Friday, May 08, 2015

"இந்தக் கூந்தலை நினைப்பாயாக!" என்ற திரௌபதி! - உத்யோக பர்வம் பகுதி 82

"Call these tresses to thy mind" said Draupadi! | Udyoga Parva - Section 82 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –11)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வார்த்தைகளைத் துரியோதனன் கேட்க மாட்டான் என்றும்; நாட்டைக் கொடுக்காத துரியோதனனிடம் சமாதானம் பேசுவது தகாது என்றும்; கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் பாவமே என்றும்; கிருஷ்ணனும் பாண்டவர்களும் உயிரோடு இருக்கும்போதே தனக்கு அவமதிப்பு நிகழ்ந்தது என்றும்; அதைச் செய்த துச்சாசனனின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்றும் திரௌபதி சொன்னது; அர்ஜுனனின் வில்திறத்தையும், பீமனின் பலத்தையும் இகழ்ந்து கிருஷ்ணனிடம் திரௌபதி சொன்னது; திரௌபதிக்கு நீதி செய்வதாகக் கிருஷ்ணன் உறுதியளித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறமும் பொருளும் நிறைந்த மன்னரின் {யுதிஷ்டிரரின்} அமைதிநிறைந்த வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் துயரத்தில் இருந்தவளும், நீண்ட கூந்தலுடையவளும், மன்னன் துருபதனின் மகளுமான கிருஷ்ணை {திரௌபதி}, சகாதேவனையும், வலிமைமிக்கத் தேர் வீரனான சாத்யகியையும் புகழ்ந்தபடி, சாத்யகியின் அருகில் அமர்ந்திருந்த மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.


பீமசேனன் சமாதானம் அறிவிப்பதைக் கண்ட அந்தப் புத்திசாலிப் பெண் {திரௌபதி}, துயரம் மேலிட, கண்கள் குளமாக, "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! நீதிமானே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தனது ஆலோசகர்களுடன் கூடிய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்களின் மகிழ்ச்சியை எப்படி ஏமாற்றுகரமாகத் திருடினான் என்பதை நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, தனிப்பட்ட முறையில் மன்னரால் {திருதராஷ்டிரரால்} சஞ்சயனுக்குச் சொல்லப்பட்ட செய்தியை நீ அறிவாய்.


பதிலுக்குச் சஞ்சயனிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நீ கேட்டாய். ஓ! பெரும் பிரகாசம் உடையவனே {கிருஷ்ணா}, "அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் மற்றும் ஐந்தாவதாக ஏதாவது ஒன்று என ஐந்து கிராமங்கள் மட்டும் எங்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளே சொல்லப்பட்டன. ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனுக்கும், அவனது ஆலோசகர்களுக்கும் உன்னால் சொல்லப்பட வேண்டியது என்று முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இதுவே.

ஆனால், ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹ குலத்தவனே, அடக்கமும், அமைதிக்கான ஆவலும் உடைய யுதிஷ்டிரரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி சுயோதனன் {துரியோதனன்} நடக்கமாட்டான். ஓ! கிருஷ்ணா, நாட்டைக் கொடுக்காமல் சமாதானத்தை அடைய துரியோதனன் விரும்பினால், அத்தகு சமாதானத்தைச் செய்து கொள்ள அங்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கோபத்துடன் இருக்கும் திருதராஷ்டிரரின் படையை எதிர்கொள்ளச் சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்கள் இயன்றவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} சமரசக் கலைகளுள் எதற்கும் உடன்படாமல் இருக்கிறார்கள் என்றால், இனியும் அவர்களுக்கு நீ கருணை காட்டுவது முறையாகாது.

ஓ! கிருஷ்ணா, தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், சமரசத்தின் மூலமாகவோ, கொடைகளின் மூலமாகவோ சமாதானத்துக்கு உடன்படாத தன் எதிரிகளைக் கடுமையாக நடத்த வேண்டும். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட அச்யுதா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் உதவியைப் பெற்ற நீ, கடுமையான தண்டனைக்குத் தகுந்த அவர்களை விரைவாகத் தண்டிக்க வேண்டும். உண்மையில், அது பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நன்மை செய்ததாகவே ஆகும். உனக்கும் அது புகழைக் கொடுக்கும். ஓ! கிருஷ்ணா, சாதிக்கப்பட்டால், அதுவே க்ஷத்திரிய குலம் முழுமைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும்.

பேராசை கொண்டிருப்பவன் க்ஷத்திரியனாக இருப்பினும், பிராமணனைத் தவிர வேறு எந்த வகையைச் சார்ந்தவனாக இருப்பினும், பாவம் நிறைந்த அவன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளில் உண்மையாக இருக்கும் ஒருவனால் நிச்சயம் கொல்லத்தக்கவனே ஆவான். ஓ! ஐயா, பிற வகையைச் சேர்ந்த அனைவருக்கும் பிராமணர்களே ஆசான்களாக இருப்பதாலும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் முதலாக இருப்பதாலும் பிராமணர்கள் இதில் தவிர்க்கப்படலாம்.

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சாத்திரங்கள் அறிந்த நபர்கள், கொல்லத்தகாதவர்களைக் கொல்வது பாவம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எனவே, கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் அதற்கு நிகரான பாவமே.

ஆகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் படைகளோடு சேர்ந்து, உன்னைப் பாவம் அண்டாதவாறு செயல்படுவாயாக. உன் மீதுள்ள அதீத நம்பிக்கையாலேயே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சொன்னதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என்னைப் போன்ற பெண் இந்தப் பூமியில் வேறு எவள் இருக்கிறாள்? வேள்விப் பீடத்தில் உதித்தவள் நான், மன்னன் துருபதரின் மகள் நான். ஓ! கிருஷ்ணா, உனது அன்பிற்குரிய நண்பனான திருஷ்டத்யும்னனின் தங்கை நான். திருமணத்தின் மூலமாக அஜமீட குலத்துப் பெண்ணாகவும், ஒப்பற்ற பாண்டுவின் மருமகளாகவும் ஆனவள் நான். காந்தியில் ஐந்து இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டு மகன்களின் ராணி நான். இந்த ஐந்து வீரர்களால் {பாண்டவர்களால்}, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஐந்து மகன்களைப் பெற்றேன். அபிமன்யுவைப் போன்றே அவர்களும் உனக்குத் தார்மீக அடிப்படையில் கட்டுண்டவர்களே.

இப்படிப்பபட்ட நான், ஓ! கிருஷ்ணா, நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தலைமுடியைப் பற்றிச் சபைக்கு இழுத்து வரப்பட்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} கண் முன்பாகவே அவமதிக்கப்பட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டு மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் உயிரோடு இருக்கும்போதே, அந்த இழிந்தவர்களால் சபையின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, அடிமையைப் போல நடத்தப்பட்டேன். இதைக் கண்டும் பாண்டவர்கள் அனைவரும் கோபப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போதே நான் உன்னை என் இதயத்தால் {மனதால்} அழைத்தேன்.

ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, "என்னைக் காப்பாற்று, ஓ! என்னைக் காப்பாற்று" என்று சொல்லி {உன்னை} அழைத்தேன். பிறகு ஒப்பற்ற மன்னரும், எனது மாமனாருமான திருதராஷ்டிரர், என்னிடம், "ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, ஏதாவது வரம் கேள். நீ எனது கையால் வரங்களையும், ஏன் மரியாதையையும் கூடப் பெறத் தகுந்தவளாவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட நான், "தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் பாண்டவர்கள் விடுதலை பெற்றவர்களாகட்டும்" என்று கேட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அதனால் பாண்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காட்டுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது இந்தச் சோகங்கள் அனைத்தையும் நீ அறிவாய். ஓ! தாமரை போன்ற கண்களை உடையவனே {கிருஷ்ணா}, இந்தத் துயரில் இருந்து எனது கணவர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய என்னைக் காப்பாயாக. ஓ! கிருஷ்ணா, தார்மீக அடிப்படையில் நான் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரர் ஆகிய இருவருக்கும் மருமகளாவேன். அப்படியிருந்தும், நான் வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டேன். ஓ! கிருஷ்ணா, அந்தத் துரியோதனன் இந்தக் கணம் வரை உயிரோடு இருக்கிறான், பார்த்தரின் {அர்ஜுனரின்} விற்திறத்திற்கு ஐயோ, பீமசேனரின் பலத்திற்கு ஐயோ. உனது கைகளாலான எந்த உதவிக்காவது நான் தகுந்தவளென்றால், உனக்கு என் மீது ஏதாவது கருணை இருந்தால், ஓ! கிருஷ்ணா, உனது கோபம் திருதராஷ்டிரர் மகன்கள் மீது திரும்பட்டும்" என்றாள் {திரௌபதி}

திரௌபதி துகிலுரித்தல் சம்பவம் குறித்து இங்கே ஏதும் குறிப்பில்லை.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்னதும், தாமரை இதழ்களைப் போன்ற பெரியதும் கருமையானதுமான கண்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீரால் குளித்தாள். சுருள் முனை கொண்டதும், அடர்நீல நிறம் கொண்டதும், அனைத்து நறுமணப் பொருட்களால் நறுமணமூட்டப்பட்டதும், அனைத்து மங்கலக்குறிகளைக் கொண்டதும், பின்னலாகக் கட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாம்பு போலப் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்ததுமான தனது கூந்தலைத் தன் இடது கையில் பற்றிக் கொண்டு, பெண் யானையைப் போல நடந்து, தாமரைக் கண் கிருஷ்ணனை அணுகி, "எதிரியுடன் சமாதானம் கொள்ள ஆவலாய் இருக்கும் தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ எந்தச் செயலைச் செய்தாலும், துச்சாசனனின் முரட்டுக் கைகளால் பற்றப்பட்ட இந்தக் கூந்தலை நினைத்துச் செயல்படுவாயாக!

ஓ! கிருஷ்ணா, பீமரும், அர்ஜுனரும் சமாதானத்திற்கு ஏங்கும் அளவிற்குத் தாழ்ந்தவர்கள் ஆனார்கள் என்றால், போர்க்குணமிக்கத் தனது மகன்களுடன் வயது முதிர்ந்த எனது தந்தை {துருபதர்} எனக்காகப் போர்க்களத்தில் பழி தீர்ப்பார். ஓ! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பெரும் சக்தி கொண்ட எனது ஐந்து மகன்களும் அபிமன்யுவைத் தங்கள் தலைமையில் கொண்டு, கௌரவர்களுடன் போரிடுவார்கள். துச்சாசனின் கரிய கைகள் அவனது உடலில் இருந்து அறுக்கப்பட்டு, அணுக்களாக நொறுங்காமல் என்னுடைய இதயத்துக்கு என்ன அமைதி கிடைக்கும்?

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற எனது கோபத்தை என் இதயத்தில் மறைத்துக் கொண்டு, நல்ல காலங்களை எதிர்பார்த்து, நீண்ட பதிமூன்று {13} வருடங்களை நான் கழித்திருக்கிறேன். இப்போதோ பீமரின் சொற்களெனும் கணைகளால் துளைக்கப்பட்ட எனது இதயம் உடையும் நிலையில் இருக்கிறது. ஏனெனில், பீமர் இப்போது அறநெறியின் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார்" என்றாள் {திரௌபதி}. கண்ணீரால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன நீண்ட கண்களையுடைய கிருஷ்ணை {திரௌபதி}, அதிரவைக்கும் விம்மல்களோடும், கண்ணத்தில் உருண்டோடும் கண்ணீரோடும் உரக்க அழத்தொடங்கினாள். திரண்டு உருண்ட இடையைக் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, நெருப்பு நீர் போலச் சூடாகச் சிந்திய கண்ணீரால் தனது நெருக்கமான ஆழமான மார்பகத்தை நனைக்கத் தொடங்கினாள்.

வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் தரும் வார்த்தைகளில் பேசினான். "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பாரதக் குலத்தின் மங்கையர், நீ அழுவதைப் போலவே அழுவதை, நீ விரைவில் காண்பாய். ஓ! மருட்சியுடையவளே {திரௌபதி}, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் உன்னைப் போலவே அழுவார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, நீ யாரிடம் கோபம் கொண்டிருக்கிறாயோ, அவர்களின் உறவினர்களும் வீரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் {என்று நினைத்துக் கொள்}. யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரிலும், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும், விதிக்கு ஏற்புடைய வகையில், படைப்பாளனால் விதிக்கப்பட்ட அனைத்தையும் நான் சாதிப்பேன்.

அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது. திருதராஷ்டிரரின் மகன்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையெனில், நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகும்படி, கீழே பூமியில் அவர்கள் விழுவது நிச்சயம். இமய மலைகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம், பூமியானவள் தன்னை நூறு துண்டுகளாகப் பிளந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் கூடிய வானம் விழுந்து போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பொய்க்காது. உனது கண்ணீரை நிறுத்து. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, தங்கள் எதிரிகளைக் கொன்று, செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டவர்களாக நீ உனது கணவர்களை விரைவில் காண்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்