Aswatthama became the generalissimo! | Shalya-Parva-Section-65 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)



















