Thursday, July 14, 2016

துரியோதனனை வென்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 102

Arjuna Vanquished Duryodhana! | Drona-Parva-Section-102 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தாக்கிய துரியோதனன்; அர்ஜுனனின் கணைகள் துரியோதனனின் கவசத்தைத் துளைக்காதது; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; துரியோதனன் மீது தெய்வீகக் கணைகளை அர்ஜுனன் ஏவவும் அதை வெட்டிய அஸ்வத்தாமன்; துரியோதனனைத் தேரிழந்தவனாக்கி அந்தக் கூட்டத்தில் இருந்து கிருஷ்ணனும் அர்ஜுனனும் வெளிப்பட்டது; அவர்களைக் கண்டு கோபம் கொண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த வார்த்தைகளைச் சொன்ன மன்னன் துரியோதனன், பெரும் வேகம் கொண்டவையும், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையுமான மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான். மேலும் நான்கைக் கொண்டு {நான்கு கணைகளால்} தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} வாசுதேவனின் {கிருஷ்ணனின்} நடுமார்பைப் பத்து கணைகளால் துளைத்து, ஒரு பல்லத்தைக் [1] கொண்டு பின்னவனின் {கிருஷ்ணனின்} கையிலிருந்த சாட்டையைத் தரையில் வீழ்த்தினான். நிதானமாக இருந்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஒருக்கணத்தையும் இழக்காமல், கல்லில் கூராக்கப்பட்டவையும், அழகிய இறகுகளைக் கொண்டவையுமான பதினான்கு கணைகளை அவன் {துரியோதனன்} மீது ஏவினான். எனினும், அந்தக் கணைகள் அனைத்தையும், துரியோதனனின் கவசம் தடுத்து நிறுத்தியது. அவை கனியற்று {பலனற்றுப்} போனதைக் கண்ட பார்த்தன் கூர்முனை கொண்ட பதினான்கு கணைகளை மீண்டும் அவன் {துரியோதனன்} மீது ஏவினான். இவையும் துரியோதனனின் கவசத்தால் தடுக்கப்பட்டன.


[1] வேறொரு பதிப்பில் துரியோதனன் அர்த்தச்சந்திர பாணத்தால் கிருஷ்ணன் கையிலிருந்த சவுக்கைத் தரையில் வீழ்த்தியதாக இருக்கிறது.

பகை வீரர்களைக் கொல்பவனான அந்தக் கிருஷ்ணன் இருபத்தெட்டு கணைகளும் பலனற்றுப் போனதைக் கண்டு, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "மலைகள் அசைவதைப் போல இதற்கு முன் காணாத ஒரு காட்சியை நான் காண்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஏவப்படும் கணைகள் பலனற்றுப் போகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, உன் காண்டீவம் சக்தியை இழந்துவிட்டதா? உனது {கைப்} பிடியின் வலிமையும், உனது கரங்களின் பலமும் எப்போதையும் விடக் குறைந்துவிட்டதா? இது துரியோதனனுடனான இறுதிச் சந்திப்பாக ஆகாதா? ஓ! பார்த்தா, நான் உன்னிடம் கேட்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பார்த்தா, ஒரு சிறு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் துரியோதனனின் தேர் முன்பு விழும் உன் கணைகள் அனைத்தையும் கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுகிறேன். ஐயோ, இடியின் வலிமையைக் கொண்டவையும், எதிரிகளின் உடல்களை எப்போதும் துளைப்பவையுமான இந்த உன் பயங்கரக் கணைகள் அனைத்தும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறுகின்றன என்றால் என்ன பேறின்மையாக {துரதிர்ஷ்டமாக} இஃது இருக்கும்?" {என்றான் கிருஷ்ணன்}.

அர்ஜுனன், "ஓ! கிருஷ்ணா, துரியோதனன் உடலில் உள்ள இந்தக் கவசம் துரோணரால் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது போலப் பூட்டப்பட்டிருக்கும் கவசத்தை என் ஆயுதங்களால் ஊடுருவ முடியாது. ஓ! கிருஷ்ணா, இந்தக் கவசத்தில், மூன்று உலகங்களின் வலிமையும் உட்பொதிந்திருக்கிறது {மறைந்திருக்கிறது}. இதைத் துரோணர் மட்டுமே அறிவார், மனிதர்களில் சிறந்த அவரிடம் இருந்தே நானும் அதைக் கற்றேன். இந்தக் கவசமானது என் ஆயுதங்களால் துளைக்கப்படக்கூடியதல்ல. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} தன் இடியைக் {வஜ்ரத்தைக்} கொண்டு இதைப் பிளந்துவிட முடியாது. ஓ! கிருஷ்ணா, இவை அனைத்தையும் அறிந்தவனான நீ, என்னை ஏன் குழப்ப முயல்கிறாய்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, மூவுலகங்களிலும் நேர்ந்தவை, {அவற்றில்} இப்போது இருப்பவை, எதிர்காலத்தின் கருவறையில் இருப்பவை ஆகிய அனைத்தையும் நீ அறிவாய். உண்மையில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவற்றை உன்னைவிடச் சிறப்பாக அறிந்தவன் வேறு எவனும் இல்லை.

ஓ! கிருஷ்ணா, துரோணரால் பூட்டப்பட்ட கவசத்துடன் இருக்கும் இந்தத் துரியோதனன், இந்தக் கவசத்தை அணிந்திருப்பதாலேயே போரில் அச்சமற்றவனாக நிற்கிறான். எனினும், ஓ! மாதவா, இந்தக் கவசத்தை அணிந்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் அறியவில்லை. ஒரு பெண்ணைப் போலவே இவன் அஃதை அணிந்திருக்கிறான். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என் கரங்களின் வலிமையையும், என் வில்லின் வலிமையையும் இப்போது பார். அத்தகு கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குரு இளவரசனை {துரியோதனனை} நான் வெல்வேன்.

தேவர்களின் தலைவர் {பிரம்மன்}, இந்தப் பிரகாசமிக்கக் கவசத்தை அங்கிரசுக்குக் கொடுத்தார். பின்னவரிடம் இருந்து பிருஹஸ்பதி அதை அடைந்தார். பிருஹஸ்பதியிடமிருந்து அதைப் புரந்தரன் {இந்திரன்} அடைந்தான் [2]. தேவர்களின் தலைவன், அஃதை அணியும்போது சொல்லப்பட்ட வேண்டிய மந்திரங்களுடன் என்னிடம் கொடுத்தான். பிரம்மரால் உண்டாக்கப்பட்ட இந்தக் கவசம் தெய்வீகமானதாக இருந்தாலும், என் கணைகளால் தாக்கப்படும் இந்த இழிந்த துரியோதனன் அதனால் {அந்தக் கவசத்தால்} பாதுகாக்கப்படமாட்டான்" என்றான் {அர்ஜுனன்}.

[2] துரோண பர்வம் பகுதி 93ல் துரோணரால் சொல்லப்படும் கவச வரலாறும், இங்கே அர்ஜுனனால் சொல்லப்படும் வரலாறும் மாறுபடுகிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன் {மானவாயுத} மந்திரங்களால் சில கணைகளை ஊக்கப்படுத்தி அவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தி {வில்லை} வளைக்கத் தொடங்கினான். அப்படி அவன் {அர்ஜுனன்} வில்லின் நாணை இழுத்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அனைத்து ஆயுதங்களையும் கலங்கடிக்கவல்ல ஓர் ஆயுதத்தால் அவற்றை வெட்டினான் [3]. பிரம்மத்தை உச்சரிப்பவனால் (அஸ்வத்தாமனால்} அந்தக் கணைகள் தொலைவிலிருந்து இப்படிச் செயலிழக்கச் செய்யப்பட்டதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், ஆச்சரியத்தால் நிறைந்து, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} "ஓ! ஜனார்த்தனா, இந்த ஆயுதத்தை இருமுறை என்னால் பயன்படுத்த முடியாது, ஏனெனில், என்னையும், என் துருப்புகளையுமே அது கொல்லும்" என்றான்.

[3] வேறொரு பதிப்பில், "கௌரவிக்கத்தக்க அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டுத் தீக்ஷ்ணமான கவசத்தையுடைக்கும் தன்மையுள்ள (மனுவைத் தேவதையாகக் கொண்ட) மானவாஸ்திரத்தினாலே பாணங்களை அபிமந்திரணம் பண்ணி நாண்கயிற்றில் வைத்து இழுத்தான். அர்ஜுனனாலே இழுக்கப்படுகின்றவையும் வில்லினடுவை அடைந்திருக்கின்றவையுமான அந்த அர்ஜுனனுடைய பாணங்களைத் துரோணபுத்திரர் எல்லா அஸ்திரங்களையும் அழிக்குந்தன்மையுள்ள ஓர் அஸ்திரத்தினால் அறுத்தார்" என்றிருக்கிறது.

வில்லி பாரதத்தில் இப்படியிருக்கிறது.

வீரன்விட்டன சரங்களவனொண்கவச மேலுறப்படுதலின்றி விழுகின்றநிலை,
யோரிமைப்பினிலறிந்து குமரன்கையயிலோ டுரைக்கவுவமம் பெறுவிடங்கொளயி,
றேரினிற்பொலிய நின்றிருகைகொண்டு நனிசீறிமெய்ப்பட  வெறிந்தனனெறிந்தளவில்,
வார்சிலைக்குருவின்மைந்தனது கண்டதனை வாளியிற்றுணிபடும் படி மலைந்தனனே.  - வில்லி 13:42:85

பொருள் : சிறந்தவீரனான அர்ஜுனன் தொடுத்த கணைகள், துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி தாக்கிக் கீழ்விழும் நிலையை,  ஒரு நொடிப் பொழுதிலே அறிந்து, முருகனின் கையிலுள்ள வேலாயுதத்துக்கு ஒப்பானதும், சிறப்புடையதும்,  விஷத்தைப் போன்றதுமான ஒரு வேலாயுதத்தைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து தனது தேரிலே நின்று கொண்டு,  துரியோதனன் மேல் மிகக்கோபித்து,  அவனது உடலைத் தைக்கும்படி வீசினான்.  அப்படி வீசும்போது, நீண்ட வில்லுக்கு ஆசிரியனான துரோணரின் மகன் அசுவத்தாமன் அதைக் கண்டு,  அவ்வேலைத் தனது அம்புகளினால்  துண்டாகும்படி மலைக்கச் செய்தான்.

அதே வேளையில் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான ஒன்பது கணைகளால் அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} ஒவ்வொருவரையும் துளைத்தான். மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது கணைகளைக் கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது மழையாகப் பொழிந்தான். (தங்கள் மன்னனால் ஏவப்பட்ட) கணைமாரியைக் கண்ட உமது வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தனர்.

அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தான். தன் கண்களைத் தன் எதிரியின் உடல் மீது செலுத்தியும், அந்த ஊடுருவப்பட முடியாத கவசத்தில் நன்கு மறைக்கப்படாத எந்த ஒரு பகுதியையும் அவன் காணவில்லை. பிறகு, மரணத்திற்கு ஒப்பானவையும் கூர்முனை கொண்டவையுமான சில கணைகளைத் தன் வில்லில் இருந்து நன்கு ஏவிய அர்ஜுனன், தன் எதிராளியின் {துரியோதனனின்} குதிரைகளையும், அதற்கடுத்த அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். அதன் பிறகு வீரப் பார்த்தன், துரியோதனனின் வில்லையும், அவனது விரல்களில் உள்ள தோலுறைகளையும் அறுத்தான். பிறகு அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரியின் தேரைத் துண்டு துண்டாக வெட்டத் தொடங்கினான். மேலும் அவன் {அர்ஜுனன்}, கூரிய கணைகள் இரண்டால் துரியோதனனைத் தேரற்றவனாக்கினான். பிறகு அர்ஜனன், அந்தக் குருமன்னனின் உள்ளங்கைகள் இரண்டையும் துளைத்தான்.

அந்தப் பெரும் வில்லாளியானவன் {துரியோதனன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் துயரில் விழுவதைக் கண்ட வீரர்கள் பலர், அவனை மீட்க விரும்பி அந்த இடத்திற்கு விரைந்தனர். பல்லாயிரம் தேர்கள், ஆயுதங்களுடன் கூடிய யானைகள் மற்றும் குதிரைகள், கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான காலாட்படை வீரர்கள் எனப் பெரும் கூட்டத்தால் சூழப்பட்டதால், அவர்களின் தேரோ, அர்ஜுனன் மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருந்த தேரோ அதற்கு மேலும் காணப்படவில்லை.

அப்போது அர்ஜுனன், தன் ஆயுதங்களின் வலிமையால் அந்தக் கூட்டத்தைக் கொல்லத் தொடங்கினான். நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும், யானைகளும் அங்கங்களை இழந்து களத்தில் வெகு விரைவாக விழுந்தனர். கொல்லப்பட்டோ, கொல்லப்படுவதாலோ அந்தச் சிறந்த தேரை அடைய அவர்கள் தவறினர். உண்மையில், அர்ஜுனன் சென்ற தேரானது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இரண்டு மைல்கள் நீளத்திற்குப் படைகளால் முற்றுகையிடப்பட்டதால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த விருஷ்ணி வீரன் (கிருஷ்ணன்), நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "நான் என் சங்கை முழக்கப் போகிறேன்; நீ விரைவாக உனது வில்லைப் பெரும்பலத்துடன் வளைப்பாயாக" {என்றான் கிருஷ்ணன்}. அப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைப் பெரும்பலத்துடன் வளைத்து, தன் விரல்களால் வில்லின் நாணை இழுத்து பேரோலியை உண்டாக்கி, அடர்த்தியான கணை மழைகளைப் பொழிந்து எதிரிகளைக் கொல்லத் தொடங்கினான். அதேவேளையில், புழுதியால் முகம் மறைக்கப்பட்டிருந்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தைப் பேரொலியுடன் மிகப் பலமாக முழக்கினான். பலமாகவோ, பலவீனமாகவோ இருந்த குருவீரர்கள் அனைவரும், அந்தச் சங்கொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் கீழே தரையில் விழுந்தனர்.

அந்த மோதலில் இருந்து விடுபட்ட அர்ஜுனனின் தேரானது, காற்றால் இயக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. ஜெயத்ரதனின் பாதுகாவலர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும் (அர்ஜுனனைக் கண்டு) சினத்தால் நிறைந்தனர். உண்மையில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள், பார்த்தனைத் திடீரெனக் கண்டதால், பேரொலியை எழுப்பி அவ்வொலியால் பூமியை நிறைத்தனர். அவர்களது கணைகளின் "விஸ்" என்ற ஒலி கடும் ஒலிகள் பிறவற்றோடும், அவர்களது சங்கொலிகளோடும் கலந்து ஒலித்தன. மேலும் அந்த உயர் ஆன்ம வீரர்கள் சிங்க முழக்கங்களையும் செய்தனர்.

உமது துருப்புகளால் எழுப்பப்பட்ட பயங்கர ஆரவாரத்தைக் கேட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளை முழக்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள், தீவுகள், பாதாள உலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பூமாதேவி அவர்களது (சங்குகளின்) பேரொலியால் நிறைந்ததாகக் காணப்பட்டது. உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலியானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, இருபடைகளிலும் எதிரொலித்தது. பிறகு, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் கண்ட உமது தேர்வீரர்கள் மிகவும் அச்சமடைந்தனர். எனினும் விரைவாக மீண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். உண்மையில், உமது படையின் பெரும் தேர்வீரர்கள், மிகவும் அருளப்பட்ட மனிதர்களான அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} கண்டு, கவசம் பூண்டவர்களான அவர்கள் விரைந்தனர். இப்படி முன்வந்த காட்சி மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்