Sunday, September 20, 2015

தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 030

Religion by Self-Restraint - Dhyan yoga! | Bhishma-Parva-Section-030 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 18) {பகவத் கீதை - பகுதி 6}

பதிவின் சுருக்கம் : அர்ப்பணிப்பைக் {யோகத்தினைக்} குறித்துக் கிருஷ்ணன் விளக்குவது; மனத்தின் சிரமங்கள் மற்றும் அந்த மனத்தை அடக்கி ஆள்வதற்குரிய நுட்பங்களை ஈட்டும் முறை ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணன் விளக்குவது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "செயலின் பலனைக் கருதாமல், செய்ய வேண்டிய செயல்களைச் செய்பவன் துறவியும் {சந்தியாசியும்}, அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} ஆவான். அவன் (வேள்வி) நெருப்பை நிராகரிப்பவனோ, செயலைத் தவிர்ப்பவனோ ஆக மாட்டான். 6:1

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, துறவு {சந்நியாசம்} என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு {யோகம்} என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக {யோகியாக} முடியாது. 6:2


அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது;  அவன் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக {அவனுக்குக்} கூறப்படுகிறது. 6:3

புலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். 6:4

ஒருவன் தன்னை {ஆத்மாவை} தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை {ஆத்மாவை} தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். 6:5

தன்னை {ஆத்மாவை} தானே அடக்கியவன் {வென்றவன்} தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ {வெல்லாதவனோ}, தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். 6:6

தன்னைத் தானே அடக்கி {வென்று}, மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) {பரமாத்மாவிலேயே} நிலைத்து நிற்கும். 6:7

அறிவு மற்றும் அனுபவத்தால் {நடைமுறை அறிவால்} எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று {பாசம்} இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ {வென்றிருக்கிறானோ}, எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே {யோகியே} அர்ப்பணிப்பு கொண்டவனாக {யோகத்தில் நின்றவனாக} கூறப்படுகிறான். 6:8

நலன்விரும்பிகள் {அன்பர்கள்}, நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் {ஏதிலர்}, இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் {நடுவர்}, (தனக்குத்) தொடர்புடையவர்கள் {சுற்றத்தார்}, நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். 6:9

அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் {மறைவிடத்தில்} தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் {ஆசைகளும்} இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். 6:10

யோகியின் நிலை
அதிக உயரமோ, அதிகத் தாழ்வோ இல்லாத ஒரு தூய இடத்தின் மேல் துணியையோ, மான் தோலையோ, குசப் புற்களையோ {தர்ப்பைப் புல்லையோ} பரப்பி இருக்கையை அமைத்துக் கொண்டு, அந்த இருக்கையில் அமர்ந்து, ஒரு பொருளில் {பரம்பொருளில்} மனத்தை நிலைக்க வைத்து, இதயம் {மனம்} மற்றும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது தூய்மைக்காக அவன் {யோகி} தியானம் பயில வேண்டும். 6:11-12

உடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். 6:13-14

இப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். 6:15

ஓ! அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது {அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை}. உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை {துன்பத்திற்கே துன்பம்} உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் {யோகம் சித்திக்கும்}. 6:16-17

முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் {ஆத்மாவில்} எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் [1] அவன், அர்ப்பணிப்பாளன் {யோகி} என்று அழைக்கப்படுகிறான் 6:18

[1] இங்கே "புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு தன்னில் நிலைத்திருத்தல்" என்று சங்கரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.

காற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் {அசைவின்றி} இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் {யோகி} என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். 6:19

நுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் {ஆத்மாவை} தன்னில் {ஆத்மாவில்} கண்டு, தன்னில் {ஆத்மாவில்} மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப {பேரின்ப} நிலையை உணர்ந்த ஒருவன், உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் {சலிப்படையாமல்} அதிலேயே நிலைத்திருந்து, துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு {யோகம்} என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே {யோகமே} விடாமுயற்சியுடனும் [2], நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். 6:20-23

[2] "சங்கரரால் "நிஸ்சயேந Nischayena" என்பது "விடாமுயற்சி" அல்லது "உறுதியான" என்பதற்கு ஈடாக விளக்கப்படுகிறது. ஸ்ரீதரரோ அதை, "கல்வி மூலம் பெறப்பட்ட அறிவின் உறுதியுணர்வைக் கொண்டு" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.

அர்ப்பணிப்புள்ள ஒருவனுக்குக் கிட்டும் உதவி

பட விளக்கம்: ஒரு சிட்டுக்குருவி தனது முட்டைகளை மீட்க கடலையே குடிக்க முற்படும் இந்தக் காட்சியில், திருமாலின் கட்டளையின் பேரில் அந்தச் சிட்டுக்குருவிக்கு உதவியாக, பின்னணியில் கருடன் நின்று கொண்டு, "சிட்டுக்குருவியின் முட்டைகளைக் கொடுத்துவிடு" என்று கடலை மிரட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. நன்றி; www.asitis.com
கோட்பாடுகளால் {சங்கல்பங்களில்} பிறந்த ஆசைகள் அனைத்தையும் விதிவிலக்கில்லாமல் கைவிட்டு {துறந்து}, அனைத்துப் புறங்களிலும் உள்ள கூட்டுப்புலன்களை மனத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி, மெதுவாக முன்னேறி, பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட (தனது) அறிவினால் (அறிவின் துணை கொண்டு) [3] அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் {ஆத்மாவில்} ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். 6:24-25

[3] "சங்கரர் மற்றும் பிறரால் "த்ருதி க்ருஹீதயா புத்த்யா Mriti-grahitaya Buddhya" என்பது "பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டு" என்று விளக்கப்படுகிறது. இதில் K.T.டெலங், "துணிவுடன் கூடிய உறுதியான தீர்மானம்" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.

எங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே {ஆத்மாவிலேயே} ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். 6:26

உண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு {யோகிக்கு} (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. 6:27

இப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். 6:28

தன்னை {ஆத்மாவை} நுண்மத்தில் {யோகத்தில் கலப்பதில்} அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். 6:29

என்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை {அழிவதில்லை}, எனக்கும் அவன் தொலைவதில்லை {அழிவதில்லை} [4]. 6:30

[4] "அதாவது, நான் அவனுக்கு எப்போதும் தெரிகிறேன். அதே போல, அவனும் எனது பார்வைக்குள்ளேயே இருக்கிறான். நான் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பேன் என்பது இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.

அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான் [5]. 6:31

[5] நானும், அனைத்துயிரினங்களுக்குள் இருக்கும் பிரம்மமும் ஒன்றென அறிந்து, என்னை வழிபடும் யோகி, அனைத்து சந்தர்ப்பங்களிலும், எப்போதும் என்னுடனே நீடித்து இருக்கிறான் என்றும் இதற்குப் பொருள் சொல்லப்படுகிறது.

ஓ! அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் {பரமயோகியாகக்} கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 6:32

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், {எனது} மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை [6]. 6:33

[6] இயற்கையாகவே மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதால், அதன் நிலையான இருப்பை அடைவது எப்படி? {அமைதி கொள்ளச் செய்வது எப்படி?} என்று இதை விளக்குகிறார் கங்குலி.

அடங்க மறுக்கும் மனத்தின் உருவகம்
ஓ! கிருஷ்ணா, மனம் அமைதியற்றதாக, மூர்க்கத்தனமானதாக, மாறுபாடுடையதாக {விபரீதமானதாக}, பிடிவாதமானதாக இருக்கிறது. அதை {மனத்தைக்} கட்டுப்படுத்துவது என்பதைக் காற்றைக் கட்டுப்படுத்துவது போன்று மிகக் கடுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்" என்றான் {அர்ஜுனன்}. 6:34

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, 'பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்'. 6:35

கட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை {யோகத்தை} அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது" என்றான் {கிருஷ்ணன்}. 6:36

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது? {அவன் என்ன கதியை அடைகிறான்?}. 6:37

இரண்டில் இருந்தும் [7] விழுந்த அவன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா? இல்லையா? 6:38

[7] செயலின் மூலம் அடையப்படும் சொர்க்கத்தையும், அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் பிரம்மத்துடன் கலக்கும் இரண்டு நிலைகள் அவை என்கிறார் கங்குலி.

ஓ! கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல் [8], இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை" என்றான் {அர்ஜுனன்} 6:39

[8] "எதையும் விட்டுவிடாமல் முழுமையாக சொல்வாயாக என்பதே இங்கு பொருள்" என்கிறார் கங்குலி.

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜூனா}, நல்லதை {நற்செயல்களைச்} செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு {நல்லவனுக்கு} இங்கேயோ {இவ்வுலகிலோ}, இதன் பிறகோ {அடுத்த உலகிலோ} அழிவில்லை. 6:40

நற்செயல்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை {உலகங்களை} அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் {யோகியரின்} குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். 6:41-42

{அப்படி அடையும்} அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ! குருவின் வழித்தோன்றலே {அர்ஜுனா}, விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை {முழுமையான வெற்றியை} நோக்கி மீண்டும் உழைக்கிறான். 6:43

விருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய {முற்பிறவியில் செய்த} பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து கேட்பவனே {விசாரணை செய்பவனே} கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) [9] மேல் உயர்ந்து விடுகிறான். 6:44

[9] "தெய்வீக வார்த்தை என்பது வேதமாகும். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து வெறுமனே கேட்பதன் {விசாரிப்பதன்} மூலமாக மட்டுமேகூட, ஒருவனை, வேதச் சடங்குகளுக்கு இணங்காமல் அதைக் கடந்து செல்லச் செய்யும் அர்ப்பணிப்பின் {யோகத்தின்} திறம் மிகப் பெரியதாகும்" என்று இதை விளக்குகிறார் கங்குலி.

அர்ப்பணிப்பாளன் ஒருவனின்
தியானத்திற்குப் பொருத்தமான
பொருளான சியாமசுந்தரன்
பெரும் முயற்சிகளால் உழைக்கும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, பல பிறவிகளுக்கு அப்பால் முழுமையை {பரகதியை} அடைந்து, அதன் பிறகு உயர்ந்த இலக்கை சென்றடைகிறான். 6:45

தவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் {யோகி} மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} உயர்ந்தவனாவான். எனவே, ஓ! அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக {யோகியாவாயாக}. 6:46

அர்ப்பணிப்பாளர்கள் {யோகியர்} அனைவருக்கும் மத்தியில், தனது {ஆத்மாவின்} அகத்தில் {அந்தராத்மாவில்} என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் {மேலான யோகி} என்று கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 4:47


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்