Thursday, June 16, 2016

சிவனைத் துதித்த கிருஷ்ணனும்! அர்ஜுனனும்!! - துரோண பர்வம் பகுதி – 080

Arjuna and Krishna adored Siva! | Drona-Parva-Section-080 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் கனவில் கிருஷ்ணன் தோன்றியது; சிவனை நினைக்கச் சொன்ன கிருஷ்ணன் அர்ஜுனனைக் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றது; சிவனைப் போற்றிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்து, (வியாசரால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட) மந்திரங்களை நினைவுகூர்ந்தான். விரைவில் அவன் {அர்ஜுனன்} உறக்கத்தின் கரங்களில் அமைதியடைந்தான் [1]. துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், சிந்தனையில் மூழ்கியிருந்தவனுமான அந்தக் குரங்குக் கொடி வீரனின் {அர்ஜுனனின்) கனவில், கருடனைத் தன் கொடியாகக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} தோன்றினான்.


[1] வேறொரு பதிப்பில் மதிமயக்கமடைந்தான் என்று இருக்கிறது.

அற ஆன்மா கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் விளைவால் எப்போதும் எழுந்து நின்று, ஒரு சில எட்டுகள் முன்னேறிச் சென்று கிருஷ்ணனை வரவேற்பதை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்த்ததில்லை. எனவே, இப்போது அவன் {அர்ஜுனன்}, (தன் கனவிலும்) எழுந்து நின்று கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஓர் இருக்கையைக் கொடுத்தான். எனினும் அவன் {அர்ஜுனன்}, அந்நேரத்தில் இருக்கையில் தானும் அமர்ந்து கொள்ளத் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. வலிமையும் சக்தியும் கொண்ட கிருஷ்ணன், பார்த்தனின் {அர்ஜுனனின்} தீர்மானத்தை அறிந்து, இருக்கையில் அமர்ந்து, பின்னவன் {அர்ஜுனன்} நின்று கொண்டிருக்கையிலேயே அந்தக் குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துயரில் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே.

காலம் வெல்லப்பட முடியாததாகும். காலம், அனைத்து உயிரினங்களையும் தவிர்க்க முடியாத வழியில் பலவந்தமாகத் தள்ளுகிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, {அப்படியிருக்கையில்}, இந்த உனது துயரம் எதற்காக? ஓ! கற்றறிந்தவர்களுள் முதன்மையானவனே {அர்ஜுனா}, துயரில் ஈடுபடக்கூடாது! செயல்பாட்டுக்குத் துயரம் ஒரு தடையாகும். சாதிக்கப்பட வேண்டிய செயலைச் சாதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஒருவனின் முயற்சிகள் அனைத்தையும் துறக்கச்செய்யும் துயரமானது உண்மையில் அவனது எதிரியாகும். துயரில் ஈடுபடும் ஒருவன், தன் எதிரிகளை மகிழ்வித்து, தன் நண்பர்களைக் கவலைகொள்ளச் செய்து, தன்னையும் பலவீனமாக்கிக் கொள்கிறான். எனவே, துயருறாமல் இருப்பதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}.

அப்போது, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எவராலும் வெல்லப்படாதவனும், பெரும் கல்வியைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, இந்தப் பயங்கர வார்த்தைகளைச் சொன்னான்: “ஜெயத்ரதன் படுகொலையைக் குறித்து நான் செய்த உறுதிமொழி பயங்கரமானது. ஓ கேசவா {கிருஷ்ணா}, நாளையே என் மகனைக் கொன்ற அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனை} நான் கொல்வேன் என்பதே எனது உறுதிமொழியாகும். என் உறுதிமொழியில் என்னைச் சலிக்கச் செய்வதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனைத் தார்தராஷ்டிரர்கள் தங்கள் பின்னால் நிறுத்திக் கொள்வார்கள்.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளில், படுகொலைக்குப் பிறகு எஞ்சியவர்களைத் தன் எண்ணிக்கையாகக் கொண்டுள்ள அவர்களது படை வீழ்த்துவதற்குக் கடினமானதே ஆகும். பெரும் தேர்வீரர்கள் அனைவராலும் சூழப்பட்ட சிந்துக்களின் தீய ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நாம் எவ்வாறு காண்போம்? ஓ! கேசவா, என் உறுதிமொழி நிறைவேறப் போவதில்லை. உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தோற்ற என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு உயிர்வாழ முடியும்? ஓ! வீரா {கிருஷ்ணா}, இது (இந்த என் உறுதி மொழி) சாதிக்கப்பட முடியாதது என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவே (என்) பெரும் துயரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. (வருடத்தின் இந்தப் பருவக் காலத்தில்) சூரியன் விரைவாக மறைகிறான் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

பறவை {கருடக்} கொடி கொண்ட கிருஷ்ணன், பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} துயரின் காரணத்தைக் கேட்டு, நீரைத் தொட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} படுகொலையைத் தீர்மானித்துப் பாண்டுவின் மகனுடைய {அர்ஜுனனுடைய} நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான். அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும். அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} மனத்தில் அந்தத் தேவனைச் சிந்தித்து, அவனை {சிவனை} நினைவுகூர்வாயாக. நீ அவனது பக்தனாவாய். அவனது {சிவனின்} அருளால் நீ அந்த மகிமையான உடைமையை {பாசுபதத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீரைத் தொட்டுக் குவிந்த மனத்தோடு பூமியில் அமர்ந்து, பவ தேவனை {சிவனை} நினைத்தான். அப்படி அவன் குவிந்த மனத்துடன் அமர்ந்ததும், மங்கலக் குறியீடுகளைக் கொண்ட பிரம்மம் என்று அழைக்கப்படும் காலத்தில் {பிரம்மமுகூர்த்தத்தில்}, அர்ஜுனன், தானும் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} வானத்தில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மனோவேகத்தைக் கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} தானும் சேர்ந்து புனிதமான இமயமலையின் அடிவாரத்தையும், பல பிரகாசமான ரத்தினங்கள் நிறைந்ததும், சித்தர்கள் மற்றும் சாரணர்களால் அடிக்கடி அடையப்பட்டதுமான மணிமான் மலையையும் அடைந்ததாகத் தெரிந்தது. தலைவன் கேசவன் அவனது {அர்ஜுனனது} இடது கையைப் பற்றியிருந்ததாகவும் [2] தெரிந்தது. (அந்த இடத்தை அடைகையில்) பல அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.

[2] ஆனால், மேலுள்ள படத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருக்கிறான். வேறொரு பதிப்பில், "சர்வவியாபியான கேசவரால் வலக்கையில் பிடிக்கப்பட்டு அந்தப் பார்த்தன் அவரோடு வாயுவேகம் போன்ற வேகத்துடைய கதியுடையவனாக ஆகாயத்தை அடைந்தான்" என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருந்ததாகவே இருக்கிறது.

பிறகு, அற ஆன்மா கொண்ட அர்ஜுனனுக்குத் தான் வடக்கின் வெண்மலையை அடைந்ததாகத் தெரிந்தது. பிறகு அவன் {அர்ஜுனன்}, குபேரனின் மகிழ்ச்சியான நந்தவனங்களில் {சைத்ரரதத்தில்} தாமரைகள் நிறந்த அழகிய தடாகத்தைக் கண்டான். மேலும் அவன் நதிகளில் முதன்மையான கங்கை முழுமையான நீருடன் செல்வதையும் கண்டான். பிறகு அவன் {அர்ஜுனன்} மந்தர மலைகளின் பகுதிகளை அடைந்தான். அந்தப் பகுதிகள் எப்போதும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்களால் நிறைந்திருந்தது. அவற்றில் ஸ்படிகக் கற்கள் எங்கும் விரவிக் கிடந்தன. அவற்றில் சிங்கங்களும், புலிகளும் வசித்தன, பல்வேறு வகைகளிலான விலங்குகளும் நிறைந்திருந்தன. அவை, மகிழ்ச்சிமிக்கப் பறவைகளின் இனிய சுரங்களை எதிரொலித்தபடி முனிவர்களின் அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கின்னரர்களின் பாடல்களும் அங்கே எதிரொலித்தன. தங்க மற்றும் வெள்ளி முகடுகளால் அருளப்பட்ட அவை, பல்வேறு மூலிகை செடிகளாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. மந்தர மரங்கள் பல அபரிமிதமான மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

பிறகு அர்ஜுனன், மைக்குவியல்களைப் போலத் தெரியும், காலம் என்றழைக்கப்படும் மலைகளை {காலபர்வதத்தை} அடைந்தான். பிறகு அவன் பிரம்மதுங்கம் என்றழைக்கப்படும் கொடுமுடியையும், பிறகு பல நதிகளையும், வசிப்போரற்ற பல மாகாணங்களையும் அடைந்தான். சதசிருங்கத்தை அடைந்த அவன், சர்யாதி என்ற பெயரில் அறியப்படும் காடுகளையும் {சர்யாதி வனத்தையும்} அடைந்தான். பிறகு குதிரைத் தலை {அஸ்வசிரஸ்} என்று அறியப்படும் ஒரு புனிதமான இடத்தையும், பிறகு அதர்வணம் என்ற பகுதியையும் அவன் கண்டான். விருதம்சம் என்றழைக்கப்படும் மலைகளின் இளவரசனையும், அப்சரசுகளால் நிறைந்ததும், கின்னரர்களின் இருப்பால் அருளப்பட்டதுமான பெரும் மந்தரத்தையும் {மகாமந்தரத்தையும்} அவன் கண்டான். அந்த மலையில் கிருஷ்ணனுடன் உலவிய பார்த்தன், சிறந்த நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்கத் தாது நிரம்பியதும், சந்திரக் கதிர்களின் காந்தியைக் கொண்டதும், பல பெருநகரங்களையும், நகரங்களையும் கொண்டதுமான பூமியின் ஒரு பகுதியைக் கண்டான். பல அற்புத வடிவங்களையும் பல செல்வச்சுரங்கங்களையும் கொண்ட பல கடல்களையும் அவன் கண்டான். வானம், ஆகாயம் மற்றும் பூமியில் இப்படிச் சென்று கொண்டிருந்த அவன் விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தான். கிருஷ்ணனின் துணையுடன் உலவிய அவன் (வில்லில் இருந்து) ஏவப்பட்ட கணையைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான். விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது நெருப்புக்கு இணையான காந்தியைக் கொண்ட சுடர் மிகும் மலையொன்றை {கைலாசத்தைக்} கண்டான்.

அந்த மலையை அடைந்த அவன் {அர்ஜுனன்}, அதன் உச்சியில், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்டவனும், தவத்துறவுகளில் {தபோநிஷ்டையில்} எப்போதும் ஈடுபடுபவனும், ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல இருப்பவனும், தன்னொளியாலேயே சுடர்விடுபவனுமான அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனைக்} கண்டான். கையில் திரிசூலமும், தலையில் சடா முடியும், வெண்பனியின் நிறமும் கொண்ட அவன் {சிவன்}, மரப்பட்டை மற்றும் தோலாலான ஆடையை அணிந்திருந்தான். பெரும் சக்தியைக் கொண்ட அவனது உடல் ஆயிரம் கண்களுடன் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது. அவன் {சிவன்} (தன்னைச் சுற்றி) பல வடிவங்களிலான உயிரினங்களால் சூழப்பட்டுப் பார்வதியுடன் அமர்ந்திருந்தான். அவனுடன் இருப்போர் பாடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும், சிரிப்பதிலும், ஆடுவதிலும், அசைவதிலும், தங்கள் கைகளை நீட்டுவதிலும், உரத்த முழக்கங்களைச் செய்வதிலும் ஈடபட்டிருந்தனர். நறுமணச் சுகந்தங்களால் அந்த இடம் மணமூட்டப்பட்டிருந்தது. பிரம்மத்தை வழிபடும் {பிரம்மவாதிகளான தெய்வீக} முனிவர்கள், அனைத்து உயிர்களைக் காப்பவனும், (பினாகை என்றழைக்கப்படும் பெரும்) வில்லைக் கொண்டவனுமான அந்தத் தேவனை மங்கா மகிமை கொண்ட அற்புதப் பாடல்களால் துதித்தனர்.

அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து அவனைக் {சிவனைக்} கண்டு, தன் தலையால் பூமியைத் தொட்டு, வேதங்களின் அழியாச் சொற்களை உரைத்தான் [3]. அண்டத்தின் மூல முதல்வனும், சுயம்புவும், மங்காப்புகழ் கொண்டவனும், உயர்ந்தத் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனைக்} கிருஷ்ணன், தன் பேச்சாலும், மனத்தாலும், அறிவாலும், செயல்களாலும் துதித்தான். மனத்தின் உயர்ந்த காரணனும், வெளியும், காற்றும், (ஆகாயத்திலுள்ள) ஒளிக்கோள்கள் அனைத்தின் காரணனும், மழையை உண்டாக்குபவனும், உயர்ந்தவனும், பூமியின் மூலப் பொருளும், தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் ஆகியோரின் துதிக்குத் தகுந்தவனும், யோகியரால் காணப்படும் உயர்ந்த பிரம்மமும், சாத்திரங்கள் அறிந்தோரின் புகலிடமும், உயிரினங்களில் அசைவன, அசையாத ஆகியவை அனைத்தையும் படைத்தவனும், அவர்களை அழிப்பவனும், யுக முடிவில் கோபத்துடன் அனைத்தையும் அழிப்பவனும், உயர்ந்த ஆன்மாவும், சக்ரனாகவும், சூரியனாகவும் இருப்பவனும், குணங்கள் அனைத்தின் மூலமும் ஆன அவனைக் கிருஷ்ணன் துதித்தான்.

[3] வேறொரு பதிப்பில், “தர்மாத்மாவான வாசுதேவரோ பாத்தனோடு கூட அவரைப் பார்த்து, சாஸ்வதமான வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிரசினால் வணங்கினார்.

நுட்பமானது, ஆன்மிகமானது என்று அழைக்கப்படுவதை {முக்தியை} [4] அடைய விரும்பும் ஞானியரால் காணப்படுபவனும், அனைத்துக் காரணங்களுக்கு ஆன்மாவான சுயம்புவான அந்தப் பவனின் {சிவனின்} பாதுகாப்பைக் கிருஷ்ணன் வேண்டினான். அந்தத் தேவனே {சிவனே} அனைத்து உயிர்களின் மூலம் என்றும், கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்திற்குக் காரணம் என்றும் அறிந்த அர்ஜுனன் அவனை மீண்டும் மீண்டும் துதித்தான்.

[4] வேறொரு பதிப்பில் இவ்வரி “சூக்ஷ்மமான அத்யாத்மஸ்தானத்தை விரும்பும் ஞானிகள் எவரைச் சரணமடைகிறார்களோ, பிறப்பில்லாதவரும், காரணஸ்வரூபியுமான அந்தச் சங்கரரை அவ்விருவரும் சரணமடைந்தனர்” என்று இருக்கிறது.

நரனும், நாராயணனும் வந்திருப்பதைக் கண்ட பவன் {சிவன்} உற்சாக ஆன்மாவுடன் {மகிழ்ச்சியுடன்} புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம், “மனிதரில் முதன்மையானோரே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் பயணக் களைப்பு நீங்கி எழுவீராக. ஓ வீரர்களே, உங்கள் இதய விருப்பம் என்ன? அதை விரைவாகச் சொல்லுங்கள். எக்காரியம் உங்களை இங்கே அழைத்து வந்தது? அதை அடையும் நான் உங்களுக்கு எது நன்மையோ அதைச் செய்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் அருள்வேன்” என்றான் {சிவன்}.

பிறகு கூப்பிய கரங்களுடன், களங்கமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய பெரும் விவேகிகள் இருவரும் அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனை} ஒரு சிறந்த பாடலால் நிறைவடையச் செய்யத் தொடங்கினர். கிருஷ்ணனும், அர்ஜுனனும், “பவனை {உலகங்கள் அனைத்தின் தலைவனை}, சர்வனை {உயிரினங்களைக் கொல்பவனை}, ருத்ரனை {அழச் செய்பவனை}, வரமளிக்கும் தேவனை நாங்கள் வணங்குகிறோம். உயிருடன் கூடிய உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனை {பசுபதியை}, எப்போதும் கடுமையாக இருக்கும் தேவனை, கபார்தின் {கபார்தி – சடை கொண்டவன்} என்று அழக்கப்படுபவனை நாங்கள் வணங்குகிறோம். மகாதேவனை {தேவர்களுள் சிறந்தவனை}, பீமனை {பயங்கரமானவனை}, முக்கண்ணனை, அமைதியும் சமாதமுமானவனை நாங்கள் வணங்குகிறோம். (தக்ஷனின்) வேள்வியை அழித்த ஈசானனை நாங்கள் வணங்குகிறோம்.

அந்தகனை {அந்தகாசுரனை} அழித்தவனுக்கு, குமரனின் {முருகனின்} தந்தைக்கு, நீலகண்டனுக்கு, படைப்பாளனுக்கு எங்கள் வணக்கங்கள். பினாகைதாரிக்கு, தெளிந்த நெய்யினாலான காணிக்கையை {ஹவிஸைப்} பெறத் தகுந்தவனுக்கு, உண்மையானவனுக்கு, அனைத்திலும் இருப்பவனுக்கு வணக்கம். வெல்லப்படாதவனை, எப்போதும் நீலக் குழல்களைக் கொண்டவனை, திரிசூலம் தரித்தவனை, தெய்வீகப் பார்வை கொண்டவனை, அனைவரையும் பாதுகாக்கும் ஹோத்ரியை, முக்கண்ணனை, நோயாக இருப்பவனை [5], உயிர்வித்தை நெருப்பில் விட்டவனை, நினைத்துப் பார்க்க முடியாதவனை, அம்பிகையின் தலைவனை, தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனை, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்டவனை, தைரியமானவனை, சடாமுடி தரித்தவனை, பிரம்மச்சாரியை, நீரில் தவம் செய்து நிற்பவனை, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனை, வெல்லப்பட முடியாதவனை, அண்டத்தின் ஆன்மாவை, அண்டத்தைப் படைத்தவனை, அண்டம் முழுமையும் வியாபித்திருப்பவனை, அனைத்து உயிர்களின் உண்மைக் காரணனை, அனைவரின் மரியாதைக்குத் தகுந்தவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். பிரம்மச்சக்கரம் என்றழைக்கப்படும் உன்னை, சர்வன், சங்கரன், சிவன் என்று அழைக்கப்படும் உன்னை, பேருயிர்கள் அனைத்தின் தலைவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்ட உன்னை, மரணம் என்று அழைக்கப்படும் {மிருத்யு ஸ்வரூபியான} உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் கால்கள் கொண்ட உன்னை, எண்ணிலா செயல்களைச் செய்யும் உன்னை, தங்க நிறம் கொண்ட உன்னை, தங்கக் கவசம் பூண்ட உன்னை, பக்தர்களிடம் எப்போதும் கருணை கொண்ட உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஓ! தலைவா, எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்” என்றனர் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்}.

[5] கங்குலியில் இங்கே Disease என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கிறது, வேறொரு பதிப்பிலோ இதையொட்டிய வரிகள், “மங்கலான காந்தியுடையவரும், வேட வடிவம் பூண்டவரும், பிறரால் ஜயிக்கப்படாதவரும், எப்போதும் கறுத்த சிகையுடையவரும், சூலத்தையுடைவரும், ஞானக்கண்ணையுடையவரும், தீக்ஷையுடையவரும், ரக்ஷகரும், மூன்று கண்களையுடையவரும், அக்னியிடத்தில் இந்திரியத்தை விட்டவரும்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் நோய் என்ற பொருள் கொண்ட சொல் வருவதற்கான காரணம் யாதென்று தெரியவில்லை.

சஞ்சயன் தொடர்ந்தான், “இம்முறையில் மகாதேவனை வழிபட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் (பாசுபதம் என்றழைக்கப்படும் பெரும்) ஆயுதத்தை அடைவதற்காக அவனை {சிவனை} நிறைவு செய்யத் தொடங்கினர்” என்றான் {சஞ்சயன்}.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்