Sacred bath in tirthas! | Shalya-Parva-Section-49 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “'அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)
