Showing posts with label துந்து. Show all posts
Showing posts with label துந்து. Show all posts

Tuesday, July 15, 2014

துந்துமாரன் - பெயர்க்காரணம்? - வனபர்வம் பகுதி 203

The reason for the name, Dhundhumara! | Vana Parva - Section 203 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

அசுரன் துந்து பிரம்மனிடம் வரம் பெறுவது; உதங்கரால் ஏவப்பட்டக் குவலாஸ்வன் தனது படைகளுடனும், தனது மகன்களுடனும் மணற்கடலுக்கு வருவது; குவலாஸ்வன் மகன்களைத் துந்து எரிப்பது; குவலாஸ்வன் துந்துவைக் கொல்வது; குவலாஸ்வன் துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்படுவது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்கத் துந்து, மதுகைடபர்களின் மகனாவான். பெரும் சக்தியும் பராக்கிரமும் கொண்ட அவன் {அசுரன் துந்து}, பெரும் துறவு நோற்று, கடும் தவம்புரிந்தான். அவன் ஒற்றைக்காலில் நின்று, வெறும் நரம்புகள் மட்டும் கொண்ட உடலாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டான். அவனிடம் திருப்தி கொண்ட பிரம்மன் அவனுக்கு {துந்துக்கு} ஒரு வரம் கொடுத்தான். அவன் {துந்து} தலைவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} கேட்ட வரம், "தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பாம்புகள், கந்தர்வர்களில் யாராலும் நான் கொல்லப்படக்கூடாது. இதையே நான் வரமாக உம்மிடம் கேட்கிறேன்" என்பதாகும். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "உனது விருப்பத்தின்படியே ஆகட்டும். நீ உன் வழியே செல்" என்று மறுமொழி கூறினார்.


பெருந்தகப்பனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்ட பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்ட அந்தத் தானவன் {துந்து}, அந்தத் தெய்வத்தின் {பிரம்மனின்} காலைப் பற்றித் தனது தலையில் வைத்து, அந்தத் தெய்வத்தின் பாதங்களை மரியாதையுடன் தொட்டு தன் வழியே சென்றான். இப்படி வரத்தைப் பெற்ற துந்து, விரைவாகச் சென்று விஷ்ணுவை அணுகினான். அந்தத் தெய்வத்தால் {விஷ்ணுவால்} தனது தந்தைக்கு ஏற்பட்ட இறப்பை நினைத்து கோபத்துடன் சென்ற துந்து கந்தர்வர்களையும் தேவர்களையும் வீழ்த்தி, விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினான். கடைசியாக, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்தத் தீய ஆன்மாவான அசுரன் {துந்து} உஜ்ஜாலகம் என்ற பெயரால் அறியப்பட்ட மணற்கடலுக்கு {பாலைவனத்திற்கு} வந்து உதங்கரின் ஆசிரமத்திற்குத் தன்னால் இயன்ற அளவுக்குத் துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.

மதுகைடபர்களின் மகனான கடும் சக்தி படைத்த அந்தத் துந்து, மணலுக்கு அடியில் தனது சுரங்கக் குகைக்குள் படுத்துக் கொண்டு மூன்று உலகையும் அழிக்கும் நோக்குடன் பெரும் துறவுடன் கூடிய கடும் தவத்தைச் செய்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட உதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கிடந்து அந்த அசுரன் {துந்து} சுவாசித்துக் கொண்டிருந்த போது, மன்னன் குவலாஸ்வன், அந்த அந்தணர் உதங்கரையும், தனது மகன்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது படையுடன் அங்கே அணிவகுத்து வந்தான். மிகவும் சக்திவாய்ந்த தனது இருபத்தோராயிரம் {21,000} மகன்களுடன் எதிரிகளை அழிப்பவனான மன்னன் குவலாஸ்வன் அங்கு {உஜ்ஜாலகம் என்ற மணற்கடலுக்கு} வந்தான். உதங்கரின் கட்டளையின் பேரிலும், மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் உந்துதலாலும் சிறப்புமிக்கத் தலைவனான விஷ்ணு, அவனை {மன்னன் குவலாஸ்வனை} தனது சக்தியால் நிறைத்தான். அந்த ஒப்பற்ற வீரன் {குவலாஸவன்} அப்படித் தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து ஒரு சத்தமான குரல், "அழிக்கப்பட முடியாத இந்த நற்பேறு பெற்றவன் {குவலாஸ்வன்}, இன்று துந்துவை அழிப்பவனாவான்" என்று திரும்பத் திரும்பச் சொன்னது.

தேவர்கள், அவன் {குவலாஸ்வன்} மீது பூமாரி பொழிந்தனர். யாரும் இசைக்காத போதே தெய்வீகப் பேரிகைகள் ஒலிக்கத் தொடங்கின. ஞானமிக்கவனின் {குவலாஸ்வனின்} அந்த அணிவகுப்பின் போது, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சாலைகளில் இருக்கும் தூசிகளை {அவை பறக்காதவாறு} நனைத்து மெல்லிய சாரலைப் பொழிந்தான். ஓ! யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, நாராயணனின் சக்தியால் நிறைக்கப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது மகன்களின் துணையுடன், அந்த மணற்கடலைச் சூழ்ந்தான். அம்மன்னன் {குவலாஸ்வன்} அக்கானகத்தைத் தோண்ட ஆணையிட்டான். அம்மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் ஏழு நாட்கள் அந்த மணற்கடலைத் தோண்டினார்கள். பிறகு, அவர்கள் அந்தப் பெரும் அசுரனான துந்துவைக் கண்டனர்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, சூரியனைப் போல தனது பெருத்த உடல் ஒளிர, அவ்வசுரன் மணலுக்குள் கிடந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும்,  குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில் தலைவனான கபிலர், மன்னன் சகரனின் மகன்களை எரித்ததைப் போல, அவ்வசுரன் {துந்து} அந்நெருப்பால் மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் அனைவரையும் எரித்தான். கோபம் மூண்ட அசுரன், தனது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மூவுலகங்களையும் மூடியபடி, இந்த அற்புதச் சாதனையை நொடிப்பொழுதில் சாதித்தான்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கோபத்தால் அசுரன் கக்கிய நெருப்பில் மன்னன் குவலாஸ்வனின் மகன்கள் அனைவரும் எரிந்து போன போது, மற்றுமொரு கும்பகர்ணனைப் போல விழித்தெழுந்த துந்துவை குவலாஸ்வன் அணுகினான். ஓ! ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, யோக சக்தியால் நிரப்பப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது உடலில் உற்பத்தியான நீரால் அந்நெருப்பை அணைத்துவிட்டு, மூவுலகங்களின் அச்சத்தையும் போக்கும் வகையில், {அனைவராலும்} கொண்டாடப்படும் பிரம்மாயுதத்தால் {பிரம்மாஸ்திரத்தால்}, அத்தீய தைத்தியனை {அசுரன் துந்துவை} அழித்தான். தேவர்களின் எதிரியான அப்பெரும் அசுரனை அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு எரித்ததால், அவன் {குவலாஸ்வன்} மூன்று உலகத்துக்கும் இரண்டாவது தலைவனைப் போல விளங்கினான். அசுரன் துந்துவைக் கொன்ற அந்த உயர் ஆன்ம மன்னன் குவலாஸ்வன் அன்றிலிருந்து துந்துமாரன் என்ற பெயரால் அறியப்பட்டான். அந்நேரத்தில் இருந்து அவன் போர்க்களத்தில் ஒப்பற்றவனாகக் கருதப்பட்டான். இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெரும் முனிவர்களும் பெரிதும் திருப்தி கொண்டு அவனிடம் {துந்துமாரன் என்ற குவலாஸ்வனிடம்}, "எங்களிடம் ஒரு வரத்தைக் கேள்" என்றனர்.

இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட மன்னன் {குவலாஸ்வன்} அவர்களை வணங்கி, ஆனந்தத்தில் நிறைந்து, கூப்பிய கரங்களுடன் அம்மன்னன் {குவலாஸ்வன்}, அவர்களிடம் {தேவர்களிடம்} "மேன்மையான அந்தணர்களுக்கு எப்போதும் செல்வத்தைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும்! அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும்! எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும்! எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது! எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும்!" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், "நீ விரும்பிய படியே ஆகட்டும்" என்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ! பாரதக் குலத்தவனே {யுதிஷ்டிரா}, அவர்கள் திருடாஸ்வன், கபிலாஸ்வன், சந்திராஸ்வன் {பத்திராஸ்வன்} என அழைக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களின் மூலமே, அளவிலா சக்தி கொண்ட இக்ஷவாகு குலத்தின் ஒப்பற்ற மன்னர்கள் தோன்றினர்"

"இப்படியே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, மது கைடபர்களின் மகனான துந்து என்ற பெயர் கொண்ட பெரும் தைத்தியன் குவலாஸ்வனால் கொல்லப்பட்டான். இதற்காகவே அம்மன்னன் {குவலாஸ்வன்} துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நிச்சயமாக அவன் ஏற்றுக் கொண்ட பெயர் வெற்றுப் பெயர் கிடையாது. அது {துந்துமாரன் என்ற அப்பெயர்} சொற்களின் நேரான பொருள் கொண்டதாகும்.

"நீ கேட்டபடியே புகழ்பெற்ற துந்துவின் மரணக் கதையையும் அதில் தொடர்புடைய மனிதர்கள் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். விஷ்ணுவின் புகழ் தொடர்பான இந்தப் புனித வரலாற்றைக் கேட்பவன் அறம் சார்ந்தவனாகிறான் {அறம் நோக்கித் தள்ளப்படுகிறான்}. அவன் மக்கள் செல்வத்தையும் {பிள்ளைப் பேறையும்} அடைகிறான். குறிப்பிட்ட மாதங்களில் {பாவ காலங்களில்} இக்கதையைக் கேட்பவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், பெரும் நற்பேறும் அருளப்படுகிறது. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நோய்கள் குறித்த எந்த அச்சத்தையும் {அவர்கள்} விடுகிறார்கள்" என்றார் {மார்க்கண்டேயர்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, July 13, 2014

"துந்துவைக் கொல்!" என்றார் உதங்கர்! - வனபர்வம் பகுதி 201

"Kill Dhundhu!" said Utanka! | Vana Parva - Section 201 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

பிருகதஸ்வான் குவலாஸ்வனுக்கு முடிசூட்டி வனத்துக்குப் புறப்பட்ட போது, அதைத் தடுத்து துந்து என்ற அசுரனைக் கொல்ல உதங்கர் சொன்னது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகுவின் {Ikshvaku} மரணத்திற்குப் பிறகு, சசாதன் {Sasada} என்ற பெயர் கொண்ட உயர்ந்த அறம் சார்ந்த மன்னன் அயோத்தியாவின் அரியணை ஏறி இந்தப் பூமியை ஆண்டான். அந்தச் சசாதனின் வழியில் {பரம்பரையில்} பெரும் சக்தி படைத்த ககுதஸ்தன் {Kakutshta} வந்தான். அந்தக் ககுதஸ்தனுக்கு அனேனஸ் {Anenas} என்ற பெயரில் மகன் இருந்தான். அந்த அனேனசுக்கு பிருது {Prithu} என்ற பெயர் கொண்ட மகன் இருந்தான். பிருதுவுக்கு விஷ்வகஸ்வன் {Viswagaswa} என்ற பெயரில் மகன் இருந்தான். விஷ்வகஸ்வனில் இருந்து ஆதிரி {Adri} பிறந்தான். ஆதிரியில் இருந்து யுவனாஸ்வன் {Yuvanaswa} பிறந்தான். யுவனாஸ்வனில் இருந்து சிராவஸ்தன் {Sravastha} பிறந்தான். இந்தச் சிராவஸ்தனே சிராவஸ்தி என்ற நகரத்தைக் கட்டினான். சிராவஸ்தனின் வழியில் பிருகதஸ்வன் {Vrihadaswa} வந்தான். பிருகதஸ்வனில் இருந்து குவலாஸ்வன் {Kuvalaswa} பிறந்தான். இந்தக் குவலாஸ்வனுக்கு இருபத்து ஓராயிரம் {21,000} மகன்கள் இருந்தனர். இந்த மகன்கள் அனைவரும் கடுமையானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும், கற்றலில் நிபுணர்களாகவும் இருந்தனர். அந்தக் குவலாஸ்வன் அனைத்து குணங்களிலும் தனது தந்தையை {பிருகதஸ்வனை} விஞ்சி இருந்தான். நேரம் வந்த போது அவனது தந்தையான பிருகதஸ்வன், வீரமிக்க உயர் அறம் கொண்ட குவலாஸ்வனை அரியணையில் ஏற்றினான். அரசை மகனிடம் {குவலாஸ்வனிடம்} கொடுத்த அந்த எதிரிகளைக் கொல்பவனும், பெரு புத்திகூர்மையுடையவனுமான மன்னன் பிருகதஸ்வன் தவம் பயில்வதற்காகக் கானகம் புறப்பட்டான்"


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அரச முனியான பிருகதஸ்வன் கானகத்திற்குப் புறப்பட்ட போதும், அந்தணர்களில் சிறந்தவரான உதங்கர் அதைக் கேள்விப்பட்டார். பெரும் சக்தியும், அளவிடமுடியாத ஆன்மாவும் கொண்ட உதங்கர், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும் மனிதர்களில் சிறந்தவனுமான அவனை {பிருகதஸ்வனை} அணுகினார். அவனை {பிருகதஸ்வனை} அணுகிய அம்முனிவர் {உதங்கர்}, துறவை கைவிடும்படி வற்புறுத்தினார். உதங்கர், "ஓ! மன்னா {பிருகதஸ்வா}, (மக்களைக்} காப்பதே உனது கடமை. நீ உனது கடமையைச் செய்வதே உனக்குத் தகும். உனது அருளால் நாங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டிருக்கச் செய். பெரும் ஆன்மா கொண்ட உன்னால் {மகாத்மாவான உன்னால்} காக்கப்பட்டு, இந்தப் பூமி அனைத்து ஆபத்துகளில் இருந்தும் விடுபடட்டும். எனவே, நீ கானகம் புகுவது உனக்குத் தகாது. இவ்வுலகில் மக்களைக் காப்பதே பெரும் தகுதியாகும் {பெரும் பலனைத் தரவல்லது ஆகும்}. அது போன்ற தகுதியைக் கானகத்தில் பெற முடியாது. எனவே, உனது இதயம் அவ்வழியில் செல்லாதிருக்கட்டும்.

பெரும் மன்னா {பிருகதஸ்வா}, பழங்காலத்தில் பெரும் அரசமுனிகள் தங்கள் குடிமக்களைக் காத்து பெற்ற தகுதிக்குச் {பலனுக்குச்} சமமாக எதுவும் காணப்படாது. ஒரு மன்னன் எப்போதும் தனது குடிகளைக் காக்க வேண்டும். எனவே, உனது மக்களை நீ காப்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {பிருகதஸ்வா}, {தற்போது} என்னால் எந்த தவ அர்ப்பணிப்புகளையும் அமைதியாகச் செய்ய முடியவில்லை. எனது ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜாலகம் என்ற பெயரில் அறியப்படும் மணற்கடல் இருக்கிறது. அது நீரற்ற சமதரை கொண்ட நாடாகும். அது பல யோஜனைகள் நீளமும் அகலமும் கொண்டிருக்கிறது. அந்தப் பாலைவனத்தில் துந்து என்ற பெயர் கொண்ட தானவர்களின் தலைவன் வசிக்கிறான்.

மதுவுக்கும், கைடபனுக்கும் மகனான துந்து {Dhundhu} கடுமையானவனும், பயங்கரமானவனும் பெரும் பராக்கிரமம் படைத்தவனும் ஆவான். அளவிடமுடியாத சக்தி படைத்த அந்தத் தானவன், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, பூமிக்கு அடியில் வசிக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, முதலில் அந்த அசுரனைக் கொன்றுவிட்டு, பிறகு நீ கானகத்திற்குச் செல்வதே உனக்குத் தகும். அந்த அசுரன் இப்போது பெரும் துறவை மேற்கொண்டு கடும் தவத்தில் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனது நோக்கம் மூவுலகங்களையும், தேவர்களையும் ஆள்வதேயாகும். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனாக இருப்பவனிடம் {பிரம்மனிடம்} வரத்தைப் பெற்ற அவ்வசுரன், தேவர்கள், தைத்தியர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் கொல்லப்பட இயலாதவனாகிவிட்டான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனைக் கொன்று அருள் பெற்றிரு. இவ்வழியில் {கானகம் செல்வதில்} உனது இதயத்தைத் திருப்பாதே.

அவனைக் கொல்வதால் சந்தேகமற நீ பெரியதை அடைவாய். அதுமட்டுமல்லாமல், நீ அழியாத நித்தியமான புகழை அடைவாய். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், மணலால் மூடப்பட்டுக்கிடக்கும் அந்தத் தீய அசுரன் {துந்து} எழும்பி, மூச்சு விட ஆரம்பிக்கிறான்.
அப்போது, மலைகள், கானகங்கள், காடுகளுடன் கூடிய இந்த முழு உலகமும் நடுங்கத் தொடங்குகிறது.
அவனின் {துந்துவின்} மூச்சு {அங்கிருக்கும்} மணலை மேகமென எழச் செந்து சூரியனையே மறைக்கிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு, எங்கும் நெருப்புப் பொறிகள் பறக்க, புகை சூழ பூமி நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, இவை யாவற்றின் காரணமாக என்னால் எனது ஆசிரமத்தில் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, உலகத்தின் நன்மைக்காக,  அவனைக் {துந்துவைக்} கொல். உண்மையில், அந்த அசுரன் கொல்லப்பட்டால், மூவுலகமும் அமைதியடைந்து மகிழ்ச்சியில் மூழ்கும்.

ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அந்த அசுரனைக் கொல்லத் தகுந்தவன் நீ என நான் முழுமையாக நம்புகிறேன். உனது சக்தியுடன், விஷ்ணு தனது சக்தியை இணைத்து மேன்மையாக்குவான். பழங்காலத்தில், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, எவன் கடுமையான இந்தப் பெரும் அசுரனைக் கொல்கிறானோ அவனை விஷ்ணுவின் சக்தி ஆக்கிரமிக்கும் என்று பழங்காலத்தில் விஷ்ணு வரமளித்திருக்கிறான். அந்த ஒப்பற்ற வைஷ்ணவ சக்தியை உன்னுள் தாங்கி, ஓ! பெரும் மன்னா {பிருகதஸ்வா}, அந்தக் கடும்பராக்கிரமம் கொண்ட அசுரனைக் {துந்துவைக்} கொல். நூற்றுக்கணக்கான வருடங்கள் முயன்றாலும், பெரும் சக்தி படைத்த துந்துவை, சக்தி குறைந்தவனால் உட்கொள்ளவே {எரிக்க} முடியாது. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்