Sunday, May 19, 2013

பயங்கரமானவன்! | ஆதிபர்வம் - பகுதி 100

The Terrible one! | Adi Parva - Section 100 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 36)

பதிவின் சுருக்கம் : சந்தனுவின் பண்புகள்; கங்கையாற்றின் ஓட்டத்தைத் தடுக்கும் பீஷ்மனைக் கண்ட சந்தனு; பீஷ்மனை சந்தனுவிடம் ஒப்படைக்கும் கங்கை; சத்தியவதியைக் கண்ட சந்தனு; சத்யவதியுடைய தந்தையின் நிபந்தனை; சந்தனுவின் சோகத்த அறிந்து சத்யவதியைப் பெண் கேட்டுச் சென்ற பீஷ்மன்; பீஷ்மர் என்ற பெயர்க்காரணம்; பீஷ்மருக்கு வரமளித்த சந்தனு...

வைசம்பாயனர் சொன்னார், "தேவர்களாலும், அரச முனிகளாலும் புகழப்பட்ட அந்த ஏகாதிபதி சந்தனு, தனது ஞானத்திற்காகவும், அறச்செயல்களுக்காகவும், உண்மை நிறைந்த பேச்சுக்காகவும் எல்லா உலகங்களிலும் அறியப்பட்டிருந்தான்.(1) தன்னடக்கம், தயாளம், மன்னிக்கும் குணம், புத்திக்கூர்மை, பணிவு, பொறுமை, அதீத சக்தி ஆகிய குணங்கள் அந்த மனிதர்களில் காளையிடம் {சந்தனுவிடம்} இருந்தன.(2) அறம், பொருள் ஆகியவற்றைக் கற்றறிந்து, பாரதக் குலத்தையும், மனித குலத்தையும் அந்த ஏகாதிபதி காத்து வந்தான்.  அவனது {சந்தனுவின்} கழுத்தில் சங்கில் {சங்கு} உள்ளது போல மூன்று கோடுகள் இருந்தன. அவனது தோள் அகலமானதாக இருந்தது. மதங்கொண்ட யானையின் ஆற்றலை அவன் {சந்தனு} பிரதிபலித்துக் கொண்டிருந்தான். அரசர்களுக்கான அனைத்து நற்குறிகளும் அவனிடம் இருந்தன. தேவலோகம் செல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த பூமியின் முதல்வனாக அவன் {சந்தனு} இருந்தான்.(3,4)



பெரும் சாதனைகள் செய்த அந்த ஏகாதிபதியின் நடத்தையைக் கண்ணுற்ற மனிதர்கள், இன்பத்தையும், பொருளையும் விட அறம்தான் உயர்ந்தது என்பதை அறிய வந்தனர்.(5) இந்தக் குணங்களே, மனிதர்களில் காளையான சந்தனுவிடம் வசித்து வந்தன. உண்மையாகச் சந்தனுவைப் போன்று வேறு எந்த மன்னனும் இதுவரை இருந்ததில்லை.(6) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அம்மன்னனைக் {சந்தனுவைக்} கண்ட பூமியின் மற்ற மன்னர்கள், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான அவனுக்கு {சந்தனுவுக்கு} மன்னாதி மன்னன்   என்ற பட்டத்தைக் கொடுத்தனர்.(7) அந்தப் பாரதக் குலத்தைக் காக்கும் தலைவனின் {சந்தனுவின்} காலத்தில் பூமியில் இருந்த மன்னர்கள் அனைவரும் துயரில்லாமல், பயமில்லாமல், எந்தக் குறையும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியுடன் உறங்கி, அதிகாலையில் எழுவதற்கு முன்னர் மகிழ்வான கனவுகளைக் கண்டு எழுந்தனர்.(8)

அற்புதமான சாதனைகளைச் செய்து மற்றொரு இந்திரனைப் போல் இருந்த அந்த ஏகாதிபதியின் {சந்தனுவின்} கட்டுப்பாட்டில் இருந்த பூமியின் மன்னர்கள் அனைவரும், நன்னடத்தையுள்ளவர்களாகவும், ஈகையாளர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், வேள்விகள் செய்து கொண்டும் இருந்தனர்.(9) சந்தனு பூமியை ஆண்டு கொண்டிருந்த போது, அவனைப் {சந்தனுவைப்} போன்ற மற்ற ஏகாதிபதிகள் அனைவரின் அறத்தகுதிகளும் பெரும் அளவில் முன்னேறின.(10) க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தார்கள்; வைசியர்கள் க்ஷத்திரியர்களுக்குச் சேவை செய்தார்கள்; சூத்திரர்கள் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் வழிபட்டு வைசியர்களுக்குச் சேவை செய்தார்கள்.(11) சந்தனு குருக்களின் தலைநகரான மகிழ்ச்சிமிகு ஹஸ்தினாபுரத்தில் வசித்து, கடல்களால் சூழப்பட்ட முழு உலகத்தையும் ஆண்டான்.(12)

அவன் உண்மையுள்ளவனாக, சூதற்றவனாக, தேவர்களின் மன்னனைப் போல அறங்களின் விதிக்குட்பட்டு வாழ்ந்து வந்தான். ஈகை, அறம், தவம் ஆகியவற்றின் கலவையோடு இருந்த அவன், பெரும் நற்பேறு பெற்றிருந்தான்.(13) அவன் {சந்தனு} கோபத்தையும், தீயவற்றையும் நீக்கி சோமனைப் போன்ற அழகுடன் இருந்தான்.  சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், வாயுவைப்போன்ற ஆற்றலுடனும், கோபத்தில் யமனைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்தான்.(14) ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனு இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்த போது, மான்களோ, பன்றிகளோ, பறவைகளோ அல்லது வேறு எந்த மிருகமோ தேவையில்லாமல் கொல்லப்பட்டதில்லை.(15) அவனது {சந்தனுவின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், அறத்தில் தலைசிறந்ததான அன்பு மேலோங்கியிருந்தது, கருணையுடன் கூடிய ஆன்மா கொண்டவனும், ஆசை மற்றும் கோபமற்றவனுமாகிய மன்னனும் {சந்தனுவும்}, அனைத்து உயிரினங்களுக்கும் {உயிரினங்களுக்குள் எந்த வேறுபாட்டையும் கருதாமல்} சமமான பாதுகாப்பை வழங்கினான்.(16)

தேவர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேள்விகள் நடத்தப்பட்டன. பாவம் வரும் வகையில் எந்த உயிரினத்தின் உயிரும் எடுக்கப்படவில்லை.(17) சந்தனு, துயரத்திலிருந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும், ஏனைய உயிரனங்களுக்கும் மன்னனாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்தான்.(18) குரு பரம்பரையில் வந்த அந்தச் சிறந்தவனின் {சந்தனுவின்} ஆட்சியில் மக்கள் உண்மையான பேச்சுடனும், ஈகை மற்றும் அறத்தில் மனத்தை அர்ப்பணித்தவர்களாக இருந்தனர்.(19) இல்லற இன்பத்தை முப்பத்தாறு ஆண்டுகள் அனுபவித்த சந்தனு, பிறகு கானகத்திற்குச் சென்றான்[1].(20)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், "பெண்களின் துணையை முப்பத்தாறு ஆண்டுகளுக்கு அனுபவித்த சந்தனு" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "அவன் பதினாறு, எட்டு, நாலு, எட்ட ஆகிய வருஷங்கள் ஸ்திரீ ஸுகத்தை அனுபவிக்காமல் காட்டிலேயே திரிந்து கொண்டிருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முப்பத்தாறு வருடங்கள் பெண்களுடன் இன்பமாக இருந்த அம்மன்னன் பிறகு காட்டுக்குச்ச என்றான்" என்றிருக்கிறது.

சந்தனுவின் மகனும், கங்கைக்குப் பிறந்தவனுமான அந்த வசு, தேவவிரதன் என்று அழைக்கப்பட்டான். அவன் {தேவவிரதன்}, மிகுந்த அழகாலும், அவனது பழக்க வழக்கங்களாலும், நடத்தையாலும், கல்வியாலும், சந்தனுவுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) உலகம் சார்ந்த அறிவு மற்றும் ஆன்ம அறிவு சார்ந்த அனைத்துக் கிளைகளிலும் அவன் {தேவவிரதன்} பெற்றிருந்த ஞானம் பெரியதாக இருந்தது. அவனது பலமும், சக்தியும் இயல்புக்கு மிக்கதாக இருந்தது. அவன் {தேவவிரதன்} பெரும் தேர் வீரனாகவும் ஆனான். உண்மையில் அவன் {தேவவிரதன்} பெரும் மன்னனாக இருந்தான்[2].(22)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில், "தெய்வீக மற்றும் பூலோக ஆயுதங்கள் அனைத்திலும் அவன் திறன்மிக்கவனாக இருந்தான். அவன் பெரும் பலவானாகவும், சக்திமிக்கவனாகவும் இருந்தான்; அவன் ஒரு பெரும் தேர்வீரனாக இருந்தான்; அவன் பேரழகனாகவும் இருந்தான்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "சிறந்த வன்மையும், சிறந்த தீரமும், சிறந்த பராக்கிரமமுள்ள அந்த மஹாரதனான தேவவ்ரதன் பூமியிலுள்ளவையும் இல்லாதவையுமான {தெய்வீகமானவையுமான} எல்லா அஸ்திரங்களிலும் தேர்ச்சிஉள்ளவனாகி இருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவதில் திறன்மிக்கவனாக இருந்தான். பிற மன்னர்களோடு ஒப்பிடுகையில் அவன் பலத்திலும், சக்தியிலும், வீரத்திலும், தேரோட்டியாகவும் வலிமைமிக்கவனாக இருந்தான்" என்றிருக்கிறது.

ஒரு நாள், மன்னன் சந்தனு, தனது கணையால் அடிபட்ட மான் ஒன்றைக் கங்கைக்கரை ஓரமாகத் தேடிக்கொண்டிருந்த போது, கங்கை மிகவும் வற்றிப் போயிருப்பதைக் கண்டான்.(23) ஓ மனிதர்களில் காளையே, சந்தனு இந்தக் காட்சியைக் கண்டு வியந்து நின்றான். அவன் {சந்தனு} தனது மனதிற்குள்ளேயே, ’ஆறுகளில் முதன்மையான {கங்கை} ஆறு எப்படி இவ்வளவு வேகமாக வற்றிப் போயிற்று?’ என்று கேட்டுக் கொண்டான்.(24) அந்தச் சிறப்பு மிக்க ஏகாதிபதி {சந்தனு}, காரணத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, திடமிக்க, இனிமையான ஓர் இளைஞன் {தேவவிரதன்}, தனது கூரிய தெய்வீக ஆயுதங்களால் நதியின் ஓட்டத்தைத் தடுத்து இந்திரனைப் போல நின்று கொண்டிருப்பதைக் கண்டான். பிரம்மாண்டமான கங்கையின் நீரோட்டம், ஓர் இளைஞனால் தடுக்கப்பட்டதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தான்.(25-27) அந்த இளைஞன் {தேவவிரதன்}, சந்தனுவின் மகனைத் தவிர வேறு யாருமில்லை. சந்தனு, தனது மகனை {தேவவிரதனை}, அவன் பிறந்த போது பார்த்ததுதான். அதன் பிறகு பார்த்ததேயில்லை. எனவே அந்த இளைஞனை {தேவவிரதனை} அவனால் {சந்தனுவால்} நினைவுகூரமுடியவில்லை.(28)

அந்த இளைஞன் {தேவவிரதன்} தனது தந்தையைப் {சந்தனுவைப்} பார்த்தவுடனேயே கண்டுகொண்டான். எனினும், மன்னனை {சந்தனுவை} நெருங்காமல், தனது தெய்வீக மாய சக்திகளைப் பயன்படுத்தி, மேகம்போலப் பார்வையை மறைத்து, அவன் {சந்தனு} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனான் {அந்த இளைஞன் தேவவிரதன்}.(29) மன்னன் சந்தனு, தான் கண்ட காட்சியை நினைத்து வியந்து, ஒரு வேளை அந்த இளைஞன் தனது மகனாக இருப்பானோ என்றெண்ணிக் கங்கையிடம், "எனது மகனைக் காட்டுவாயாக" என்றான்.(30) இப்படிக் கேட்கப்பட்ட கங்கை, அழகான வடிவங் கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையைத் தனது வலக் கரத்தில் பற்றி வந்து, சந்தனுவிடம் காட்டினாள்.(31) சந்தனு, ஏற்கனவே அவளை {கங்கையை} அறிந்திருந்தாலும், இப்போது ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணிற ஆடையுடன் வந்த அந்த அழகான பெண்ணை {கங்கையை} அவனால் {சந்தனுவால்} அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.(32)

கங்கை, "ஓ மனிதர்களில் புலியே {சந்தனுவே}, சிறிது காலத்திற்கு முன், என்னால் எட்டாவதாகப் {8} பெறப்பட்ட மகன் இவன்தான் {தேவவிரதன்}. இவன் எல்லா ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வீராக.(33) ஓ ஏகாதிபதியே! இவனை {தேவவிரதனை} இப்போது நீர் அழைத்துச்செல்லலாம். அவனை {தேவவிரதனை} நான் கவனத்துடன் வளர்த்திருக்கிறேன். ஓ மனிதர்களில் புலியே, உமது இல்லத்திற்கு இவனையும் {தேவவிரதனையும்} அழைத்துச் செல்வீராக.(34) உயர்ந்த புத்திக்கூர்மையுள்ள இவன், வசிஷ்டரிடம் முழு வேதத்தையும், அதன் அங்கங்களையும் கற்று வந்திருக்கிறான். எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்ற சிறந்த வில்லாளியான இவன் {தேவவிரதன்}, போர்க்களத்தில் இந்திரனைப் போன்றவனாவான்.(35) ஓ பாரதரே (பாரதக் குலத்தில் வந்தவரே), தேவர்களும், அசுரர்களும் இவனுக்கு {தேவவிரதனுக்கு} நல்லதையே செய்ய நினைப்பர். உசானஸ் (சுக்ரன்) அறிந்த ஞானத்தின் கிளைகள் அத்தனையையும் இவனும் {தேவவிரதனும்} அறிவான். தேவர்களாலும், அசுரர்களாலும் வழிபடப்பட்டும் பிருஹஸ்பதி அறிந்த எல்லாச் சாத்திரங்களிலும் இவன் நிபுணத்துவம் பெற்றிருக்கிறான். (36,37) ஜமதக்னியின் மைந்தனான ஒப்பற்ற ராமன் {பரசுராமன்}, அறிந்த எல்லாப் பலம்வாயந்த ஆயுதங்களையும், சிறப்பு வாய்ந்த, பெரும்பலம் கொண்ட உமது மகன் {தேவவிரதன்} அறிவான். ஓ மன்னா! உயர்வான ஆற்றலைக் கொண்ட இந்த வீர மைந்தனை {தேவவிரதனை} உமக்கு நான் கொடுக்கிறேன். இவன் {தேவவிரதன்} சிறந்த வில்லாளன். மன்னர்களின் கடமைகளையும், அவர்களுக்குள்ளான ஒப்பந்தங்கள் அனைத்தையும் அறிவான்" என்றாள்.(38,39)

இப்படிக் கங்கையால் சொல்லப்பட்ட சந்தனு, சூரியனைப் போன்ற தனது மைந்தனைத் {தேவவிரதனைத்} தனது தலைநகருக்கு அழைத்துச் சென்றான்.(40) தேவர்களின் தலைநகரைப் போல இருந்த தனது தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்ததும், அந்தப் பூருவின் வழியில் வந்த ஏகாதிபதி {சந்தனு}, தன்னைப் பெரும் அதிர்ஷ்டசாலியாக நினைத்தான்.(41) எல்லாப் பௌரவர்களையும் அழைத்து, அரசாங்கத்தைக் காக்க, தனது மகனை {தேவவிரதனை} தனது வாரிசாக அறிவித்தான்.(42) ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயனே}, தனது நடத்தையால் அந்த இளவரசன் {தேவவிரதன்} விரைவாகத் தனது தந்தையையும் {சந்தனுவையும்}, மற்ற பௌரவர்களையும் அரசாங்கத்துக்குட்பட்ட அனைத்துக் குடிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்தான்.(43) அதன்பிறகு, ஒப்புயர்வற்ற வீரம் கொண்ட மன்னன் {சந்தனு}, தனது மகனுடன் {தேவவிரதனுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இப்படியே நான்கு வருடங்கள் கழிந்தன.(44)

ஒரு நாள் மன்னன் {சந்தனு} யமுனைக் கரையில் இருந்த ஒரு கானகத்திற்குச் சென்றான். அங்கே அந்த மன்னன் {சந்தனு} உலவிக் கொண்டிருந்த போது, திக்கறியா இடத்திலிருந்து நறுமணம் பரவி வருவதை உணர்ந்தான்.(45) அதன் காரணத்தை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு, அந்த மன்னன் {சந்தனு} அப்படியும், இப்படியும் தேடிக் கொண்டிருந்தபோது, மீனவ மகளான தெய்வீக அழகுடன் கூடிய கருங்கண் மங்கையொருத்தியை {சத்தியவதியைக்} கண்டான்.(46) அவளிடம், "ஓ மருட்சியுடையவளே, நீ யார்? நீ யாருடைய மகள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.(47) அவள் {சத்தியவதி}, "அருளப்பட்டு இருப்பீராக! நான் மீனவர் தலைவனின் மகளாவேன். அவரது உத்தரவின் பேரில், அறத்தகுதிகளை அடைவதற்காக, வழிப்போக்கர்கள் இந்த நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல, இந்தப் படகின் மூலம் உதவுகிறேன்" என்றாள்.(48)

தெய்வீக அழகும், இனிமையும், நறுமணமும் கூடிய அந்த மங்கையைக் கண்டு, அவளைத் {சத்தியவதியைத்} தனது மனைவியாக அடைய எண்ணினான் அந்த மன்னன்.(49) அவளது தந்தையிடம் {மீனவர் தலைவனிடம்} சென்று, தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மீனவர் தலைவன், "ஓ மன்னா {சந்தனு}, உயர்ந்த நிறத்துடன் எனது மகள் {சத்தியவதி} பிறந்தவுடனேயே, அவளுக்கேற்ற கணவனை அடைய வேண்டுமே என்று உணர்ந்தேன். ஆனால், எனது இதயத்தில் குடியிருக்கும் விருப்பத்தைக் கேட்பீராக.(50,51) ஓ பாவமற்றவரே, நீர் உண்மையானவர், இந்த மங்கையை {சத்தியவதியை} என்னிடம் இருந்து பரிசாக அடைய நீர் விருப்பம் கொண்டால், எனக்கு ஓர் உறுதியை அளிப்பீராக.(52) அந்த உறுதியை நீர் ஏற்றுக் கொண்டால், உண்மையாக நான் எனது மகளை {சத்தியவதியை} உமக்கு அளிக்கிறேன். உமக்குச் சமமான வேறு கணவனை இவளுக்கு என்னால் அளிக்க முடியாது" என்றான் {மீனவர் தலைவன்}.(53)

இதைக் கேட்ட சந்தனு, "நீர் கேட்கும் உறுதி என்ன என்பதை நான் கேட்ட பிறகே, அதை என்னால் தர முடியுமா என்று சொல்ல முடியும். என்னால் தரக்கூடியது என்றால், நிச்சயம் தருவேன். இல்லையென்றால் என்னால் முடியாது" என்றான்.(54)

மீனவன், "ஓ மன்னா {சந்தனு}, நான் இதையே உம்மிடம் கேட்பேன்: இந்தக் கன்னிகையின் மூலமாகப் பிறக்கும் மகனை நீர் உமது அரியணையில் நிறுவ வேண்டும், வேறு எவரையும் உமது வழித்தோன்றலாக்கக் கூடாது" என்றான்.(55)

"வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா, இதைக் கேட்ட சந்தனுவுக்குள், ஆசைத்தீ  பெரிதாக எரிந்து கொண்டிருந்தாலும், அத்தகு வரத்தைக் கொடுக்க விரும்பவில்லை.(56) அந்த மன்னன் இதயத்தில் துயர் கொண்டு, வழியெல்லாம் அந்த மீனவன் மகளை {சத்தியவதியை} நினைத்துக் கொண்டே ஹஸ்தினாபுரம் திரும்பினான்.(57) இல்லம் திரும்பி வேதனையில் நிறைந்த தியானத்தில் தனது நேரத்தைப் போக்கினான் அந்த ஏகாதிபதி. ஒரு நாள், துயரத்தில் இருந்த தனது தந்தையிடம் {சந்தனுவிடம்} தேவவிரதன் சென்று,(58) "உம்மிடம் செல்வங்கள் அனைத்தும் இருக்கின்றன. தலைவர்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிகிறார்கள், பிறகு ஏன் நீர் இப்படித் துயரத்திலிருக்கிறீர்?(59) உமது சிந்தனையிலேயே லயித்துக் கொண்டு என்னிடம் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் இருக்கிறீர். நீர் குதிரையில் வெளியே எங்கும் செல்வதில்லை; சோகத்துடனும், மெலிந்தும் காணப்படுகிறீர்.(60) சுறுசுறுப்பையும் இழந்துவிட்டீர். ஒரு தீர்வை எட்ட {உமது நோயைத் தீர்க்க} முயற்சிப்பதற்காக, நீர் எந்நோயால் அவதியுறுகிறீர் என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன்" என்றான் {தேவவிரதன்}.

சந்தனு, தனது மகனிடம் {தேவவிரதனிடம்},(61) "நான் துயரத்திலிருக்கிறேன் என்று நீ உண்மையைச் சொல்கிறாய் மகனே. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். ஓ பாரதக் குலத்தோனே {தேவவிரதனே}, இந்தப் பெரும் பரம்பரைக்கு நீ ஒருவனே கொழுந்தாக இருக்கிறாய்.(62) நீ எப்போதும், வீர விளையாட்டுகளிலும், வீரச் சாதனைகள் செய்வதிலுமே இருக்கிறாய். ஓ மகனே {தேவவிரதனே}, ஆனால் நான், மனித வாழ்வின் நிலையின்மையை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(63) ஓ கங்கையின் மைந்தா {தேவவிரதனே}, உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், நான் மகனற்றவனாகிவிடுவேன். உண்மையில் நீ ஒருவனே எனக்கு நூறு மகன்களுக்குச் சமமாக இருக்கிறாய்.(64) எனவே, இனிநான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. நமது பேரரசை வழிநடத்திச் செல்லும் வளமை எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதலும், விருப்பமும் ஆகும்.(65) ஒரே மகன் உள்ளவன் மகனற்றவனே என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். நெருப்பின் முன்பாகச் செய்யப்படும் வேள்விகளும் {அக்னி ஹோத்ரங்களும்}, மூன்று வேதங்களின் அறிவும் அதனதன் பலனாக நிரந்தர அறத்தகுதியைத் தரும் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு மகனின் பிறப்பால் ஏற்படும் அறத்தகுதியில் பதினாறில் ஒரு பகுதிக்குக் கூட அது சமமாக இருக்காது. உண்மையில் இவ்வகையில் பார்த்தால், மனிதனுக்கும், கீழ்மையான விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை.(66,67) ஓ ஞானியே, ஒரு மகனைப் பெறுவதால் ஒருவன் சொர்க்கத்தை அடைவான் என்பதில் நான் கொஞ்சமும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனெனில், தேவர்களும் ஏற்கும் புராணங்களின் வேராக இருக்கும் வேதங்களில், இதற்கு எண்ணற்ற சாட்சிகள் இருக்கின்றன.(68) ஓ பாரதக் குலத்தோனே {தேவவிரதனே}, நீயோ கோபம் தூண்டப்பட்டவனாகவும், எப்போதும் வீரவிளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரனாகவும் இருக்கிறாய். நீ போர்க்களங்களில் வீழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு.(69) அப்படி நடந்தால், இந்தப் பாரதப் பேரரசின் நிலை என்ன ஆகும். அந்நினைவே என்னைத் துயரடையச் செய்கிறது. எனது துயருக்கான காரணத்தை உன்னிடம் இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன்" என்றான்.(70)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும்  நுண்ணறிவு கொண்டவனான தேவவிரதன், மன்னனிடம் அனைத்தையும் கேட்டு, சிறிது நேரம் சிந்தித்தான்.(71) பிறகு, தன் தந்தையின் {சந்தனுவின்} நலனில் அக்கறையுள்ளவரும், தன தந்தையிடம்  அர்ப்பணிப்புள்ளவருமான ஒரு முதிர்ந்த அமைச்சரை அழைத்து, மன்னனின் சோகத்துக்கான காரணத்தைக் கேட்டான்[3].(72) ஓ பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயனே}, இப்படி இளவரசனால் கேட்கப்பட்ட அமைச்சர், காந்தவதிக்காக {சத்தியவதிக்காக} மீனவன் கேட்ட வரத்தைப் பற்றிச் சொன்னார்.(73) பிறகு தேவவிரதன், வயதால் மதிக்கத்தக்க க்ஷத்திரிய தலைவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, நேரடியாக மீனவர் தலைவனிடம் சென்று, தனது மன்னனின் {சந்தனுவின்} சார்பாக அவனது மகளைக் {சத்தியவதியைக்} கேட்டான்.(74)

[3] கும்பகோணம் பதிப்பில், "பிறகு, ராஜாவின் அந்தக் கரணத்தையெல்லாம் பூர்ணமாகத் தெரிந்து கொண்டு சிறந்த ஞானமுள்ள பீஷ்மர் தமது புத்தியினால் ஆராய்ந்தார், ஸந்தானமென்னும் பிரயோஜனத்தோடு கூடிய அந்தத் தந்தையின் சொல்லைக் கேட்டு மறுபடியும் வருத்தத்துடன் தமது பிதாவின் ஸாரதியை வருவித்தார். அவருடைய கட்டளையினால் குருஸ்ரேஷ்டனாகிய சந்தனுவின் ஸாரதி வந்தான். உயர்ந்த புத்தியுள்ள பீஷ்மர் தமது பிதாவின் அந்த ஸாரதியை நோக்கி, "ஸாரதியே! நீ என் பிதாவிற்குத் தேரின் முன்னே நிற்கு சினேகிதனாக இருக்கிறாய். ராஜாவினுடைய விருப்பம் எந்தப் பெண்ணிடம் இருக்கிறது? உனக்குத் தெரியுமா? நான் உன்னைக் கேட்கிறேன். நீ அதைச் சொல்; நான் அதைச் செய்வேன்; மாறாகச் செய்யேன்" என்று சொல்ல, ஸாரதி, "குருஸ்ரேஷ்டரே! ஒரு செம்படவப்பெண் இருக்கிறாள். உமது பிதாவின் விருப்பம் அவளிடம் சென்று இருக்கிறது. ராஜா பெண்ணைக் கேட்டதற்கு அந்தச் செம்படவன், "இவளக்குப் பிறந்த ஆண்பிள்ளை உனக்குப் பின் அரசனாக வேண்டும்" என்ற சொல்லைச் சொன்னான். அப்போது உமது பிதாய அவன் கேட்டதைக் கொடுக்க விரும்பவில்லை. அப்படியில்லாமல் பெண்ணைக் கொடுப்பதிலைலயென்பது அந்தச் செம்படவனுடைய நிச்சயம். இதை உமக்குச் சொன்னேன். மேலே  செய்வதைச் செய்யும்" என்று சொன்னான். பிறகு, அந்தப் புத்திரராகிய பீஷ்மர் தமது பிதா நினைத்ததைத் தெரிந்து கொண்டு, நன்றாக ஆராய்ந்து தந்தையின் உட்கருத்தையுமறிந்து {மோகத்தையும் அறிந்து} யமுனை நோக்கிச் சென்றார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போன்றே முதிந்த அமைச்சர் என்றே இருக்கிறது.

மீனவர் தலைவன் அவனுக்கு {தேவவிரதனுக்கு} மரியாதைகள் செய்து அழைத்து, அந்த இளவரசன் அமர ஆசனம் கொடுத்து,(75) "ஓ பாரதக் குலத்தின் காளையே, நீ ஆயுதம் தாங்கியவர்களின் முதன்மையானவனும், சந்தனுவின் ஒரே மகனுமாவாய். உனது பலம் பெரியது. இருப்பினும் உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது.(76) மணமகளின் தகப்பனாக இந்திரனே இருந்தாலும், அவனும் {இந்திரனும்} இப்படிப்பட்ட மதிப்பான, விரும்பக்கூடிய சம்பந்தத்தை நிராகரிக்க வருத்தப்படுவான்.(77) எந்தப் பெரும் மனிதனின்  வித்தாக சத்தியவதி என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்தக் கன்னிகை பிறந்தாளோ, உண்மையில் அவர் {அந்த உபரிசரவசு} அறத்தில் உனக்கு இணையானவரே ஆவார்.(78) அவர் என்னிடம் உனது தந்தையின் அறங்களைப் பற்றிப் பல முறை பேசியுள்ளார். இந்த மன்னன் ஒருவனே சத்தியவதியின் கரத்தைப் பற்றத் தகுதி வாய்ந்தவன் என்றும் என்னிடம் அவர் {உபரிசரவசு} சொல்லியிருக்கிறார்.(79) சிறந்த பிரம்ம முனிவரான அசிதர் எனது மகள் சத்தியவதியின் கரத்தை மணத்திற்காகக் கேட்ட போதும் நான் மறுத்திருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.(80) இந்த மங்கையைக் குறித்துச் சொல்ல என்னிடம் மேலும் ஒரு வார்த்தைதான் உள்ளது. சக்காளத்தியின் மகன் {கங்கையின் மகன்-தேவவிரதன்} எதிரியாக இருப்பதுதான் இந்தத் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருக்கிறது.(81) ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஒருவன் அசுரனானாலும், கந்தர்வனானாலும் உன்னை எதிரியாக வைத்திருப்பவனுக்குப் பாதுகாப்பில்லை.(82) இது ஒன்றே இந்தத் திருமணத்திற்குத் தடையாக இருக்கிறது. வேறேதும் இல்லை. நீ அருளப்பட்டிருப்பாய். சத்தியவதி குறித்தும், அவளது திருமணம் குறித்தும் நான் சொல்ல வேண்டியவை இவை மட்டுமே" என்றான்.(83)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, தேவ விரதன் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மை செய்ய விரும்பி அங்கிருந்த தலைவர்களின் மத்தியில்,(84) "ஓ உண்மை பேசுபவர்களில் முதன்மையானவரே, நான் ஏற்கப் போகும் உறுதிமொழியைக் கேட்பீராக! இதைப் போன்ற உறுதியை ஏற்கும் துணிவு இதுவரை பிறந்த எம்மனிதரிடமும் இல்லை, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிடத்திலும் இருக்காது. (85) நீர் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இந்தக் கன்னிகையின் மூலமாகப் பிறக்கும் மைந்தனே எங்கள் மன்னனாவான்" என்றான்.(86)

இப்படிச் சொல்லப்பட்ட மீனவர் தலைவன், (தனது மகள் வயிற்றுப் பிள்ளைக்காக) அரசாட்சியில் விருப்பங்கொண்டு, கிட்டத்தட்ட அடைய முடியாத ஒன்றை அடைய எண்ணி,(87) "ஓ அற ஆன்மா கொண்டவனே, நீ அளவிலா மகிமை கொண்ட உனது தந்தை சந்தனுவின் சார்பாக வந்திருக்கிறாய். என் மகளை அளிக்கும் காரியத்தில் என் சார்பாகவும் நீயே முழு அதிகாரம் கொண்டவனாக இருப்பாயாக.(88) ஆனால், ஓ இனிமையானவனே {தேவவிரதனே}, உன்னிடம் சொல்ல வேறொன்றும் இருக்கிறது. நீ வேறு ஓர் உறுதியும் கொடுக்க வேண்டுமே. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, மகளைப் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் நான் கேட்பது போலவே கேட்க வேண்டும்.(89) ஓ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனே, சத்தியவதிக்காகச் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தைக் கொடுக்க நீ தகுதிவாய்ந்தவன்தான்.(90) ஓ பெரும் கரங்களுக்குச் சொந்தக்காரனே, நீ உனது உறுதியை மீறுவாய் என நான் ஐயம் கொள்ளவில்லை. இருப்பினும், உன்னால் பெறப்படும் குழந்தைகள் மீது எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது" என்றான்.(91)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, மீனவர் தலைவனின் சந்தேகங்களுக்கு விடையளித்திருந்தவனும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான அந்தக் கங்கையின் மைந்தன் {தேவவிரதன்}, தனது தந்தைக்கு {சந்தனுவிற்கு} நன்மையைச் செய்ய விருப்பம் கொண்டு,(92) "ஓ மீனவர்த்தலைவனே, ஓ மனிதர்களில் சிறந்தவரே, இங்கே கூடியிருக்கும் மன்னர்களின் முன்னிலையில் நான் ஏற்கும் உறுதியைக் கேட்பீராக.(93) மன்னர்களே, ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன்.(94) ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். மகனற்றவனாகவே நான் இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்" என்றான்."(95)

வைசம்பாணர் தொடர்ந்தார், "கங்கை மைந்தன் {தேவவிரதன்} உதிர்த்த வார்த்தைகளைக் கேட்ட மீனவனின் உடலில் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.  அவன், "எனது மகளைக் கொடுக்கிறேன்" என்றான்.(96) அதன்பேரில், அப்சரஸ்களும், தேவர்களும், முனிவர் குலத்தைச் சேர்ந்தவர்களும் அந்தரத்தில் இருந்து தேவ விரதனின் தலையில் பூ மழை பொழிந்து, "இவன் பீஷ்மன் (பயங்கரமானவன்)" என்றனர்.(97) பீஷ்மன் பிறகு, தனது தந்தைக்குச் சேவை செய்ய அந்த அழகானக் காரிகையிடம் {சத்தியவதியிடம்}, "தாயே, தேரில் ஏறுங்கள், நமது இல்லத்திற்குச் செல்வோம்" என்றான்."(98)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவற்றைச் சொல்லிவிட்டுப் பீஷ்மன், அந்த அழகான மங்கை {சத்தியவதி} தேரில் ஏற உதவினான். அவளுடன் ஹஸ்தினாபுரம் வந்து, சந்தனுவிடம் நடந்தது அத்தனையும் சொன்னான்.(99) அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்தச் செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர்.(100) சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால் பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்" என்றான் {சந்தனு}."(101)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்