Saturday, April 13, 2013

துஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை! | ஆதிபர்வம் - பகுதி 74ஆ

Sakuntala rebuked Dushmanta! | Adi Parva - Section 74b | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : ஆதுஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை; சகுந்தலையை நிந்தித்த துஷ்யந்தன்...

அவளது {சகுந்தலையின்} இதயம் துன்பத்திலும் கோபத்திலும் உழன்றது, அவள் கோபத்தால் தனது தலைவனைப் {துஷ்யந்தனைப்} பார்த்து,(22) " ஓ ஏகாதிபதியே! அனைத்தையும் அறிந்தும், இழிவான ஒரு மனிதன் போல, எதையும் அறிந்ததில்லை என்று உம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது?(23) இக்காரியத்தில் உள்ள உண்மைக்கோ பொய்மைக்கோ உமது இதயமே சாட்சியாகும். எனவே,  உம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல், உண்மையைப் பேசுவீராக.(24) தனது உண்மை நிலையை விட்டு, வேறொரு நிலையில் தானிருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் ஒருவன், திருடனும், தன்னைத் தானே களவாடிக் கொள்ளும் கள்வனுமாவான். அவன் என்ன பாவம்தான் செய்ய மாட்டான்?(25)

உமது செயலை நீர் மட்டுமே அறிந்திருப்பதாக நினைக்கிறீர். ஆனால், உமது இதயத்தில் குடியிருக்கும் அளவற்ற ஞானம் கொண்ட அந்தப் பழமையானவனை (நாராயணனை) நீர் அறியமாட்டீரா? உமது பாவங்கள் அனைத்தையும் அவன் அறிவான். நீர் அவன் முன்னிலையிலேயே பாவம் இழைக்கிறீர்.(26) பாவத்தைச் செய்யும் ஒருவன், யாரும் தன்னைக் காணவில்லை என்று நினைக்கிறான். ஆனால், அவன் தேவர்களாலும், ஒவ்வொருவரின் இதயத்தில் இருப்பவனாலும் பார்க்கப்படுகிறான்.(27) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், இதயம், யமன், பகல், இரவு, இரவும் பகலும் சந்திக்கும் இரு வேளைகள் (சந்திகள்), தர்மம் ஆகியன அனைத்தும் மனிதனின் செயல்களுக்குச் சாட்சியாக இருப்பனவாகும்.(28)

அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக ஒருவனுக்குள் இருக்கும் நாராயணன், அவன் செய்யும் செயல்களில் மனநிறைவுடனிருந்தால், அவனது செயல்களுக்கான பாவங்களை சூரியனின் மகனான யமன் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டான்.(29) ஆனால் எவனிடம் நாராயணன் நிறைவு கொள்ளவில்லையோ, அவனை யமன் அவனது பாவங்களுக்காகத் துன்புறுத்துவான் {சித்திரவதை செய்வான்}.(30) தன்னைப் பொய்யாகக் காட்டிக்கொண்டு, தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்பவனுக்குத் தேவர்கள் ஒருபோதும் அருள்வதில்லை. அப்படிப்பட்டவனை அவனது சொந்த ஆன்மா கூட வாழ்த்தாது.(31)

நான் என் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள மனைவியாவேன். எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே நான் வந்தேன் என்பது உண்மையே. அதன்பொருட்டு என்னை அவமதியாதீர். உமது மனைவியான நான், மரியாதையாக நடத்தப்படத் தகுந்தவள்.(32) நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் உம்மை நாடி வந்ததால், என்னை அப்படி {மனைவியாக} மதிக்கவில்லையா? பலபேர் முன்னிலையில், என்னைச் சாதாரணப் பெண்ணைப் போல ஏன் நடத்துகிறீர்? நிச்சயம் நான் காட்டில் அழவே இல்லை.  நான் சொல்வதை நீர் கேட்க மாட்டீரா?(33) ஆனால், நான் வேண்டி கேட்பதை நீர் மறுதலித்தால், ஓ துஷ்யந்தரே, உமது தலை இந்த நொடியில் நூறு துண்டுகளாக வெடித்துச் சிதறட்டும்!(34)

ஒரு கணவன் தனது மனைவியின் கருவறைக்குள் நுழைந்து, தானே மகனாகப் பிறக்கிறான். எனவே, வேதங்களின்படி ஒரு மனைவி ஜெயா {ஜாயை} (அவள் மூலமாக மறுபடியும் பிறப்பதால்) என்று அழைக்கப்படுகிறாள்.(35) வேத மந்திரங்களை அறிந்தவர்களுக்கு {ஞானிகளுக்குப்} பிறக்கும் மகன், வீழ்ந்து கிடக்கும் தங்கள் மூதாதையர்களின் ஆவிகளை மீட்க உதவுகிறான்.(36) அப்படிப் பிறக்கும் மகன், புத் எனும் நரகத்தில் விழ வேண்டிய தனது மூதாதையர்களை மீட்பதால், சுயம்புவால் புத்திரன் (புத் எனும் நரகத்தில் இருந்து காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான்.(37) ஒருவன் தன் மகனால், மூன்று உலகங்களையும் கைப்பற்றுகிறான். ஒரு மகனின் மகனால் {பேரனால்}, அழிவில்லா நிலையை அடைகிறான். ஒரு பேரனின் மகனால், பெருந்தகப்பன்களும், முப்பாட்டன்களும் முடிவில்லா நீடித்த மகிழ்ச்சியை அடைகிறார்கள்.(38)

வீட்டுக் காரியங்களைக் கவனிப்பதில் திறன் நிறைந்தவளே உண்மையான மனைவி.  ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தவளே உண்மையான மனைவி. தனது தலைவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளே உண்மையான மனைவி. தனது தலைவனைத் தவிர வேறு யாரையும் அறியாதவளே உண்மையான மனைவி.(39) ஒரு மனைவி என்பவள் ஒரு மனிதனின் பாதியாவாள். நண்பர்களில் மனைவியே முதன்மையானவள். மனைவியே, ஒருவனது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவள். முக்திக்கும் அவளே காரணமாவாள்.(40)

மனைவிகளை உடையவர்களே அறச் செயல்களைச் செய்ய முடியும். மனைவிகள் உள்ளவர்களே இல்லற வாழ்வு வாழ முடியும்.  மனைவிகளை உடைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்கள் இருக்கும். மனைவிகளை உடையவர்களே நற்பேற்றை அடைய முடியும்.(41) இனிமையாகப் பேசும் மனைவியர், மகிழ்ச்சியான தருணங்களில் நண்பர்களாக இருக்கிறார்கள்.  அறச்செயல்களில் ஈடுபடும்போது அவர்கள் தந்தையாக இருக்கிறார்கள். துன்பத்திலும், நோயிலும் அவர்கள் தாயாக இருக்கிறார்கள்.(42) ஆழ்ந்த கானகத்திற்குள் பயணிக்கும் ஒருவனுக்கும் மனைவியானவளே புத்துணர்ச்சியும், ஆறுதலுமாவாள். மனைவியை உடைய ஒருவன் எல்லோராலும் நம்பப்படுகிறான். எனவே, ஒரு மனைவி என்பவள் ஒருவனது மதிப்புமிக்கச் சொத்தாவாள்.(43) கணவன் இந்த உலகை விட்டு யமனின் உலகத்திற்குச் சென்றாலும், ஓர் அர்ப்பணிப்புள்ள மனைவி மட்டுமே அவனுக்குத் துணையாக அங்கே செல்வாள்.(44) அவனுக்கு முன்பே அங்கு செல்லும் மனைவி அவள் தன் கணவனுக்காகக் காத்திருப்பாள். கணவன் முன்சென்றாலோ, கற்புடைய மனைவி, மிக விரைவாக அவனைத் தொடருகிறாள்.(45) ஓ மன்னா, இந்தக் காரணங்களுக்காகவே திருமணம் என்பது {இவ்வுலகில்} நிலைத்திருக்கிறது. கணவன், மனைவியின் துணையால், இவ்வுலகிலும் பரவுலகிலும் மகிழ்ச்சியை அடைகிறான்[1].(46)


[1] கும்பகோணம் பதிப்பில், "ஜீவித்திருக்கும்போதும், இறந்து போன போதும், கஷ்டங்களில் ஸகாயமின்றி அகப்பட்டபோதும் பதிவ்ரதையான பாரியை ஒருத்தி மட்டுமே பர்த்தாவை விடாமல் அநுஸரிக்கிறாள். முதலில் இறந்து போன மனைவி தன் கணவனுக்குப் பரலோகத்தில் காத்திருக்கிறாள். முன்னிறந்த கணவனைக் கற்புடைய மனைவி பின்னேயும் அனுசரிக்கிறாள். ராஜாவே! இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பாரியையைக் கணவன் அடைகிறான். இந்த லோகத்தில் பாரியை தேகத்தை வளர்ப்பதற்குரியவள்; ஸ்வர்க்கலோகம் செல்லுகிறவனுக்குக் கட்டுஸாதம் போன்றவள். இந்தக் காரணத்தினாலேதான் பாணிக்கிரகணம் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்று கற்றவர்களால் சொல்லப்படுகிறது.   எனவே, மகனைப் பெற்றுக் கொடுத்த மனைவியை ஒருவன் தனது தாயாகவும் பார்க்க வேண்டும்.(47) ஒருவன் தனது மனைவியின் மூலம் பெற்றெடுத்த மகனின் முகத்தைக் காணும் போது, கண்ணாடியில் தன்னைக் காண்பது போல உணர்ந்து, சொர்க்கத்தை அடையும் அறம்சார்ந்த மனிதனைப் போன்ற மகிழ்ச்சியை அடைகிறான்.(48)

மனத்துயராலும், உடல் நோயாலும் துன்பப்படும் மனிதன், வேர்த்துக் கொண்டிருக்கும் போது குளிர்ந்த நீராடலால் கிடைக்கும் உற்சாகத்தைத் தனது மனைவியின் துணையால் அடைகிறான்.(49) மகிழ்ச்சி, இன்பம், அறம் ஆகியன மனைவியாலே கிடைப்பதால், எந்த மனிதனும், தனது மனைவி ஏற்றுக் கொள்ளாத எதையும் செய்யக்கூடாது.(50) ஒரு மனைவியானவள், தனது கணவன் மீண்டும் பிறப்பை எடுக்கும் புனிதமான பூமியாகிறாள். முனிவர்களாலும், ஒரு பெண் இல்லாமல் உயிரினங்களை உருவாக்க முடியாது.(51)

ஒரு மகன், புழுதியடைந்த உடலுடனிருந்தாலும் கூட, அவன் தன்னை நோக்கி ஓடி வந்து தன் அங்கங்களைக் கட்டிக் கொள்ளும் போது உணர்வதை விட ஒரு தந்தைக்கு வேறு எது பெரிய மகிழ்ச்சியாக இருக்க முடியும்?(52) உம்மை அணுகி, உமது மடியின் மேலேற குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் உமது மகனை ஏன் இப்படி யாரோ போல் நடத்துகிறீர்?(53} எறும்புகள் கூட தாமிடும் முட்டைகளை அழித்துவிடாமல் காக்கின்றன; அறவோனான நீர் ஏன் உமது மகனை ஆதரிக்க மறுக்கிறீர்?(54) மெதுவான சந்தனக் குழம்பின் தீண்டல், பெண்களின் தீண்டல், நீரின் தீண்டல் ஆகியன ஒரு மகனை வாரியணைத்துக் கட்டிக் கொள்ளும் இன்பத்துக்கு ஈடாகாது.(55) இருகால் உள்ளவைகளில் ஒரு பிராமணன் எவ்வாறு முதன்மையானவனோ, நான்கு கால் உள்ளவைகளில் பசு எவ்வாறு முதன்மையானதோ, பெரியவர்களில் அனைவரைக் காட்டிலும் ஒரு ஆசான் எவ்வாறு முதன்மையானவரோ, அவ்வாறு ஏற்புடைய தீண்டலுக்குரிய அனைத்துப் பொருட்களை விடவும் ஒரு மகனே முதன்மையானவன் ஆவான்.(56) எனவே, இந்த அழகான குழந்தை உம்மைத் தீண்டி அணைக்கட்டும். ஒரு மகனின் அணைப்புக்கு ஈடானது இந்த உலகத்தில் இனியது வேறு எதுவும் இல்லை.(57) ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே! ஓ ஏகாதிபதியே! உமது துன்பங்களையெல்லாம் விலக்கவல்ல இந்தப் பிள்ளையை எனது கருவில் மூன்று வருடங்கள் முழுமையாகச் சுமந்து பெற்றிருக்கிறேன்[2].(58) ஓ பூருவின் {புரூரவஸின்} வின் குலத்து ஏகாதிபதியே, நான் பேறுகால அறையில் இருந்தபோது, "இவன் நூறு குதிரை வேள்விகளைச் செய்வான்" என்று வானத்திலிருந்து அசரீரிகேட்டது.(59)

[2] கும்பகோணம் பதிப்பில், "மூன்று வருடம் நிறைந்த பின் இந்த வீரனாகிய குமாரன், உமது துக்கத்தைப் போக்குவதற்காக என்னிடத்தில் பிறந்திருக்கிறான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "உமது துயரத்தை அகற்றுபவனான இந்தப் பிள்ளையை, மூன்று வருடங்கள் நிறைவடைந்த பிறகு ஈன்றெடுத்தேன்" என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயின் பதிப்பில், "உமது துயரத்தை விலக்குபவனான இந்த மகனை நான் மூன்று வருடங்கள் சுமந்தேன்" என்றிருக்கிறது. மூலத்தில் அஸ்வமேத யாகங்கள் பற்றியச் செய்தி இல்லை. இவன் அரசர்களின் இந்திரனாகத் (இராஜேந்திரனாக) திகழ்வான் என்று அசரீரி சொன்னதாக இருக்கிறது.

உண்மையில், தங்கள் இல்லங்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் மனிதர்கள், பிறரின் பிள்ளைகளைத் தங்கள் மடியில் அமர்த்திக் கொண்டு, அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்து, பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.(60) குழந்தை பிறந்ததும், நடத்தப்படும் முதல் சடங்கில்[3], பிராமணர்கள் இந்த மந்திரங்களைச் சொல்வார்கள் என்று உமக்குத் தெரியும்.(61)


[3] குழந்தை பிறந்தபின் தொப்புள் கொடி அறுக்கும்பொழுது நிகழ்த்தப்படும் சடங்கு ஜாதகர்மம். பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவி, இம்மந்திரங்களைச் சொல்வார் மூலத்தில் ஜாதகர்மாணி என இந்தச் சடங்கே சொல்லப்பட்டுள்ளது. அந்த மந்திரங்கள் இதோ,

அங்கத் அங்கத் சம்பவாசி ஹிருதயத் அபிஜெயாஸே
ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதாஹ் சதம்

பொசோ ஹு த்வததீனோ மெ சந்தானம் அபி காகஸ்யன்
தஸ்மத் த்வம் ஜீவ மெ வத்ஸ சுசுக்ஷி சரதாம் சதம்



"ஓ மகனே! நீ எனது உடல் மூலம் பிறந்தாய்! நீ எனது இதயத்தின் மூலம் பிறந்தாய், நீ எனக்கு மகனாக {மகனின் வடிவில்} இருக்கும் நானே ஆவாய். நீ நூறு வருடங்கள் வாழ்வாயாக!(62) எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கிறது, எனது குலத்தின் வளர்ச்சி உன்னிடமே இருக்கிறது. எனவே மகனே, நீ மகிழ்ச்சியாக நூறுவருடங்கள் வாழ்வாயாக"  என்பதே அம்மந்திரங்கள்.(63) இவன் உமது உடலிலிருந்தே முளைத்தவனாவான். இவன் உமது இரண்டாவது வடிவமாவான். தெளிந்த தடாகத்தில் உம் வடிவத்தைக் காண்பது போலவே உமது மகனிடம் உம்மைக் காண்பீராக.(64) வேள்வி நெருப்பு, வீட்டு நெருப்பால் தூண்டப்படுவதைப் போல, உம்மில் இருந்து {உமது} இவன் முளைத்தான். நீரே, உம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டீர்.(65) நீர் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மானைத் தேடிவந்து, என்னை அணுகினீர். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, அப்போது நான் கன்னியாக எனது {வளர்ப்புத்} தந்தையின் {கண்வ முனிவரின்} ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தேன்.(66)

ஊர்வசி, பூர்வசித்தி, சஹஜன்யா, மேனகா, விஸ்வாச்சி, கிரிடச்சி {கிருதாஸி} ஆகியோரே ஆறு முதன்மையான அப்சரஸ்கள் ஆவர்.(67)  அவர்களிலும், ஒரு பிராமணருக்குப் பிறந்த மேனகையே முதன்மையானவள் ஆவாள். அவள் {மேனகை} தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்து, விஷ்வாமித்திரருடன் கலந்து, என்னைப் பெற்றெடுத்தாள்.(68) அந்தக் கொண்டாடப்படும் அப்சரஸ் மேனகை, என்னை இமயமலையின் பள்ளத்தாக்கொன்றில் ஈன்றெடுத்தாள். எல்லாப் பாசபந்தங்களையும் துறந்து, நான் யாருக்கோ பிறந்தவள் போல, என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.(69) பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே பெற்றோரால் துறக்கப்பட்ட நான், முற்காலத்தில் {முற்பிறவியில்} என்ன பாவம் செய்தேனோ, இப்போது உம்மாலும் துறக்கப்படுகிறேன்.(70) நான் எனது தந்தையிடமே அகதியாகச் செல்லத் தயாராக இருக்கிறேன். ஆனால், உமக்குச் சொந்தமான உமது குழந்தையை நீர் துறக்கக்கூடாது" என்றாள் {சகுந்தலை}.(71)

இதையெல்லாம் கேட்ட துஷ்யந்தன், "ஓ சகுந்தலா! உன்னிடம் இந்த மகனை நான் பெற்றதாக நான் அறியவில்லை. பொதுவாகவேப் பெண்கள் பொய் பேசுவர். உனது வார்த்தைகளை யார் நம்புவார்கள்?(72) எவ்விதப் பாச பந்தமற்ற, காமவெறி கொண்ட  மேனைகையே உனது தாய்.  தேவர்களுக்கு காணிக்கையாக்கிய மலர்களை ஒருவன் கைவிடுவதைப் போலவே அவள் {மேனகை} உன்னை இமயமலை அடிவாரத்தில் விட்டுச் சென்றாள்.(73)

க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவரும், காமம் நிறைந்தவருமான விஷ்வாமித்திரரும் கூட, பிராமணராகும் ஆசையில் மயங்கி பந்தபாசம் அற்றிருப்பவர்.(74) இருப்பினும் மேனகை அப்சரஸ்களில் முதன்மையானவள், உன் தந்தையும் {விஷ்வாமித்திரரும்} முனிவர்களின் முதன்மையானவர். அவர்களின் மகளாயிருந்தும், நீ ஏன் காம வெறி கொண்ட ஒரு பெண்ணைப் போலப் பேசுகிறாய்?(75) உனது வார்த்தைகள் எந்த மதிப்புக்கும் அருகதையற்றவை.  என் முன்னே இவற்றைப் பேச உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ துறவி வேடத்தில் இருக்கும் தீய பெண்ணே! இங்கிருந்து செல்வாயாக.(76) அந்த முனிவர்களில் முதன்மையானவர் {விஷ்வாமித்திரர்} இப்போது எங்கே இருக்கிறார்? அப்சரஸ் மேனகை எங்கே இருக்கிறாள்? கீழ்த்தரமான நீ ஏன் துறவு வேடம் பூண்டிருக்கிறாய்?(77) உனது பிள்ளளையும் கூட நன்றாக வளர்ந்திருக்கிறான். நீ இவனைச் சிறுவன் என்கிறாய், ஆனால் அவனோ நல்ல பலசாலியாக இருக்கிறான். சால மரத்தைப் போல இவன் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தான்?(78) உனது பிறப்பே இழிவானது. நீ காமவெறி கொண்ட பெண்போலப் பேசுகிறாய். மேனகையின் காமவெறியில் நீ ஈன்றெடுக்கப்பட்டாய்.(79) ஓ பெண்துறவி வேடம் பூண்டவளே! என்னிடம் நீ சொல்வதெல்லாம் நான் அறியாதவை. உன்னை எனக்குத் தெரியவில்லை. நீ எங்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாயோ அங்கேச் செல்வாயாக" என்றான் {துஷ்யந்தன்}.(80)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்