Red-eyed Crow and the Swan! | Karna-Parva-Section-41 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : காக்கை மற்றும் அன்னத்தைக் குறித்த கதையொன்றைக் கர்ணனுக்குச் சொன்ன சல்லியன்; அந்த உவமைக் கதையில் வரும் காக்கையைப் போன்றவனே கர்ணன் என்று அவனை நிந்தித்த சல்லியன்; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பாதுகாப்பை நாடுமாறு கர்ணனுக்கு அறிவுரை கூறிய சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ! விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ! கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ! மதியற்றவனே, உன் குலத்தில் இழிந்தவனே, நீ தேர்ந்தெடுப்பதையே செய்வாயாக.(4)
