Thursday, June 29, 2017

தப்பி ஓடிய கிருதவர்மன்! - சல்லிய பர்வம் பகுதி – 11

Kritavarma flew away! | Shalya-Parva-Section-11 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)


சூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)

புழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)

அச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)

[1] அவ்விலங்குகள் பேரழிவையும், தோல்வியையும் முன்னறிவிக்கும் வகையில் குரு படையின் இடது புறத்தில் கடந்து செல்வது தெரிந்தது என்பது பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், அவ்விலங்குகள் உமது படையை இடது புறத்தில் கடந்து சென்றான என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஜனநாதரே, மிருகங்களும், எருமைக்கடாக்களும் பக்ஷிகளும் அப்பொழுது உம்முடைய ஸேனையைப் பலதடவை இடமாகச் சுற்றி வந்தன" என்றிருக்கிறது.

[2] "பூமி முழுவதும் அனுபவிக்கப் போகின்றவர்களான பாண்டவர்களுக்கு முதல்வரான தர்மநந்தனரை நோக்கிச் சுக்ரன் அங்காரகன் புதன் இந்த மூன்று கிரஹங்களும் ஏழாவது ஸ்தானத்தில் இருந்து கொண்டு பலத்தை உண்டு பண்ணுகின்றவைகளாயிருந்தன" என்பது பழைய உரை என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ! மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)

பெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலக் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)

சல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)

அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிரைகள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)

சினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல (எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும்,  புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)

[3] அளகாபுரியின் தலைவன் குபேரன்

பயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(62)
-----------------------------------------------------------------------------------------
 சல்லிய பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 62


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்