Tuesday, December 17, 2019

பஹுஸுவர்ணகம்-அஸ்வமேதயாகம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 88

Sacrifice of profuse gold! | Aswamedha-Parva-Section-88 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 73)


பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணையின் பேரில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கிய யுதிஷ்டிரன்; யாகத்தில் செய்யப்பட்ட சில சடங்குள்; யூபங்களில் கட்டப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை; யாகத்தை ஒட்டிய அழகிய சூழ்நிலை...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழைந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இளவரசன் {பப்ருவாஹனன்}, ஆறுதல் தரும் இனிய சொற்களால் தன் பாட்டியை {பிதாமஹியை} வணங்கினான்.(1) அப்போது, ராணி சித்ராங்கதை, கௌரவ்யன் (என்ற பாம்பின்) மகள் (உலூபி) ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பிருதையையும் {குந்தியையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} பணிவோடு அணுகினர். அதன் பிறகு அவர்கள் உரிய வழக்கத்தின்படி சுபத்திரையையும், குரு குலத்தின் பிற பெண்மணிகளையும் சந்தித்தனர்.(2) குந்தி அவர்களுக்கு ரத்தினங்கள் பலவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்தாள். திரௌபதி, சுபத்திரை மற்றும் குரு குலத்தின் பிற பெண்மணிகள் ஆகியோர் அனைவரும் அவர்களுக்குப் பரிசுகளை அளித்தனர்.(3) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதைச செய்யும் விருப்பத்துடன் கூடிய குந்தியால் அன்புடனும், மதிப்புடனும் நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும், மதிப்புமிக்கப் படுக்கைகளுடனும், இருக்கைகளுடனும் அங்கேயே வசித்தனர்.(4)


(குந்தியால்) முறையாகக் கௌரவிக்கப்பட்டவனும், பெரும் சக்திமிக்கவனுமான மன்னன் பப்ருவாஹனன், உரிய சடங்குகளின்படி திருதராஷ்டிரனைச் சந்தித்தான்.(5) அதன் பிறகு மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றுப் பிற பாண்டவர்களிடம் சென்றவனும், வலிமைமிக்கவனுமான அந்த மணிப்புர இளவரசன் அவர்கள் அனைவரையும் பணிவுடன் வணங்கினான்.(6) அவர்கள் அனைவரும் அவனைப் பேரன்புடன் தழுவிக் கொண்டு முறையான மதிப்பை அளித்தனர். அவனிடம் பெரும் நிறைவடைந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அவனுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்தனர்.(7) அதன் பிறகு, அந்த மணிப்புர மன்னன், தந்தையை அணுகும் இரண்டாம் பிரத்யும்னனைப் போலச் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்த வீரனான கிருஷ்ணனைப் பணிவுடன் அணுகினான்.(8) கிருஷ்ணன் அந்த மன்னனுக்கு {பப்ருவாஹனனுக்குப்} பெரும் மதிப்புமிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதுமான சிறந்த தேரைக் கொடுத்தான்.(9) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், பல்குனன், இரட்டையர்கள் ஆகியோரும் தனித்தனியாக அவனைக் கௌரவித்து விலைமதிப்புமிக்கப் பரிசுப்பொருட்களை அளித்தனர்.(10)

மூன்றாம் நாளில், நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்யவதியின் மகனுமான வியாசர், யுதிஷ்டிரனை அணுகி,(11) "ஓ! குந்தியின் மகனே, இந்நாளில் இருந்து உன் வேள்வி தொடங்கட்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. தொடங்குவதற்கான கணம் அருகில் இருக்கிறது. புரோஹிதர்கள் உன்னைத் தூண்டுகிறார்கள்.(12) எந்த அங்கமும் பழுதுபடாதவண்ணம் இந்த வேள்வி செய்யப்படட்டும். இந்த வேள்விக்குப் பெரும் அளவிலான தங்கம் தேவைப்படுவதன் விளைவால், அபரிமிதமான தங்க வேள்வி {பஹுஸுவர்ணகம்} என்று இஃது அழைக்கப்படுகிறது[1].(13) ஓ! பெரும் மன்னா, இந்த வேள்விக்கு ஆணையிட்ட தக்ஷிணையைவிட மூன்று மடங்கு கொடுப்பாயாக. பிராமணர்கள் இக்காரியத்தில் திறம்பெற்றவர்களாவர்[2].(14) ஓ! மன்னா, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மூன்று குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடைவதன் மூலம் நீ உன் உற்றார் உறவினரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபடுவாய்.(15) ஓ! ஏகாதிபதி, குதிரைவேள்வியின் நிறைவில் ஒருவன் செய்யும் நீராடல் உயர்ந்த தூய்மையை அளிப்பதும், உயர்ந்த புண்ணியத்தை உண்டாக்குவதுமாகும். ஓ! குரு குலத்து மன்னா, அந்தப் பலன் {புண்ணியம்} உன்னுடையதாகும்" என்றார் {வியாசர்}.(16)

[1] கும்பகோணம் பதிப்பில், "விகல்பமுள்ளதான உன்னுடைய இந்த யாகமானது அஹீனமென்னப்படுகிறது. இதற்குப் பஹுவான ஸுவர்ணம் வேண்டியிருப்பதால் பஹுஸுவர்ணகமென்று பிரஸித்தி பெற்றது" என்றிருக்கிறது. விகல்பம் என்பதன் அடிக்குறிப்பில், "பலவிதமாயுள்ள" என்றும், அஹீனம் என்பதன் அடிக்குறிப்பில், "’அநேகம் ஸோமயாகங்கள் சேர்ந்தது; அல்லது திரவிய முதலியவற்றால் குறைவற்றத” என்பது பழைய உரை" என்றும் இருக்கிறது.

[2] "ஒரு குதிரைவேள்விக்காக முக்கிய ரித்விக்குக்கு அல்லது வேறு பிராமணர்கள் உள்ளிட்ட ரித்விக்குகள் அனைவருக்கும் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் தக்ஷிணை அல்லது வேள்விக் கொடை என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் ஆணையிடப்படும். வியாசர் அந்தத் தக்ஷிணையை மூன்று மடங்கு உயர்த்தித் தருமாறு அறிவுறுத்துகிறார். தக்ஷிணையை அதிகரிப்பதன் மூலம், வேள்வி செய்பவனின் புண்ணியமும் அதன்படியே அதிகரிக்கும் என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நீதி மிக்க ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட யுதிஷ்டிரன், குதிரைவேள்வி செய்வதற்கான தீக்ஷைக்கு உட்பட்டான்[3].(17) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அபரிமிதமான கொடைகளுடனும், உணவுக் கொடையுடனும் கூடியதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை எட்டச் செய்வதும், அனைத்துப் புண்ணியங்களையும் உண்டாக்கக்கூடியதுமான பெரும் குதிரை வேள்வியைச் செய்தான்.(18) வேதங்களை நன்கறிந்தவர்களான புரோகிதர்கள், முறையாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டே அனைத்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(19) அங்கே விதிப்பிறழ்வுகள் ஏதும் நடக்கவில்லை, முறையற்ற வகையில் ஏதும் செய்யப்படவில்லை. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவர்கள், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, எந்த {சாத்திரப்} பரிந்துரையும் இல்லாத இடங்களில் எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்தனர்[4].(20)

[3] "தீக்ஷை என்பது தொடக்க விழாவாகும். எதை விரும்பி வேள்வி செய்கிறார்களோ அந்த நோக்கத்தை அறிவிக்கும் வகையில் அதில் மந்திரங்கள் சொல்லப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "ஒரு வேள்வி அல்லது அறச்சடங்கின் நடைமுறையே கர்மம் என்பதாகும். உண்மையில் சடங்குகளின் நடைமுறைகள் சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், குறிப்பிட்ட செயல்கள் விதிக்கப்படவில்லையெனினும், அறிவுக்குப் பொருத்தமாக ஏற்புடைய வகையில் இருக்கும் அவையும் செய்யப்படுகின்றன. எனவே, 20ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் சொல்லப்படுவது என்னவெனில், விதிக்கப்பட்ட வகையிலும், உள்ளுணர்வுகளுக்கு இணக்கமான வகையிலும் என இரு வகைகளிலும் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான அவர்கள், தர்மம் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுவதும், பிரவர்க்யம் என்றும் அழைக்கப்படுவதுமான சடங்கை முதலில் செய்து, அதன் பிறகு அபிஷவம் எனும் சடங்கையும் முறையாகச் செய்தனர்[5].(21) சோமத்தைப் பருகுபவர்களின் முதன்மையான அவர்கள், ஓ! ஏகாதிபதி, சோமச்சாற்றைப் பிரித்தெடுத்த பிறகு, சாத்திரங்களின் ஆணைகளைப் பின்பற்றி ஸவனச் சடங்கைச்[6] செய்தனர்.(22) அந்த வேள்விக்கு வந்தோரின் மத்தியில் உற்சாகமற்ற எவரையும், வறுமையில் உள்ள எவரையும், பசியில் உள்ள எவரையும், துயரில் மூழ்கிய எவரையும், மோசமாகத் தெரிபவர் எவரையும் காணமுடியவில்லை.(23) மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையின் பேரில், வலிமையும், சக்தியுமிக்கப் பீமசேனன், உண்ண விரும்புவோருக்கு மத்தியில் இடையறாமல் உணவைப் பரிமாறச் செய்தான்.(24) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், அனைத்து வகை வேள்விச் சடங்குகளையும் நன்கறிந்தவர்களுமான புரோஹிதர்கள், ஒவ்வொரு நாளும் அந்தப் பெரும் வேள்வி நிறைவடைவதற்குத் தேவையான செயல்களை அனைத்தையும் செய்தனர்.(25)

[5] "ப்ரவர்க்யம் என்பது ஒரு வேள்வியில் செய்யப்படும் தொடக்கநிலை சிறப்புச் சடங்காகும். அபிஷவம் என்பது மந்திரங்களைக் கொண்டு புனிதமாக்கப்பட்ட சோமக்கொடியில் இருந்து சாற்றைப் பிரித்தெடுக்கும் சடங்காகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தர்மத்தை அறிந்த பிராம்மண ஸ்ரேஷ்டர்கள் ப்ரவர்க்யம் என்னும் கர்மத்தை விதிப்படி செய்தார்கள். அந்தப் பிராம்மணர்கள் அவ்வாறே அபிஷவம் என்னும் கர்மாவையும் விதிப்படி செய்தார்கள்" என்றிருக்கிறது. ப்ரவர்க்யம் என்பதன் அடிக்குறிப்பில், "ஸோம யாகத்தில் முதலில் செய்யப்படும் யாகம்" என்றும், அபிஷவம் என்பதன் அடிக்குறிப்பில், "’ஸோமலதையை இடிப்பது’ என்பது பழைய உரை" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தை அறிந்தவர்களும், பிராமணர்களில் உயந்தவர்களுமான அவர்கள், தொடக்கச் சடங்குகளைச் செய்தனர். ஓ! மன்னா, விதிகளைப் பின்பற்றும் அந்தப் பிராமணர்கள் சோமச்சாற்றையும் பிரித்தெடுத்தனர்" என்றிருக்கிறது.

[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், ஸவனம் என்பது, "ஹோமங்களின் வகைகள்" என்றிருக்கிறது.

பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுடைய சத்யஸ்களுக்கு மத்தியில், (வேத) கல்வியின் ஆறு கிளைகளை நன்கறியாத எவரும் இல்லை. அவர்களுக்கு மத்தியில், நோன்புகளை நோற்காத எவரும், உபாத்யாயராக இல்லாத எவரும், இயங்கியல் சர்ச்சைகளை நன்கறியாத எவரும் இல்லை.(26) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வேள்வித் தூணை {யூபத்தை} நிறுவதற்கான வேளை வந்தபோது, வில்வத்தாலான {பில்வத்தாலான} ஆறு வேள்வித் தூண்களும், காதிரத்தாலான {செங்கருங்காலியாலான} ஆறும், சர்வவர்ணினாலான {பலாசத்தாலான / புரசாலான} ஆறும் அமைக்கப்பட்டன.(27) குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} அந்த வேள்வியில் தேவதாருவாலான இரண்டு வேள்வித்தூண்களும் {யூபங்களும்}, சிலேஷ்மாதகத்தாலான {இலுப்பையாலான} ஒன்றும் புரோகிதர்களால் அமைக்கப்பட்டன.(28) மன்னனின் ஆணையின் பேரில், தங்கத்தாலான வேள்வித்தூண்கள் சில அழகின் நிமித்தமாக மட்டுமே பீமனால் அமைக்கப்பட்டன.(29) அந்த அரசமுனியால் கொடுக்கப்பட்ட அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வேள்வித் தூண்கள் ஒவ்வொன்றும், தேவர்களும், தெய்வீக முனிவர்கள் எழுவரும் சூழ்ந்த நிற்க சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்திரனைப் போலிருந்தன.(30)

அங்கே சயனத்தைக் கட்டுவதற்காக எண்ணற்ற தங்கக் கற்கள் உண்டாக்கப்பட்டன. அந்தச் சயனமும் உயிரினங்களின் தலைவனான தக்ஷனுக்காக (அவன் தன் பெரு வேள்வியைச் செய்து கொண்டிருந்த போது) அமைக்கப்பட்ட சயனத்திற்கு ஒப்பான அழகுடன் திகழ்ந்தது.(31) பதினெட்டு முழம் அளவு கொண்ட அந்தச் சயனம் நான்கு அறைகள் அல்லது குகைகளைக் கொண்டிருந்தது. அப்போது {அந்த அறைகளில்} முக்கோணங்களில் கருடனின் வடிவிலான தங்கப் பறவை ஒன்று அமைக்கப்பட்டது[7].(32) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், பெரும் கல்வியாளர்களுமான புரோகிதர்கள், அந்த {இருபத்தோரு} வேள்வித்தூண்களில் {யூபங்களில்} விலங்குகள் மற்றும் பறவைகளைக் கட்டி அவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவனுக்கென ஒதுக்கினர்[8].(33) வேள்வி நெருப்புத் தொடர்பான சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட காளைகளும், நீர்வாழ் விலங்கினங்களும் அந்த வேள்வித்தூண்களில் {யூபங்களில்} முறையாகக் கட்டப்பட்டன.(34) உயர் ஆன்மக் குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனின்} வேள்வியில், அந்த முதன்மையான குதிரை {வேள்விக் குதிரை} உட்பட முன்னூறு விலங்குகள் அந்த வேள்வித்தூண்களில் கட்டப்பட்டன[9].(35)

[7] "இந்தக் கட்டமைப்புகள் அல்லது வடிவங்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. ஒருவேளை இவை வேள்விப்பீடத்தில் பொன்மணலால் வரையப்படும் வடிவங்களாக இருக்கலாம். தற்காலத்தில், சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய வண்ணங்களிலான அரிசிப்பொடி பயன்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த யாகத்திற்குப் பதினெட்டு முழம் நீளமுள்ளவைகளும், ஸுவர்ணமயமான இறகுள்ளவைகளும், மூன்று கோணங்களுள்ளவைகளும், கருடன் போன்ற வடிவமுள்ளவைகளுமான நான்கு சயனங்கள் அமைக்கப்படிருந்தன" என்றிருக்கிறது. சயனம் என்பதன் அடிக்குறிப்பில், "சயனம் என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லுக்குத் திரள் அல்லது குவியல் என்ற பொருளும் உண்டு. இஃது ஒருவகையான கட்டமைப்பு என்பது வெளிப்படையானது" என்றிருக்கிறது.

[8] "ஒவ்வொரு விலங்கும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[9] சுலோகம் எண்கள் 27 -28ல் 6+6+6+2+1 என இருபத்தோரு வேள்வித்தூண்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் இறுதியாகச் சொல்லப்பட்ட இலுப்பையாலான வேள்வி மரத்தில் வேள்விக் குதிரைக் கட்டப்பட்டிருந்தால், மற்ற முன்னூறு விலங்குகளும் எஞ்சியிருந்த இருபது தூண்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அஃதாவது, ஒரு தூணில் பதினைந்து விலங்குகள் கட்டப்பட்டிருக்கலாம். தங்கத் தூண்கள் வேறு சிலவும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை அழகுக்கு மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட என்பது 29ம் ஸ்லோகத்தில் காணக்கிடைக்கிறது.

தெய்வீக முனிவர்களுடனும், பாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்கள் மற்றும் இன்பத்தில் ஆடிக் கொண்டிக்கும் அப்ரசரஸ்களின் பல்வேறு இனக்குழுவினருடனும் இருப்பது போல அந்த வேள்வி மிக அழகானதாகத் தெரிந்தது.(36) அங்கே கிம்புருஷர்களும் நிறைந்திருந்தனர், கின்னரர்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை {அந்த வேள்விச் சாலையைச்} சுற்றிலும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் வசிப்பிடங்கள் இருந்தன.(37) மறுபிறப்பார்களில் முதன்மையானவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் தொகுப்பவர்களும், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்களுமான வியாசரின் சீடர்கள் அங்கே தினமும் காணப்பட்டனர்.(38) அங்கே நாரதரும், பெருங்காந்தி கொண்ட தும்புருவும் இருந்தனர். இசையில் திறம்பெற்றவர்களான விஸ்வாவசு, சித்திரசேனன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர்.(39) வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், இசையில் திறம் பெற்றவர்களும், நடனத்தை நன்கறிந்தவரகளுமான அந்தக் கந்தர்வர்கள், வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களுக்கு மகிழ்வூட்டினர்" {என்றார் வைசம்பாயனர்}.(40)

அஸ்வமேதபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் : 40

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்