Saturday, June 18, 2016

யுதிஷ்டிரனின் அலங்காரம்! - துரோண பர்வம் பகுதி – 082

The decoration of Yudhishthira! | Drona-Parva-Section-082 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : சூதர்களால் எழுப்பப்பட்ட யுதிஷ்டிரன் நீராடச் சென்றது; மூலிகைகளாலும், நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்ட யுதிஷ்டிரன்; நன்கு அலங்கரித்துக் கொண்டு, தியானித்த பிறகு நெருப்புக்கு ஆகுதி செலுத்திப் பிராமணர்களைச் சந்தித்துத் தானமளித்தது; வெளியறைக்கு வந்து அமர்ந்த அவனிடம் கிருஷ்ணனின் வரவு அறிவிக்கப்பட்டது; கிருஷ்ணனை வரவேற்ற யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனும் தாருகனும் அப்படிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்த இரவு கடந்து போனது. (காலை விடிந்த போது), மன்னன் யுதிஷ்டிரன் தன் படுக்கையில் இருந்து எழுந்தான். பனிஸ்வானிகர்கள் {Paniswanikas}, மாகதர்கள் [1], மதுபர்க்கிகர்கள் {Madhuparkikas}, சூதர்கள் [2] ஆகியோர் (பாடல்களாலும், இசையாலும்) மன்னனை {யுதிஷ்டிரனை} நிறைவு செய்தனர். ஆடற்கலைஞர்கள் தங்கள் ஆடலைத் தொடங்கினர், இனிய குரல் கொண்ட பாடகர்கள் குரு குலத்தின் புகழால் நிறைந்த தங்கள் இனிய பாடல்களைப் பாடினர் [3]. (தங்கள் தங்கள் இசைக்கருவிகளில்) நன்கு பழக்கப்பட்ட திறம்வாய்ந்த இசைக்கலைஞர்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள், கோமுகங்கள், அடம்பறங்கள் {சிறு பறைகள்}, சங்குகள், பேரொலியுள்ள துந்துபிகள், பல்வேறு வகையிலான பிற இசைக்கருவிகள் ஆகியவற்றை இசைத்தனர். மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான அந்தப் பேரொலி சொர்க்கங்களையே {வானத்தையே} தொட்டது. மன்னர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை அஃது உறக்கத்தில் இருந்து எழுப்பியது.


[1], [2] மாகதர்கள் = அமர்ந்து ஏத்துவோர், சூதர்கள் = நின்று ஏத்துவோர் என்ற விளக்கம் http://www.tamilvu.org/slet/l5920/l5920sel.jsp?x=322 என்ற சுட்டியில் இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "ஸ்தோத்திரங்களைப் பாடும் மாகதர்கள் கைத்தாளத்தோடும், வைதாளிகர்கள், சூதர்கள் ஆகியோரும் தர்மபுத்திரரை ஸ்தோத்திரஞ்செய்தார்கள். நர்த்தகர்கள் நாட்டியமாடினார்கள். இனிய குரலுள்ள பாடகர்கள் குருவம்சத்தின் ஸ்தோத்திரத்தைப் பொருளாகக் கொண்ட பாட்டுக்களை இனிமையாகப் பாடினார்கள்" என்று இருக்கிறது.

தன் படுக்கையில் இருந்து எழுந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அவசியம் தேவையான செயல்களைச் செய்வதற்காக மஞ்சனசாலைக்கு {குளியலறைக்குச்} சென்றான். நீராடி வெள்ளுடைத் தரித்திருந்த நூற்றியெட்டு இளம் பணியாளர்கள் {ஸ்நாபகர்கள்}, விளிம்பு வரை {நீர்} நிறைந்திருந்த தங்கக் குடங்கள் பலவற்றுடன் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகினர். மென்துணி உடுத்தித் தன் அரச இருக்கையில் [4] சுகமாக வீற்றிருந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சந்தனம் மற்றும் தூய மந்திரங்களுடன் பல்வேறு வகைகளிலான நீரில் குளித்தான். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பலமான பணியாட்கள், பல்வேறு வகைகளிலான மருத்துவ மூலிகைகளில் ஊறிய நீரைக்கொண்டு அவனது {யுதிஷ்டிரனது} உடலைப் தேய்த்தனர். பின்னர்ப் பல்வேறு நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்ட அதிவாச நீரில் அவன் {யுதிஷ்டிரன்} நீராட்டப்பட்டான். பிறகு அவனுக்காகத் தளர்வாக வைக்கப்பட்டிருந்ததும், அன்னங்களின் இறகுகளைப் போன்ற வெண்மையானதுமான நீண்ட துணியைப் பெற்றுக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, நீர் உலர்வதற்காகத் தன் தலையைச் சுற்றி அதைக் கட்டிக் கொண்டான்.

[4] வேறொரு பதிப்பில் இது, "நான்கு பக்கங்களில் சமமான ஆசனம் என்று இருக்கிறது.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் உடலில் சிறந்த சந்தனக்குழம்பைப் பூசிக்கொண்டு, மலர்மாலைகளை அணிந்து கொண்டு, தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு தன் கரங்களைக் கூப்பிய படி கிழக்கை நோக்கி அமர்ந்தான். அறவோரின் வழியைப் பின்பற்றுபவனான அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மனப்பூர்வமாகத் தன் வேண்டுதல்களைச் சொன்னான். பிறகு , (வழிபாட்டுக்காகச்) சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெரும் பணிவுடன் நுழைந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, புனித மரத்தாலான விறகுகளாலும், மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட தெளிந்த நெய்யின் காணிக்கைகளாலும் நெருப்பை வழிபட்ட பிறகு அந்த அறையை விட்டு வெளிவந்தான் [5].

[5] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, "இந்திரியங்களையும் மனத்தையும் ஒருமைப்படுத்தி ஜபிக்கத்தக்க மந்திரத்தை ஜபித்து அச்சமயத்தில் வணக்கமுடையவராகி, ஜ்வலிக்கின்ற அக்நியோடு கூடிய அக்நி கிருஹத்தில் பிரவேசித்துப் பரிசுத்தமான சமித்துக்களாலும், மந்திரங்களால் பரிசுத்தமான ஆஹுதிகளாலும் அக்கினியைப் பூஜித்து அந்தக் கிருஹத்தினின்று வெளியில் வந்தார்" என்றிருக்கிறது.

பிறகு, இரண்டாவது அறைக்குள் நுழைந்த அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, வேதங்களை அறிந்த பிராமணர்களில் காளைகள் பலரை அங்கே கண்டான். அவர்கள் அனைவரும் தன்னொடுக்கம் {புலனடக்கம்} கொண்டவர்களாகவும், வேதகல்வியிலும், நோன்புகளிலும் தூய்மையடைந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களால் செய்யப்பட்ட வேள்விகளின் நிறைவில் நீராடலை {அவபிருத ஸ்நானத்தை} முடித்திருந்தனர். சூரியனை வழிபடுபவர்களான அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாக இருந்தனர். அவர்களைத் தவிர அதே வர்க்கத்தைச் சேர்ந்த {பிராமணர்கள்} எட்டாயிரம் {8000} பேரும் அங்கே இருந்தனர்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்களுக்குத் தேன், தெளிந்த நெய், சிறந்த வகையிலான மங்கலகரமான கனிகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்து, ஏற்புடைய நல்வார்த்தைகளைத் தனித்துவமான குரல்களில் {தெளிவான ஒலியில்} அவர்களைச் சொல்ல வைத்து, அவர்கள் {பிராமணர்கள்} ஒவ்வொருக்கும் ஒரு நிஷ்கம் தங்கத்தையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளையும், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், ஏற்புடைய பிற பரிசுகளையும் கொடுத்தான். மேலும், அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீண்டும்போதெல்லாம் பாலைத் தருபவையும், கன்றுகளுடன் கூடியவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளையும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட குழம்புகளையும் கொண்ட காராம்பசுக்களையும் {அவர்களுக்குக்} கொடுத்து அவர்களை வலம் வந்தான்.

பிறகு அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நற்பேற்றை அதிகரிப்பதும் நிறைவானதுமான சுவஸ்திகங்கள் [6], தங்கத்தாலான நந்தியாவர்த்தங்கள் [7], மலர் மாலைகள், நீர்க்குடங்கள், சுடர்மிகும் நெருப்பு, வெயிலில் காய்ந்த அரிசியால் நிறைந்த {அக்ஷதப்} பாத்திரங்கள், பிற மங்கலகரமான பொருட்கள், பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள் வண்ணப்பொருள் {கோரோசனை}, மங்கலகரமானவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னியர், தயிர், தெளிந்த நெய், தேன், மங்கலகரமான பறவைகள், புனிதமாகக் கருதப்படும் பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றைக் கண்டும் தொட்டும் வெளியறைக்கு வந்தான்.

[6] சுவஸ்திகங்கள் = பெண்கள் வலக்கையை இடத்தோளிலும், இடக்கையை வலத்தோளிலும் மாற்றிக் கட்டிக்கொள்ளும் மங்கலக் குறி.

[7] மேல்மூடியுள்ள அர்க்கிய பாத்திரங்கள்

அப்போது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, வட்ட வடிவில் தங்கத்தாலான விலைமதிப்புமிக்கச் சிறந்த இருக்கை ஒன்றை, ஊழியர்கள் அந்த அறைக்குக் கொண்டு வந்தனர். முத்துக்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க விரிப்புக்கு மேல் மெல்லிய இழை கொண்ட மற்றொரு துணியாலும் மறைக்கப்பட்ட அந்த இருக்கை தேவதச்சனின் {விஸ்வகர்மாவின்} கைகளால் உருவானதாகவே தெரிந்தது.

அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் இருக்கையில் அமர்ந்ததும், விலைமதிப்புமிக்கதுமானப் பிரகாசமான ஆபரணங்களைப் பணியாட்கள் அவனிடம் கொண்டு வந்தனர். அந்த உயர் ஆன்மக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, ரத்தினங்களாலான அந்த ஆபரணங்களை அணிந்து கொண்டதும், அவனது அழகு, அவனது எதிரிகளின் துயரை அதிகரித்தது. தங்கப் பிடியையும், சந்திரனின் பிரகாசத்தையும் கொண்ட வெண்சாமரங்களைப் பணியாட்கள் வீசிய போது, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மின்னலுடன் கூடிய மேகங்களின் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

சூதர்கள் அவனது புகழைப் பாடவும், வந்திகள் அவனது புகழை உரைக்கவும் தொடங்கினர். பாடகர்கள் அந்தக் குரு குலத்தை மகிழ்விப்பவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாடத் தொடங்கினர். ஒருக்கணத்தில் வந்திகளின் குரல்கள் பேரொலியாகப் பெருகிற்று. அப்போது, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், குதிரைக்குளம்படிகளும் கேட்கப்பட்டன. யானை மணிகளின் கிங்கிணி, சங்குகளின் முழக்கம் மற்றும் மனிதர்கள் நடக்கும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்ததன் விளைவாக அந்த ஒலியால் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது.

அப்போது, கவசம் பூண்டவனும், வயதால் இளைஞனும், காது குண்டலங்களாலும், தன் இடையில் தொங்கும் வாளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வாயில்காப்போன் ஒருவன், அந்தத் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்து, தரையில் மண்டியிட்டு, அனைத்து வழிபாட்டுக்கும் தகுந்தவனான அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்குத்} தலைவணங்கி, உயர் ஆன்மா கொண்ட அந்தத் தர்மனின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} வந்து காத்திருப்பதாகச் சொன்னான். அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்}, "சிறந்த இருக்கை ஒன்றையும், ஆர்க்கியத்தையும் அவனுக்காகத் தயாராக வைப்பீராக" என்று தன் பணியாட்களுக்கு உத்தரவிட்டு, விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனை} வரச்செய்து அவனை விலைமதிப்புமிக்க இருக்கையில் அமரச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வழக்கமான விசாரணைகளால் மாதவனை {கிருஷ்ணனை} வரவேற்றுப் பேசி, அந்தக் கேசவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்