Monday, August 08, 2016

துரோணரின் தலையைச் சீவப் பாய்ந்த திருஷ்டத்யும்னன்! - துரோண பர்வம் பகுதி – 121

Dhrishtadyumna fell on to cut the head of Drona! | Drona-Parva-Section-121 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 37)

பதிவின் சுருக்கம் : துச்சாசனன் செய்த தீமைகளைச் சொல்லி அவனை நிந்தித்த துரோணர்; சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; பாஞ்சால இளவரசன் வீரகேதுவைக் கொன்ற துரோணர்; பாஞ்சால இளவரசர்களான மேலும் நால்வரை கொன்ற துரோணர்; துரோணரை மயக்கமடையச் செய்த திருஷ்டத்யும்னன்; துரோணரின் தலையை வெட்டி வீழ்த்த எண்ணியது; மயக்கத்தில் இருந்து மீண்ட துரோணர் வைதஸ்திகக் கணைகளால் திருஷ்டத்யும்னனைப் பீடித்தது; திருஷ்டத்யும்னனின் தேரோட்டியைக் கொன்று, அவனைக் களத்தைவிட்டே விரட்டிய துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துச்சாசனனின் தேர் தன்னருகே நிற்பதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! துச்சாசனா, இந்தத் தேர்கள் அனைத்தும் ஏன் {தப்பி} ஓடுகின்றன? மன்னன் {துரியோதனன்} நலமாக இருக்கிறானா? சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} உயிருடன் இருக்கிறானா? நீயோ ஓர் இளவரசன். நீ மன்னனின் தம்பியுமாவாய். மேலும் நீ ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனும் ஆவாய். {அப்படியிருக்க} போரில் இருந்து ஏன் நீ ஓடுகிறாய்? (உன் அண்ணனின் அரியணையைப் பாதுகாத்து) பட்டத்து இளவரசனாவாயாக. {உன் அண்ணனை ராஜனாக்கி, நீ யுவராஜனாவாயாக}.


திரௌபதியிடம் நீ முன்னர், "பகடையில் எங்களால் வெல்லப்பட்ட நீ எங்களின் அடிமையாவாய். உன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டிராமல் கற்பை நீ ஒதுக்கித் தள்ளுவாயாக. என் அண்ணனான மன்னனின் {துரியோதனனின்} ஆடைகளைச் சுமப்பவளாக இருப்பாயாக. உன் கணவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் எள்ளுப்பதர்களைப் போலப் பயனற்றவர்களேயாவர்" என்று சொன்னாய்.  துச்சாசனா, இவ்வார்த்தைகளைச் சொன்ன நீ, இப்போது போரில் இருந்து ஏன் ஓடுகிறாய்? பாஞ்சாலர்களுடனும், பாண்டவர்களுடனும் கடும் பகைமையை நீயே தூண்டிவிட்டு, தனி ஒருவனான சாத்யகியின் முன்னால் போரிட ஏன் அஞ்சுகிறாய்? சூதாட்ட நிகழ்வில் பகடையை எடுத்த போது, உன்னால் கையாளப்பட்ட பகடையானது விரைவில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கடுங்கணைகளாக மாறும் என்பதை நீ உணரவில்லையா? தூற்றும் அடைமொழிகள் பலவற்றை முன்னர்ப் பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியவன் நீயே. திரௌபதியின் துயரங்கள் உன்னையே வேராகக் {வேர்} கொண்டிருக்கின்றன {திரௌபதியின் துயரங்களுக்குக் காரணமானவன் நீயே}.

உனது செருக்கும், திமிரும், தற்பெருமையும் இப்போது எங்கே? கடும் நஞ்சுமிக்கப் பயங்கரப் பாம்புகளான அந்தப் பாண்டவர்களைச் சினமூட்டிவிட்டு ஏன் நீ ஓடுகிறாய்? சுயோதனனின் {துரியோதனனின்} துணிச்சல்மிக்கத் தம்பியான நீ ஓடுவதில் தீவிரமாய் இருக்கிறாய் என்பதில் ஐயமேயில்லை. ஓ! வீரா {துச்சாசனா}, முறியடிக்கப்பட்டுப் பீதியடைந்திருக்கும் இந்தக் கௌரவப் படையை உன் சொந்தக் கரங்களின் சக்தியை நம்பி நீயே இன்று பாதுகாக்க வேண்டும் [1]. எனினும், இதைச் செய்யாமல் அச்சத்தால் போரைக் கைவிட்டு உன் எதிரிகளின் இன்பத்தையே நீ அதிகரிக்கிறாய். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் படைக்குத் தலைவனான நீயே இப்படி ஓடும்போது, வேறு யார்தான் போரில் நிலைப்பார்கள்? புகலிடமாக இருக்க வேண்டிய நீயே அஞ்சினால், யார்தான் அஞ்சாமலிருப்பார்கள்?

[1] வேறொரு பதிப்பில், "கடுங்குணம் கொண்டவனும், ஓடுவதில் நோக்கம் கொண்டவனுமான உன்னுடைய சகோதரனான அந்தத் துரியோதனனும், ராஜ்யமும் இந்தப் பாரதச் சேனையும் காக்கப்படத்தக்கன. வீரனே, பிளக்கப்படுவதும், பயத்தால் பீடிக்கப்பட்டதுமான சேனையானது உன் கைவன்மையைக் கொண்டு உன்னால் பாதுகாக்கப்படத்தக்கதல்லவா?" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பாரதர்களின் இந்தப் படை மற்றும் மன்னன் சுயோதனன் ஆகிய இருவரும் பரிதாபத்துக்குரியவர்களே. ஓடிக்கொண்டிருக்கும் உன்னைப் பின்னவன் {துரியோதனன்} தன் துணிச்சல்மிக்கத் தம்பியாகக் கொண்டிருக்கிறான். உண்மையில், ஓ வீரா, சிதறடிக்கப்பட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படை உன்னாலும், உன் ஆயுதபலத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.

சாத்வத குலத்தின் தனியொரு போர்வீரனுடன் {சாத்யகியிடம்} போரிட்ட பிறகு, போரில் இருந்து ஓடுவதற்கே உன் இதயம் விரும்புகிறது. எனினும், ஓ! கௌரவா {துச்சாசனா}, போரில் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, அல்லது பீமசேனனை, அல்லது இரட்டையர்களை (நகுலன் மற்றும் சகாதேவனை) நீ காண நேர்ந்தால் என்ன செய்வாய்? எதற்கு அஞ்சி நீ ஓடுவதில் பாதுகாப்பைத் தேடுகிறாயோ, அந்தச் சாத்யகியின் கணைகள், சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான காந்தி கொண்ட பல்குனனுடையவைக்கு {அர்ஜுனனின் கணைகளுக்கு} போரில் ஒருபோதும் ஈடானவையல்ல. ஓடுவதில் உன் இதயம் உறுதியாக இருக்கிறது என்றால், சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இந்தப் பூமியின் அரசுரிமை கொடுக்கப்படட்டும்.

தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளுக்கு ஒப்பான பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் உன் உடலுக்குள் நுழையும் முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. உயர் ஆன்ம பார்த்தர்கள், போரில் உன் நூறு சகோதரர்களைக் கொன்று பலவந்தமாகப் பூமியைப் பறிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சாமாதானத்தை அடைவாயாக. மன்னன் யுதிஷ்டிரனும், போரில் மகிழ்பவனான கிருஷ்ணனும் கோபமடைவதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன் இந்தப் பரந்த படைக்குள் ஊடுருவி, உன் சகோதரர்களைப் பிடிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக.

முன்னர்ப் பீஷ்மர் உன் அண்ணனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "பாண்டவர்கள் போரில் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஓ! இனியவனே, அவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக" என்றார் [2]. எனினும், தீயவனான உன் அண்ணன் சுயோதனன் அதைச் செய்யவில்லை [3]. எனவே, உன் இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து பாண்டவர்களுடன் கடுமையாகப் போரிடுவாயாக. சாத்யகி இருக்கும் இடத்திற்கு உன் தேரில் விரைந்து செல்வாயாக. ஓ! பாரதா {துச்சாசனா}, நீ இல்லாமல் இந்தப் படை ஓடிவிடும். போரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியுடன் உனக்காக {உன் நலனுக்காகப்} போரிடுவாயாக" என்றார் {துரோணர்}.

[2] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "சமாதானத்தில் நோக்கமுள்ள என்னாலும் {துரோணராலும்}, "ஏ! துரியோதனா! மிகுந்திருப்பதைக் காப்பாற்று; பார்த்தர்களுடன் நீ சமாதானஞ்செய்து கொள். வீர! எல்லா அரசர்களையும் காப்பாற்று" என்று சொல்லப்பட்டிருக்கிறான்" என்று இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "நீயாவது போரில் தைரியமடைந்து முயற்சியுள்ளவனாகிப் பாண்டவர்களுடன் யுத்தஞ்செய். உன்னுடைய ரத்தத்தையும் பீமசேனன் குடிக்கப் போகிறான் என்று கேட்டிருக்கிறேன். அவனுடைய அந்த வசனமும் பொய்யன்று. அஃது அவ்வாறே ஆகும். அதிமூடனே, யுத்தத்தில் ஓடுந்தன்மையுள்ள நீ யாது காரணத்தால் வைரத்தைத் தொடங்கினாய்? நீ பீமனுடைய பேராண்மையை அறியவில்லையா?" என்று இருக்கிறது.

(துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} மறுமொழியாக ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. துச்சாசனன், (பரத்வாஜர் மகனின் {துரோணரின்}) வார்த்தைகளைக் கேட்காதது போலப் போலியாகக் காட்டிக் கொண்டு, சாத்யகி இருக்கும் இடத்திற்குச் சென்றான். புறமுதுகிடாத மிலேச்சர்களின் பெரும்படையுடன் போரில் சாத்யகியிடம் வந்த துச்சாசனன், அவ்வீரனுடன் கடுமையாகப் போரிட்டான்.

தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் எதிர்த்து மிதமான வேகத்துடன் விரைந்தார். அந்தப் போரில் பாண்டவப்படையின் மத்தியில் ஊடுருவிய துரோணர், அவர்களது போர்வீரர்களை, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நசுக்கினார். அந்தப் போரில் துரோணர், தன் பெயரை அறிவித்துக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யர்களுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தினார்.

பாஞ்சாலர்களின் ஆட்சியாளனுடைய {துருபதனின்} மகனான சிறப்புமிக்க வீரகேது, பாண்டவப் படையணிகளை வெல்வதில் ஈடுபட்டிருந்த பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். துரோணரை ஐந்து கணைகளால் துளைத்த அவ்விளவரசன் {வீரகேது}, ஒரு கணையால் துரோணரின் கொடிமரத்தையும், ஏழால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். துரோணர் மிகக் கடுமையாக முயன்றாலும், பாஞ்சாலர்களின் இளவரசனை {வீரகேதுவை} அணுக முடியாதபடிக்கு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போரில் நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. பிறகு, ஓ! ஐயா, பாஞ்சாலர்கள், போரில் துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்டு, மன்னன் யுதிஷ்டிரனின் வெற்றியை விரும்பி, அவரை {துரோணரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா,  நெருப்பு போன்ற கணைகள், பலமான வேல்கள் மற்றும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களின் மழையால் அந்தப் போர்வீரர்கள் துரோணரை மறைத்தனர். ஆகாயத்தில் மேகத்திரள்களை விரட்டும் காற்றைப் போன்ற தன் எண்ணற்ற கணைகளால் அந்த அடர்த்தியான ஆயுத மழையைக் கலங்கடித்த துரோணர் மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.

பிறகு பகைவீரர்களைக் கொல்பவரான அவர் (பரத்வாஜரின் மகன்), சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட கடுங்கணை ஒன்றை வீரகேதுவின் தேரை நோக்கிக் குறிவைத்தார். அந்தக் கணையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை {வீரகேதுவைத்} துளைத்துச் சென்று, குருதியில் குளித்து, நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு வேகமாகப் பூமிக்குள் நுழைந்தது. பாஞ்சாலர்களின் இளவரசன் {வீரகேது}, காற்றால் வேரோடு முறிந்து மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் சண்பக மரத்தைப் போலத் தனது தேரில் இருந்து கீழே வேகமாக விழுந்தான். பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவனுமான அந்த இளவரசனின் {வீரகேதுவின்} வீழ்ச்சியை அடுத்து, துரோணரை அனைத்துப் பக்கங்களிலும் பாஞ்சாலர்கள் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

சித்திரகேது, சூதன்வான், சித்திரவர்மன், சித்திரரதன் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கொல்லப்பட்ட) தங்கள் சகோதரனின் {வீரகேதுவின்} நிமித்தமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, கோடையின் முடிவில் (பொழியும்) மேகங்களைப் போல (அவரை நோக்கி) கணைகளை ஏவியபடி, அந்தப் பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} போரிடும் விருப்பத்தால் ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர். அரச பரம்பரையைச் சேர்ந்த வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தன் சக்தி மற்றும் கோபம் அனைத்தையும், அவர்களின் அழிவுக்காக ஒன்றாகத் திரட்டினார். பிறகு துரோணர் அவர்கள் மீது கணைகளின் மாரியை ஏவினார். முற்றாக வளைந்திருந்த துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவரது கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசர்கள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, குழம்பிப் போய் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தார்கள்.

ஓ! பாரதரே, கோபக்காரத் துரோணர், அந்த இளவரசர்கள் மலைத்துப் போயிருப்பதைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டே அந்தப் போரில் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், தேர்கள் ஆகியவற்றை அவர்களை இழக்கச் செய்தார். பிறகு பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, தமது கூரிய கணைகளாலும், பல்லங்களாலும், மரத்தில் இருந்து கொய்யப்படும் மலர்களைப் போல அவர்களது தலைகளைக் கொய்தார். உயிரை இழந்த அந்த இளவரசர்கள், ஓ! பெருங்காந்தி கொண்ட மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டு விழுந்த தைத்தியர்களையும், தானவர்களையும் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் அந்த வீரமகன் {துரோணர்} போரில் அவர்களைக் கொன்ற பிறகு வெல்லப்பட முடியாததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதுமான தமது வில்லை அசைத்தார்.

பாஞ்சாலர்களில் தேவர்களுக்கே ஒப்பானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்கள் {சகோதரர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னன் சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் கண்ணீரைச் சிந்தினான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்} அம்மோதலில் துரோணரின் தேரை எதிர்த்து விரைந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாஞ்சால இளவரசனின் கணைகளால் மறைக்கப்பட்ட துரோணரைக் கண்டு அங்கே திடீரெனத் துன்பக் கதறல்கள் எழுந்தன. உயரான்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} முற்றாக மறைக்கப்பட்டாலும், துரோணர் எந்த வலியையும் உணரவில்லை. மறுபுறம் சிரித்துக் கொண்டே போரிடுவதையே அவர் தொடர்ந்தார். பிறகு சினத்தால் சீறிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நேரான கணைகள் பலவற்றால் துரோணரின் மார்பைத் தாக்கினான்.

அந்த வலிமைமிக்க வீரனால் {திருஷ்டத்யும்னனால்} ஆழத் துளைக்கப்பட்ட பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கத்தில் வீழ்ந்தார். அவரை {துரோணரை} அந்நிலையில் கண்டவனும், பெரும் ஆற்றலையும், சக்தியையும் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன் தன் வில்லை வைத்துவிட்டு, விரைவாக ஒரு வாளை எடுத்துக் கொண்டான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, கோபத்தில் கண்கள் சிவந்து, துரோணரின் தலையை அவரது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} தேரில் ஏறினான். அதேவேளையில் தன் புலனுணர்வு மீண்டு, தமது வில்லை எடுத்துக் கொண்ட வீரத் துரோணர், கொல்லும் விருப்பத்தால் தமக்கு வெகு அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கத்தில் உள்ளோரிடம் போரிடத் தகுந்தவையுமான கணைகளால் {வைதஸ்திகம் என்ற கணைகளால்} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைத் துளைக்கத் தொடங்கினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கமான போருக்குத் தகுந்தவையுமான அந்தக் கணைகளைத் துரோணர் அறிந்திருந்தார். அவற்றைக் கொண்டு திருஷ்டத்யும்னனை பலவீனமடையச் செய்வதிலும் வென்றார்.

வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுத் துரோணரின் தேரில் இருந்து கீழே விரைவாகக் குதித்தான். பிறகு தன் வேகம் கலங்கடிக்கப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரில் ஏறிக்கொண்டு மீண்டும் தன் பெரிய வில்லை எடுத்துக் கொண்டான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மீண்டும் அந்தப் போரில் துரோணரைத் துளைக்கத் தொடங்கினான். துரோணரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தமது கணைகளால் பிருஷதன் மகனைத் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைத்} துளைக்கத் தொடங்கினார்.

போர் வழிமுறைகளை அறிந்த அந்த இருவரும், தங்கள் தேர்களில் பல்வேறு அசைவுகளை வெளிக்காட்டியபடியும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்தபடியும் களத்தில் திரிந்தனர். போர்வீரர்களின் மனங்களை மலைக்கச் செய்த துரோணரும், பிருஷதன் மகனும் மழைக்காலத்தில் (மழைத்தாரைகளைப் பொழியும்) வலிமைமிக்க இரு மேகங்களைப் போலத் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். மேலும் அந்தச் சிறப்புமிக்க வீரர்கள் தங்கள் கணைகளால் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகளையும், பூமியையும் நிறைத்தனர். அனைத்து உயிரினங்களும், க்ஷத்திரியர்களும், அங்கே இருந்த பிற போராளிகள் அனைவரும், ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரை உயர்வாகப் பாராட்டினர்.

ஓ! மன்னா, பாஞ்சாலர்கள், "துரோணர் போரில் திருஷ்டத்யும்னனுடன் மோதி நமக்கு அடிபணியப் போகிறார் என்பதில் ஐயமில்லை" என்று உரக்கப் பேசினர். அப்போது துரோணர், கனிந்த கனியொன்றை மரத்தில் இருந்து கொய்யும் ஒரு மனிதனைப் போல அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் தேரோட்டியின் தலையை வேகமாகக் கொய்தார். பிறகு, ஓ! மன்னா, உயர் ஆன்ம திருஷ்டத்யும்னனின் குதிரைகள் {களத்தைவிட்டு} ஓடிச் சென்றன. அந்தக் குதிரைகள் திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டு சுமந்து சென்றதும், பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணர், அந்தப் போரில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் முறியடிக்கத் தொடங்கினார். பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் வென்றவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும், எதிரிகளைத் தண்டிப்பவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} மீண்டும் வியூகத்தின் மத்தியில் தன் நிலையையே ஏற்று நின்றார். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் போரில் அவரை {துரோணரை} வெல்லத் துணியவில்லை" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்