவ்வாறே கருதுகிறேன். எனவே, இருவரும் பேசி ஒரு முடிவை எட்டியிருக்கிறோம். அதாவது, கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்ததும், மேற்கொண்டு சல்லிய பர்வத்தை மொழிபெயர்க்காமல், ஆதிபர்வத்திலிருந்து தொடங்கித் துரோண பர்வம் வரை சுலோக எண்களைக் குறித்து அச்சுக்குக் கொடுப்பதென்றும், அதன் பிறகு சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம் என்றும் நினைத்திருக்கிறோம். கங்குலியின் பதிப்பில் பீஷ்ம பர்வத்தில் இருந்துதான் சுலோக எண்கள் ஆரம்பிக்கின்றன என்பதால், ஆதிபர்வத்தில் இருந்து, உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் ஆங்கிலப்பதிப்பை ஒப்பிட்டு சுலோக எண்களைக் குறிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று பதிப்பகத்தார் கேட்டனர். குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகலாம் என்றேன். முழுநேரம் இதையே செய்தால் விரைவாக முடிக்கலாமே என்றார்கள். முழுநேரம் இதையே கவனித்தால் என் தேவைகளையும், என் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையும் என்னால் பூர்த்திச் செய்ய முடியாதாகையால், என்னால் அவ்வாறு செய்ய இயலாது என்று சொல்லியிருக்கிறேன். சுலோக எண்களைக் குறிப்பதிலாவது வேறு எவரையாவது ஈடுபடுத்தலாமா என்றும் ஆலோசித்தோம். பிழைகள் திருத்தப்பட வேண்டும் என்பதாலும், சில விடுபட்ட வரிகளையும் சேர்க்க வேண்டும் என்பதாலும் அது கிட்டத்தட்ட இயலாதென்றும், நடைமுறைக்குச் சரியாக வராது என்றும் நான் நினைக்கிறேன். சல்லிய பர்வத்தை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்றும் ஆவலிருக்கிறது. சுலோக எண்கள் சேர்ப்பு, பிழைதிருத்தம் ஆகியவற்றுடன் சேர்த்து மொழிபெயர்ப்பையும் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். பதிப்பகத்தாரின் ஆலோசனையையும் இதில் கேட்க வேண்டும் என்றிருக்கிறேன். பரமனருள் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே இக்காரியம் நடக்கும்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களும் உடன் இருந்தார். கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பு முடிந்த நாளன்றே வீடு தேடி வந்த சடையப்பராக ரூ.9,600/- அளித்தார். இந்த ஐந்து வருடங்களில் 8 பர்வ மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து இதுவரை ரூ.1,32,300/- கொடுத்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்புப்பணி நெடுகிலும் நிதியையும், விலைமதிப்பில்லா தன் உழைப்பையும் தந்திருக்கிறார் நண்பர் ஜெயவேலன் அவர்கள். கடைசிப் பதிவையும் திருத்திவிட்டே அன்றும் வந்திருந்தார். சோம்பல் ஏற்படும் வேளைகளில் இவரது அர்ப்பணிப்பின் முன் கூனிக் குறுகி நிற்பதாகவே நான் எப்போதும் உணர்கிறேன். உற்சாகம் வேண்டுமென்றால் குளூகோஸ் தேவையில்லை நண்பர் ஜெயவேலனின் வார்த்தை போதும். துரியோதனனுக்குக் கர்ணனைப் போலவும், பார்த்தனுக்குக் கண்ணனைப் போலவும் எப்போதும் அவர் என் உடன் இருப்பதே பரமன் எனக்களித்திருக்கும் பெரிய பலம்தான்.

கர்ண பர்வத்தின் இறுதியில் சொல்லப்படும் பலன்களில், கர்ண பர்வத்தைப் படிப்பது ஒரு வேள்வி செய்த பலனைக் கொடுக்கவல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையில், கர்ண பர்வத்தின் மொழிபெயர்ப்பால் கர்ணன் எனக்களித்திருக்கும் கொடைகள் ஏராளமே.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
22.5.2017
திருவொற்றியூர்




மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்