Wednesday, March 27, 2013

பூமி பாரத்தைக் குறைக்க தேவர்கள் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 64

Gods born to reduce the mass of earth! | Adi Parva - Section 64 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : பூமியில் பிறந்த அசுரர்கள்; பிரம்மனிடம் முறையிட்ட பூமாதேவி; தேவர்களைப் பூமியில் பிறக்கும்படி பிரம்மன் உத்தரவிட்டது; இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க நாராயணன் அவதரிக்க உடன்பட்டது...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, நீர் பெயர் குறிப்பிட்டவர்களைப் பற்றியும், பெயர் குறிப்பிடாதவர்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பற்றியும் விவரமாகச் சொல்வீராக.(1) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {வைசம்பாயனரே}, தேவர்களுக்கு இணையானவர்களான அந்த மஹாரதர்கள் பூமியில் பிறந்த காரணம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் " என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(2)



வைசம்பாயனர், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, உன்னால் கேட்கப்படும் இந்தக் கேள்வி தேவர்களுக்கே புதிரானது என்பதை நாம் அறிகிறோம். இருப்பினும், தான்தோன்றியை {சுயம்புவான பிரம்மாவை} வணங்கி, நான் அவற்றைக் குறித்தும் சொல்கிறேன்.(3) ஜமதக்னியின் மகன் (பரசுராமர்), உலகத்தை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்து, மகேந்திரம் என்றழைக்கப்பட்ட மலைக்குச் சென்று, தமது தவத்துறவுகளை இயற்றினார்.(4) உலகத்தில் க்ஷத்திரியர்கள் இல்லாத அந்தக் காலங்களில், க்ஷத்திரியப் பெண்மணிகள், பிள்ளைப்பேறு கருதி, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, கடுமையான உறுதிகளை ஏற்றிருக்கும் பிராமணர்களிடம், பிள்ளைப்பேறுக்காக மட்டும், அதற்குரிய காலத்தில் வந்தனர். காமங்கொண்டோ, தகுந்த காலம் இல்லாமலோ அவர்கள் அப்படி வந்ததில்லை.(5,6) ஆயிரக்கணக்கான க்ஷத்திரியப் பெண்மணிகள் இப்படிப் பிராமணர்களால் கருவுற்றனர். அதன்பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பெரும்சக்தி கொண்ட க்ஷத்திரிய ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் தங்கள் குலம் தழைக்கப் பிறந்தனர்.(7) இப்படித் தவத்துறவுகள் செய்யும் பிராமணர்கள் மூலம் க்ஷத்திரியப் பெண்ககளிடமிருந்து க்ஷத்திரிய குலம் {மீண்டும்} தோன்றியது. அந்தப் புதிய தலைமுறை, நீடித்த ஆயுளுடன், அறம் வளர்க்கத் தொடங்கியது. அதன்படி, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வர்ணங்களும் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.(8,9)

அந்தக் காலத்தில், ஒவ்வொரு மனிதனும் தன் மனைவியிடம், அவளது பருவ காலத்திலேயே சேர்ந்தான், காமத்தாலோ, பருவ காலமல்லாமலோ ஒரு போதும் சேர்ந்ததில்லை. ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இதைப்போன்றே மற்ற உயிரினங்களும், ஏன் பறவைகளும் கூடத் தங்கள் துணையிடத்தில் தகுந்த காலத்தில் மட்டுமே சேர்ந்தன.(10,11) ஓ பூமியைக் காப்பவனே {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே பிறந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அனைத்தும் அறம்சார்ந்து இருந்து, அறத்தை வளர்த்து, கவலை, நோய் ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருந்தன.(12) ஓ யானை நடை கொண்டவனே {ஜனமேஜயா}, கடல்களைத் தன் எல்லைகளாகக் கொண்ட இந்த அகண்ட பூமியானவள், தனது மலைகளுடனும், கானகங்களுடனும், நகரங்களுடனும், மீண்டும் க்ஷத்திரியர்களால் ஆளப்பட்டாள்.(13) க்ஷத்திரியர்களால் அப்படி மறுபடியும் பூமி அறம்சார்ந்து ஆளப்பட்ட போது, பிராமணர்களை முதலாகக் கொண்ட மற்ற வகையினரும் {வர்ணத்தாரும்} பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(14) காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகும் களங்கங்கள் அனைத்தையும் கைவிட்ட மன்னர்கள், நீதியோடு {தண்டிக்கத்} தகுந்தவர்களுக்குத் {தகுந்த} தண்டனையளித்துப் பூமியைக் காத்தனர்.(15)

க்ஷத்திரியர்கள் இப்படி அறம்சார்ந்து ஆள்வதைக் கண்டவனும் நூறுவேள்விகளைச் செய்தவனுமான அந்த ஆயிரம் கண்களை உடையவன் {இந்திரன்}, சரியான நேரங்களிலும், இடங்களிலும் மழையைப் பொழிந்து உயிரினங்கள் அனைத்தையும் வாழ்த்தினான்.(16) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, முதிரா வயதுடையோர் எவரும் இறக்கவில்லை, மேலும் பருவமடையாத பெண்ணை {மனைவியாக} யாரும் அறிந்ததுமில்லை {அடைந்ததுமில்லை}.(17) ஓ பாரதக் குலத்தின் காளையே, இப்படியே கடற்கரை வரை பரந்த பூமி அறம் சார்ந்து நீடித்து வாழ்ந்த இப்படிப்பட்ட மனிதர்களால் நிரம்பியது.(18) க்ஷத்திரியர்கள் பெரும் செல்வங்களைத் தானமளித்துப் பெரும் வேள்விகளைச் செய்தனர். பிராமணர்கள் அனைவரும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் {கிளைகளையும்}, உபநிஷத்துகளையும் கற்றனர்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் காலத்தில் எந்தப் பிராமணனும் வேதத்தை விற்கவில்லை (பணம் பெற்றுக் கல்வி கொடுத்ததில்லை), அல்லது சூத்திரனின் முன்னால் வேதத்தைச் சத்தமாகப் படித்ததும் இல்லை.(20)

வைசியர்கள், தங்கள் காளைகளின் உதவியைக் கொண்டு, நிலத்தை உழுதனர். அவர்கள் {வைசியர்கள்} தங்கள் கலப்பையில் பசுக்களைப் பூட்டுவதில்லை. மேலும் அவர்கள் {வைசியர்கள்}, இளைத்திருந்த {இளைக்காமலிருக்க} கால்நடைகளுக்குக் கவனத்துடன் தீனி கொடுத்தனர் {கொடுத்துப் பருக்கச் செய்தனர்}.(21) கன்றுகள், தங்கள் தாயின் பாலை மட்டுமே உணவாகக் கொள்ளும்வரை (புல்லோ, மற்ற உணவோ கொள்ளும் வரை), அந்தப் பசுவிடம் இருந்து மனிதர்கள் பாலைக் கறக்காதிருந்தார்கள். அந்நாட்களில், எந்த வியாபாரியும் தவறான அளவீடுகளைக் கொண்டு தன் பொருட்களை விற்காதிருந்தான்.(22)

ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, மனிதர்கள் அனைவரும் அறவழியில் நடந்து, அறத்தில் தங்கள் பார்வையை நிலைக்கச்செய்தபடியே அனைத்தையும் செய்தனர்.(23) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அனைத்து வகை {வர்ண} மக்களும் தங்கள் கடமைகளில் கண்ணாயிருந்தனர். ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்தக் காலத்தில் அறமானது, எந்தக் குறைவுமற்றதாக இருந்தது.(24) ஓ பாரதக் குலத்தின் காளையே, பசுக்களும், பெண்மணிகளும் சரியான காலத்தில் தங்கள் பிள்ளைகளை ஈன்றனர். மரங்கள் பருவ காலத்திற்கேற்றபடி முறையாக மலர்களையும் கனிகளையும் கொடுத்தன.(25) ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே கிருத யுகம் முறையாகத் தொடங்கியதும், மொத்த பூமியும் எண்ணற்ற உயிரினங்களால் நிரம்பியிருந்தது.(26)

ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூலோகமானது இப்படி அருளப்பட்டு இருந்த காலத்தில், ஓ மனிதர்களின் தலைவனே {ஜனமேஜயா}, மன்னர் பரம்பரைகளில் அசுரர்கள் பிறக்கத் தொடங்கினர்.(27) திதியின் மைந்தர்கள் (தைத்தியர்கள்), அதிதியின் மைந்தர்களால் (தேவர்களால்) தொடர்ந்து போரில் தோற்கடிக்கப்பட்டுத் தங்கள் அரசுரிமையையும், சொர்க்கத்தையும் இழந்து, பூமியில் அவதரிக்கத் தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பெரும் சக்திகளைக் கொண்ட அசுரர்கள், அரசுரிமையில் விருப்பம் கொண்டு, பசுக்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருமைகள், யானைகள், மான்கள் என்று பல உயிரினங்களாகவும் மற்றும் ராட்சசர்களாகவும் பூமியில் பிறக்கத் தொடங்கினர்.(29,30)

ஓ பூமியைக் காப்பவனே, ஏற்கனவே பிறந்தவர்களாலும், பிறந்து கொண்டு இருப்பவர்களாலும் பூமாதேவி, தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறினாள்.(31) தேவலோகத்தில் இருந்து துரத்தப்பட்ட திதி மற்றும் தனுவின் மகன்களில் {தைத்தியர்கள் மற்றும் தானவர்களில்} சிலர், பெரும் பெருமையும் செருக்கும் கொண்ட மன்னர்களாகப் பூமியில் பிறந்தனர்.(32) பெரும் சக்திகளைக் கொண்ட அவர்கள், பல்வேறு வடிவங்களில் பூமியை மறைத்தனர். எதிரிகள் அனைவரையும் ஒடுக்கும் திறன் கொண்ட அவர்கள் கடலைத் தன் எல்லையாகக் கொண்ட பூமியை நிறைத்தனர்.(33) மேலும் அவர்கள், தங்கள் பலத்தால் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும், சூத்திரர்களையும் மற்ற பிற உயிரினங்கள் அனைத்தையும் ஒடுக்கத் தொடங்கினர்.(34) உயிரினங்கள் அனைத்தையும் பயமுறுத்தியும், கொன்றும், ஓ மன்னா {ஜனமேஜயா} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூட்டங்களாக இந்த உலகத்தில் திரிந்தனர்.(35) உண்மையும், அறமுமற்று, தங்கள் பலத்தில் பெருமை கொண்டு, செருக்கு என்னும் (மதுவின்) போதை கொண்டிருந்த அவர்கள், ஆசிரமங்களிலிருந்த பெரும் முனிவர்களைக்கூட அவமதித்தனர்.(36)

பூமியானவள், பெரும் பலத்தையும், சக்தியையும் அபரிமிதமான பல்வேறு வழிமுறைகளில் பெற்ற வலிமைமிக்க அசுரர்களால் ஒடுக்கப்பட்டு, பிரம்மனுக்குப் பணிவிடை செய்ய {பிரம்மனை நோக்கித் தவம் செய்ய வேண்டும் என்று} நினைக்கத் தொடங்கினாள்.(37) (சேஷன், ஆமை, பெரும் யானை போன்ற) உயிரினங்கள் மற்றும் பல சேஷன்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பலத்தால் கூட, தானவர்களின் எடையைச் சுமந்து கொண்டிருந்தவளும், மலைகளுடன் கூடியவளுமான பூமியைத் தாங்கிக் கொள்ள இயலில்லை[1].(38) பிறகு, ஓ மன்னா, சுமையினால் ஒடுக்கப்பட்டவளும், பயத்தினால் பீடிக்கப்பட்டவளுமான பூமியானவள் அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பனுடைய {பிரம்மனின்} பாதுகாப்பை நாடினாள்.(39) அவள் {பூமாதேவி}, உலகங்களைப் படைப்பவனும், அழிவறியாதவனும், தேவர்களாலும், பிராமணர்களாலும், நற்பேறுமிக்கப் பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டவனும், மகிழ்ச்சி நிறைந்த கந்தர்வர்களாலும், தேவர்களுக்குச் சேவை செய்வதில் எப்போதும் ஈடுபடும் அப்ஸரஸ்களாலும் போற்றப்படுபவனுமான தெய்வீகமான பிரம்மனைக் கண்டாள். பாதுகாப்பை விரும்பிய பூமியானவள், ஓ பாரதா {ஜனமேஜயா}, லோகபாலர்கள் அனைவரின் முன்னிலையில் அனைத்தையும் அவனிடம் {பிரம்மனிடம்} சொன்னாள்.(40-42)

[1] வேறொரு பதிப்பில் திக்கஜங்களும், ஆதிசேஷன் முதலிய அஷ்டநாகங்களும் பூமியைத் தாங்குவதற்கு சக்தியில்லாமல் போயின என்று உள்ளது.பூமியை ஆதிசேஷன் தாங்குவதாக ஆதிபர்வம் 36 ஆம் பகுதியில் படித்தோம். யானை என்பது அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகளைக் குறிக்கும். அவை ஐராவதம், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புஷ்பந்தன், ஸார்வ, பௌமன், சுப்ரதீகன் ஆகும். சேஷன், கூர்மம், அஷ்டதிக் கஜங்கள் ஆகியவை பூமியை தாங்குவதை விளக்கும் படம் இதோ.

ஆனால், ஓ மன்னா {ஜனமேஜயா}, அனைத்தும் அறிந்தவனும், தான்தோன்றியுமான அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்} அவளது {பூமாதேவியினது} நோக்கத்தை முன்பே அறிந்திருந்தான்.(43) ஓ பாரதா {ஜனமேஜயா}, அவனே {பிரம்மாவே} அண்டத்தைப் படைத்தவனாதலால், தேவர்கள், அசுரர்கள் முதலான தன் உயிரினங்களின் மனதில் உள்ளதை அவன் ஏன் அறிந்திருக்கமாட்டான்?(44) ஓ மன்னா {ஜனமேஜயா}, பூமியின் தலைவனும், ஈசன் என்றும் சம்பு என்றும் பிரஜாபதி என்றும் அழைக்கப்பட்டவனும், அனைத்து உயிர்களின் படைப்பாளியானவனுமான பிரம்மன் பூமியிடம் பேசினான்.(45) பிரம்மன், "ஓ செல்வங்களைத் தாங்குபவளே, நீ எந்நோக்கோடு என்னிடம் வந்தாயோ, அதை நிறைவேற்றத் தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் நியமிக்கிறேன்" என்றான் {பிரம்மன்}."(46)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பூமியிடம் இப்படிக் கூறிவிட்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீகப் பிரம்மன் அவளுக்கு விடைகொடுத்தான். அந்தப் படைப்பாளன் {பிரம்மன்} தேவர்கள் அனைவரிடமும், "பூமியின் சுமையைக் குறைக்க, நீங்கள் சென்று, உங்கள் அம்சங்களுடன் அவளிடம் {பூமியிடம்} பிறந்து (ஏற்கனவே பிறந்துவிட்ட அசுரர்களுடன்) இகலாடுவீராக {சச்சரவில் ஈடுபடுவீராக}" என்று கட்டளையிட்டான்.(47-48) மேலும் அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இனங்கள் அனைத்தையும் அழைத்து, "மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் விரும்பிய வடிவில் உங்கள் அம்சங்களுடன் பிறப்பீராக! செல்லுங்கள்" என்று ஆழ்ந்த பொருளுடன் உரைத்தான்.(49) இந்திரனோடு கூடிய தேவர்கள் அனைவரும், உண்மையானதும், அந்தச் சூழ்நிலையில் விரும்பதக்கதும், பயனோடு கூடியதுமான தேவர்கள் தலைவனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அஃதை ஏற்றனர்.(50)

தங்கள் அம்சங்களுடன் பூமிக்கு வரத் தீர்மானித்த அவர்கள் {தேவர்கள்} அனைவரும், வைகுண்டத்தில் இருப்பவனும்,(51) சக்கரத்தையும், கதையையும் தனது கைகளில் தாங்கியவனும், ஊதா வண்ண ஆடைகளை அணிந்தவனும், பெரும் காந்தி கொண்டவனும், நாபியில் {தொப்புளில்} தாமரையைக் கொண்டவனும், தேவர்களின் எதிரிகளை அழிப்பவனும், (யோக நிலையில்) தனது அகன்ற மார்பில் தனது பார்வையைத் தாழ்த்தியிருப்பவனும்,(52) பிரஜாபதிக்கே {பிரம்மனுக்கே} தலைவனும், வலிமையும் பலமும் கொண்ட தேவர்கள் அனைவரின் இறையாண்மையும், மார்பில் மங்கலக் குறியை {ஸ்ரீவத்ஸமென்னும் மருவைக்} கொண்டவனும்{ஸ்ரீவத்ஸமென்னும் இந்த மருதான் மகாலஷ்மியின் வாசஸ்தலம் எனப் புராணங்கள் சொல்கின்றன}, ஒவ்வொருவரின் நுண்திறனிலும் செயல்படுபவனும், அனைத்து தேவர்களாலும் போற்றப்படுபவனுமான நாராயணனிடம் சென்றனர்.(53) அனைவரிலும் மேன்மைமிகுந்த இந்திரன் அவனிடம் {விஷ்ணுவிடம்}, "அவதாரம் எடுப்பீராக" என்று வேண்டினான். அதற்கு ஹரி {விஷ்ணு}, "அப்படியே ஆகட்டும்" என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்